வகை வகையாகப் பட்டியலிடும் வல்லுநர்
|
"எனக்கு 10 ஏக்கர் நிலம் இருக்கு. ஆத்துத் தண்ணிக்கு வாய்ப்பு இல்லாததால ரெண்டு கிணறுவெட்டினேன். ரெண்டுலயுமே உப்புத் தண்ணிதான். அதனால எந்தப் பயிருமே வளர மாட்டேங்குது.நிலத்தைச் சும்மா போட்டு வைக்க மனசில்லாம, அப்பப்ப எதையாவது விதைக்கிறேன். சோகம்தான்விளைச் சலா கிடைக்குது. இதுக்கு ஏதாவது ஒரு தீர்வு கிடைச்சா நல்லாயிருக் கும்..."
-கண்ணீர் வடிக்காத குறையாக இப்படி நமக்குக் கடிதம் எழுதியிருந்தார் திருச்சி மாவட்டம், முசிறிதாலூகா, தாத்தையங்கார்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ்.
"இவருக்கு ஆலோசனை வழங்க வரமுடியுமா...?" என்று நாம் கேட்டதுமே...
"எப்பப் போகணும்னு சொல்லுங்க?" என்று ஆர்வமாகிவிட்டார் ஏங்கல்ஸ் ராஜா. தமிழகம் முழுக்கவலம் வந்து, பல இடங்களில் இயற்கை வேளாண் பண்ணைகளை அமைத்துக் கொடுத் திருக்கும் இவர்,சுனாமி பாதித்த தமிழகக் கடலோர கிராமங்களில் உப்புநீரால் பாதிக்கப்பட்ட நிலங் களை வளப்படுத்தும்வேலைகளில் பங்காற்றியிருக்கிறார். குஜராத் மாநிலம், பரோடாவிலிருக்கும் ராமச்சந்திராமிஷனுக்குச் சொந்தமான ஏக்கர் கணக்கான நிலங்களை வளப்படுத்தி, விவசாயத்தைமேம்படுத்தியதிலும் இவருக்கு பங்கு உண்டு. தற்போது, திருச்சி மாநகராட்சியின் திடக்கழிவுகளைஉரமாகப் பயன்படுத்தி காய்கறி உற்பத்தி செய்யும் பணியினை ஒருங்கிணைத்துக் கொண்டிருக்கிறார்.
ஏங்கல்ஸ் ராஜாவை அழைத்துக் கொண்டு தாத்தையங்கார் பேட்டை போய் இறங்கிய நம்மை, மகன்குமார் சகிதமாக வரவேற்ற செல்வராஜ், தன்னுடைய நிலத்துக்கு அழைத்துச் சென்றார். ஆங்காங்கேவெடிப்புகள்... மேற்புறங்களில் பரவலாக உப்புப் படிவுகள்... கருகிக் கிடக்கும் நெற் பயிர்கள்... என்றுபார்ப்பதற்கே படுபரிதாபமாக இருந்தது அவருடைய நிலம்.
"கடலை, குச்சிக் கிழங்கு, நெல்லுனு விதவிதமா போட்டு பார்த்துட்டேன். எதுவுமே சரியா விளையமாட்டேங்குது. இந்தத் தடவை 5 ஏக்கர்ல மட்டும் நெல்லு போட்டேன். எதுவுமே தேறுற மாதிரி தெரியல.ஒவ்வொரு முறையும் இதே நிலமைதான். ஆனாலும், தொடர்ந்து முயற்சி செய்துகிட்டே இருக்கேன்.சில சமயம், மனசு வெறுத்துப் போயி வெறும் தரிசா போட்டுடறேன்" என்று நொந்து போனவராகச்சொன்னார் செல்வராஜ்.
பேருதவி செய்யும் பெருநெல்லி!
உடனே, "பெருநெல்லி மரங்களை வெட்டி, அதன் தோலை சீவிவிட்டு, மரத்தைத் துண்டு துண்டாக்கிகிணற்றில் போட்டால் உப்புத் தன்மை குறையத் தொடங்கிவிடும். வெட்டிவேரையும் பயன்படுத்தலாம்.தண்ணீரின் தன்மையை மாற்றும் குணம் அதற்கும் உண்டு.
பள்ளமான பகுதிகளில் குட்டைகளை வெட்டி மழைத் தண்ணீரை தேக்கி வைப்பதன் மூலமும் கிணற்றுநீரின் உப்புத் தன்மை மாறிவிடும். குட்டையில் தேங்கி நிற்கும் மழைநீர், கசிந்து கிணற்றுக்குள்ஊடுருவி இந்த வேலையைச் செய்யும். இரண்டு கிணறுகள் இருப்பதால், இரண்டு குட்டைகள்வெட்டலாம். மூன்று ஆண்டுகளில் தண்ணீரின் தன்மையில் மாற்றம் தெரியும். அதிகளவில்குட்டைகள் அமைத்தால் ஓரிரு பருவ மழையிலேயே மாற்றத்தைக் காணமுடியும். அதாவது,ஒவ்வொரு ஏக்கருக்கும், தலா 33 சென்ட் பரப்பு கொண்ட, பத்துக் குட்டைகள் அமைத் தால், ஒரேயருபருவ மழையிலேயே மாற்றத்தைக் காணலாம். குட்டைகளை கிணறுகளுக்கு அருகில்தான் அமைக்கவேண்டும் என்று அவசியமில்லை. உங்கள் நிலத்தில் பள்ளமான பகுதி எங்கு உள்ளதோ, அங்குஅமைத்தாலே போது மானது. ஆனால், கிணறு இருக்கும் பகுதியை விட மிகஅதிக அளவுக்குப்பள்ளமான பகுதியாக இருந்துவிடக் கூடாது. அப்படியிருந்தால் நாம் எதிர் பார்க்கும் பலன் கிடைக்ககொஞ்ச நாட்களாகும்" என்று கடகடவென தீர்வு களைச் சொல்ல ஆரம்பித்த ஏங்கல்ஸ் ராஜா,குட்டைகள் அமைப்பதற்கான இடங்களைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்துவிட்டு தொடர்ந்தார்.
"ஒவ்வொரு குட்டையும் 10 அடி ஆழத்தில் சுமார் 30 சென்ட் பரப்பில் இருக்கவேண்டும். உட்புறஓரத்திலும், வெளிப்புறத்திலும் வெட்டிவேர் வளர்க்க வேண்டும். கிணற்றுக்கும், குட்டைக்கும்இடையில் நீர்வரத்துப் பகுதியில் பெரு நெல்லி மரங்களை வளர்க்கலாம். குட்டையிலிருந்து ஊடுருவும்மழைநீர், பெருநெல்லியின் வேர்களைக் கடந்து சென்று, கிணற்றுக்குள் கலந்தால், தண்ணீர் சுவையாகமாறும்" என்று அவர் சொல்லச் சொல்ல, அனைத்தையும் கவனத்தோடு குறிப்பெடுத்துக்கொண்டிருந்தார் செல்வராஜின் மகன் குமார். செல்வராஜின் முகத்தில் நம்பிக்கை ஒளியோடு,கேள்விக்குறியும் தென்பட்டது!
உப்பு நீரை ஒதுக்க உருப்படியான யோசனைகள்!
"கிணற்றில் உள்ள தண்ணீரின், உப்புத் தன்மை மாறும் வரை காத்திருக்க வேண்டுமா..." - இதைஅவருடைய முகக்குறிப்பாலேயே உணர்ந்து கொண்டவராகப் பேசிய ஏங்கல்ஸ் ராஜா, "அப்படியெல்லாம் காத்திருக்கத் தேவை யில்லை. நான் சொன்ன மற்ற யோசனைகளை உடனடியாகநடைமுறைப்படுத்தினால் கண்டிப்பாக, மிக விரைவில் மாற்றம் வந்துவிடும். அதாவது, முதற்கட்டமாகபெருநெல்லி மரங்களை வெட்டிப் போட்டாலே போதும். ஆனால், அதுவரையிலும்கூடகாத்திருக்காமல், இப்போது இருக்கும் நீரை வைத்தே நெல் விவசாயத்தைச் சிறப்பாக செய்ய முடியும்.கிணற்றில் கீழே போகப் போகத்தான் உப்புத் தன்மை அதிகமாக இருக்கும். குறிப்பாக, மழைக்காலங்களில் மேல்மட்டத்தில் நன்னீராகவே இருக்கும். இதைச் சிக்கனமாக பயன்படுத்தினால்விவசாயத்தைச் செழிப்பாகச் செய்யமுடியும்.
கோடையில், நெல் விவசாயம் செய்ய வேண்டாம். மழைக்காலங்களில் மட்டும் செய்யுங்கள்.தெளிப்புநீர்ப் பாசனம் அமைத்துக் கொண்டால், தண்ணீரைச் சிக்கனப்படுத்த முடியும். ஒற்றை நாற்றுமுறையில் நெல் சாகுபடி செய்தால் மிகக் குறைந்த அளவு தண்ணீர்தான் தேவைப்படும். மழைக்காலம்துவங்கும்போது, நீண்டகால நெல் ரகங்களையும், அதன் பிறகு, பூங்கார் போன்ற மிக குறுகிய கால நெல்ரகங்களையும் சாகுபடி செய்யுங்கள். பொதுவாகவே பூங்காருக்கு மிகக்குறைந்த அளவு தண்ணீரேபோதும்.
நெல் சாகுபடிக்குப் பிறகு, பயறு வகைகளைச் சாகுபடி செய்யலாம். ஒப்பீட்டளவில் நெல்லுக்குத்தேவைப்படும் தண்ணீரைவிட, குறைவான தண்ணீர்தான் இதற்குத் தேவைப்படும். ஆண்டு தோறும்இரண்டு முறை தொடர்ச்சியாக நெல், அதையடுத்து ஒரு தடவை பயறு வகைகளையும் சாகுபடிசெய்தால் சிறப்பான மகசூல் பார்க்கலாம்" என்று வல்லுநரின் வாயிலிருந்து வந்து விழுந்தவார்த்தைகள் செல்வராஜின் விழிகளை விரியவைத்தன ஆச்சர்யத்தால்!
கடும் வெயில் பொசுக்கியபோதும் தன்னுடைய ஆலோசனைகளை உற்சாகம் குறையாமல் அடுக்கிக்கொண்டே வயல் முழுக்க வலம் வந்தார் வல்லுநர். ஆவல் பொங்க அவரைப் பின் தொடர்ந்தார்செல்வராஜ்.
மண் ரொம்ப மோசமாக இருக்கிறதே!
"தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு கண்டாகிவிட்டது. அடுத்தது... மண். ரொம்ப மோசமாக இருக்கிறது.மணலே இல்லாத கருப்பு களிமண். அங்ககப் பொருட்களும் இல்லை. உயிர்க் காற்றும் இல்லை.உடனடியாக மண்ணை வளப்படுத்த வேண்டும்" என்று கவலையோடு குறிப்பிட்ட ஏங்கல்ஸ் ராஜா,அதற்கான குறிப்புகளைக் கூற ஆரம்பித்தார்.
"இரண்டு சால் உழவு ஓட்டி, பல தானிய விதைப்புச் செய்து மடக்கி உழவு செய்யவேண்டும்.தக்கைப்பூண்டு -5 கிலோ (மண்ணில் உள்ள உப்புத் தன்மையைக் குறைப்பதற்காக), கொளுஞ்சி-5 கிலோ,சணப்பு- 2 கிலோ, மணிலா அகத்தி- 2 கிலோ, கடுகு, கொத்தமல்லி, வெந்தயம், சீரகம், உளுந்து, பாசிப்பயறு, தட்டைப் பயறு, நரிப் பயறு (இது தரையை ஒட்டி வளரும். நீராவி ஏற்படாமல் தண்ணீரைப்பாதுகாக்கும். பசும் போர்வை போல் படர்ந்து உயிர்மூடாக்காகப் பயன் தரும்), கொள்ளு, துவரை, எள்ளு,நிலக்கடலை, சூரியகாந்தி, கொட்டைமுத்து இதெல்லாம் சேர்த்து மொத்தமாக 6 கிலோ என்றுஎல்லாவற்றின் விதைகளையும் ஒன்றாகக் கலந்து ஒரு ஏக்கரில் விதைக்க வேண்டும்.
தண்ணீர் 100 லிட்டர் எடுத்துக்கொண்டு, அதில் அமுதக் கரைசல் 10 லிட்டர் சேர்த்து இரண்டு தடவைதெளிக்க வேண்டும். தண்ணீர் பாய்ச்சும்போது 100 லிட்டர் அமுதக் கரைசலை இரண்டு தடவைகலந்துவிடவேண்டும். 100 லிட்டர் தண்ணீரில் 3 லிட்டர் பஞ்சகவ்யாவை கலந்து ஒரு முறை தெளிக்கவேண்டும். நன்கு செழிப்பாக வளர்ந்து, பூ பூத்ததும் 45-ம் நாள் மடக்கி உழவு செய்யவேண்டும். மீண்டும்இதேபோல், பல தானிய விதைப்புச் செய்து பூ பூக்கும் முன்பே 30-ம் நாள் மடக்கி உழவு செய்யவேண்டும். மூன்றாவது முறையாக மீண்டும் பல தானிய விதைப்புச் செய்து 20-ம் நாளில் மடக்கி உழவுசெய்யவேண்டும். இப்படிச் செய்தால், மண்ணில் நுண்ணியிரிகள் பெருகுவதோடு, அங்ககச் சத்துக்களும் அதிகரிக்கும். காற்றோட்டம் ஏற்படும். மண்ணில் உள்ள உப்புத் தன்மையும் நீங்கும். இதன்பிறகுநெல் சாகுபடி செய்தால் சிறப்பாக வரும்.
உப்புத் தண்ணீர் பகுதியில் உப்பு உரங்கள் உதவாது!
நடவுக்குப் பிறகு 10 நாள் இடைவெளியில், 100 லிட்டர் தண்ணீரில் 3 லிட்டர் பஞ்சகவ்யா கலந்து 3முறை தெளிக்கவேண்டும். வாரம் ஒரு முறை 100 லிட்டர் அமுதக் கரைசலை தண்ணீ ரோடு பாய்ச்சவேண்டும். இது, தண்ணீரில் உள்ள உப்புத் தன்மையின் பாதிப்பிலிருந்து பயிர்களைக் காப்பாற்றும்.பொதுவாகவே ரசாயன உரங்களை யும், பூச்சிக்கொல்லி மருந்துகளையும் தவிர்ப்பது நல்லது. அதிலும்உப்புத் தன்மையுள்ள பகுதியில், அவற்றையெல்லாம் பயன்படுத்தவே கூடாது. இயற்கைவிவசாயத்தின் மூலமாக மட்டுமே இதுமாதிரியான தண்ணீர் உள்ள பகுதிகளில் வெற்றிகரமாகவிவசாயத்தைச் செய்ய முடியும்" என்று அழுத்தம் கொடுத்த வல்லுநர், தொடர்ந்தார்.
"நெல் வயலைச் சுற்றி கிளரிசீடியா வளர்க்க வேண்டும். மூன்று மாதத்திலேயே அதிக அளவில்இலைகள் கிடைக்கும். நெல் வயலில் உள்ள வெற்றிடத்தில், கிளரிசீடியா இலைகளைப் போட்டு,காலால் அழுத்திவிட்டால் நீர் ஆவியாதல் தடுக்கப்பட்டு மண்ணின் ஈரம் பாதுகாக்கப்படும். தண்ணீர்தேவையும் குறையும். இதனால் கிணற்றில் நீர்மட்டம் குறையாமலிருக்கும். அடி ஆழத்தில் உள்ளஉப்புத் தண்ணீரை பயன்படுத்த வேண்டிய அவசியமும் ஏற்படாமலிருக்கும். ஒவ்வொரு அறுவடைக்குப்பிறகும், கிளரிசீடியா இலைகளை மண்ணில் போட்டு உழவு செய்யலாம். நடவுக்கு ஒரு வாரம் முன்பும்இந்த இலைகளை மண்ணில் போட்டு மிதிக்கலாம். இதையெல்லாம் நடைமுறைப்படுத்தினாலே, நெல்விவசாயம் சிறப்பாக செய்ய முடியும். பயறு சாகுபடியும் வெற்றி அடையும்.
உதவாத தண்ணீருக்கு உருப்படியான யோசனைகள்!
இப்போது இருக்கும் தண்ணீரை மாற்றுவதற்கான வேலைகளை செய்ய உங்களுக்கு மனமில்லைஎன்றால், இருக்கின்ற நீரைப் பயன்படுத்தி உப்புத் தண்ணீரிலும் வளரக்கூடிய அதிக விற்பனைவாய்ப்புள்ள பலன் தரும் மரங்களையும் வளர்க்க முடியும். ஒரு ஏக்கரில் சப்போட்டா-20, சாத்துக்குடி-10,முந்திரி-5, மா-10, பெரு நெல்லி-10, மாதுளை-5, அகத்தி-500, கறிவேப்பிலை-250, கிளிரிசீடியா-1000 என்றஎண்ணிக்கையில் மரங்கள் வளர்க்கலாம். பெருங்குடை மரங்கள் எனப்படும் சப்போட்டா, மா,சாத்துக்குடி, முந்திரி போன்றவைகளை 35 அடி இடைவெளிவிட்டு மாற்றி மாற்றி நடவு செய்யவேண்டும். சிறுகுடை மரங்கள் எனப்படும் நெல்லி, மாதுளை, அகத்தி, கறிவேப்பிலை, கிளரிசீடியாபோன்றவைகளுக்கு 4 அடி இடைவெளிவிட வேண்டும்.
இந்த மரங்களை நடுவதற்கு முன்பே தெளிப்புநீர்ப் பாசனம் அமைத்துவிட வேண்டும். ஒரு அடிசுற்றளவு, இரண்டு அடி ஆழம் கொண்ட குழிகளை அமைத்து, தோட்டத்தில் கிடைக்கும் காய்ந்தகுச்சிகளைப் போட வேண்டும். அதன் மீது இலை-தழைகளைப் போட்டு, குழி நிரம்பும் அளவுக்கு அமுதக்கரைசல் ஊற்ற வேண்டும். வாரம் ஒரு முறை இப்படி ஊற்றவேண்டும். ஒரு மாதத்துக்குப் பிறகு மரக்கன்றுகளை நடலாம். அதன் பிறகு, ஒவ்வொரு மரக் கன்றையும் சுற்றி 50 கிராம் அளவுக்கு பல தானியவிதைப்புச் செய்து, அதன் மீது மூடாக்குப் போட வேண்டும். 15 நாட்களுக்கு ஒரு முறை மரக் கன்றின்இலைகள் மீது பஞ்சகவ்யாவும், வேர்ப்பகுதியில் உள்ள மூடாக்கின் மீது அமுதக் கரைசலையும்தெளிக்க வேண்டும். இதனால் மரங்களில் சிறப்பான வளர்ச்சியைக் காணமுடியும். அதிக வருவாயும்பார்க்க முடியும்.
கிளிரிசீடியா, அகத்தி போன்றவற்றை வளர்ப் பதால் ஆடு, மாடுகளுக்குத் தீவனம் கிடைக்கும்.மூடாக்குப் போடுவதற்கு அதிகளவில் இலைகளும் கிடைக்கும். மண்ணின் ஈரப்பதத்தை தக்க வைத்துக்கொள்ளவும் முடியும். காலப்போக்கில் மண்ணில் உள்ள நுண்ணுயிரிகள் பெருகி, மண்வளம் மேம்படும்.மரங்களுக்கு, தெளிப்புநீர்ப் பாசனம் மூலம், வாரம் ஒருமுறை தண்ணீர் கொடுக்கலாம். இந்தமுறைகளைக் கடைபிடித்தால், உப்புத் தன்மையுள்ள தண்ணீராக இருந்தாலும் மரங்கள் நன்கு வளரும்"எனச் சொன்னார் ஏங்கல்ஸ் ராஜா.
"ரொம்ப நன்றி. தண்ணியை மொத்தமா மாத்தறதுக்கான வழிமுறை, உடனடியா மாத்தறதுக் கானவழிமுறை, இதைத் தவிர, இப்ப இருக்கற தண்ணியை வெச்சே விவசாயத்தைத் தொடர்றதுக் கானவழிமுறைனு பிரிச்சிப் பிரிச்சி நல்லாவே சொல்லியிருக்கீங்க. இது எல்லாமே எனக்குச் சாத்தியமானவிஷயம்தான். ரொம்பவே நம்பிக்கை வந்துடுச்சி" என மகிழ்ச்சியோடு செல்வராஜ் சொல்ல...
"இன்னொரு யோசனையும் சொல்றேன்.. கேட்டுக்குங்க.." என இன்னொரு வழிமுறையை யும் சொல்லிஅசத்தினார் ஏங்கல்ஸ் ராஜா.
முத்தான 33 சென்ட் யோசனை!
"ஒவ்வொரு ஏக்கரிலும், தலா 33 சென்ட் பரப்பில் குட்டை அமைக்க வேண்டும். குட்டை வெட்டியமண்ணைக் கொண்டு, இன்னொரு 33 சென்டில் பரப்பி, மேடாக்க வேண்டும். மீதமுள்ள 34 சென்ட்நிலத்தில் நெல் மற்றும் பயறு வகை சாகுபடிகளைச் செய்து கொள்ளலாம். மழைக் காலங்களில்குட்டையில் மீன் வளர்த்து லாபம் பார்க்கலாம். மேடாக்கப்பட்ட 33 சென்ட் பகுதி யைச் சுற்றி, 50 அடிஇடைவெளியில் சப்போட்டா, முந்திரி, மா, சாத்துக்குடி போன்ற பெருங்குடை மரங்களை மாற்றி மாற்றிநடவுசெய்து வளர்க் கலாம். பெருங்குடை மரங்களுக்கிடையே 25 அடி இடைவெளியில் நெல்லி,மாதுளை, வாழை, பப்பாளி போன்ற சிறுகுடை மரங்களை வளர்க் கலாம். பெருங்குடை மரங்களுக்கும்சிறுகுடை மரங்களுக்கும் இடைப்பட்ட பகுதியில் குமிழ், மகோகனி போன்ற வன மரங்களைவளர்க்கலாம்.
இதன் உள்ளே உள்ள நிலத்தில் பதினாறரை சென்ட் பரப்பில் கால்நடை மற்றும் அவற்றுக்குத்தேவையான தீவனங்களை வளர்க்கலாம். ஒரு மாடு, இரண்டு ஆடு, ஐந்து கோழிகளும் வளர்க்கலாம்.இவைகளுக்குத் தேவையான கோ-4, அசோலா, சோளம், கிளிரிசீடியா, அகத்தி, சூபாபுல் போன்றகால்நடைத் தீவனங்களையும் வளர்த்துக் கொள்ளலாம்.
மீதமுள்ள பதினாறரை சென்ட் பரப்பில் மேட்டுப்பாத்தி அமைத்து காய்கறி சாகுபடி செய்யலாம். 4 அடிஅகலம், முக்கால் அடி உயரத்துக்கு இலை, தழைகளைப் பரப்பி, மூடாக்கு அமைத்து, அதன் மீது அமுதக்கரைசலை தெளித்து பாத்திகள் அமைக்க வேண்டும். எல்லா பாத்திகளையும் சுற்றி பீர்க்கன், புடலை,பாகல், அவரை போன்ற கொடி வகை காய்கறிகளையும், ஒவ்வொரு பாத்தியையும் சுற்றிலும் பீட்ரூட்,முள்ளங்கி, கேரட் போன்றவற்றையும்... தக்காளி, கொத்தவரை, மிளகாய் போன்ற குத்துச்செடிகாய்கறிகளையும் சாகுபடி செய்யலாம். குத்துச்செடி காய்கறிகளின் உள்ளே, நடுப்பகுதியில் பூண்டு,இஞ்சி, வெங்காயம், கீரை சாகுபடி செய்யலாம். மேட்டுப்பாத்தி முறையில் இவைகள் அனைத்துமேசிறப்பாக வளரும். காய்கறிகளைப் பறிப்பதற்கும் ஆட்கள் சென்று வரவும், ஒவ்வொரு பாத்தியும் 25 அடிநீளம் இருக்கவேண்டும். ஒவ்வொரு பாத்திக்கும் இடையில் இரண்டு அடி இடைவெளி இருக்கவேண்டும். இவைகளுக்கும் தெளிப்பு நீர்ப்பாசன முறையைப் பயன்படுத்தலாம். இல்லை யென்றால்பூவாளி மூலம் தண்ணீர் ஊற்றலாம். குறைவான தண்ணீர்தான் தேவைப்படும்.
பஞ்சகவ்யா, அமுதக் கரைசல், மீன் அமிலம், வானமுதம் என சொல்லப்படும் திரவநுண்ணூட்டங்களையும், இயற்கை பூச்சிவிரட்டி களையும் பயன்படுத்தி இயற்கை முறையில், இதேமண்ணில் வெற்றிகரமாக காய்கறி சாகுபடி செய்யலாம்" என வல்லுநர் சொன்னதும்,
"இங்க விற்பனை வாய்ப்பு நல்லாவே இருக்கு. விவசாய வேலைகளுக்கு ஆட்களும் தாராளமாகிடைக்கறாங்க. என்கிட்ட உள்ள பத்து ஏக்கரையும் மூணு விதமா பிரிச்சி, மூணு வழிமுறை களையுமேநடைமுறைப்படுத்துவேன். இல்லைனா, ஏதாவது ஒரு முறையை பத்து ஏக்கர்லயும் பயன்படுத்துவேன். ரொம்பவே நம்பிக்கை வந்துடுச்சு. இவ்வளவு நேரம் இங்கேயே இருந்து, இவ்வளவுவிஷயங்களையும் சொல்லிக் கொடுத்து உதவி பண்ணியிருக்கீங்க.." என நெகிழ்ச்சியோடுவிடைகொடுத்தார் செல்வராஜ்.
பிறை வடிவ வார்ப்பு
மழைத் தண்ணீர் நிலத்தை விட்டு வெளியேறாமல் தடுக்கவும், எல்லா பகுதியிலும் மழை நீரை மண்ணுக்குள் நிலை நிறுத்தவும் ஆங்காங்கே பிறை வடிவ வரப்புகள் அமைக்கப்பட வேண்டும். வரப்புகள் ஒரு அடி உயரத்தில் இருக்க வேண்டும். இவை தண்ணீரைத் தாங்கி நிற்கும்.
தொடர்புக்கு : ஏங்கல்ஸ் ராஜா - 94421 - 21473
குரு - 94438 - 45643
No comments:
Post a Comment