Monetize Your Website or Blog

Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

Friday, 26 August 2016

சசிகலா புஷ்பாவுக்கு உச்ச நீதிமன்றம் 'செக்'..! மதுரை உயர்நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு

பாலியல் புகாரில் நேரில் ஆஜராக வேண்டும் என்ற உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவை எதிர்த்து சசிகலா புஷ்பா தாக்கல் செய்த மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்றம், வரும் 29ஆம் தேதி உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டுள்ள மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பாவின் வீட்டில் வேலை செய்த சகோதரிகள் பானுமதி, ஜான்சிராணி என்ற இருவரும் சசிகலா புஷ்பா குடும்பத்தினர் தங்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் சசிகலா புஷ்பா, அவரது கணவர் லிங்கேஸ்வரன், மகன் பிரதீப்ராஜா, சசிகலா புஷ்பாவின் தாயார் கௌரி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


இந்த வழக்கில், முன்ஜாமீன் கோரி சசிகலா புஷ்பா அவரது கணவர் மற்றும் மகன் ஆகிய மூவரும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு நீதிபதி வி.எம்.வேலுமணி முன்பு கடந்த 23ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஜெ.அன்னத்தாயின் ஆட்சேப மனுவை அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர் பி.புகழேந்தி தாக்கல் செய்தார்.
அதில், மனுதாரரின் வழக்கறிஞர் தரப்பில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆகஸ்ட் 18 ஆம் தேதி முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. முன்ஜாமீன் கோரிய மூவரும் வழக்கறிஞர் முன்னிலையில் ஆகஸ்ட் 17 ஆம் தேதி நேரில் ஆஜராகி கையெழுத்திட்டதாகத் தெரிவித்து உள்ளனர். ஆனால், ஆகஸ்ட் 17 ஆம் தேதி மூவரும் சிங்கப்பூரில் இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. தற்போதும் அவர்கள் வெளிநாட்டில் தான் உள்ளனர். முன்ஜாமீன் பெறுவதற்கான சில வழிமுறைகளை சென்னை உயர் நீதிமன்றம் வகுத்துள்ளது. அதன்படி, முன்ஜாமீன் மனுவில் சம்பந்தப்பட்டவர்கள் கையெழுத்திட்டிருக்க வேண்டும், அவ்வாறு கையெழுத்திட வர முடியாத பட்சத்தில் அதற்கென தனி மனு தாக்கல் செய்யப்படுவது அவசியம், இல்லையெனில் அதற்கான அதிகாரப்பூர்வ கடிதத்தையாவது தாக்கல் செய்திருக்க வேண்டும்.  இந்த விதிமுறைகள் பின்பற்றப்படாத காரணத்தால் இது போலியான மனு என்ற எண்ணம் எழுகிறது. எனவே இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.


இதையடுத்து மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் வாதிடுகையில், சசிகலா புஷ்பாவின் அறிவுறுத்தலின்படியே மனு தாக்கல் செய்யப்பட்டது. இதுதொடர்பான விவரங்களைப் பெற்றுத் தெரிவிக்க கூடுதல் அவகாசம் வேண்டும். இல்லையெனில் மனுவை திரும்ப பெற்றுக்கொள்கிறோம் என்றார். இதை ஏற்க மறுத்த நீதிபதி வேலுமணி, வெளிநாட்டில் இருந்ததாகக் கூறப்படும் தேதியில் முன்ஜாமீன் மனுவில் கையெழுத்திட்டது எப்படி என்று ஆகஸ்ட் 29 ஆம் தேதி நேரில் ஆஜராகி மனுதாரர்கள் விளக்கம் அளிக்க வேண்டும். தவறினால் தகுதி அடிப்படையில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று உத்தரவிட்டார்.
இந்த நிலையில், ஆகஸ்ட் 29ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்ற உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவை எதிர்த்து சசிகலா புஷ்பா உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், சசிகலா புஷ்பா மனுவை நிராகரித்ததோடு, வரும் 29ஆம் தேதி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.


தற்போது, சிங்கப்பூரில் இருக்கும் சசிகலா புஷ்பா, தமிழகம் வந்தால் என்னை கொன்றுவிடுவார்கள் என்று ஏற்கனவே கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

காவிரி பிரச்னை அப்போதும்... இப்போதும் தீர்வை நோக்கி நகராதது ஏன்?

த்திய அரசின் பாராமுகம், கர்நாடகா அரசின் தந்திரம், தமிழக அரசின் செயலற்ற தன்மை ஆகியவற்றால் காவிரி நதிநீரில் தமிழகத்தின் உரிமை பறிபோய்க் கொண்டிருக்கிறது.
210 ஆண்டுகளைக் கடந்தும் கொதிநிலையில் இருக்கிறது காவிரி நதிநீர் பங்கீட்டுப் பிரச்னை. கர்நாடகா மாநிலத்தின் குடகு மாவட்டத்தில் தலைக்காவேரி எனும் இடத்தில் உற்பத்தியாகும் காவிரி ஆறு, அந்த மாநிலத்துக்குள்ளேயே 800 கி.மீ பயணித்து, தமிழ்நாட்டில் தர்மபுரி மாவட்டம் பிலிகுண்டுலு வழியே பயணத்தைத் தொடங்குகிறது. ஒகேனக்கல் அருவி வழியே மேட்டூர், பவானி, ஈரோடு, கொடுமுடி, கரூர், திருச்சி கல்லணை வழியாக தஞ்சை உள்ளிட்ட காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் பாய்ந்து, பூம்புகார் அருகே வங்கக்கடலில் கலக்கிறது.


இயற்கை தந்த கொடையான காவிரி நதிநீரைப் பங்கிட்டுக்கொள்வதில் தமிழகத்துக்கும், கர்நாடகத்துக்கும் இடையேயான தகராறு நீண்ட நெடிய காலமாக முடிவுக்கு வராமல் நீடித்துவருகிறது. தீர்வுக்கு வழி ஏற்படும் என்று நம்பப்பட்ட காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு, வெளிவந்து 10வது ஆண்டை நெருங்கி இருக்கும் நிலையில் கர்நாடகா அரசு, பிரச்னையைத் தீர்ப்பதில் இருந்து நாளுக்குநாள் விலகிச் செல்கிறது. காவிரி டெல்டா மாவட்டங்களின் வாழ்வாதாரத்தில் தொடர்புடைய காவிரி நதிநீர் பங்கீட்டுக்கான சிக்கலை, நடுவர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு முன்பு, தீர்ப்புக்குப் பின்பு என்றே அணுகலாம்.
காவிரி நடுவர் நீதிமன்றத்துக்கு முன்பு...

காவிரி நடுவர் மன்றம் அமைக்கும் முன்பிருந்தே மைசூர் அரசாக இருந்தபோதிலிருந்தே தமிழகத்துக்கான உரிமையைத் தருவதில் கர்நாடகா மாநிலத்தின் பிடிவாதங்களும், மறுப்புகளும் தொடர்ந்து வருகின்றன. 1807-ம் ஆண்டு அப்போது இருந்த மைசூர் அரசுக்கும், சென்னை மாகாணத்துக்கும் இடையேதான் காவிரி நீரைப் பங்கீடு செய்துகொள்வதில் பிரச்னை ஏற்பட்டது. பலகட்டப் பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் 87 ஆண்டுகள் கழித்து அப்போதைய ஆங்கில அரசின் கீழ் 1892-ல் முதன்முதலாக இருதரப்புக்கும் இடையே ஒப்பந்தம் போடப்பட்டது.
அந்த ஒப்பந்தத்தின்படி, ‘காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டினால், அந்தத் திட்டத்தைச் சென்னை மாகாண அரசுக்கு அனுப்பி ஒப்புதல் பெறவேண்டும்’ என்று மைசூர் அரசுக்கு உத்தரவிடப்பட்டது. 1910-ல் மைசூர் அரசு, கன்னம்பாடி என்ற இடத்தில் அணை கட்ட அனுமதி கேட்டது. (இந்த இடத்தில்தான் பின்னர் கிருஷ்ணராஜ சாகர் அணை அமைக்கப்பட்டது.) இதற்கு, சென்னை மாகாண அரசு எதிர்ப்புத் தெரிவித்தது. ஆங்கிலேய அரசு தலையிட்டு, ‘கன்னம்பாடியில் 11 டி.எம்.சி நீரைத் தேக்கும் வகையில் அணை கட்ட வேண்டும்’ என்று மைசூர் அரசுக்கு உத்தரவிடப்பட்டது.
ஆனால், இந்த உத்தரவைப் புறந்தள்ளிய மைசூர் அரசு திட்டமிட்டபடி 41.5 டி.எம்.சி தண்ணீரைத் தேக்கும் அளவுக்கு அணையைக் கட்ட ஆரம்பித்தது. இரு அரசுகளுக்குமிடையே முரண்பாடு உருவானதால் கிரிஃபின் என்பவரை நடுவராக ஆங்கிலேய அரசு நியமித்தது. ஆனால், அவராலும் இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண முடியவில்லை. மீண்டும் இரண்டு அரசுகளுக்கும் பிரச்னை வெடித்தது. 1924-ல் ஓர் ஒப்பந்தம் கையெழுத்தானது. 50 ஆண்டுகளுக்கு இது நடைமுறையில் இருக்கும் என்று சொல்லப்பட்டது. 1929-ல் ஒரு துணை ஒப்பந்தமும் போடப்பட்டது.

அதன்படி, ‘மைசூர் அரசு தனது எல்லைக்குள் திட்டமிட்டபடி கிருஷ்ணராஜ சாகர் அணையை அமைப்பது என்றும், சென்னை மாகாண அரசு மேட்டூர் அணை கட்டிக்கொள்ளலாம்’ என்றும் கூறப்பட்டது. சுதந்திரத்துக்குப் பின்னர் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டதைத் தொடர்ந்து காவிரியின் சிக்கல்கள் மேலும் தீவிரத்துடன் தொடர்ந்தன.
1924-ம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தம் முடிவதற்கு முன்பே, காவிரி உண்மை கண்டறியும் குழு ஒன்றை மத்திய அரசு அமைத்தது. இந்தக் குழு 1972-ம் ஆண்டு அறிக்கை சமர்ப்பித்தது. இந்த அறிக்கையின் பரிந்துரைகள்படி 1976-ம் ஆண்டு ஆகஸ்ட்டில் ஓர் ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதன்படி தமிழகம், புதுச்சேரி இரு மாநிலங்களும் சேர்த்து 393 டி.எம்.சி முதல் 414 டி.எம்.சி நீரை பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று கூறப்பட்டது. கர்நாடகா 239 முதல் 261 டி.எம்.சி தண்ணீரையும், கேரளா 39 - 41 டி.எம்.சி தண்ணீரையும் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று கூறப்பட்டது. ஆனால், வழக்கம்போல இதை அமல்படுத்த கர்நாடகா அரசு முன்வரவில்லை.

நீதிபதி சிட்டதோஷ் முகர்ஜி தலைமையில், 1990-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வி.பி.சிங் அரசால் காவிரி நடுவர் நீதிமன்றம் அமைக்கப்பட்டது. நடுவர் மன்றத்தின் நீதிபதி தலைமையிலான குழு மே மாதம் காவிரிப் பாசனப் பகுதிகளை ஆய்வு செய்தது. ஆய்வின் அடிப்படையில் தனது இடைக்காலத் தீர்ப்பை வழங்கியது.
காவிரி நடுவர் நீதிமன்றம் சொன்னது என்ன?

இடைக்காலத் தீர்ப்பில், தமிழகத்துக்கு ஜூன் முதல் பிப்ரவரி வரை 205 டி.எம்.சி தண்ணீர் தர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. பின்னர் 2007-ம் ஆண்டு பிப்ரவரி 5-ம் தேதி வெளியிடப்பட்ட இறுதித்தீர்ப்பின்படி 192 டி.எம்.சி தண்ணீர் தர வேண்டும் என்று கூறினார்கள். தமிழகத்தின் பங்கில் இருந்து பாண்டிச்சேரிக்கு 6 டி.எம்.சி தண்ணீரைத் தர வேண்டும். அதேபோல கபினி அணையில் இருந்து கேரளாவுக்கு 30 டி.எம்.சி தண்ணீரை கர்நாடகா அரசு தர வேண்டும்.


மேலும் காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித்தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம், அதற்கு உதவியாக காவிரி ஒழுங்குமுறை குழு அமைக்க வேண்டும். இந்த இரண்டும் அமைக்கப்படாவிட்டால், தங்கள் தீர்ப்பைச் செயல்படுத்துவது கடினம் என்று காவிரி நடுவர் மன்றத்தின் நீதிபதிகள் அப்போதே கூறினர். அதுதான் இப்போது நடக்கிறது.
நடுவர் மன்றத் தீர்ப்புக்குப் பின்பு...

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு வெளியான உடன் அதற்கு கர்நாடகா அரசு கடும் அதிருப்தி தெரிவித்தது. தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இங்கிருந்துதான் கர்நாடகா அரசின் இழுத்தடிக்கும் அரசியல் தொடங்கியது என்கிறார்கள். காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பில் குறைபாடுகள் இருந்தால், நடுவர் மன்றத்தில்தான் அப்பீல் செய்து தீர்வுகாண வேண்டும். நடுவர் மன்றத்திலேயே கர்நாடகா அரசு அப்பீல் செய்திருந்தால் 6 மாதங்களுக்குள் பிரச்னை முடிவடைந்திருக்கும். பிரச்னையைத் உடனடியாகத் தீர்க்க விரும்பவில்லை என்பதால்தான் கர்நாடகா அரசு நடுவர் மன்றத் தீர்பை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்றது. காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு வெளிவந்து 9 ஆண்டுகளுக்குப் பின்னரும் அது அமல்படுத்தப்படாததற்கு கர்நாடகா அரசின் தந்திரம்தான் காரணம்.
காவிரிப் பிரச்னை இப்போது...

தமிழகத்துக்கான உரிமையை கர்நாடகா அரசு தராததால், காவிரி டெல்டா பாசன சாகுபடிக்காகக் கடந்த சில ஆண்டுகளாக மேட்டூர் அணையில் இருந்து சரியான நேரத்தில் தண்ணீர் திறந்துவிடப்படுவதில்லை. இதனால் கடந்த 5 ஆண்டுகளாகக் காவிரி டெல்டாவில் குறுவைச் சாகுபடி நடக்கவில்லை. இப்போது 6-வது ஆண்டாகவும் குறுவைச் சாகுபடி பாதிக்கும் அபாயம் உள்ளது. கர்நாடகா அரசைக் கண்டித்து காவிரி டெல்டா மாவட்டங்களில் கடையடைப்பு உள்ளிட்ட போராட்டங்கள் இந்த ஆண்டும் தீவிரம் அடைந்துள்ளன. சுதந்திர தினத்தன்று பேசிய கர்நாடகா முதல்வர் சித்தராமையா, “மேகதாட்டூ அணை கட்ட நிதி ஒதுக்கப்படும்” என்று கூறி இருக்கிறார். மேலும் செய்தியாளர்களிடம் பேசுகையில், “எங்கள் மாநிலத்தில் மழை இல்லை. தண்ணீர் இல்லை. குடிப்பதற்குக்கூடத் தண்ணீர் இல்லை. நாங்கள் எப்படித் தமிழகத்துக்குத் தண்ணீர்விட முடியும்” என்று கைவிரித்திருக்கிறார்.

நடுவர் மன்றத் தீர்ப்பின்படி தண்ணீர் தர கர்நாடகா அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று வழக்கம்போல உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு ஒரு வழக்கைத் தாக்கல் செய்திருக்கிறது. மறுப்புகளும், பிடிவாதங்களும், வழக்குகளும் எங்களின் வாழ்வாதாரத்துக்கு வழி சொல்லுமா, என்கின்றனர் விவசாயிகள்.
நடுவர் மன்றத்துக்குப் போகாதது ஏன்?
காவிரிப் பிரச்னையில் என்ன நடக்கிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ பாலகிருஷ்ணனிடம் பேசினோம். ‘‘காவிரிப் பிரச்னையில் முக்கியமான திருப்பமாக 2007-ம் ஆண்டு காவிரி நடுவர் நீதிமன்றம் தீர்ப்புச் சொன்னது. தீர்ப்பு வந்த உடன் அப்போது இருந்த தி.மு.க அரசு அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தியது. கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள், ‘தீர்ப்பில் குறைபாடு இருக்கிறது. நடுவர் மன்றத்திலேயே மேல்முறையீடு செய்யலாம்’ என்று கூறினர். ஆனால், கூட்டத்தில் பங்கேற்ற அ.தி.மு.க பிரதிநிதி, ‘உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்ய வேண்டும்’ என்று சொல்லிவிட்டார். மேலும், கர்நாடகா தரப்பிலும் உச்ச நீதிமன்றத்துக்குச் சென்றார்கள். எனவே, தமிழகம் மட்டும் காவிரி நடுவர் மன்றத்துக்குப் போனால் நன்றாக இருக்காது என்று கூறி தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்திலேயே முறையீடு செய்யப்பட்டது.

அதில், இன்னும் முடிவு ஏற்படவில்லை. முதலில் கர்நாடகா அரசு உச்ச நீதிமன்றம் போனது தவறானது. இதனால்தான் தமிழக அரசும் போனது. அப்போதே உச்ச நீதிமன்றம், இரண்டு அரசுகளிடமும், நீங்கள் நடுவர் மன்றத்தை நாடுங்கள் என்று அறிவுறுத்தி இருக்கலாம். ஆனால் அவர்களும் அதைச் சொல்லவில்லை.
அரசிதழில் வெளியிட்டு என்ன பயன்?

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை அரசிதழில் வெளியிட நான்தான் காரணம் என்று ஜெயலலிதா கூறுகிறார். இதனால் என்ன பயன் விளைந்தது என்பதுதான் எங்கள் கேள்வியாக இருக்கிறது. காவிரிப் பிரச்னையில் கடந்த 40 வருடங்களில் 12 வழக்குகளைப் போட்டிருக்கிறார்கள். இதனால் தமிழக அரசுக்கு 1,000 கோடி ரூபாய் வரை செலவாகி இருக்கிறது. இந்தப் பணத்தில் காவிரியின் குறுக்கே அணை கட்டியிருக்கலாம். கர்நாடகா அரசு இப்போது புதிய அணை கட்டத் திட்டமிட்டுள்ளது. அதேபோல, அங்கு உள்ள காவிரிப் பாசனப் பகுதிகளையும், பாசன மேம்பாட்டையும் அதிகரித்துவிட்டது.
அரசியல் ஆதாயம் கருதும் மத்திய அரசு!

ஆனால், தமிழகத்தில் மேட்டூர் அணையைக்கூடத் தூர்வாரவில்லை. அதன் உயரத்தையாவது அதிகரித்திருக்கலாம். அதைக்கூடச் செய்யவில்லை. காவிரிப் பாசனப்பகுதி வாய்க்கால்களையும் தூர் வாரவில்லை. இவ்வளவு நாட்களுக்குப் பின்னரும் ஜெயலலிதா அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டவில்லை. ‘நான்தான் செய்கிறேன்’ என்று தன்னை முன்னிலைப்படுத்தவே அவர் முயற்சிக்கிறார். மக்களின் வாழ்வாதாரப் பிரச்னைகளை அரசியலுக்கு அப்பாற்பட்டு விவாதிக்க வேண்டும். இந்த விஷயத்தில் மத்திய அரசு, இரு மாநில அரசுகளையும் அழைத்துப் பேசித் தீர்வுகாண வேண்டும். ஆனால், எங்கு அரசியல் வாய்ப்பு அதிகம் இருக்கிறதோ அந்தப் பக்கத்துக்கு ஆதரவாகத்தான் மத்திய அரசு இருக்கிறது” என்றார்.
தமிழகம் என்ன வடிகாலா?
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பெ.சண்முகம், “எங்கள் மாநில அணைகளில் தண்ணீர் இல்லை என்று கர்நாடகா அரசு சொல்கிறது. ஆனால், அது உண்மை இல்லை. அந்த மாநிலத்தில் கபினி அணை உள்ளிட்ட 3 அணைகள் நிரம்பி வழிகின்றன. நமக்கான உரிமையை அவர்கள் தர வேண்டும். ஆனால், அணைகளில் நிரம்பி வழியும் தண்ணீரைத்தான் அவர்கள் திறந்துவிடுகிறார்கள். நமது மாநிலத்தை அவர்கள் வடிகாலாகத்தான் பார்க்கிறார்கள். நடுவர் மன்றத் தீர்ப்பை அவர்கள் கடுகளவுகூட மதிப்பதில்லை. நடுவர் மன்றத் தீர்ப்பை கர்நாடகா அரசும் ஏற்க வேண்டும். அப்போதுதான் பிரச்னைக்குத் தீர்வு ஏற்படும். மத்திய அரசு இந்த விஷயத்தில் தலையிட்டுத் தீர்வு ஏற்பட உதவி செய்ய வேண்டும். ஆனால், மத்திய அரசு வெறும் பார்வையாளராகத்தான் இருக்கிறது.
ராஜதந்திரம் இல்லை!

‘நடுவர் மன்றத் தீர்ப்பை, அரசிதழில் வெளியிடாமல் ஒன்றும் செய்யமுடியாது’ என்று முன்பு மத்திய அரசு கூறி வந்தது. 2013-ல் அரசிதழில் வெளியிட்டார்கள். இப்போது 3 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இன்னும் பிரச்னை தீர்ந்தபாடில்லை. காவிரி நதிநீர் மேலாண்மை வாரியம் அமைக்கக் கூடாது என்று கர்நாடகா வழக்குத் தொடுத்துள்ளது. இதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதிக்கவில்லை. காவிரி நதிநீர் மேலாண்மை வாரியத்தை அமைத்துவிட்டால், நீர் திறப்பு அவர்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும். பிரச்னை இருக்காது. எம்.ஜி.ஆர்., கருணாநிதி ஆகியோர் முதல்வராக இருந்தபோது கர்நாடகா அரசுடன் ராஜதந்திரத்துடன் பேச்சுவார்த்தை நடத்தித் தீர்வு காணப்பட்டது. ஆனால், ஜெயலலிதா அவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுவதில்லை. ஒரே ஒரு முறை மட்டும்தான் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி கர்நாடகா அரசுடன் பேசி இருக்கிறார்” என்றார்.
செயலற்ற தமிழக அரசு!
காவிரி உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன், “இந்தப் பிரச்னைக்கு அரசியல் ரீதியாகத் தீர்வு காணவேண்டும்” என்கிறார். மேலும் அவர், “காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் பலர் நிலத்தைத் தரிசாகப் போட்டுவிட்டு வேறு தொழில் செய்கிறார்கள். விவசாயத் தொழிலாளர்கள் பலர் திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்குப் பிழைப்புத்தேடி இடம் பெயர்ந்துவிட்டனர். இந்தச் சூழலில் நமது தமிழக அரசு காவிரிப் பிரச்னையை ஒரு கிளரிக்கல் வேலையைப் போலத்தான் அணுகுகிறது. காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அமல்படுத்த வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

மார்ச் 28-ல் வழக்கு விசாரணை நடந்தபோது, அடுத்த விசாரணை ஜூலை 18-க்குத் தள்ளிவைக்கப்படுகிறது. தமிழக அரசு சார்பில் வாதாடிய வக்கீல், ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட வேண்டும் என்றோ, அதற்குள் கர்நாடகா அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றோ நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கவில்லை. ஜூலை 18-ம் தேதி வழக்கு வந்தபோது, மீண்டும் அக்டோபர் 10-ம் தேதிக்குத் தள்ளிவைக்கப்படுகிறது. அப்போதும் தமிழக அரசு வக்கீல் ஒன்றும் பேசவில்லை. தமிழக அரசின் செயலற்ற தன்மையைத்தான் இது காட்டுகிறது. மூத்த அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் பொறியாளர் குழுவை கர்நாடகா மாநிலத்துக்கு அனுப்பி, அங்குள்ள அணைகளின் நிலவரத்தை ஆய்வு செய்து நமக்கான உரிமையை கேட்டுப் பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.


ஆக, காவரி நதிநீர் விவகாரம் அப்போதும், இப்போதும் தீர்வை நோக்கி நகராததற்குக் கர்நாடகா அரசின் பிடிவாதம் மட்டும்தான் காரணம். அந்தப் பிடிவாதத்தை அரசியல் ஆதாயம் கருதி மத்திய அரசு வேடிக்கை பார்க்கிறது. தமிழக அரசோ, இதனை ஒட்டுமொத்த மாநில விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்னையாகக் கருதாமல் தனிப்பட்ட ஆதாயத்தைத் தேடுவதற்கான வழிகளை மட்டுமே தேடுகிறது.
- கே.பாலசுப்பிரமணி
காவிரி டெல்டா பகுதிகள்!

தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, அரியலூர், கடலூர், புதுக்கோட்டை ஆகிய 7 மாவட்டங்களில் உள்ள 14.47 லட்சம் ஏக்கர் நிலங்கள் காவிரி டெல்டா மண்டலம் என்ற வரையறைக்குள் வருகின்றன. காவிரி டெல்டாவில், குறுவை பருவத்தில் (மே - ஜூலை) 1.68 லட்சம் ஹெக்டேரிலும், தாளடிப் பருவத்தில் (பிப்ரவரி - ஏப்ரல்) 1.44 லட்சம் ஹெக்டேரிலும், சம்பா பருவத்தில் (ஆகஸ்ட் - ஜனவரி) 2.99 லட்சம் ஹெக்டேரிலும் நெல் பயிரிடப்படுகிறது. நெல் தவிர, பச்சைப்பயறு, உளுந்து, எள், பருத்தி ஆகிய பயிர்களும் சாகுபடி செய்யப்படுகின்றன. இந்தப் புள்ளிவிவரத்தைக் கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
காவிரியின் கிளை நதிகளில் கர்நாடகா அமைத்த அணைகள்!

காவிரி ஆற்றின் கிளை நதிகளில் ஒன்றான ஹேமாவதி ஆற்றில், ஹேமாவதி அணையை கட்டி இருக்கின்றனர். அதேபோல Harangi என்ற கிளை ஆற்றின் குறுக்கே, Harangi அணையை அமைத்துள்ளனர். கேரளாவில் உற்பத்தி ஆகி கர்நாடகா வழியே பாயும் கபினி ஆறு, காவிரி ஆற்றில் சேருகிறது. இந்த இடத்தில்தான் கபினி அணையை கர்நாடகா அரசு அமைத்துள்ளது. இப்போது மேகதாட்டூ என்ற இடத்தில், மேலும் ஓர் அணைகட்ட கர்நாடகா அரசு திட்டமிட்டுள்ளது.
மேட்டூர் அணை எப்போது திறக்கப்படும்?

குறுவை, சம்பா, தாளடி ஆகிய முப்போக நெல் சாகுபடிக்கு மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்படும். அணையின் தண்ணீர் மட்டம் 90 அடியாகவும், நீர் இருப்பு 52.65 டி.எம்.சி-யாகவும் இருக்கும்போது பருவமழை பெய்யும் என்ற எதிர்பார்ப்புடன் ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்படும். ஜூன் 12-ல் திறக்கப்படும் தண்ணீர், ஜனவரி 28-ம் தேதி நிறுத்தப்படும். 236 நாட்களில் டெல்டா பாசனத்துக்காக 330 டி.எம்.சி தண்ணீர் திறக்கப்படுகிறது.




ரஜினி, கமலுக்கிடையே விஜயகாந்த் வல்லரசானது எப்படி?

விஜயகாந்திற்கு இன்று 65-வது பிறந்தநாள். சினிமா, அரசியல் என தனி மனிதனாக அவரது அசுர வளர்ச்சி எல்லோருக்கும் ஆச்சர்யமூட்டும் ஒன்று. மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் நாராயணனாகப் பிறந்த இவரை வீட்டில் எல்லாரும் விஜயராஜ் என்றே அழைத்துவந்தனர். சிறுவயதிலேயே சினிமா மீது கொண்ட மோகத்தால், படிப்பில் ஆர்வம் காட்டவில்லை. பத்தாம் வகுப்போடு படிப்பை நிறுத்திவிட்டு தனது அப்பாவின் அரிசி ஆலை நிர்வாகத்தைக் கவனித்து வந்தார். 'இனிக்கும் இளமை' என்ற திரைப்படத்தின் மூலம் 1978-ம் ஆண்டு திரையுலகில் அறிமுகமான இவருக்கு, அப்படத்தின் இயக்குநர் எம்.ஏ.காஜா வைத்த பெயர்தான் விஜயகாந்த்.


1980-ல் வெளியான 'தூரத்து இடி முழக்கம்' திரைப்படத்தின் மூலம் தமிழக ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார் விஜயகாந்த். ஆனால் ஓர் அதிரடி நாயகனாக விஜயகாந்த் அறியப்பட்டது 1981-ல் வெளிவந்த 'சட்டம் ஒரு இருட்டறை' படத்தில் இருந்துதான். இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரின் முதல் படமான இது மிகப்பெரிய வெற்றி பெற்றது. இப்படம் இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளத்தில் ரீமேக் செய்யப்பட்டு அங்கும் வெற்றி கண்டது. இதன் இந்திப் பதிப்பில் ரஜினிகாந்தும், தெலுங்குப் பதிப்பில் சிரஞ்சீவியும் நடித்தனர். விஜயகாந்த்-எஸ்.ஏ.சந்திரசேகர் கூட்டணி இணைந்து அதே ஆண்டில் 'சாதிக்கொரு நீதி', 'நெஞ்சிலே துணிவிருந்தால்', 'நீதி பிழைத்தது' என மூன்று திரைப்படங்களை வெளியிட்டது. ரஜினிகாந்திற்கு ஒரு எஸ்.பி.முத்துராமன் என்பதுபோல், விஜயகாந்திற்கு ஒரு எஸ்.ஏ.சந்திரசேகர் என்று சொல்லலாம். இவரது இயக்கத்தில் மட்டும் விஜயகாந்த் 17 படங்களில் நடித்திருக்கிறார். இதே போல் 'சிவப்பு மல்லி' தந்த வெற்றியால் ராம நாராயணன் இயக்கத்திலும் இவர் 17 படங்களில் நடித்திருக்கிறார்.
இவர் கதாநாயகனாக நடித்து 1984-ல் மொத்தம் 18 படங்களும், 1985-ல் 17 படங்களும் வெளியாகின. இன்றுவரை இது அசைக்க முடியாத சாதனையாக உள்ளது. தொடர்ந்து புரட்சிகரமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்துவந்ததால் 1985-ம் ஆண்டு முதல் அவருடைய ரசிகர்களால் 'புரட்சிக்கலைஞர்' என அழைக்கப்பட்டார்.
இந்தி எதிர்ப்புப் போராட்டத்தால் ஈர்க்கப்பட்டவர் பின்நாட்களில் தமிழைத் தவிர வேறு எந்த மொழித் திரைப்படங்களிலும் நடிக்கவில்லை. இத்தனைக்கும் இவரது படங்கள் சில தெலுங்கில் டப்பாகி ஆந்திர தேசத்தில் கணிசமான வெற்றியைப் பெற்றிருந்தன. அங்கிருந்து வாய்ப்புகள் வந்தபோதும் திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.
ரஜினி-கமல் போட்டிக்கு நடுவே தனக்கென ஓர் இடத்தை உருவாக்கி வெற்றி கண்டவர் விஜயகாந்த். 'பி' மற்றும் 'சி' சென்டர்களில் விஜயகாந்த் படம் என்றாலே அது ஆக்ஷன் படமாகத்தான் இருக்கும் என்ற நம்பிக்கை ஒரு காலத்தில் இருந்தது. இவரது சண்டைக் காட்சிகளுக்கு ரசிகர்கள் பெருகியதாலோ என்னவோ... அதன்பின்பு பல திரைப்படங்களிலும் சண்டைக்காட்சிகளில்தான் விஜயகாந்தின் அறிமுகமே இருக்கும். சுவரில் கால்களை ஊன்றி எம்பிக்குதித்து எதிரிகளை தனது கால்களால் பந்தாடுவது இவரது ட்ரேட் மார்க்காகவே இருந்தது. கிராமங்களின் ஊர்த் திருவிழாக்களில் ரஜினி-கமல் படங்களைத் திரையிட பெரிய சண்டையே நடக்கும். அந்த நேரத்தில் விஜயகாந்த் திரைப்படம் எதாவது ஒன்றைத் திரையிட்டு கிராமத்தின் மொத்தக் கூட்டத்தையும் சண்டையின்றி உட்கார வைப்பது ஒரு ட்ரிக்காகவே பயன்பட்டு வந்தது. கிராமப்புறங்களில் 'ஜ' உச்சரிப்பு சரியாக வராததால் இன்றளவும் பலருக்கு அவர் விசயகாந்த் தான்.
புதுமுக இயக்குநர்கள் பலருக்கு வாய்ப்பளித்தது மட்டுமின்றி, திரைப்படக் கல்லூரி மாணவர்கள் பலரையும் இயக்குநராக அறிமுகப்படுத்திய பெருமையும் விஜயகாந்தையே சேரும். ஆபாவானன் - ஆர்.அரவிந்தராஜ் கூட்டணியில் 'ஊமை விழிகள்', 'உழவன் மகன்' போன்ற திரைப்படங்களும், ஆர்.கே.செல்வமணியின் இயக்கத்தில் 'புலன் விசாரணை', 'கேப்டன் பிரபாகரன்' போன்ற வெற்றிப்படங்களை அளித்தவர் விஜயகாந்த். ஒருகாலத்தில் திரைப்படக் கல்லூரியில் பயின்ற மாணவர்கள் நேராகக் கதை சொல்லும் இடமாக விஜயகாந்தின் அலுவலகம்தான் திகழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்காமல் ஆக்ஷன் ஹீரோ ஆக முடியாது என்பது கோலிவுட்டில் எழுதப்படாத விதி. அந்த வகையில் போலீஸ், ராணுவம் என யூனிஃபார்ம் அணிந்து நியாயத்திற்காகப் போராடும் கதாபாத்திரத்தில் அதிகம் நடித்தவர் விஜயகாந்த் தான். இன்றும் போலீஸ் வேடமென்றால் தமிழ் ரசிகர்களின் மனதில் முதலில் வந்து நிற்பது விஜயகாந்தாகத்தான் இருக்கும். தனது 100-வது படமான 'கேப்டன் பிரபாகரன்' மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து ரசிகர்கள் மத்தியில் 'கேப்டன்' ஆக ப்ரோமோசன் கிடைத்தது. ரஜினியின் 100-வது படமான 'ராகவேந்திரா', கமலின் 100-வது திரைப்படமான 'ராஜபார்வை' போன்ற திரைப்படங்கள் அனைத்தும் தோல்வி கண்டிருந்த நிலையில், அந்தக் காலகட்டத்தில் நடித்த நடிகர்களில் 100-வது படம் வெற்றிப்படமாக அமைந்ததும் இவருக்குத்தான். 'ஊமை விழிகள்', 'புலன் விசாரணை', 'செந்தூரப் பூவே', 'சத்ரியன்' போன்ற படங்களில், தனது நிஜ வயதைவிட அதிகமான வயதுடைய கதாபாத்திரங்களில் நடித்தார்.


க்ளைமாக்ஸ் காட்சியில் சூப்பர் ஹீரோ சாவதையெல்லாம் ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றிருந்த காலகட்டத்திலேயே 'செந்தூரப் பூவே', 'வைதேகி காத்திருந்தாள்', 'ரமணா' மற்றும் பல திரைப்படங்களில் அப்படி நடித்து அந்த நம்பிக்கையைத் தகர்த்தெறிந்தார்.
நடிகர் சங்கத் தலைவர்:
சூப்பர்ஸ்டார், உலகநாயகன் உட்பட திரைப்படத் துறையினர் இன்றும் விஜயகாந்தை 'விஜி' என்றுதான் அழைப்பார்கள்.  1999-ம் ஆண்டு முதல் 2004-ம் ஆண்டு வரை அவர் நடிகர் சங்கத் தலைவராகப் பதவி வகித்தார். அனைத்து நடிகர்களையும் ஒன்றிணைத்து சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் கலைநிகழ்ச்சிகள் நடத்தி அப்போது கடனில் இருந்த நடிகர் சங்கத்தை மீட்டெடுத்தது இவரின் நிர்வாகத் திறமைக்கு மிகப்பெரிய உதாரணம்.
அரசியல் அவதாரம்:
விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் மீது கொண்ட ஈர்ப்பு காரணமாக தனது மூத்த மகனுக்கு விஜய பிரபாகரன் என்று பெயர் சூட்டியவர் விஜயகாந்த். 2000-ம் ஆண்டில் தனது ரசிகர் மன்றத்திற்கென கொடியை அறிமுகப்படுத்தி பல படங்களில் அதைப் பயன்படுத்தவும் செய்தார். அரசியலுக்கு வருவேன் என சொன்னதோடு நிக்காமல் 2005-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14-ம் தேதி தேசிய முற்போக்குத் திராவிடக் கழகம் என்ற கட்சியைத் துவங்கினார். தனது ரசிகர்மன்றக் கொடியையே கட்சிக் கொடியாகவும் அறிவித்தார். அடுத்து வந்த 2006 சட்டமன்றத் தேர்தலில் தனி ஆளாகத் தன் கட்சியின் சார்பாக சட்டமன்றம் சென்றார். 2011-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்து 41 இடங்களில் போட்டியிட்டு 29 சட்டமன்றத் தொகுதிகளை வென்றது. சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக கம்பீரமாக சட்டமன்றத்திற்குள் நுழைந்தார் விஜயகாந்த்.
சினிமா, அரசியல் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் பல வெற்றிகளைப் பெற்ற விஜயகாந்த் தனது முன்கோபத்தாலும், உள்ளதை உள்ளபடிப் பேசிவிடுவதாலும் இழந்தவை அதிகம். இதையெல்லாம் விட இன்று 'மீம்ஸ்' விஜயகாந்தாய் சித்தரிக்கப்படுவது காலத்தின் சோகமான நீட்சி.


ஆனாலும் அழுத்தமாகச் சொல்வோம்... பிறந்தநாள் வாழ்த்துகள் கேப்டன்! 


விஜயகாந்துக்கு கேக் ஊட்டிய வைகோ..! கலகலத்த பிறந்தநாள்

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் பிறந்தநாளையொட்டி மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் இன்று நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். அப்போது, விஜயகாந்துக்கு, வைகோ, திருமாவளவன் ஆகியோர் கேக் ஊட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.


தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு இன்று 65வது பிறந்தநாள். அவரது பிறந்தநாளை தமிழகம் முழுவதும் தேமுதிக நிர்வாகிகள் அன்னதானம், மாணவர்களுக்கு நோட்டு, புத்தகங்கள் வழங்கி கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில், மக்கள் நலக்கூட்டணி தலைவர்களான மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர் முத்தரசன் மற்றும் மார்க்சிஸ்ட் நிர்வாகிகள் இன்று கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு வந்தனர். அவர்களை தேமுதிக தலைவர் விஜயகாந்த் வரவேற்றார். பின்னர் விஜயகாந்துக்கு அவர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சால்வைகள் அணிவித்தனர்.
இதைத் தொடர்ந்து, திறந்தவெளியில் கட்சி வளாகத்தில் வைகோ, திருமாவளவன், முத்தரசன் ஆகியோர் முன்னிலையில் விஜயகாந்த் கேக் வெட்டினார். அப்போது, விஜயகாந்துக்கு வைகோ, திருமாவளவன், முத்தரசன் ஆகியோர் கேக் ஊட்டினர். பதிலுக்கு விஜயகாந்தும் அவர்களுக்கும் கேக் ஊட்டினார். மேலும், விஜயகாந்த் மைத்துனர் சுதீஷுக்கு திருமாவளவன் கேக் ஊட்டினார். பதிலுக்கு அவரும் கேக் ஊட்டினார்.


விஜயகாந்துக்கு மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் நேரில் வந்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்க வந்ததால் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகம் கலகலப்புடன் காணப்பட்டது.
இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் பேசுகையில், மக்கள் நலக்கூட்டியக்கம் இணைந்து உள்ளாட்சி தேர்தலை சந்திக்கும் என்றும்,
மாவட்ட வாரியாக உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள் நடந்து வருகிறது என்றும் கூறினார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "மக்கள் நலக்கூட்டணியுடன் இணைந்து உள்ளாட்சி தேர்தலை சந்திப்பது குறித்து தேமுதிகதான் முடிவு செய்ய வேண்டும். விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளும் மனநிலைக்கு தமிழக முதல்வர் வர வேண்டும் என்றார்.



கிருஷ்ணனும் என்னுடைய முப்பாட்டன்தான்...!' - சீமான்

சென்னை முழுவதும் நாம் தமிழர் கட்சியின் சார்பில் கிருஷ்ண ஜெயந்தி விழா சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. ' நம் இனத்தின் முப்பாட்டன் என்று கிருஷ்ணனைக் குறிப்பிடுகிறார் சீமான். அப்படியானால் முருகனைக் கைவிட்டுவிட்டாரா?' என சமூக வலைத்தளங்களில் விவாதங்கள் கிளம்பியுள்ளன. 
' ஆயர் குலத் தலைவனே போற்றி; எங்கள் மூதாதை மாயோன் பெரும் புகழ் போற்றி' என கிருஷ்ணர் படத்துடன் சீமான் இருக்கும் சுவரொட்டிகளால்தான், இவ்வளவு விவாதமும். ' முல்லை நிலத்தையும் குறிஞ்சி நிலத்தையும் இணைத்து சுவரொட்டி அச்சடிப்பது சீமானால் மட்டும்தான் முடியும்' என சிலர் பதிவுகளுக்கு, நாம் தமிழர் கட்சியின் தொண்டர்கள் பதில் கொடுத்து வருகின்றனர். சீமானிடம் பேசினோம். 


கிருஷ்ண ஜெயந்திக்கு வாழ்த்து சொல்வதன் மூலம் எதை நிறுவ விரும்புகிறீர்கள்? 
"கிருஷ்ணருக்கு என்ன வாழ்த்துச் சொல்வது? அவரும் நம்முடைய மூதாதையர்தான். கண்ணன் என்ற பெயரே கிருஷ்ணராக மருவிவிட்டது. குறிஞ்சி நிலத் தலைவனாக முருகன் போற்றப்படுவது போல, முல்லை நிலத் தலைவனாக கண்ணன் போற்றப்படுகிறார். ' மாயோன் மேய காடுறை உலகு' என்று தொல்காப்பியம் போற்றுகிறது. மருத நிலத் தலைவனாக இந்திரனும் நெய்தல் நிலத் தலைவனாக வருணனும் பாலை நிலத் தலைவியாக கொற்றவையும் போற்றப்படுகிறார்கள். ஐந்து நிலங்களில் பரவி வாழ்ந்த மக்கள் நாம். குறிஞ்சி நிலத் தலைவனைப் போற்றுவது போலத்தான், முல்லை நிலத் தலைவனையும் போற்றுகிறோம்.
மால் என்றால் கருப்பு. அது மரியாதைக்காக திருமால் என்று அழைக்கப்படுகிறது. பெரிய கருப்பன் என்று நாம் சொல்வதை அவர்கள் பெருமாள் என்கிறார்கள். முல்லை நில மக்கள் ஆடு, மாடு வளர்ப்போடு வேளாண்மையை முக்கியத் தொழிலாகக் கொண்டவர்கள். மழைதான் அவர்களுக்கு அடிப்படையாக இருந்தது. எனவே, கருப்பு மேகத்தை மாயோன் என்று அழைத்தார்கள். இதில் கருப்பு என்பது கண்ணன் என்று மாறிவிட்டது. கண்ணன் என்ற பெயரே காலப் போக்கில் கிருஷ்ணராக மாறியது. 
ஆரிய பிராமணர்கள் இங்கு வரும்போது அவர்களுக்கு என எந்தக் கடவுளுமே இல்லை. இந்த நிலத்தில் இருந்துதான் அவர்களுக்கான கடவுள்களை எடுத்துக் கொண்டார்கள். விருமாண்டி படத்தைப் பற்றி தனியார் தொலைக்காட்சியில் பேசிய கமல்ஹாசன், ' தமிழ்க் கடவுள்கள் ஆரியமயமாக்கப்பட்டுவிட்டார்கள்' என்கிறார். அதுதான் உண்மை. சிவன் கைலாய நாதர் ஆனதும் கொற்றவை பார்வதி ஆனதும் முருகன் சிவனுக்கு மகன் ஆனதும் இப்படித்தான். 'மாயோன் பெருவிழா' என்ற பெயரில் செஞ்சியில் கடந்த ஆண்டு விழா நடத்தினோம். பண்பாட்டை மீட்கும் போராட்டங்களை முன்னெடுக்கும்போது, இந்தப் பாதையில்தான் பயணித்துத் தீர வேண்டியிருக்கிறது. தொல்குடி சமூகம் வணங்கிய தலைவனுக்கு நாங்கள் விழாவாகக் கொண்டாடுகிறோம். வழிவழியாக போற்றப்பட்டு வந்த ஒரு மரபைக் கொண்டாடாமல் இருந்தால்தான் தவறு. கிருஷ்ணர் என்று சமஸ்கிருதமாகப் பேசாமல், மாயோன் என்று தமிழில் சொல்லுங்கள். மாயாண்டி என்ற பெயர் மாயோன் என்ற வார்த்தையில் இருந்துதான் வருகிறது. நானும் மாயாண்டி குடும்பத்து மகன்தான். 






நம்முடைய முன்னோர்கள் முழுமையாக ஆய்வு செய்துவிட்டுத்தான் இதைக் குறிப்பிடுகிறார்கள். ஒரு குறிப்பிட்ட சாதி சமூகத்திற்கானவர் அல்ல மாயோன். அப்படித்தான் நம்முடைய தொல்குடிகளால் போற்றப்பட்டு வந்திருக்கிறார். கிருஷ்ண ஜெயந்தியாக பார்க்காமல் மாயோனாகப் பார்க்கிறோம். திருமுருகப் பெருவிழா நடத்துவது போலவே, மாயோன் பெருவிழாவை நடத்தி வருகிறோம். இதன்பின்னர், இந்திரன் பெருவிழா, கொற்றவையைக் கொண்டாடுவோம் என வரிசையாக நிகழ்ச்சிகளை நடத்தத் திட்டமிட்டிருக்கிறோம். கொற்றவையும் நம்முடைய பாட்டிதான். பாட்டி கொற்றவையையும் வேலுநாச்சியாரையும் மறந்துவிட்டு ஜான்சிராணியைப் பிடித்துக் கொண்டு சுற்றுகிறார்கள்.
திலகரைப் படித்துவிட்டு வ.உ.சியை மறந்துவிட்டோம். பண்பாட்டுத் தளத்திலும் தமிழனை மீட்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. ' தைப்பூசத்திற்கு அரசு விடுமுறை அளிக்கப்பட வேண்டும்' என்று நான் சொன்னபோது, ' திருமலை நாயக்கரும் அதேநாளில்தான் பிறந்தார்' என்றார் ஜெயலலிதா. ' சரி... கொண்டாடிவிட்டுப் போங்கள்' என்று சொல்லிவிட்டோம். முருகன் நம் முப்பாட்டன் என்று நான் சொன்னபோது கேலி செய்தார்கள். அதுவே, ' கொஞ்சம் தேநீர் நிறைய வானம்' கவிதைத் தொகுதியில் முருகனை முப்பாட்டனாகச் சொல்கிறார் வைரமுத்து. அவரை யாரும் கேலி செய்யவில்லையே? எல்லாவற்றையும் வேண்டாம் என்று விட்டுவிட்டால் நான் யார் என்பதே தெரியாமல் போய்விடும். வேரை இழந்த மரமும் வரலாற்றை மறந்த இனமும் வாழாது என்பதுதான் எதார்த்தமான உண்மை" எனச் சீற்றத்தோடு முடித்தார் சீமான்.  



இந்தியா ஏழாவது பணக்கார நாடு! எப்படி தெரியுமா..?

மீபத்திய நாடுகளின் சொத்து மதிப்பு கணக்கிடப்பட்டது. அதில், இந்தியா 5,600 பில்லியன் டாலருடன் ஏழாவது இடத்தைப் பிடித்துள்ளது. அமெரிக்கா 48,900 பில்லியன் டாலருடன் முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது, மூன்றாவது இடங்களில் சீனாவும், ஜப்பானும் உள்ளன. கனடா, ஆஸ்திரேலியா மற்றும் இத்தாலியை முந்தி இந்தியா ஏழாவது இடத்தில் உள்ளது.


டாப் 10 பணக்கார நாடுகள்!

1. அமெரிக்கா  (48,900 பில்லியன் டாலர்) 2. சீனா (17,400 பில்லியன் டாலர்) 3. ஜப்பான் (15,100 பில்லியன் டாலர்) 4. இங்கிலாந்து (9,200 பில்லியன் டாலர்), 5. ஜெர்மனி (9,100 பில்லியன் டாலர்) 6. பிரான்ஸ் (6,600 பில்லியன் டாலர்) 7. இந்தியா (5,600 பில்லியன் டாலர்) 8. கனடா (4,700 பில்லியன் டாலர்) 9. ஆஸ்திரேலியா (4,500 பில்லியன் டாலர்) 10. இத்தாலி (4,400 பில்லியன் டாலர்).

எப்படி என்கிறீர்களா?
இந்தச் சொத்துக் கணக்கானது, அசையாத சொத்துக்கள், இருப்புப் பணம், பங்குகள் என அனைத்தையும் உள்ளடக்கித்தான் கணக்கிடப்பட்டு உள்ளது. மொத்தத் தொகையில் இருந்து கடன் மதிப்பு கழிக்கப்பட்ட பிறகு வரும் மதிப்புகள்தான் இவை. அது சரி, ஏழாவது இடத்தை இந்தியா எப்படிப் பிடித்தது? ஒரே காரணம், மனிதவளம்.
இந்தியாவின் மனிதவளம்தான் இந்த வளர்ச்சிக்கான மூலதனம். நகரமயமாதலும் உலகமயமாதலும் புதுப்புது தொழில்களைச் செய்வதற்கான கதவுகளை இந்தியாவுக்குத் திறந்துவிட்டன. வெளிநாட்டினர் இங்கு எளிதில் தொழில் செய்வதற்கான சூழல்களை அரசு ஏற்படுத்திக் கொடுத்ததன் மூலம் முதலீடுகள் குவிந்தன. அதுவரை விவசாயத்தில்தான் 70 சதவிகித வேலை வாய்ப்புகள் இருந்தன. ஆனால், மெல்ல அது சேவைத் துறைக்கு மாறியது.
புதிதாய் முளைத்த துறைகள்!

குறைந்த ஊதியத்தில் அதிக அளவிலான பணியாளர்கள் கிடைத்ததால் இந்தியாவில் இருந்து பல நாடுகளுக்கும் தொழில்நுட்பமும், சேவையும் கொண்டு செல்லப்பட்டன. மனிதவளத்தை மட்டுமல்லாமல் மின்சாரம், தண்ணீர், கனிமங்கள் என அனைத்து வளங்களையும் கார்ப்பரேட்கள் முழுமையாகப் பயன்படுத்தத் தொடங்கின. இதனால் இந்தியத் தொழில் துறை வேகமாக வளர்ந்தது... இந்திய மக்களிடையே பணப்புழக்கம் அதிகரித்தது. அதே நேரத்தில், நுகர்வுத் தன்மையும் அதிகரித்தது. மக்களின் வாழ்க்கை முறை வெகுவாக மாறத் தொடங்கின. செல்போன், மல்டி ஃப்ளெக்ஸ், ஆன்லைன் ஷாப்பிங் என இந்தியாவே டிஜிட்டல் மயமானது. இதனால் அனைத்துத் தொழில்களிலும் இ-காமர்ஸ் என்ற இணைய வணிகம் அதிகரித்தது. மிக இளம் வயதிலேயே ஏராளமானோர் பணக்காரர்களாக விஸ்வரூபம் எடுத்தார்கள்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் மிக இளம் வயதிலேயே தொழில்நுட்பத்தை மட்டுமேவைத்து பில்லியனர் ஆனவர்களில் ஓலா நிறுவனத்தின் நிறுவனர்கள் அங்கித் பாட்டி, பாவிஷ் அகர்வால், ஸ்னாப்டீல் நிறுவனர் குனால் பால் மற்றும் ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தின் நிறுவனர்கள் பின்னி மற்றும் சச்சின் பன்சால் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களின் வயது 28 - 32-க்குள்தான். அம்பானிகளும், பியானிகளும் ஆண்டாண்டுகளாய் சேர்த்த பணத்தை, ஐந்தே ஆண்டுகளில் இவர்களால் சேர்க்க முடிந்ததுதான் தொழில்நுட்ப வளர்ச்சியின் சக்திக்குச் சான்று.
இந்தியாவில் மில்லியனர்களின் எண்ணிக்கை!

2011 - 62,000
2012 - 81,000
2013 - 1,00,900
2014 - 1,17,000
2015 - 1,37,100

இங்கு எல்லோரும் பணக்காரர்களா?

இந்தியா ஏழாவது பணக்கார நாடு என்ற இடத்தைப் பிடித்துள்ளது. மொத்த சொத்து மதிப்பு இந்திய ரூபாயில் 375 லட்சம் கோடி. இந்தியாவில் 2015 கணக்கெடுப்பின்படி 1,37,100 மில்லியனர்கள் இருக்கிறார்கள். இவர்களில் டாப் 10 இடங்களைப் பிடித்துள்ள பணக்காரர்கள் மட்டுமே 8.5 லட்சம் கோடிக்குச் சொந்தக்காரர்களாக இருக்கிறார்கள். எனில், மிச்சமுள்ள 1,37,090 மில்லியனர்களின் மொத்த சொத்து மதிப்பு என்னவாக இருக்கும்? 130 கோடி பேரில் இவர்கள் தவிர, மிச்சமுள்ள நபர்களின் மொத்த சொத்து மதிப்பு என்னவாக இருக்கும்?


புள்ளிவிவரங்களின்படி 130 கோடி பேர் கொண்ட இந்த நாட்டில் 1.6 கோடி பேர் மட்டுமே வருடத்துக்கு ரூ.17 லட்சத்துக்கும் மேல் வருமானம் ஈட்டுகிறார்கள். 16 கோடி பேர் வருடத்துக்கு 3 லட்சத்துக்கும் மேல் வருவாய் பார்க்கும் மிடில் க்ளாஸ் மக்கள். 36 கோடி பேர் வருடத்துக்கு 1.5 லட்சத்துக்கு மேல் வருவாய் ஈட்டுபவர்கள். 70 கோடி பேர் 1.5 லட்சத்துக்கும் குறைவாக வருவாய் ஈட்டுபவர்கள். மீதமுள்ள 5 கோடி பேர் கணக்கிலேயே எடுத்துக்கொள்ள முடியாத நிலையில் இருப்பவர்கள்.
காணி நிலம் வேண்டும்!

கிரெடிட் சூயிஸி சொத்து அறிக்கை 2014-ன்படி இந்தியாவில் மொத்த மக்கள்தொகையில் 1 சதவிகிதத்தினர், 49 சதவிகித இந்திய நிலத்துக்குச் சொந்தக்காரர்களாக இருக்கிறார்கள். 9 சதவிகிதத்தினர், 25 சதவிகித நிலத்தையும், 40 சதவிகிதத்தினர், 21.5 சதவிகித நிலத்தையும் பகிர்ந்துகொண்டிருக்கும் நிலையில், கிட்டத்தட்ட 50 சதவிகிதம் இந்திய மக்கள் வெறும் 4.5 சதவிகித நிலங்களுக்கு மட்டுமே சொந்தக்காரர்களாக இருக்கிறார்கள். இப்படித்தான் இந்தியாவில் சொத்துக்களின் பரவல், பணப்புழக்கத்தின் அளவு இருக்கிறது. இந்தியாவின் 80 சதவிகிதச் சொத்துக்கள் 20 சதவிகித மக்களிடம் இருக்கிறது. மிச்சமுள்ள 20 சதவிகிதச் சொத்துக்களைத்தான் 80 சதவிகித மக்கள் பகிர்ந்துகொள்கிறார்கள்.
உணவின்றி உயிர் போகிறது!

மொத்த மதிப்பீட்டில் இந்தியா வளர்ந்து இருப்பது வெளிநாட்டினரிடம் பெருமையடித்துக்கொள்ள பயன்படலாம். ஆனால், உள்நாட்டில் நிலை என்ன? நேஷ்னல் சர்வே புள்ளிவிவரத்தின்படி இந்தியாவில், நகரங்களில் சராசரியாக ஒருநாளைக்கு ஒருவர் செய்யும் செலவு ரூ.88, கிராமங்களில் ரூ.48. இன்றைய விலைவாசியில் இந்தத் தொகையில் ஆரோக்கியமான உணவுகளை உண்ண முடியுமா? இந்தியாவில் மொத்த உயிரிழப்புகளில் 53 சதவிகிதம் ஊட்டச்சத்துக் குறைபாட்டினால் நடக்கும் உயிரிழப்புகள் ஆகும்.
ஆரோக்கியமான ஊட்டச்சத்துமிக்க உணவு இல்லாததால் எந்த நோய் எதிர்ப்புத் திறனும் இன்றி நோய்வாய்ப்பட்டு உயிரிழப்புகள் நடக்கின்றன. இவற்றில் 70 சதவிகிதத்துக்கும் மேலான உயிரிழப்புகள் 10 வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகள். மொத்தத்தில், ‘இந்தியா உலக அரங்கில் அனைத்து வசதிகளையும் கொண்ட ஏழாவது அழகான பங்களா’ என்ற அந்தஸ்தைப் பெற்றிருக்கிறது. ஆனால், வீட்டுக்குள் இருப்பவர்கள்தான் பட்டினியில் கிடக்கிறார்கள். அது வெளியே நின்று வேடிக்கைப் பார்ப்பவர்களுக்குத் தெரியுமா என்ன?
இங்கு என்ன வளம் இல்லை, ஆனால் ஏன் இந்த நிலை?

வளங்களின் அடிப்படையில் ஒப்பிடும்போது இந்தியாவும், சீனாவும் கிட்டத்தட்ட ஒன்றுதான். ஆனால், சீனாவால் மட்டும் எப்படி உலகில் இரண்டாவது பணக்கார நாடு என்ற இடத்தைப் பிடிக்க முடிந்தது. கடந்த 5 ஆண்டுகளில் மற்ற நாடுகளைக் காட்டிலும் மிக வேகமாக சீனா வளர்ந்துள்ளது. அதற்குக் காரணம், சீனா தனக்கென தனி வியாபாரக் கொள்கைகளை வகுத்தது. எந்தவொரு நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருள்களுக்கும் போட்டியாகத் தனது நாட்டிலேயே பொருட்களை உற்பத்தி செய்தது. உலகில் உள்ள மேல்தட்டு மக்களுக்கான சந்தையை அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகள் பிடித்த நிலையில், நடுத்தர மற்றும் கீழ்தட்டு மக்களுக்கான சந்தையைச் சீனா பிடித்தது. வால்யூம் அடிப்படையிலான ஓட்டத்தில் சீனா மற்ற நாடுகளைக் காட்டிலும் நீண்ட இடைவெளியில் ஓடி வென்றது.


சீனப் பொருட்கள் இல்லாத நாடுகளே இல்லை. ஆனால், இந்தியாவில் இல்லாத நாடுகளின் பொருட்களே இல்லை. இந்தியா வெளிநாட்டினரின் கூடாரம். பிராண்டுகள் என்று நாம் மயங்கும் அனைத்தும் வெளிநாட்டு இறக்குமதிகள். இந்தியா இறக்குமதி செய்யும் நாடாக இருப்பதே நம்முடைய வளர்ச்சிக் குறைவாக இருக்கக் காரணம். மேலும் இங்கு ஈட்டப்படும் பெரும்பாலான வருவாய் வெளிநாட்டு முதலீடுகளால் வருபவை என்பதால், அவை இங்கே தங்குவதில்லை. கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலை செய்வதன் மூலம் கிடைக்கும் ஊதியம் மட்டும்தான் மிச்சம்.

ஆனால், வெளிநாட்டினரை நுழையவிடாமல் இருந்திருந்தால், நமது அரசியல்வாதிகளால் நமக்கு இந்த வளர்ச்சிகூடக் கிடைத்திருக்காதோ என்றும் நினைக்கத் தோன்றுகிறது?


Thursday, 25 August 2016

'காதலும் கார்ஃபைடு கல்லைப் போலத்தான்!' -முதல்வர் உள்ளிட்ட கட்சித் தலைவர்களுக்கு ராமதாஸின் கடிதம்

போயஸ் கார்டனில் முதல்வரிடம் கொடுப்பதற்காக கடிதம் ஒன்றைக் கொடுத்து அனுப்பியிருக்கிறார் பா.ம.க நிறுவனர் ராமதாஸ். ' முதல்வரைச் சந்தித்ததில் எந்த உள்நோக்கமும் இல்லை. பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தியே மனு கொடுத்தோம்' என்கின்றனர் பா.ம.க நிர்வாகிகள். 


தமிழக பிரச்னைகள் குறித்து தினம்தோறும் அறிக்கை வெளியிட்டு வருகிறார் பா.ம.க நிறுவனர் ராமதாஸ். நேற்று மாலை அவரது சார்பாக முதல்வரின் போயஸ் கார்டன் வீட்டிற்கு வந்தார் பா.ம.க செய்தித் தொடர்பாளர் பாலு. ' திடீரென்று முதல்வரிடம் மனு கொடுக்கும் அளவுக்கு என்ன நேர்ந்துவிட்டது' என அரசியல் மட்டத்தில் விவாதம் எழுந்தது. இதுகுறித்து பா.ம.க தலைமையிடம் இருந்து எந்தப் பதிலும் வரவில்லை. பாலுவிடம் பேசினோம். " முதல்வரை சந்திக்கச் சென்று மனு கொடுத்ததில் எந்த உள்நோக்கமும் இல்லை. அங்கு அவரை சந்திக்க முடியவில்லை. முதல்வரின் செயலாளர் ஒருவரிடம் மருத்துவர் அய்யா கொடுத்தனுப்பிய கடிதத்தைக் கொடுத்தோம். பெண்களின் பாதுகாப்பு குறித்துத்தான் கடிதத்தில் விளக்கப்பட்டிருந்தது. இதேபோல், அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் கடிதம் கொடுத்து வருகிறோம். அரசியல் காரணங்கள் எதுவுமில்லை" என்றவர், முதல்வரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட கடிதத்தின் நகலை நமக்குக் கொடுத்தார். 
அதன் சாராம்சம் இதுதான்....
அன்புள்ள முதல்வர் அவர்களுக்கு,
வணக்கம்!
தமிழ்நாட்டின் இன்றைய பெரும் பிரச்னைகளில் ஒன்றாக உருவெடுத்திருக்கும் இளம் பெண்களின் பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்த உங்களின் கவனத்தை ஈர்க்கவும் பெண்கள் பாதுகாப்புக்காகவும் பெண்களின் கண்ணியம் மற்றும் உரிமைகளை பாதுகாப்பதற்காகவும் குரல் கொடுக்குமாறு உங்களை  கேட்டுக் கொள்வதற்காகவும் தான் உங்களுக்கு இக்கடிதத்தை எழுதுகிறேன்.
சில ஆண்டுகளுக்கு முன் காரைக்கால் வினோதினியிடம் அந்தக் கொடுமை தொடங்கியது. கொடிய மிருகம் ஒன்று, அந்த அப்பாவிப் பெண்ணுக்கு காதல் வலை வீசியது. ஆனால், தன் பொறுப்பை உணர்ந்திருந்த வினோதினி, அந்தக் காதலை ஏற்க மறுத்துவிட்டார். விளைவு அப்பெண்ணின் முகத்தை அமிலம் வீசி சிதைத்தது  அந்த மிருகம். ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த வித்யா என்ற பெண்ணுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த விஜயபாஸ்கருக்கும் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில், இடையில் ஏற்பட்ட ஊடலால் வித்யாவுக்கு அமில அபிஷேகம் செய்தது அந்த மிருகம். இந்த இரு நிகழ்வுகளிலும் பாதிக்கப்பட்டு பல மாதங்கள் உயிருக்கு போராடிய வினோதினியும் வித்யாவும் இறுதியில் மரணத்தைத் தழுவினார்கள்.
சேலம் வினுப்பிரியா, சென்னை சூளைமேடு சுவாதி, விழுப்புரம் நவீனா என இந்தப் பட்டியல்  தொடர்கிறது. இந்த இளம்பெண்களின் துயர முடிவுக்கு காரணம் அவர்கள் மீது திணிக்கப்பட்ட ஒருதலைக் காதல் தான். இவர்களில் விழுப்புரம் நவீனாவுக்கு செந்தில் என்ற மிருகம் கொடுத்த தொல்லையை 'ஒருதலைக் காதல்' என்று சொல்ல முடியாது. நவீனா 14 வயது சிறுமியாக இருக்கும் போதிலிருந்தே செந்தில் பாலியல் தொல்லை கொடுத்து வந்திருக்கிறான். கடைசியில் அந்த மிருகத்தின்  சீண்டல் நவீனாவை உயிருடன் தீயிட்டு எரித்து படுகொலை செய்த கொடுமையில் நிறைவடைந்துள்ளது. இந்த கொடுமைகளுக்கு எல்லாம் முதன்மைக் காரணம் காதல் என்றால் என்ன என்ற புரியாமையும்,  சாதி ஒழிப்புக்கான சிறந்த ஆயுதம் காதல் வழி கலப்புத் திருமணம் தான் என்ற தவறான வழிகாட்டுதலும்  தான் என்பதில் உள்ள உண்மையை  புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். காதலுக்கோ, கலப்பு திருமணத்திற்கோ நான் ஒரு போதும் எதிரியல்ல என்பதை நீங்கள் அறிவீர்கள். 
கடந்த காலங்களில் நான் செய்து வைத்த கலப்புத் திருமணங்கள் என் வார்த்தைகளுக்கு வலிமை சேர்க்கும் கருவிகளாகும். காதல் என்பது அற்புதமான உணர்வு. ஆனால், அது ஒரு ஆணும், ஒரு பெண்ணும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு இயல்பாக வர வேண்டும். எந்த ஒரு பழமும் இயல்பாக கனிந்தால் மட்டுமே சுவைக்கும். மாறாக, கார்பைடு வைத்து கனியவைத்தால் அது உடல் நலனுக்கு தீமையை மட்டுமே ஏற்படுத்தும். இது அறிவியல் உண்மை. காதலும் அப்படிப்பட்டது தான். இயல்பாக ஏற்பட்ட காதல் நாளுக்கு நாள் வலிமையடையும். மாறாக பெண்ணிடம் உள்ள அழகில் மயங்கியோ, சொத்துக்களைப் பறிக்கும் நோக்குடனோ செயற்கையாக உருவாக்கப்படும் காதல் வாழ்க்கையை பொசுக்கிவிடும். இதில் கொடுமை என்னவெனில், இக்காதலால் பாதிக்கப்படுபவர்கள் பெண்களாகவே இருப்பது தான்' என விவரித்தவர், 


தொடர்ந்து, பெண் ஏன் அடிமை ஆனாள் புத்தகத்தில் பெரியார் குறிப்பிடும் சில வார்த்தைகளை விவரித்துவிட்டு, காதல் தெய்வீகமானது அல்ல... அது ஆசை மற்றும் செல்வத்தை பொறுத்தே ஏற்படும் என்பதையும் 30.06.1940 அன்று வெளியான குடியரசு நாளிதழில்  பெரியார் கூறியிருக்கிறார். காதல் மற்றும் அதன்மூலம் ஏற்படும் கலப்புத் திருமணங்களால் சாதி ஒழிந்து விடும் என்று ஒரு பிரசாரம் திட்டமிட்டு செய்யப்படுகிறது.  ஆனால், காதலாலும் கலப்புத் திருமணத்தாலும் சாதிகள் ஒழிவதில்லை என்பது தான் உண்மை. இந்திய விடுதலைக்குப் பிந்தைய 65 ஆண்டுகளில் நடந்த காதல் திருமணங்களால் சாதியற்ற சமுதாயம் எந்த அளவுக்கு உருவாகியிருக்கிறது?  காதல் கலப்புத் திருமணம் செய்துகொண்டவர்களில் எத்தனை பேர் தங்களின் குழந்தைகளை சாதியற்றவர்களாகப் பதிவுசெய்திருக்கிறார்கள்? என்ற எளிய வினாக்களுக்கு பல ஆண்டுகளாக விடை தேடிக் கொண்டிருக்கிறேன். ஆனால், இன்னும்  விடை கிடைக்கவில்லை. காரணம்... காதல் திருமணம் செய்து கொண்டவர்களில் 99 விழுக்காட்டினர் தந்தையின் சாதியையே குழந்தையின் சாதியாக பதிவு செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். இளைஞர்களை தூண்டிவிடும் வகையில் இவர்கள் பேசிய பேச்சுக்கள் பொது அரங்கில் ஏற்கனவே வெளியாகியுள்ளன. இப்போது பிறசாதிப் பெண்களை காதலில் வீழ்த்துவது தங்களின் குலப்பெருமை என்பதைப் போல பேசி, அச்செயலை நியாயப்படுத்தியிருக்கிறார் ஒரு தலைவர். 
அவர் பேசிய மிகவும் அருவருக்கத்தக்க வார்த்தைகளை இந்த கடிதத்தில் மறுபதிப்பு செய்வதே பாவச்செயல் தான். ஆனாலும்,  அந்த வார்த்தைகளில் ஒளிந்திருக்கும் கயமையை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருவதற்காக அவரது உரையின் ஒரு பகுதியை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். (அரசியல் கட்சித் தலைவரின் வாசகங்களை விவரிக்கிறார்) இப்படி ஒரு நிலை ஏற்பட்டதற்காக வருந்துகிறேன். இந்த உரை அடங்கிய வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது. ஆனால், பெண்ணுரிமை பேசும் பெரியார் வழி வந்த தலைவர்களோ, பொதுவுடமை பேசும் தலைவர்களோ, பெண்ணியவாதிகளோ இதைக் கண்டிக்க முன்வராதது மிகவும் வருத்தமளிக்கிறது. பெண்கள் சமூகத்தின் வரங்கள். ஆனால், சமூகத்தின் சில சாபங்களால், அந்த வரங்கள் பொசுக்கப் படுகின்றன. பெண்களை படிக்க வைக்க வேண்டும்; வாழ்க்கையில் முன்னேற உறுதுணையாக இருக்க வேண்டும். ஆனால், நமது சமுதாயம் பெண்களை பாதுகாக்கவில்லை. மாறாக, பெண்கள்  எனும் மலரை கசக்கி எறியும் கயவர்களுக்கு, இல்லாத காரணங்களைக் கூறி, சாமரம் வீசிக் கொண்டிருக்கிறது. இந்தப் போக்கு உடனடியாக தடுக்கப்படாவிட்டால் தமிழகம் பெண்களுக்கு நரகமாகி  விடும் ஆபத்திருக்கிறது. இந்த ஆபத்துக்கு எதிராக பெண்கள் நலனில் அக்கறையுள்ள அனைவரும் அணி திரள வேண்டும்' என விவரித்திருக்கிறார் பா.ம.க நிறுவனர் ராமதாஸ். 




எனக்குப் பதவி கொடுத்தது கடவுள்தான்; ஜெயலலிதா அல்ல!' -சசிகலா புஷ்பாவின் அடுத்த அதிரடி


சசிகலா புஷ்பா முன்ஜாமீன் மீதான வழக்கில் நேரில் ஆஜராகும்படி உத்தரவிட்டுள்ளது மதுரை உயர்நீதிமன்றம். ' மதுரைக்கு வந்தால் என்ன நடக்கும் என்பதும் தெரியும். உச்ச நீதிமன்றம் வரையில் சென்றாவது ஜாமீன் வாங்குவேன்' எனக் கொதிக்கிறார் சசிகலா. 


அ.தி.மு.க தலைமையுடன் ஏற்பட்ட மோதலை அடுத்து, தொடர் வழக்குகளால் நெருக்கடிக்கு ஆளாகியிருக்கிறார் சசிகலா புஷ்பா எம்.பி. பணிப்பெண்கள் கொடுத்த பாலியல் புகார் வழக்கில் சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் முன்ஜாமீன் கோரி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்தனர். நேற்று நடந்த வழக்கு விசாரணையில் மனுத் தாக்கலில் நடந்துள்ள குளறுபடிகள் குறித்து, அரசுத் தரப்பில் அடுக்கடுக்கான கேள்விகள் தொடுக்கப்பட்டன. குறிப்பாக, ' முன்ஜாமீன் மனுவில் சம்பந்தப்பட்டவர் கையெழுத்திட்டிருக்க வேண்டும். ஆகஸ்ட் 17-ம் தேதி சிங்கப்பூருக்குச் சென்றார் சசிகலா. ஆனால், ஆகஸ்ட் 17-ம் தேதி மதுரையில் வழக்கறிஞர்கள் முன்னிலையில் ஆஜராகி கையெழுத்திட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது வரையில் அவர் வெளிநாட்டில்தான் இருக்கிறார். அவரது சார்பில் வழக்கறிஞர் ஆஜராகும்போது, 'இம்மனுவை தாக்கல் செய்ய நான் அறிவுறுத்தினேன்' என ஜாமீன் கோருபவரின் ஒப்புதல் கடிதம் அளிக்கப்பட வேண்டும். இவை அனைத்தும் மீறப்பட்டுள்ளன' என அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் புகழேந்தி முன்வைத்த வாதங்களை அடுத்து, ' ஆகஸ்ட் 29-ம் தேதி சசிகலா புஷ்பா நேரில் ஆஜராக வேண்டும்' என உத்தரவிட்டார் நீதியரசர். 


மதுரை உயர்நீதிமன்றத்தில் நடந்த விஷயங்கள் அனைத்தும் உடனுக்குடன் சசிகலா பார்வைக்குக் கொண்டு சென்றனர் அவரது வழக்கறிஞர்கள். அவர்களிடம் பேசியவர், " கையெழுத்து என்னுடையதுதானா என்ற சந்தேகத்தை தெளிவுபடுத்த வேண்டும் என்றுதான் கேட்டுள்ளனர். இதற்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று அவசியம் இல்லை. அதே நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம். ஒருவேளை ஜாமீன் கிடைக்கவில்லையென்றால், உச்ச நீதிமன்றம் வரையில் சென்றாவது வாங்குவோம். ஜாமீன் வாங்காமல் தமிழ்நாட்டிற்குள் கால் வைக்க மாட்டேன்" என்றவர், " கார்டனுக்குள் நடந்த கொடுமைகளை நான் மறக்கவில்லை. அவர்கள் என்னை அடித்தது மட்டுமல்ல, கார்டன் போலீஸ்காரர்கள் கையில் லத்தியைக் கொடுத்து அடிக்கச் சொன்னார்கள். காலில் ரத்தம் வரும் அளவுக்கு அடித்தார்கள். இதற்கு மேலும் பொறுத்துக் கொள்ளக் கூடாது என்றுதான் மேல்-சபையில் பேசினேன். இப்போது சமரசம் என்ற பெயரில் பேசுகிறார்கள். அவர்களின் சமரசத்திற்கு உடன்பட்டால், நான் அடி வாங்கியதற்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும். கட்சியில் இந்தளவுக்கு நான் உயர்ந்ததற்கும் பதவிகள் பெற்றதற்கும் கடவுள்தான் காரணம். ஜெயலலிதா அல்ல. முன்ஜாமீன் வாங்குவதற்காக மதுரைக்குள் வந்தால், என்ன செய்வார்கள் என்பதும் தெரியும். அதற்கு இடம் கொடுக்க எனக்கு விருப்பமில்லை. சட்டரீதியாகவே போராடுவோம்" எனப் பேசியிருக்கிறார். 


ஆகஸ்ட் 29 அன்று நீதிமன்றம் பிறப்பிக்கப் போகும் உத்தரவை அடுத்தே, சட்டரீதியான போராட்டத்தின் அடுத்தகட்டத்தை நகர்த்த இருக்கிறார் சசிகலா புஷ்பா. அ.தி.மு.க தலைமைக்கு எதிரான ஆட்டத்தையும் அவர் கைவிடுவதாக இல்லை. 


தொடர்ந்து கண்டனங்களுக்கு ஆளாகும் தமிழக அரசு!

‘‘நீங்கள் பொது வாழ்வில் ஈடுபட்டிருக்கும் நபர். விமர்சனங்களை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும்’’ என்று ஜெயலலிதாவுக்கு உச்ச நீதிமன்றம் மீண்டும் ஒருமுறை நினைவூட்டி இருக்கிறது. தமிழக அவதூறு வழக்குகளைத் தடை செய்யக்கோரிய தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இவ்வாறு தெரிவித்து இருக்கிறார்கள்.


கடந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் திருப்பூரில் பிரசாரம் மேற்கொண்ட தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த், ‘‘மக்கள் இங்கு கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கும்போது, முதல்வர் மட்டும் கொடநாட்டுக்கு ஓய்வெடுக்கச் சென்றுவிடுகிறார்’’ என்று பேசினார். இதற்காகத் தமிழக அரசு வழக்கறிஞர்கள் சார்பில் அவதூறு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இதனை எதிர்த்து விஜயகாந்த் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில், அவதூறு வழக்குகளைத் தடை செய்யக்கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ஒவ்வொரு முறை இந்த வழக்கு விசாரணைக்கு வரும்போதும் நீதிபதிகள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

‘‘விமர்சனங்களைப் பொறுத்துக்கொள்ள வேண்டும்!’’
இந்தநிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதி நாகப்பன் மற்றும் நீதிபதி பிரபுல்லா சி.பன்ட் அமர்வு இந்த வழக்கினை விசாரித்தது. அப்போது, ‘‘பொது வாழ்வில் ஈடுபட்டிருக்கும் நபர் விமர்சனங்களை எதிர்கொள்ளத்தான் வேண்டும். தமிழ்நாடு அரசைப்போல வேறு எந்த அரசும் மாநில அரசு இயந்திரத்தை, இதுபோல தேவையில்லாத விஷயங்களில் தவறாகப் பயன்படுத்துவதில்லை’’ என்று கண்டனம் தெரிவித்து இருக்கிறார்கள்.
இதுபோல நீதிமன்ற கண்டனத்துக்குத் தமிழக அரசு ஆளாவது முதல்முறை கிடையாது. கடந்த மாதம்கூட, “இத்தனை அவதூறு வழக்குகள் எல்லாம் கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரானவை. விமர்சனங்களைப் பொறுத்துக்கொள்ள வேண்டும். அரசியல் பழிவாங்கும் கருவியாக அவதூறு வழக்குகளைப் பயன்படுத்தக் கூடாது” என்று கூறி இருந்தது உச்ச நீதிமன்றம்.
கடந்த ஐந்து ஆண்டு ஆட்சியின்போது, பலமுறை சென்னை உயர் நீதிமன்றம், கர்நாடக உயர் நீதிமன்றம்,  உச்ச நீதிமன்றம் என வரிசையாகப் பல இடங்களில் தமிழக அரசு குட்டு வாங்கி இருக்கிறது. இருந்தாலும், அதைப்பற்றி எல்லாம் கொஞ்சம்கூடக் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. நீதிமன்றம் கண்டித்துக்கொண்டே இருந்தாலும், ‘டோண்ட் வொரி.. பீ ஹேப்பி’ பாணியில் இருந்து வருகிறது தமிழக அரசு.

இதற்குமுன் எத்தனை முறை தமிழக அரசு கண்டனத்துக்கு ஆளாகி இருக்கிறது தெரியுமா?
கண்டனம்-1:
கடந்த முறை 2011-ல் அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன், தி.மு.க கொண்டு வந்த சமச்சீர் கல்விமுறையை நடைமுறைப்படுத்த முடியாது என்று தமிழக அரசின் நிபுணர் குழு அறிக்கை அளித்தது. இதில், பதிலளித்த உயர் நீதிமன்றம், ‘‘ ‘சமச்சீர் கல்விச் சட்டம் செல்லும்’ என்று ஏற்கெனவே உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. தற்போது தமிழக அரசின் இந்த நடவடிக்கை கல்வி பெறும் உரிமையைப் பாதுகாக்கும் அரசியல் சாசன சட்டத்துக்கு எதிரானது’’ என்று சொல்லியது.
கண்டனம்-2:
தி.மு.க ஆட்சியில் கட்டப்பட்ட அண்ணா நூலகத்தைக் குழந்தைகள் நல மருத்துவமனையாக மாற்றத் தமிழக அரசு உத்தரவிட்டதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அதற்குப் பதில் சொல்ல அரசு ஆறு மாதம் காலம் அவகாசம் கேட்டு இழுத்தடித்தது. ‘‘நூலகத்தை மாற்ற, ஒரு நொடியில் முடிவெடுத்த உங்களுக்குப் பதில் மனுத்தாக்கல் செய்ய ஆறு மாத கால அவகாசமா?’’ என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், நூலகத்தை மாற்றவதற்கு அரசு பிறப்பித்த உத்தரவை ரத்துசெய்து உத்தரவிட்டனர்.
கண்டனம்-3:
‘‘2014 மவுலிவாக்கம் விபத்து குறித்து சி.பி.ஐ விசாரணை கோரியும், நீதிபதி ரெகுபதி விசாரணை கமிஷனின் அறிக்கையையும் வெளியிட வேண்டும்’’ எனவும் ஸ்டாலின் பொதுநல வழக்குத் தாக்கல் செய்தார். அதனை விசாரித்த நீதிமன்றம், ‘‘விசாரணை கமிஷன் அறிக்கையை சட்டசபையில் தாக்கல் செய்ய காலதாமதம் செய்தால், சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டியது வரும்’’ என்று எச்சரித்தது.
கண்டனம்-4:
மின்வாரியத்தில் பணியாற்றிய நபர் ஒருவர் இறந்தபோது, அவரது பெண்ணுக்குத் திருமணம் ஆகிவிட்டது என்கிற காரணத்தைச் சொல்லி வாரிசு வேலை தர மறுத்தனர் அதிகாரிகள். இதை விசாரித்த நீதிபதி பரந்தாமன், ‘‘ ‘வயதான காலத்தில் பெற்றோரை மகன், மகள் பாதுகாக்க வேண்டும்’ என்று மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலச்சட்டம் சொல்கிறது. பெற்றோரைப் பாதுகாக்கும் கடமையில், பாலினப் பாகுபாடு பார்க்கப்படவில்லை. ஆகவே, பெற்றோர் மூலம் கிடைக்கும் உரிமையிலும் பாலினப் பாகுபாடு பார்க்க முடியாது. எனவே, அந்தப் பெண்ணுக்கு வேலை வழங்கவேண்டும்’’ என்று உத்தரவிட்டார்.


கண்டனம்-5:
தர்மபுரி பேருந்து தீ வைப்பு வழக்கில் கைதாகி 2 வருடம் சிறைத் தண்டனை பெற்ற டி.கே.ராஜேந்திரன், தர்மபுரி மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தமிழ்நாடு கூட்டுறவுச் சட்டத்தின்படி, ஜெயில் தண்டனை பெற்றவர்கள் கூட்டுறவுச் சங்கத்தில் உறுப்பினராகக்கூடப் பதவி வகிக்க முடியாது. இதை விசாரித்த நீதிபதி மணிக்குமார், ‘‘சிறைத் தண்டனை பெற்றவர் எப்படிக் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவராகப் பதவி வகிக்க அனுமதிக்கப்பட்டார்?’’ என்று தமிழக அரசுக்குக் கண்டனம் தெரிவித்தார்.
கண்டனம்-6:
அரசுத் துறைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவிகித இடஒதுக்கீடு கோரி வழக்குத் தொடரப்பட்டது. இதற்குப் பதில் கேட்டு பள்ளிக்கல்வித் துறை, உயர்கல்வித் துறைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. பதில் வரவில்லை. இதற்கு நீதிமன்றம், கண்டனம் தெரிவித்ததோடு 2 துறைகளுக்கும் தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தது. அடுத்தமுறையும் பதில் தாக்கல் செய்யப்படவில்லை. மீண்டும் பள்ளிக்கல்வித் துறைக்குக் கண்டனத்தோடு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
கண்டனம்-7:
சென்னையில் விதிகளை மீறி பேனர் வைப்பதற்கு எதிராக டிராஃபிக் ராமசாமி வழக்குத் தொடர்ந்திருந்தார். இதை விசாரித்த உயர் நீதிமன்றம், ‘‘விதிகளை மீறி பேனர் வைப்போர் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்குத் தைரியம் இல்லை. அதனால்தான் அந்தத் தவறு தொடர்கிறது’’ என்று கண்டனம் தெரிவித்தது.
கண்டனம்-8:
பள்ளி வாகனத்தின் ஓட்டையில் இருந்து விழுந்து சிறுமி உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் பள்ளி வாகனங்களின் பாதுகாப்புக் குறித்து புதிய விதிமுறைகளை உருவாக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழக அரசு பதில் மனுத்தாக்கல் செய்யாமல் தாமதித்து வந்தது. இதற்கு நீதிபதிகள், ‘‘பள்ளி வாகனப் பாதுகாப்பு விதிமுறைகளை உருவாக்குவதில் தமிழக அரசு அதிக மெத்தனம் காட்டுகிறது. இது முக்கிய விஷயமாகத் தமிழக அரசுக்குத் தெரியவில்லையா?’’ என்று கண்டனம் தெரிவித்தனர்.
கண்டனம்-9:
சட்டவிரோதமாகக் கழிவுநீர் இணைப்புகள் வைத்திருப்பவர்களுக்கு எவ்வளவு அபராதம் என்று நீதிமன்றம் ஒரு வழக்கில் கேள்வி எழுப்பியது. அதற்கு அதிகாரிகள், ‘‘ரூ.100 முதல் 2 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படுகிறது’’ என்று பதிலளித்தனர். இதற்குக் கண்டனம் தெரிவித்த நீதிமன்றம் அபராதத் தொகையை அதிகரிக்கச் சொல்லி உத்தரவிட்டது.
கண்டனம்-10:
மருத்துவக் கவுன்சிலின் விதிப்படி, மருத்துவக் கல்லூரிகளில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டு இருக்கிறதா என்று அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டது. இதற்குக் கால அவகாசம் கோரப்பட்டது. இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், ‘‘எத்தனை முறை அவகாசம் வழங்குவது? ஒவ்வொரு முறையும் இதுபோன்ற கால அவகாசம் கேட்பது சரியானது அல்ல’’ என்று அரசுக்குக் கண்டனம் தெரிவித்தனர். அத்துடன், தமிழக சுகாதாரத் துறை செயலர், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர், இந்திய மருத்துவ கவுன்சில் செயலாளர் ஆகியோருக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டனர்.
கண்டனம்-11:
மதுரை சிறார் சிறைச்சாலை வசதி குறைவாக இருக்கிறது என்பதை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது சென்னை உயர் நீதிமன்றம். இதற்கு சமூகநலத் துறை, ‘திருச்சி சிறார் காப்பகம் சிறந்த முறையில் கட்டப்பட்டு இருக்கிறது’ என்று பதிலளித்தது. இதற்கு நீதிபதிகள், ‘‘மதுரையைப் பற்றிக் கேட்டால் திருச்சி பற்றித் தகவல் தருகிறீர்கள். இதைக்கூடச் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை’’ என்று கண்டனம் தெரிவித்தனர்.
கண்டனம்-12:
ஆறாவது சம்பள கமிஷன்படி, சம்பளம் தரசொல்லி சேலம் கூட்டுறவுச் சர்க்கரை ஆலை மெட்ரிகுலேஷன் பள்ளி ஆசிரியர்கள் தொடர்ந்த வழக்கில், ஆசிரியர்களுக்கு சாதகமாகத் தீர்ப்பு அளிக்கப்பட்டது. இருந்தும் சம்பளம் வழங்காததால், ஆசிரியர்கள் நீதிமன்ற அவமதிப்பு வழக்குப் போட்டனர். அப்போது, ‘நீதிமன்ற உத்தரவை மதிக்காத அதிகாரிகள் இனி சிறைக்கு அனுப்பபடுவார்கள்’ என்று கண்டித்தனர்.
கண்டனம்-13:
மழலையர் பள்ளி விதிமுறைகளை மீறிய பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், புதிய விதிமுறைகளை உருவாக்கக் கோரியும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கும் கால அவகாசம் கேட்டனர் அதிகாரிகள். அதற்கு அடுத்த முறை விசாரணையின்போது, பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலர் சபீதா நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
கண்டனம்-14:
‘‘நெடுஞ்சாலை பணிகளின்போது, 200 ஆண்டுகள் பழமையான மரங்களை வேறொரு இடத்தில் நடவேண்டும்’’ என்று வழக்கு ஒன்றில் நீதிபதிகள் தெரிவித்தனர். அதற்குத் தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் இருந்த புகைப்படங்களைப் பார்த்து நீதிபதிகள் அதிர்ச்சி அடைந்தனர். ‘‘புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த மரங்களை வேரோடும், வேரடி மண்ணோடும் எடுத்து வேறு இடங்களில் நடவேண்டும். ஆனால், தமிழக அரசு ஜே.சி.பி வாகனத்தைப் பயன்படுத்தி, மரத்தை வெட்டிச் சாய்த்து, வேறு ஓர் இடத்தில் நட்டுள்ளனர். இதுவா தொழில்நுட்பம்? தமிழக அரசு அதிகாரிகள் டெல்லி சென்று, அங்குள்ள மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் மரங்களை எப்படி வேறு இடங்களில் நட்டனர் என்ற புதிய தொழில்நுட்பத்தைப் படித்துவந்து, அந்த முறையை இங்கு பயன்படுத்துங்கள்’’ என்று உத்தரவிட்டனர்.
கண்டனம்-15:
காவல் நிலையங்களில் விசாரணைக்கு அழைத்துச் செல்பவர்களைத் தாக்குவது தொடர்பான சி.சி.டி.வி கேமரா வைக்கக்கோரிய வழக்கில், நான்கு வார கால அவகாசம் கொடுத்தது நீதிமன்றம். வழக்கம்போல பதில் மனுத் தாக்கல் செய்யவில்லை அரசு. அதற்காகக் கண்டனத்தோடு உள்துறைச் செயலருக்கும், டி.ஜி.பி-க்கும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.


கண்டனம்-16:
கிரானைட் கொள்ளை குறித்து விசாரணை செய்ய சகாயம் தலைமையில் குழு அமைத்தது உயர் நீதிமன்றம். அதை எதிர்த்துத் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய, அது தள்ளுபடி செய்யப்பட்டது. மீண்டும் மறுசீராய்வு மனுப் போட்டது தமிழக அரசு. அதை விசாரித்த நீதிபதிகள், ‘‘சகாயம் விசாரித்தால் உங்களுக்கு என்ன பயம்? நீங்கள் ஏன் விசாரிக்கவில்லை’’ என்றதோடு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து வழக்கைத் தள்ளுபடி செய்தனர். இதுமட்டுமில்லாமல், பொது இடங்களில் இருக்கும் மதுக்கடைகள் தொடர்பான வழக்கு, மாநகராட்சி மீது தொடரப்பட்ட வழக்கு, பார்வையற்றோருக்குப் பணி தராது தொடர்பான வழக்கு எனப் பலமுறை நீதிமன்ற கண்டனத்துக்கு ஆளாகி இருக்கிறது தமிழக அரசு. இதுவரை வேறு எந்த அரசும் இந்த அளவுக்குக் கண்டனங்களைச் சந்தித்தது இல்லை.
‘‘விமர்சனம் என்பது ஜனநாயகத்தின் ஒரு வழி!’’
இதுதொடர்பாக வழக்கறிஞர் ரமேஷிடம் பேசினோம், ‘‘இதுவரை தமிழக அரசின் சார்பில் 213-க்கும் மேற்பட்ட அவதூறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு இருக்கின்றன. இவை அனைத்துமே கிரிமினல் சட்டத்துக்கு உட்பட்டவை. கிரிமினல் சட்டத்தின் 499-வது பிரிவின்படி, பொதுவாழ்வில் இருப்பவர்களின் செயல்பாடுகள் பற்றி விமர்சிப்பது அவதூறு வழக்கு ஆகாது என்று சொல்லப்பட்டிருக்கிறது. இருப்பினும், இந்த அரசு அவதூறு வழக்குகளை கவனித்துக்கொள்வதற்காகவே தனியே ஒரு சிறப்பு வழக்கறிஞரை நியமித்து இருப்பதன்மூலம் அனைவரையும் மிரட்டப் பார்க்கிறது. விமர்சனம் என்பதும் ஜனநாயகத்தின் ஒரு வழிதான். அதன்மூலம் தன் தவறுகளை ஓர் அரசு திருத்திக்கொள்ள முடியும். ஆனால், அ.தி.மு.க அரசு தனக்கு எதிராக யாரும் வாயை திறக்கக் கூடாது என்கிற முடிவில் இருப்பது பத்திரிகைகளின் மீது போடப்பட்டிருக்கும் வழக்குகளின் எண்ணிக்கையிலேயே தெரிகிறது. நீதிமன்றத்தின் கண்டனத்தைக் கருத்தில்கொண்டாவது ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்’’ என்றார்.
இதுகுறித்து அ.தி.மு.க வழக்கறிஞர் ஜெகனிடம் பேசினோம். ‘‘அவதூறு வழக்கை நாங்கள் எங்கள் இஷ்டத்துக்குப் பயன்படுத்துவதுபோல ஒரு தோற்றம் உருவாகி இருக்கிறது. நாங்கள் ஒருபோதும் அவ்வாறு செய்தது இல்லை. பதியப்பட்ட வழக்குகள் அனைத்திலும் வலுவான ஆதாரங்கள் இருக்கின்றன. நடவடிக்கைகளை விமர்சிக்கலாம் என்று சொல்கிறார்கள். துணைவேந்தர்கள் நியமனத்தில் முதல்வர் லஞ்சம் வாங்கிவிட்டார், அரசு செயல்படாமல் இருக்குகிறது என்று எழும் விமர்சனங்களை எப்படி ஏற்றுக்கொள்வது? கருத்துச் சுதந்திரம் என்பதற்காக என்ன வேண்டுமானாலும் எழுதலாம் என்று ஆகிவிடாது. சட்டசபைக்குள் ஆக்கபூர்வமான விஷயங்களை விவாதிக்கலாம். ஆனால், வெளியே நின்றுகொண்டு மைக் கிடைத்துவிட்டது என்பதற்காக, தவறாகப் பேசுபவர்களின் மீதுதான் நாங்கள் அவதூறு வழக்குகள் போட்டிருக்கிறோம்’’ என்றார்.




Wednesday, 24 August 2016

தலைவர் இல்லாவிட்டால், இப்படித்தான் செயல்படுவதா?' -நிர்வாகிகளிடம் கொந்தளித்த ஈ.வி.கே.எஸ்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு சத்யமூர்த்திபவன் கலகலக்கத் தொடங்கிவிட்டது. ' நான் இல்லாவிட்டால் அறையை உடைக்கும் அளவுக்குச் சென்றுவிடுவீர்களா?' என நிர்வாகிகளிடம் கொந்தளித்தார் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன். 


தமிழக காங்கிரஸ் கமிட்டிக்குப் புதிய தலைவர் இன்னமும் அறிவிக்கப்படவில்லை. மாநில பொதுச் செயலாளர்களாக பதவி வகிக்கும் செல்வம், சிரஞ்சீவி, ராஜேந்திரன் உள்ளிட்டவர்கள் பொறுப்புக் குழு அமைத்து இயங்கி வருகின்றனர். இந்நிலையில், இன்று மதியம் சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்களுடன் சத்யமூர்த்தி பவனுக்குள் நுழைந்தார் மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் இளஞ்செழியன். அவருடன் வந்தவர்கள், பூட்டிக் கிடந்த காங்கிரஸ் ஊடகப் பிரிவுத் தலைவர் கோபண்ணா அறையை உடைக்க முயன்றுள்ளனர். இதைக் கேள்விப்பட்ட ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் அங்கு விரைந்தார். ' இளைஞர் காங்கிரஸ் தலைவருக்கு அறை இல்லை. சாவியைக் கேட்டதால் யாரும் கொடுக்கவில்லை. எனவே உடைக்கிறோம்' என சுத்தியலுடன் வந்தவர்கள் பதில் அளிக்க, கொதித்துப் போனார் ஈ.வி.கே.எஸ். அவர்களிடம், ' அறையை உடைக்கும் அளவுக்கு தைரியம் வந்துவிட்டதா? நான் இருக்கும்வரையில் அப்படி எதுவும் நடக்கவிட மாட்டேன். புதிய தலைவரை மேலிடம் நியமனம் செய்யட்டும். அதன்பிறகு யாருக்கு அறை ஒதுக்குவது என்பதை முடிவு செய்து கொள்ளலாம். இனியொரு முறை இவ்வாறு நடந்தால், நான் சும்மா இருக்க மாட்டேன்' எனக் கடுமையாக எச்சரித்துவிட்டுச் சென்றார். அதற்குள் ஏராளமான பொதுமக்கள் திரண்டுவிட்டனர். 
காங்கிரஸ் ஊடகப் பிரிவுத் தலைவர் கோபண்ணாவிடம் பேசினோம். " தலைவர் பதவியில் இருந்து இளங்கோவன் ராஜினாமா செய்துவிட்டார். அவரோடு இணைந்து பணியாற்றுவதால் எனக்கு எதிராகச் சிலர் செயல்படுகின்றனர். தினம்தோறும் என்னுடைய அறைக்குள் அமர்ந்து கட்சி அறிக்கையைத் தயார் செய்து வருகிறேன். ' அந்த அறைக்குள் நான் இருக்கக் கூடாது' என்பதற்காக, அறையை உடைக்கும் முயற்சியில் சிலர் இறங்கியுள்ளனர். என்னுடைய அறையைப் பறிக்கும் நோக்கில், ' இளைஞர் காங்கிரஸ் தலைவருக்கு அறை வேண்டும்' என்று சென்னா ரெட்டியிடம் கோரிக்கை வைத்துள்ளனர். அவரும், ' புதிய தலைவர் வந்த பிறகு பார்த்துக் கொள்ளலாம்' எனக் கூறிவிட்டார். ' அதற்குள் அறையைக் கைப்பற்றிக் கொள்ள வேண்டும்' என்ற முனைப்பில் சிலர் வந்துள்ளனர். கட்சித் தலைவர் பொறுப்பில் இருந்து ஈ.வி.கே.எஸ் ராஜினாமா செய்துவிட்டாலும், புதிய தலைவர் வரும் வரையில் அவர் கட்டுப்பாட்டில்தான் கட்சி இருக்கும். அதற்குள் தேவையற்ற நிகழ்வுகளை நடத்துவதற்கு சிலர் தயாராக இருக்கின்றனர். இதைப் பற்றியெல்லாம் எனக்குக் கவலையில்லை" என்றார்.