Monetize Your Website or Blog

Tuesday, 16 February 2016

காணமல் போன சென்னை ஐ.ஐ.டி.மாணவி டேராடூன் ஆசிரமத்தில் மீட்பு: பரபரப்புத் தகவல்கள்!

கடந்த மாதம் சென்னை ஐ.ஐ.டி.யிலிருந்து காணாமல் போன மாணவி,  டேராடூன் ஆசிரமம் ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டார்.மேலும் பல மாணவிகள் மற்றும் இளம்பெண்கள் அந்த ஆசிரமத்தில் தங்கியுள்ளதாக பரபரப்புத் தகவல்கள் வெளியாகியுள்ளன.  

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் பரோடி பேட்டையைச் சேர்ந்தவர் தொழில் அதிபர் புருஷோத்தமன். இவரின்  மகள் பிரதியுஷா சென்னை ஐ.ஐ.டி.யில் படித்து வந்தார்.  26 வயதான இவர்,  ஐ.ஐ.டி. வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி இருந்தார்.
இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் 17-ம் தேதி திடீரென்று பிரதியுஷா மாயமானார். அவர் தங்கி இருந்த அறை நீண்டநேரம் திறக்கப்படாமல் இருந்ததால், சந்தேகம் அடைந்த பக்கத்து அறை மாணவிகள் இது பற்றி விடுதி வார்டனுக்கு தகவல் அளித்தனர். உடனே வார்டன் சாந்தி பட்டாச்சார்யா வந்து,  அறைக்கதவை திறந்து பார்த்த போது,  பிரதியுஷா அறையில் இல்லை. அங்கு 2 கடிதங்கள் மட்டுமே இருந்துள்ளன. அந்தக் கடிதங்கள் ஆங்கிலத்திலும் தெலுங்கிலும் எழுதப்பட்டு இருந்தது.

அதில், ஆன்மீக தேடலுக்காக இமயமலை செல்வதாக பிரதியுஷா எழுதியிருந்தார். இது பற்றி கோட்டூர்புரம் போலீசில் புகார் செய்யப்பட்டதின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் ,மாணவி  பிரதியுஷா கடந்த 23-ம் தேதி கோவையைச் சேர்ந்த பாஸ்கர் என்பவருடன் ரயிலில் மும்பை சென்று கொண்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும், பிரதியுஷா செல்போனை ஆய்வு செய்த போது அன்றைய தினம் 5 முறை அவர் டேராடூனில் உள்ள சிவா குப்தா என்பவருடன் பேசியதும் கண்டு பிடிக்கப்பட்டது. இது பற்றி உத்தரகாண்ட் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உத்தரகாண்ட் போலீசார் டேராடூன் நகரம் முழுவதும் வீடு வீடாக சோதனை நடத்தி, அங்குள்ள சிவ குப்தா என்பவரின்  ஆசிரமத்தில் பிரதியுஷா தங்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து போலீசார் பிரதியுஷாவை ஆசிரமத்தில் இருந்து மீட்டனர். இந்த ஆசிரமத்தை சிவ குப்தா என்பவர் நடத்தி வந்தார். அவர் தன்னைத்தானே சாமியார் என்று அறிவித்துக் கொண்டு ஆன்மீக சேவையில் ஈடுபட்டார். இவரைப் பற்றி கேள்விப்பட்ட பிரதியுஷா,  சாமியாருடன் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.அவர் பேச்சில் மயங்கிய மாணவி டேராடூன் சென்றுள்ளார்.

பின்னர் மாணவியை,தனது சீடர் கோவை பாஸ்கர் மூலம் டேராடூன் வருமாறு கூறியுள்ளார். இதன்பிறகே இருவரும் ரயிலில் டேராடூன் சென்றுள்ளனர்.

மகள் மீட்கப்பட்ட தகவல் அறிந்து தந்தை புருஷோத்தமன்,  டேராடூன் விரைந்து மகளை அழைத்து வந்தார். மகள் கிடைத்து விட்டதால் புகாரை வாபஸ் பெறுவதாக கோட்டூர்புரம் போலீசுக்கு புருஷோத்தமன் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், அந்த ஆசிரமத்தில் இந்தியா மற்றும் வெளிநாட்டு மாணவிகள், இளம்பெண்கள் தங்கி ஆன்மீகத் தேடல் நடத்தி வருவதாகவும் கூறியுள்ளார்.


No comments:

Post a Comment