Monetize Your Website or Blog

Showing posts with label மூலிகை. Show all posts
Showing posts with label மூலிகை. Show all posts

Thursday, 25 August 2016

குழந்தைகளின் பல் பராமரிப்பிற்கு முத்தான 10 டிப்ஸ்!

மழலைகளின் புன்னகை.... அனைவருக்குமே மட்டற்ற மகிழ்ச்சியைக் கொடுப்பவை. குழந்தைகளின் முத்துப்போன்ற பற்களை பராமரிக்கத் தேவையான ஆலோசனைகளை கொடுக்கிறார், சென்னையைச் சேர்ந்த பல் மருத்துவர் டாக்டர் உமாராணி ராமேஸ்வரன்.
* பிறந்த நாளில் இருந்தே குழந்தையின் பல் பராமரிப்பில், பெற்றோர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். பால் பற்கள் முளைத்திராத குழந்தைகள் பால் குடித்து முடித்த ஒவ்வொரு முறையுமே, நம் விரலில் தூய்மையான துணியை சுற்றி குழந்தையின் ஈறுகளை நன்றாக சுத்தம் செய்துவிடவேண்டும்.


* குழந்தைகளுக்கு பால் பற்கள் முளைத்ததும், அவர்களுக்கென இருக்கும் பிரத்தியேக டூத் பிரஷ், பேஸ்ட்(பற்பசை) கொண்டு தினமும் காலை, இரவு என இரு வேளைகளிலும் பல் துலக்கிவிடவும். பின்னர் பெரியவர்கள் பயன்படுத்தும் டங்க் க்ளீனரை பயன்படுத்தாமல், தூய்மையான  துணியாலோ அல்லது குழந்தைக்கு பல் துலக்கப் பயன்படுத்தும் பிரஷ் கொண்டோ நாக்கினை சுத்தம் செய்துவிடலாம்.
* பெரும்பாலான அம்மாகள், இரவு நேரத்தில் பால் புட்டியை வாயில் வைத்தபடியே குழந்தைகளை தூங்க வைப்பார்கள். அதனால் இரவு முழுக்க குழந்தையின் பற்களில் பாலில் இருக்கும் இனிப்பு, பாக்டீரியாக்களுடன் வினைபுரிய வாய்ப்பிருக்கிறது. இச்செயல்பாடு தொடர்ந்தால், சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு பல் சொத்தை உள்ளிட்ட பிரச்சனைகள் வர வாய்ப்பிருக்கிறது. மேலும் அனைவருமே இனிப்பு சார்ந்த எந்த பொருட்களை சாப்பிட்ட பின்னரும் தண்ணீரால் வாயை கொப்பளித்து மற்றும் தண்ணீர் குடிப்பதன் மூலம் இனிப்பானது ஓராளவாவது பற்களில் தங்குவதை தவிர்க்க முடியும்.


* பால் பல் பிரச்சனை தானே; நிரந்த பற்கள் முளைக்கும்போது சரியாகிவிடும் என குழந்தைகளின் பல் பராமரிப்பில் பல பெற்றோர்களும் போதிய கவனமின்மை மற்றும் விழிப்புணர்வின்மையுடன் இருப்பார்கள். பால் பற்கள், நிரந்தர பற்களின் சக்தியையும் தாங்கி வளர்கின்றன என்பதால், பால் பல் பிரச்சனை நிரந்தர பற்களும் ஏற்பட்டுவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.  
* குழந்தைகளின் 7-12 வயதிற்குள் பால் பற்கள் விழுந்து நிரந்தர பற்கள் முளைத்திருக்க வேண்டும். இதில் எதாவது பிரச்சனைகள் இருப்பின், கட்டாயமாக பல் மருத்துவரை அணுக வேண்டும்.

* வாயில் விரல் வைத்து சூப்புவது, நாக்கினை இரண்டு பற்களுக்கு இடைபட்ட பகுதியில் அடிக்கடி வைத்துக்கொள்வது போன்ற செயல்பாடுகளை பெரும்பாலான குழந்தைகள் செய்வார்கள். இதனால் அவர்கள் பல் வரிசை சீரற்றதாகவும், முக அமைப்பு மாறவும் வாய்ப்பிருக்கிறது. குழந்தைகளுக்கு தொடர்ந்து விரல் சூப்பும் பழக்கம் இருந்தால், விரல்களில் வேப்பம் எண்ணெய்யை(Neem Oil) தடவி விடலாம். பல குழந்தைகள் விரலில் தடவிய எண்ணெய்யை துடைத்துவிட்டு, மீண்டும் விரல் சூப்புவார்கள். இப்படி தவிர்க்க முடியாத சூழலில் பல் மருத்துவரை அணுகி, பிரச்சனையை தீர்க்கும் வழிமுறைகளை செய்யலாம்.
* குழந்தைகளின் தாடை அமைப்பு, பல் வரிசை ஆகியவை சரியாக இருக்கின்றதா என அவ்வபோது கவனிக்க வேண்டும். பல் வரிசை சீரற்ற தன்மையில் இருந்தால் எந்த வயதில் க்ளிப் அணிய வேண்டும், எந்த வகையான க்ளிப் அணிய வேண்டும் என்பது போன்ற விபரங்களை பல் மருத்துவரின் ஆலோசனை பெற்று செய்யலாம்.
* குழந்தைகளை தினமும் இரு வேளைகளிலும் பல் துலக்க வேண்டும் என சொன்னால், நீ இரண்டு வேளைகளிலும் பல் துலக்குகிறாயா? என நம்மையே எதிர்கேள்வி கேட்பார்கள். ஆக பெற்றோர்களாகிய நாமும் தினமும் இருவேளைகளிலும் பல் துலக்குவதை கட்டாயமாக செய்தால்தான், நாம் சொல்வதை குழந்தைகளும் கேட்பார்கள்.
* சிறு வயதிலேயே ஐஸ்கிரீம், சாக்லேட், பிஸ்கட் சாப்பிட்டால் பல் பிரச்சனைகள் வரும் என பல பெற்றோர்களும் குழந்தைகளை கண்டிப்புடன் வளர்ப்பதுண்டு. சிறு வயதில் இதுபோன்ற உணவுப் பொருட்களை மகிழ்ச்சியுடன் சாப்பிடுவதை தவிர்க்காமல், கட்டுப்பாடுடன் சாப்பிடச் சொல்லுங்கள். ஆனால், சாப்பிட்டதும் அவர்களாகவே வாய் கொப்பளித்துக் கொள்ள பழக்கப்படுத்துங்கள்.


* சிறு வயதிலேயே பல் சொத்தை, இடைவிடாத பல் கூச்சமும், பல் வலியும், சீரற்ற பல்வரிசை என எத்தகைய பல் சார்ந்த பிரச்சனைகளாக இருந்தாலும் அருகிலுள்ள மெடிக்கல், பல் சாராத மருத்துவர்களை அணுகி மாத்திரை வாங்கிச் சாப்பிடுவதை தவிர்த்து, பல் மருத்துவரை அணுகி பிரச்சனையை ஆரம்ப கட்டத்திலேயே சரிசெய்து கொள்வது சிறந்தது.

புற்றுநோயைத் தடுக்கும் 5 சமையல் பொருட்கள் !


பலமானவரையும் உருக்கிப்போட்டுவிடும் அசுரபலம் கொண்டது புற்றுநோய். வந்த பிறகு அவஸ்தைப்படுவதைவிட, வருமுன் காப்பதே புத்திசாலித்தனம். புகைபிடிப்பது, புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துவது, உடல் உழைப்பில்லாமல் இருப்பது, ஆரோக்கியமற்ற உணவுகளைச் சாப்பிடுவது, ஊட்டச்சத்துக் குறைபாடு, மனஅழுத்தம், மனச்சோர்வு, காஸ்மெட்டிக் பொருட்களை அதிகம் உபயோகிப்பது, பிளாஸ்டிக் பயன்பாடு... எனப் புற்றுநோய்க்கான காரணிகள் ஏராளம். இவற்றைத் தவிர்ப்பது ஒருபுறம் இருக்கட்டும். இயற்கையாகவே புற்றுநோயை எதிர்த்துப் போராடும் சக்திகொண்ட சில சமையல் பொருட்களும் மூலிகைகளும் இருக்கின்றன. அவற்றை நம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தினாலே போதும்; புற்றுநோயை அண்டவிடாமல் பார்த்துக்கொள்ளலாம். அவை...


                                          
இஞ்சி
நாட்டுவைத்தியத்தில் இஞ்சியின் பயன்பாடு மிக முக்கியமானது. நம் முன்னோர்கள் சளித் தொந்தரவில் இருந்து மூலநோய் வரைக்கும் இஞ்சியை மருந்தாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள். இஞ்சியை அப்படியே ஃபிரெஷ்ஷாகவோ பௌடராகவோகூடப் பயன்படுத்தலாம். சமைக்கும்போது மட்டும், அளவில் கவனம் தேவை. ஒரு டீஸ்பூன் நறுக்கிய இஞ்சி என்பது, 1/8 டீஸ்பூன் இஞ்சி பௌடருக்குச் சமம். சமையலில் இஞ்சி சேர்ப்பது சுவையைக் கூட்டும்; சமைத்த பொருள் சீக்கிரம் கெட்டுப்போகாமல் பாதுகாக்கும்; ஆரோக்கியத்துக்கு உதவும்; குடல், வயிறு ஆகியவற்றைப் புற்றுநோயில் இருந்து பாதுகாக்கும்.
                                       
மஞ்சள்
உணவின் நிறத்துக்காகப் பயன்படுகிறது என நாம் நினைக்கும் மஞ்சள் மகத்தானது. மஞ்சளில் இருக்கும் மஞ்சள் நிறம் அபாரமாகச் செயல்புரியும் தன்மை கொண்டது. இது, ஆன்டிஆக்ஸிடன்ட்டாகச் செயல்படுகிறது. குர்குமின் (Curcumin) என்ற சத்து, புற்றுநோய் வளராமல் பாதுகாக்கிறது. தினமும் கால் டீஸ்பூன் அளவு உணவில் சேர்த்து கொள்வது நல்லது. குடல், ப்ராஸ்டேட், மார்பகம் மற்றும் தோல் தொடர்பான புற்றுநோய்கள் வராமல் தடுக்கும் ஆற்றல் மஞ்சளுக்கு உண்டு.
                                           
சிவப்பு மிளகாய்
நாம் அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் சிவப்பு மிளகாயேதான்... அதன் ஆற்றலோ அபாரம். இதில் இருக்கும் காரத்தன்மையில் உள்ள சேர்மானம் வலியில் இருந்து நிவாரணம் தரக்கூடியது; தோலுக்குப் பாதுகாப்பு தரக்கூடியது; செரிமானக்கோளாறுகளைச் சரி செய்யக்கூடியது. சிவப்பு மிளகாயை அளவோடு சமையலில் சேர்த்துக்கொள்வது தோல் தொடர்பான புற்றுநோயில் இருந்து பாதுகாப்பளிக்கும்.


                                                       
பூண்டு
மருத்துவக் குணம் கொண்ட பூண்டு உடலில் சேரும் நச்சுக்களை முறிக்க வல்லது. இதை, அன்றாடம் சமையலில் சேர்த்துக்கொள்வது நல்லது. பூண்டில் இருக்கும் சல்ஃபர், ஆர்ஜினைன், ஃப்ளேவனாய்ட்ஸ் மற்றும் செலினியம் எல்லாமே உடல் ஆரோக்கியத்துக்கு உதவுபவை. பூண்டை நசுக்கும்போது அதிலிருந்து கிளம்பும் மணத்துக்குக் காரணம், பூண்டில் இருக்கும் ஆலிசின் (Allicin) என்ற சேர்மானம்தான். பூண்டு உடலில் சேரும் கொழுப்பைத் தடுக்க உதவுகிறது. மார்பகம், குடல், வயிறு, உணவுக்குழாய், கணையம் ஆகியவற்றில் புற்றுநோய் வராமல் தடுக்க உதவுகிறது. ’லுகூமியா’ எனும் ரத்தப் புற்றுச் செல்களை அழிப்பதில் துணைபுரிகிறது. பூண்டுக்கு ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் தன்மையும், உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வளர்க்கும் ஆற்றலும் உண்டு.
                                                      
புதினா
பல நூற்றாண்டுகளாக நாம் பயன்படுத்தி வரும் புதினா ஓர் அருமருந்து. வாயுக்கோளாறு, செரிமானமின்மை, முதுகுப்பிடிப்பு, மூட்டுவலி, வயிற்றுப்போக்கு போன்ற பிரச்னைகளுக்கு மருந்தாகப் பயன்படுகிறது. இர்ரிடபிள் பௌல் சிண்ட்ரோம் மற்றும் ஃபுட் பாய்ஸன் போன்ற பிரச்னைகளின்போது உதவக்கூடியது. வயிற்றுப் புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல் புதினாவுக்கு உண்டு.




Monday, 22 August 2016

உடல் எடையைக் குறைக்கும் 5 உணவுகள்!​

தினமும் ​அரை மணி நேரம் ஓடுவது, பிறகு யோகா​,​ டயட் என உட​ல் எடையை குறைக்க பாடுபவர்கள்​,​ கண்டுகொள்ளாத விஷயம் அவர்கள் உண்ணும் உணவு. ஆம், டயட்​டில்​ இருப்பதோடு நாம் சில​ உணவுகளை உண்டால்​, உடலிலுள்ள கெட்ட கொழுப்பு​ விரைவில்​ கரைந்து விடும். 'ஃபேட் பர்னிங்'​ ​(Fat burning) காய்​ மற்றும் க​​னி​ வகைகளை அன்றாடம் நம் உணவு பட்டியலில் சேர்த்து கொள்வது நல்லது.
br />
1. எலுமிச்சை
இந்த பட்டியலில் முதல் இடம்​,​ எலுமிச்சைக்குதான். எலுமிச்சையில்  ​'​வைட்டமின் சி​'​ ​  சத்துக்கள் நிறைந்துள்ளன. வைட்டமின் சி நி​றைந்த அனைத்து உணவுகளுமே, கொழுப்பைக் கரைக்க கூடியவை. காலையில் எழுந்ததும், ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில்​,​ எலுமிச்சை ஜூஸ்​ கலந்து​ குடித்தால், உடலிலுள்ள ​கழிவுகளை அகற்றும்​.​ வைட்டமின் சி​ சத்து,​ கொழுப்பை கரைக்கும் வேலையை செய்யும்.  இது​ ​மட்டுமல்லாமல், தொடர்ந்து எலுமிச்சை சாறு அருந்தி வந்தால், இருமல், ​சளி, தலைவலி, அஜீரண கோளாறு ஆகியவை ​வராமல் தடுக்கும்.
2. சோம்பு
சோம்பில் ​தாதுக்கள் நிறைந்துள்ளன. ​மேலும், இதில் கலோரி​களும்​ குறைவு​தான்​. ​உடலில் ​செரிமான சக்தியை அதிகப்படுத்து​ம்​. இரவு உறங்குவதற்கு முன்பு​,​ சோம்பை வெதுவெதுப்பான நீரில் ஊர வை​த்து, காலையில்​ அந்த நீரைக் குடிக்க​ வேண்டும். அதேபோல, ​​ஹெவியான உணவுகளை சாப்பிட்ட பிறகு சிறிதளவு சோம்பை மென்று திண்ணலாம்.
3. கிரீன் டீ
கிரீன் டீயில், வேறு எந்த உணவிலும் காண முடியாத அளவு ஆண்டிஆக்ஸிடண்ட்​ சத்துக்களை​ காணலாம். இதில்​ பாலிஃபினால்​ ​(​polyphenol​)​ ​ ​எனப்படும் ​சத்துக்களும் நிறைந்துள்ள​ன. சர்க்கரை இல்லாமல் தினமும் கிரீன் டீ பருகி வருவது உடலிலுள்ள கொழுப்பை உருக செய்யும். இதிலுள்ள ​இதர சத்துக்கள்​ ரத்தக் கொதிப்பை கட்டுப்படுத்தக் கூடியது. தினமும் கிரீன் டீ பருகுவதால்,  கொழுப்பைக் கரைப்பதோடு, நம் உடலையும் பாதுகாக்கும்.
br />
4. தர்பூசணி
தர்பூசணி முழுக்க முழுக்க நீர்ச்சத்து நிரம்பியது. இதுதவிர, தர்பூசணியில் ஏராளமான அளவு வைட்டமின்களும் ​தாதுக்களும் உள்ளன. இது உடல் எடையைக் குறைக்க உதவும். தர்பூசணி கொழுப்பை நம் உடலில் சேர விடாமல் ​தடுக்கும்​.​ தொப்பையைக் குறைக்க விரும்புபவர்கள்​,​ உடற்பயிற்சி​,​ டயட்டோடு​ அவசியம்​ சேர்த்து​ கொள்ள வேண்டிய உணவு​ தர்பூசணி​.​
5.​ குறுக்காக வெட்டி பயன்படுத்த கூடிய​  காய்கறிகள்
இதை ஆங்கிலத்தில்​ க்ருசிஃபெரஸ் (cruciferous vegetables​)​ என்று அழைப்​பர்​. அதாவது, குறுக்காக வெட்டினால்​ இந்த  காய்கறி வகைகளைப் பயன்படுத்த முடியும்.​ ​ காலிஃபிளவர், முட்டைக்கோஸ், பிராக்கோலி போன்ற ​காய்கறிகள் இவ்வகையை சேர்ந்தது. இதில் ​நார்ச்சத்து​களும் அதிகம். இதிலுள்ள ஆண்டிஆக்ஸிடண்ட்​,​ கொழுப்பைக் குறைப்பதோடு​,​ நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்​கும்.​
இனிமேல், உங்கள் உணவில் ​இந்த ஐந்து உணவுகளும் இடம் பெறட்டும்!​
br />



Thursday, 18 August 2016

ஒரு மாடு... ஓர் ஆண்டு... 75 ஆயிரம்... நம்பிக்கை தரும் நாட்டுமாடுகள்...!

பால்... அதிக பால்... என ஆசைப்பட்டு, வெளிநாட்டு இனப் பசுக்களையும்... கலப்பினப் பசுக்களையும் தேடி ஒட ஆரம்பித்ததில், நம் நாட்டு இனப் பசுக்களை பலரும் மறந்தே விட்டார்கள். தற்போது, இயற்கை விவசாயம் மீது உள்ள ஆர்வத்தால், பெரும்பாலானோர் நாட்டுப் பசுக்களைத் தேடி வாங்கி வளர்க்க ஆரம்பித்துள்ளனர். அவர்களில் ஒருவராக... கரூர் நகரைச் சேர்ந்த தொழிலதிபர் கணேசன்... தமிழகத்தைச் சேர்ந்தப் பாரம்பரிய பசுக்களோடு, வடமாநில இனங்களான சாஹிவால், தார்பார்க்கர், கிர், காங்கிரேஜ்... போன்ற பசுக்களையும், முர்ரா ரக எருமைகளையும் வளர்த்து வருகிறார்.


கரூர்-தாராபுரம் சாலையில் 15-வது கிலோ மீட்டரில் இருக்கிறது, செல்லாண்டிப்பாளையம். பிரதான சாலையில் இருந்து இடதுபுறம் பிரியும் மண்சாலையில், இரண்டு கிலோ மீட்டர் தூரம் பயணித்தால்... கணேசனின் பண்ணை. மண்சாலையில் இரண்டு பக்கமும் உயிர்வேலியாக நீண்டு கிடக்கின்றன, கிளுவைச் செடிகள். அதில், பிரண்டையும், கோவைக் கொடியும் படர்ந்து கிடக்கின்றன. பண்ணையில் இருந்த கணேசனிடம் அறிமுகப்படுத்திக் கொண்டதும் உற்சாகமாகப் பேசத் தொடங்கினார்.
''இது எங்க பூர்வீக இடம். மொத்தம் 32 ஏக்கர். இதுல 17 ஏக்கர் மானாவாரி மேய்ச்சல் நிலம். 10 ஏக்கர்ல மாடுகளுக்குத் தேவையான பசுந்தீவனம் இருக்கு. 5 ஏக்கர்ல தென்னை இருக்கு. முழுக்க முழுக்க கிணத்துப் பாசனம்தான். பக்கத்துல அமராவதி ஆறு இருக்கு. அரசு அனுமதியோட ஆத்துத் தண்ணியையும் கொண்டு வந்து பாசனம் செய்றதால... தண்ணி பிரச்னை கிடையாது.
தொழிலிருந்து தோட்டத்துக்கு!
சின்ன வயசுலேயே கரூர் போயிட்டேன். இருந்தாலும், அடிக்கடி ஊருக்கு வந்து பூர்வீக மண்ணைப் பார்க்கும்போது... பாட்டன், பூட்டன் செஞ்ச விவசாயத்தை நாமளும் செய்யணும்கிற ஆசை... மனசுக்குள்ள வந்து உக்கார்ந்துக்கும். இன்னிக்கு பரபரப்பான தொழிலதிபரா இருந்தாலும், விவசாய ஆர்வம் என்னை விடல. ஒரு கட்டத்துல கம்பெனிய பசங்ககிட்ட ஒப்படைச்சுட்டு, முழுநேர விவசாயியா மாறிட்டேன். பரம்பரையா எங்க தோட்டத்துல காங்கேயம் மாடுகளதான் வளர்ப்போம். நான் விவசாயத்துல இறங்கினதும், வேலாயுதம்பாளையத்துல நடந்த நம்மாழ்வார் கூட்டத்துல எதேச்சையா கலந்துகிட்டேன்.
அந்தப் பயிற்சியில, 'இயற்கை விவசாயம்தான் மண்ணுக்கும் மனுஷனுக்கும் ஏத்து’னு தெரிஞ்சுட்டேன். பிறகு, திண்டுக்கல்ல நடந்த சுபாஷ் பாலேக்கரோட 'ஜீரோ பட்ஜெட்’ பயிற்சியிலயும் கலந்துக்கிட்டேன். அங்கதான், நாட்டுமாடுகளோட மகிமையையும், இயற்கை இடுபொருட்கள் தயாரிக்கற முறைகளையும் தெரிஞ்சுக்கிட்டேன்.
தீவனம் இல்லாமல் மாடு வாங்கக் கூடாது!
ஆரம்பத்துல, பயிர்களுக்குத் தேவையான இடுபொருள் தயாரிக்கறதுக்காகத்தான் நாட்டு மாடுகளை வளர்க்கலாம்னு முடிவெடுத்தேன். அதுக்காக, 10 ஏக்கர்ல பசுந்தீவன சாகுபடியை ஆரம்பிச்சேன். ஒரே ரகமா இல்லாம.... கோ-4, வேலிமசால், கோ.எஃப்.எஸ்-29, கிளரிசீடியா, சவண்டல் (சுபாபுல்), மல்பெரி, முயல் மசால்னு பல ரகமா இருக்குற மாதிரி பாத்துக்கிட்டேன். அதுக்கப்பறம்தான், மாடுகளை வாங்க ஆரம்பிச்சேன்.
'வெறுமனே இடுபொருளுக்காக மட்டும் இல்லாம, பால் விற்பனையும் செஞ்சா லாபகரமா இருக்குமே’னு தோணுச்சு. காங்கேயம்  பசுக்களை மட்டும் வெச்சு பால் உற்பத்தியை அதிகப்படுத்த முடியாது. அதே நேரத்துல, கலப்பினப் பசுக்களை வாங்கி பால் வியாபாரியா மாறவும் எனக்கு மனசில்லை. 'என்ன பண்ணலாம்?’னு ரொம்பத் தீவிரமா யோசிச்சுக்கிட்டிருந்தேன். அந்த சமயத்துலதான், 'வாழப்பாடி’ மணிசேகர் எனக்கு அறிமுகம் ஆனார். அவர்தான், 'கலப்பினப் பசுக்களைப் போலவே அதிகம் பால் கறக்குற நாட்டுப் பசுக்களும் இருக்கு’னு சொன்னாரு. உடனடியா அலைஞ்சு திரிஞ்சு அந்த இன மாடுகளை வாங்குனேன்'' என்ற கணேசன், மாட்டுத் தொழுவத்துக்கு நம்மை அழைத்துச் சென்றார்.
எருமை எதையும் கழிக்காது!
நல்ல காற்றோட்டத்துடன் சிமெண்ட் தரைதளத்துடன் இருந்த தொழுவத்தில் ஒரு வரிசையில் பசுமாடுகளும் எதிர் வரிசையில் எருமை மாடுகளும் கட்டப்பட்டிருந்தன. தொழுவத்தில் நடந்து கொண்டே பேச ஆரம்பித்தவர், 'தொழுவத்தை 60 அடி நீளம், 30 அடி அகலம், 20 அடி உயரத்துல அமைச்சுருக்கேன்.


ஆரம்பத்துல பசு மாடுகளை மட்டும்தான் வாங்கலாம்னு இருந்தேன். சிலர், 'எருமைப்பால்ல கொழுப்புச் சத்து அதிகம் இருக்கும். அதனால பாலுக்கு நல்ல விலை கிடைக்கும்’னு சொன்னாங்க. அதனால எருமைகளையும் வாங்க ஆரம்பிச்சேன். எருமை மாடு, பசுந்தீவனம், அடர்தீவனம் எல்லாத்தையும் கழிக்காமத் திங்கும். அதுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமா இருக்கறதால, மருத்துவச் செலவும் குறையுது. இப்போ... என்கிட்ட 7 காங்கேயம், 6 கிர், 4 தார்பார்க்கர், 4 காங்கிரேஜ், 4 சாஹிவால், 25 முர்ரா எருமைகள்னு மொத்தம் 50 உருப்படிக இருக்கு'' என்றவர், வருமானத்தைப் பற்றிச் சொல்லத் தொடங்கினார்.
ஒரே ஈத்துல எடுத்துடலாம்!
'வடமாநில மாடுகளோட விலை அதிகமா இருந்தாலும், போட்ட பணத்தை ஒரே ஈத்துல எடுத்துடலாம். உதாரணமா... சாஹிவால் பசுவை 75 ஆயிரம் கொடுத்து வாங்கினேன். இது, வருஷத்துக்கு 305 நாள் பால் கறக்குது. சராசரியா ஒரு மாட்டுல இருந்து 4 ஆயிரம் லிட்டர் பால் ஒரு வருஷத்துல கிடைக்குது.
நேரடியா நுகர்வோருக்கு ஒரு லிட்டர் 30 ரூபாய்னு விக்கிறேன். 4 ஆயிரம் லிட்டர் பால் மூலமா, ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் வருமானமா கிடைக்குது. இதுல தீவனம், பராமரிப்புச் செலவு போக,
75 ஆயிரம் ரூபாய் லாபம். ஆக, ஒரு ஈத்து முடிஞ்சதுமே... மாடும், கன்னும் லாபக் கணக்குல சேர்ந்துடுது. இதேமாதிரி அம்பது மாட்டுக்கு கணக்குப் போட்டுக்கோங்க...'' என்ற கணேசன் நிறைவாக,
'ஜீவாமிர்தம் மாதிரியான இடுபொருட்கள் பயன்பாட்டுக்காக காங்கேயம் பசுக்களையும் வளக்குறேன். இதுல பால் மூலமா வருமானம் இல்லைன்னாலும், கன்று விற்பனை மூலமா வருஷத்துக்கு ஒரு தொகை கிடைச்சுடுது. ஆக மொத்தத்துல நாட்டு மாட்டு இனங்களைக் கலந்து வளத்தா... நிச்சயம் நல்ல லாபம் பார்க்கலாம். ஆரம்பத்துல எல்லா இனத்திலும் ஒவ்வொரு மாட்டை மட்டும்தான் விலை கொடுத்து வாங்கினேன். இடையில் சில கன்றுகளை வித்தது போக இப்ப, கிட்டத்தட்ட 20 லட்சம் ரூபாய் மதிப்புக்கு 50 மாடுக இருக்கு.
இப்போ, நாட்டுப் பசுக்களோட பாலுக்கு அதிக தேவை இருக்கறதால... நாட்டு மாடுகளை வளத்து பாலை நேரடி விற்பனை செஞ்சா கண்டிப்பா நல்ல லாபம் பாக்க முடியும்'' என்று நம்பிக்கையூட்டி விடை கொடுத்தார்.

செலவில்லாமல் உணவு!
பண்ணையில் கிடைக்கும் சாணத்தை வைத்து, சாண எரிவாயு தயாரிக்கிறார் கணேசன். ''சாண எரிவாயுத் தயாரிப்புக்காக 25 கன மீட்டர் அளவு கொண்ட தொட்டியை அமைச்சுருக்கேன். இதிலிருந்து வெளியேறுற எரிவாயுவைப் பயன்படுத்தித்தான், பண்ணையில் தங்கி வேலை செய்யுற அஞ்சு குடும்பங்களுக்கு உணவு தயாரிக்கிறோம். இதிலிருந்து வெளிவர்ற சாணக் கழிவுகளை (ஸ்லர்ரி) சிமென்ட் தொட்டிகள்ல நிரப்பி, ஜீவாமிர்தமா மாத்தி, பாசனத் தண்ணியில கலந்து 10 ஏக்கர் பசுந்தீவனப் பயிர்களுக்கும், 7 ஏக்கர் தென்னைக்கும் தொடர்ந்து கொடுத்துட்டு வர்றேன். சாண எரிவாயுவைப் பயன்படுத்தி ஆயில் இன்ஜினை இயக்குற முயற்சியிலயும் இருக்கேன்'' என்று சொன்னார் கணேசன்.


தொடர்புக்கு, சி. கணேசன்,
செல்போன்: 98652-09217.



நெல்லிலிருந்து பூவுக்கு... அரை ஏக்கர் நிலத்தில் 60 ஆயிரம் ரூபாய்... செழிப்பான லாபம் கொடுக்கும் செண்டுமல்லி..!

பணியில் இருக்கும், ஐம்பது வயதை நெருங்கிய பெரும்பாலானோரின் கவலை... பணி ஓய்வுக்குப் பிறகான வாழ்க்கையைப் பற்றித்தான் இருக்கும். ஆனால், முறையாகத் திட்டமிட்டால், ஓய்வுக்குப் பிறகும் நிறைவான வாழ்க்கை வாழ முடியும் என்பதை பலர் நிரூபித்துள்ளனர். அந்த வகையில், தனது செயல்பாடுகளால் மனநிறைவான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார், புதுக்கோட்டை மாவட்டம், பூங்குடி கிராமத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன். தமிழக காவல்துறையில் துணை ஆணையராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற இவர், தற்போது முழு நேர விவசாயி.


பசுமை வயல்களுக்கு இடையில் மண்புழு உரத்தை சலித்துக் கொண்டிருந்த பாலகிருஷ்ணனைச் சந்தித்தோம். புன்னகையைப் பூச்செண்டாக்கி வரவேற்றவர், ''ஓய்வுக்குப் பிறகு என்னை ஆரோக்கியமா வாழ வெச்சுட்டு இருக்குறது விவசாயம்தான்.
'பசுமை விகடன்' படிச்ச பிறகுதான் விவசாயத்து மேல, குறிப்பா இயற்கை விவசாயத்து மேல ஆர்வம் வந்துச்சு.
இந்த எட்டு ஏக்கர் நிலத்துல நாலு வருஷமா விவசாயம் பாக்குறேன். நாலு ஏக்கர்ல தென்னை இருக்கு. ஒரு ஏக்கர் தென்னையில மட்டும் ஊடுபயிரா மா இருக்கு. தனியா மூணு ஏக்கர்ல கரும்பு இருக்கு. கரும்பைத் தவிர, மத்த பயிருக்கெல்லாம் இயற்கை உரங்களைத்தான் கொடுக்குறோம். ஒரு ஏக்கர் நிலத்துல வழக்கமா நெல் போடுவேன்.  
நெல் சாகுபடியில பெருசா லாபம் இல்ல. கரன்ட் இல்லாத காலத்துலயும் கஷ்டப்பட்டு, பராமரிச்சாலும்... அறுவடை செஞ்ச பிறகு, ஏக்கருக்கு 5 ஆயிரம் ரூபாய் லாபம் கிடைச்சாலே பெரிய விஷயம். அதனால இந்த வருஷம் வேற பயிரைப் போட்டு பாக்கலாம்னு முடிவு செஞ்சு... நெல்லுக்கு பதிலா செண்டுமல்லி சாகுபடி செஞ்சுருக்கேன். குறைவான தண்ணி, பராமரிப்புலயே இதுல நல்ல லாபம் கிடைக்குது.


தோட்டக்கலைதுறை உதவி இயக்குநர் குருமணியும், வேளாண் அலுவலர் அண்ணாமலையும்தான் இந்த செண்டிப்பூவைப் பத்தி சொன்னாங்க. ஆனா, எங்க பகுதியில யாருமே இதை சாகுபடி செஞ்சது இல்ல.
'இது சரியா விளையாது நஷ்டம்தான் வரும்’னு மத்த விவசாயிக பயமுறுத்தினாங்க. ஆனாலும் துணிச்சலா அரை ஏக்கர் நிலத்துல மட்டும் சாகுபடி பண்ணினேன்'' என மாற்றுப்பயிருக்கு மாறிய கதை சொன்ன பாலகிருஷ்ணன், அரை ஏக்கர் நிலத்தில் செண்டுமல்லி சாகுபடி  செய்யும் முறையைச் சொன்னார்.
அது இங்கே பாடமாக...
ஒரு விதை... ஒரு நாற்று!
செண்டு மல்லியின் வயது 120 நாட்கள். அரை ஏக்கர் நிலத்தில் சாகுபடி செய்ய 2 ஆயிரத்து 500 விதைகள் தேவைப்படும்.
ஒரு விதையில் இருந்து ஒரு நாற்றுதான் உற்பத்தி செய்ய முடியும். நாற்று தயாரிப்புக்காக உள்ள பிரத்யேகமான பிளாஸ்டிக் குழித்தட்டில் ஒவ்வொரு குழியிலும் முக்கால் பகுதிக்கு, தென்னைநார்க் கழிவை நிரப்பி ஒவ்வொரு விதையை வைத்து... ஈரமான நார்க்கழிவைப் போட்டு குழியை நிரப்ப வேண்டும் (குழித்தட்டு கிடைக்காதவர்கள், சிறிய பிளாஸ்டிக் டீ கப்பை பயன்படுத்தலாம்).
எப்போதும் ஈரம் இருக்குமளவுக்கு தண்ணீர் தெளித்து வந்தால், 23-ம் நாள், நாற்று நடவுக்கு தயாராகி விடும். சாகுபடி நிலத்தில், ஒன்றரை டன் அளவுக்கு மண்புழு உரம் அல்லது குப்பை எருவை இட்டு, இரண்டு சால் புழுதி உழவு ஓட்டி, ஒன்றே கால் அடி அகலம், முக்கால் அடி உயரத்துக்கு இரண்டு அடி இடைவெளியில் பார் அமைக்க வேண்டும். நிலத்தின் அமைப்புக்கு ஏற்ப, பாரின் நீளத்தை அமைத்துக் கொள்ளலாம்.
2 அடி இடைவெளி !
நிலத்தில் தண்ணீர் விட்டு, எல்லா பார்களிலுமே ஒரே சீராக இடது அல்லது வலது ஓரத்தில் மட்டும், 2 அடி இடைவெளியில் நாற்றுகளை நடவு செய்து 3-ம் நாள் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். பிறகு, நான்கு நாட்களுக்கு ஒரு முறை பாசனம் செய்ய வேண்டும். 7-ம் நாள் அரை அடி உயரத்துக்கு செடி வளர்ந்திருக்கும். 8 மற்றும் 30-ம் நாட்களில் களையெடுத்து, ஒவ்வொரு செடிக்கும் தலா ஒரு கையளவு மண்புழு உரத்தை வேர்பகுதியில் வைத்து, மண் அணைக்க வேண்டும்.
பதினெட்டாம் நாளில் இருந்து அறுவடை !
18-ம் நாளில் இருந்து தினமும் பூவை அறுவடை செய்யலாம். 25-ம் நாள் பூண்டு-பச்சைமிளகாய் கரைசலை, 1:40 என்ற விகிதத்தில் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும் (தலா ஒரு கிலோ பூண்டு, பச்சைமிளகாய், வேப்பம்பிண்ணாக்கு ஆகியவற்றை ஒன்றாக உரலில் இட்டு இடித்து... பானையில் இட்டு ஒன்றரை லிட்டர் தண்ணீர் ஊற்றி இறுக்கமாக வேடு கட்டி விட வேண்டும். 3 நாட்கள் கழித்து, இக்கலவையை எடுத்துப் பயன்படுத்தலாம்). இதனால் பூச்சிகள் தாக்காது.
50-ம் நாள், 100 கிலோ மண்புழு உரம், மண்புழு உரம் சலித்து எடுக்கப்பட்ட 100 கிலோ குப்பை எரு ஆகியவற்றைக் கலந்து, ஒவ்வொரு செடியின் வேர்ப்பகுதியிலும் பகிர்ந்து போட வேண்டும். நிலத்தை இரண்டாகப் பிரித்து சுழற்சி முறையில் அறுவடை செய்ய வேண்டும்.
சாகுபடிப் பாடம் முடித்த பாலகிருஷ்ணன், ''இது வீரிய ரக செண்டி. பாக்குறதுக்கு அழகா, மஞ்சள் நிறத்துல பளிச்சுனு கண்ணைப் பறிக்கும். இயற்கை இடுபொருள்களை மட்டும் கொடுக்கறதுனால, இங்க விளையுற செண்டி பூ, பறிச்ச பிறகும் மூணு நாளைக்கு வாடாம இருக்கு. சுழற்சி முறையில பறிக்கிறதால தினமும் சராசரியா 20 கிலோ அளவுக்கு பூ கிடைக்குது. பறிக்கறதுக்கு ரெண்டு ஆளுங்களே போதும். பூ நல்லா பெருசா இருக்கறதுனால, பறிக்கவும் சுலபமா இருக்கு. வேலைக்கு ஆளுங்க கிடைக்கலைனாலும் நாமளே பறிச்சுடலாம்.
என்கிட்ட ஒரு மாடுதான் இருக்கு. வெளியில ஒரு டன் சாணத்தை 700 ரூபாய்னு வாங்குவேன். அதோட மெஷின்ல போட்டு தூளாக்குன மா, தேக்கு சருகுகள், கரும்புத் தோகைகள் எல்லாத்தையும் கலந்து மண்புழு உரம் தயாரிப்பேன். இப்படிக் கிடைக்கிற மண்புழு உரத்தை ஒரு கிலோ 10 ரூபாய்னு வித்துடுவேன். மாசத்துக்கு 600 கிலோ அளவுக்கு விற்பனை ஆகுது. மண்புழு உரத்தை சலிச்சதுக்குப் பிறகு கிடைக்குற குப்பை எருவை, பயிர்களுக்குப் போட்டுடுவேன்'' என்று போகிற போக்கில் அசத்தலான தொழில்நுட்பம் ஒன்றை அள்ளிவிட்டதோடு...
40 ஆயிரம் லாபம் !
''நடவுல இருந்து இப்ப 48 நாளைக்கு மேல ஆகுது. இதுவரைக்கும் 600 கிலோ அளவுக்கு மகசூல் கிடைச்சிருக்கு. புதுக்கோட்டை பூ மார்க்கெட்டுல ஒரு கிலோவுக்கு சராசரியா 50 ரூபாய் அளவுக்கு விலை கிடைக்குது. இன்னும் 50 நாளைக்கு பூ பறிக்கலாம். எப்படிப் பார்த்தாலும், இன்னும் 600 கிலோ அளவுக்குக் கிடைக்கும்.
நடவு செஞ்ச ரெண்டாவது வாரத்துல கடுமையான புயல், மழையடிச்சதுல பெரும்பாலான செடிக கீழ சாஞ்சிடுச்சு. தேங்கியிருந்த தண்ணியை வடிகட்டி, மறுபடியும் செடிகளை நிமித்தி வெச்சோம். இனிமே பொழைச்சி வருமானு பயந்துக்கிட்டுதான் இருந்தேன். ஆனாலும் தாக்குப்புடிச்சி வந்துடுச்சு.


வளர்ச்சி வேகம் குறைஞ்சதால எதிர்பார்த்த அளவுக்கு மகசூல் கிடைக்கல. அப்படியிருந்தும் இந்த அரை ஏக்கர்ல இது வரை 30 ஆயிரம் ரூபாய் கிடைச்சுருக்கு. இன்னும் 30 ஆயிரம் ரூபாய்க்கு பூ கிடைக்கும். மொத்தம் 60 ஆயிரம் ரூபாய். செலவு போக, 40 ஆயிரம் ரூபாய் லாபமா மிஞ்சும்.
புயல் அடிக்காம இருந்துருந்தா, இன்னும் கூடுதலா லாபம் கிடைச்சுருக்கும். எப்படிப் பார்த்தாலும்... நெல்லோட ஒப்பிடும்போது, இதுல பல மடங்கு கூடுதல் லாபம். அதனால, இன்னும் அதிகமான நிலத்துல இதை சாகுபடி பண்ணப் போறேன்'' என்று தெம்பாகச் சொன்ன பாலகிருஷ்ணன்,
''வருமானம் ஒரு பக்கம் இருந்தாலும், பரபரப்பா வேலை செஞ்சுட்டு ரிட்டயர்டு ஆன பிறகும், என்னை உற்சாகமா வெச்சுருக்குறது விவசாயம்தான்'' என்று சொல்லி மகிழ்ச்சியாக விடைகொடுத்தார்.
 தொடர்புக்கு,பாலகிருஷ்ணன், அலைபேசி: 98659-38452.



25 சென்ட்... 5 மாதம்...1 லட்சம் ! மாற்றுப் பயிராக வந்த மல்பெரி நாற்று உற்பத்தி...

'மாற்றம் ஒன்றே மாறாதது’ இந்தத் தத்துவத்துக்கு ஏற்ப... வழக்கமாகச் செய்யும் ஒரே பயிரைத் தொடர்ந்து செய்யாமல், மாற்றுப் பயிர்களைத் துணிந்து சாகுபடி செய்தால்தான் லாபம் எடுக்க முடியும் என்பதைப் புரிந்துகொண்டு கொஞ்சம் கொஞ்சமாகத் தங்களை மாற்றிக் கொண்டு வருகிறார்கள், தமிழக விவசாயிகள். அந்த வகையில், ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையம் வட்டம், கெட்டிச்செவியூர் அடுத்துள்ள காளியப்பம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த மூர்த்தி-மகேஸ்வரி தம்பதி, மாற்றுப் பயிராக மல்பெரி நாற்றுக்களை உற்பத்தி செய்து சிறப்பான வருமானம் பார்க்கிறார்கள்.  


'தளதள’வென பச்சை இலைகள் தலையாட்டும் மல்பெரி தோட்டத்தில், தெளிப்புநீர்க் கருவிகள் மழை போல் தண்ணீரைத் தெளித்துக் கொண்டிருக்க, உழைத்த களைப்பு நீங்க, மரத்தடியில் அமர்ந்திருந்த நேரத்தில் தம்பதியைச் சந்தித்தோம்!  
''எனக்கு நாலு ஏக்கர் தோட்டம் இருக்கு. மணல் கலந்த செம்மண் பூமி. மஞ்சள், மக்காச்சோளம், கடலை, கரும்பு, புகையிலைனு எதைப் போட்டாலும் நல்லா வரும். ஆனா, தண்ணிதான் கொஞ்சம் பத்தாக்குறை. கிணறு, போர் ரெண்டும் இருந்தாலும், கொஞ்சம் தட்டுப்பாடுதான். கிடைக்கிற தண்ணியை வெச்சு நாலு ஏக்கர்லயும் ஒரே சமயத்துல சாகுபடி பண்ண முடியாது. 'குறைவான தண்ணியை வெச்சு என்ன பயிர் பண்ணலாம்?’னு யோசிச்சுக்கிட்டு இருந்தப்ப மல்பெரி விவசாயத்தைப் பத்தி என் மனைவி மகேஸ்வரி சொன்னாங்க'' என முன்னுரை கொடுத்த மூர்த்தி தொடர்ந்தார்.
''பட்டுப்புழு வளர்ப்புக்கு முக்கியமானது, மல்பெரி. மனைவி கொடுத்த தைரியத்துல இதை வளக்க ஆரம்பிச்சு பட்டுப்புழு வளர்ப்புலயும் இறங்கி, வெண்பட்டுக் கூடுகளை உற்பத்தி செஞ்சுக்கிட்டு இருக்கேன். மல்பெரி செடிகள்ல பல ரகங்கள் இருக்கு.
ஆரம்பத்துல 'எம்.ஆர்-2’ங்கிற ரகத்தைத்தான் வளத்தோம். அப்பறம், 'வி-1’ங்கிற ரகத்தை பட்டுவளர்ச்சித் துறை விஞ்ஞானிங்க வெளியிட்டாங்க. இதுல புரதம் அதிகமா இருக்கறதோட, மகசூலும் அதிகம் கிடைக்குது. இதை ரெண்டு ஏக்கர்ல சாகுபடி செஞ்சிருக்கேன். ஏழு வருஷம் வரைக்கும் அறுவடை செய்யலாம்'' என்றவரை இடைமறித்து, தான் பேச ஆரம்பித்தார், மகேஸ்வரி.
''இன்னிய தேதியில் வெண்பட்டு உற்பத்தியில கொடிகட்டி பறக்கிறது, கோபிச்செட்டிப்பாளையம் ஏரியாதான். ஆயிரக்கணக்கான விவசாயக் குடும்பங்கள் வெண்பட்டு உற்பத்தியில ஈடுபட்டு இருக்காங்க. அதனால மல்பெரி செடி சாகுபடியும், தேவையும் அதிகரிச்சுட்டே வருதுங்க. குறிப்பா, வி-1 ரகத்துக்கு அதிக தேவை இருக்கு.
பொதுவா, மல்பெரிக்கு விதைக் கரணைகளைத்தான் நடுவாங்க. ஆனா, விதைக்கரணைகளை நடும்போது நிறைய பேருக்கு சரியா வளர்றதில்லை. அதுக்கு தீர்வு கேட்டப்போ 'நாற்று முறையில நடவு செஞ்சா நல்லா வரும்’னு அதிகாரிகள் சொன்னாங்க. நாமளே ஏன் நாத்து உற்பத்தி பண்ணக்கூடாதுனு தோணுச்சு. அதை வீட்டுக்காரர்கிட்ட சொன்னப்போ ரெண்டு பேருக்குமே அது சரினு பட்டது. அதனால, வீட்டுக்குப் பக்கமா இருக்குற 25 சென்ட் நிலத்துல வி-1 ரகத்தை நட்டு நாத்து உற்பத்தியை ஆரம்பிச்சுட்டோம்' என்ற மகேஸ்வரி நிறைவாக,
'இந்த ரகத்துல அதிகமான புரதச்சத்து இருக்கறதால கறவை மாடுகளுக்கும் ஆடுகளுக்கும் இதை தீனியா கொடுக்குறாங்க. இதைச் சாப்பிடுற மாடுகள் அதிகமா பால் கறக்கும். ஆடுகள் வேகமா வளரும். அதனால, நிறைய பேருக்கு தேவை இருக்கறதால, நாத்து விற்பனைக்கு பிரச்னையே இல்லை. ஒரு நாத்து 2 ரூபாய்னு வித்துகிட்டிருக்கோம்.
25 சென்ட் மூலமா அஞ்சு மாசத்துல ஒரு லட்ச ரூபாய் அளவுக்கு வருமானம் கிடைக்குது. அதுல செலவு போக 80 ஆயிரம் ரூபாய் லாபம்'' என்று மகிழ்ச்சியுடன் சொல்லி விடை கொடுத்தார்.


 'இப்படித்தான் நாத்து உற்பத்தி செய்யணும்...’
நாற்று உற்பத்தி செய்யும் முறையைப் பற்றி மூர்த்தி சொன்ன விஷயங்கள் இங்கே பாடமாக...
நாற்று உற்பத்திக்காக விதைக் கரணைகளை நடவு செய்ய ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்கள் ஏற்றவை. தென்னை நிழல் இருக்கும் பகுதியில்கூட நாற்றங்கால் அமைக்கலாம். 25 சென்ட் நாற்றங்காலில் 4 டன் தொழுவுரம், 5 கிலோ நுண்ணுயிரி உரம் ஆகியவற்றைக் கலந்து இட்டு நிலத்தை சமப்படுத்தி, அரையடி இடைவெளியில் பார் எடுத்துக் கொள்ள வேண்டும்.
பாரில், 4 அங்குல இடைவெளியில், விதைக்கரணைகளை நடவு செய்ய வேண்டும். பாசனத்துக்கு தெளிப்புநீர் முறையை அமைத்துக்கொண்டு, தினமும் மூன்று வேளை பாசனம் செய்து வர வேண்டும். நடவு செய்த ஒரு மாதம் கழித்து, களை எடுக்க வேண்டும்.
கண்டிப்பாக, எந்த ரசாயன உரங்களையும் செடிகளுக்கு இடக் கூடாது. அப்படிக் கொடுத்தால் வேர் அழுகல் நோய் தாக்கிவிடும். தெளிப்புநீர்ப் பாசன முறையில் பூச்சிகள் தாக்குவதில்லை. அதனால், பூச்சிக்கொல்லிகள் தேவையே இல்லை. அப்படியே பூச்சிகள் தாக்கினாலும், ஒட்டுண்ணி அட்டைகளைக் கட்டி கட்டுப்படுத்தி விடலாம்.
130 நாட்களுக்குப் பிறகு நாற்றுகளைப் பறித்து விற்பனை செய்யலாம். அனைத்து நாற்றுக்களையும் ஒரே சமயத்தில் பறிக்கக் கூடாது. உதாரணமாக, 50 ஆயிரம் நாற்றுகள் இருந்தால்... முதலில் 20 ஆயிரம், அடுத்து 10 ஆயிரம், கடைசியாக 20 ஆயிரம் என்ற கணக்கில் பறிக்க வேண்டும்.


தொடர்புக்கு, மூர்த்தி, அலைபேசி: 98427-23677

Saturday, 30 July 2016

சித்த மருத்துவத்தின் அருமையை உலகம் உணரத்தொடங்கி உள்ளது!'



சென்னை, லயோலா கல்லூரியில் உள்ள தாவரவியல் மற்றும் உயிர் தொழில் நுட்பவியல் துறை மற்றும் பூச்சியியல் ஆய்வு நிறுவனம் சார்பில் பேராசிரியர் ச.இன்னாசி முத்து , பெ.பாண்டிக்குமார் மற்றும் சு.முத்தீசுவரன் ஆகியோர் இணைந்து எழுதிய 'அனுபவ சித்த மருத்துவ முறைகள்' நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. லயோலா கல்லூரியின் முதல்வர் ஆரோக்கியசாமி முன்னிலையில், மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழும தலைமை இயக்குநர் இராமசுவாமி, நூலை வெளியிட்டு சிறப்புரையாற்றினார்.


பேராசிரியர் இராமசுவாமி பேசும்போது,"  'உணவே மருந்து மருந்தே உணவு' என்று வாழ்ந்தவர்கள் நாம். இதை மறந்து போனதால், இன்று நோய்களின் பிடியில் சிக்கித் தவிக்கிறோம். பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் தங்களது வணிக நலனுக்காக, 'ஆங்கில மருந்துகள்தான் சிறந்தவை' என்ற மாயத் தோற்றத்தை மக்களிடையே  ஏற்படுத்தியுள்ளன. நமது சித்தமருத்துவ முறை ஐந்தாயிரம் ஆண்டுகள் பழமையானது. இதில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் இருக்கின்றன. நாம்தான் அதன் பெருமையை உணராமல் இருக்கிறோம். மூட்டில் வலியோ, கழுத்தில் சுளுக்கோ இருந்தால் மருத்துவமனை சென்று ஆயிரக்கணக்கில் செலவு செய்யத் தேவையில்லை. சித்தமுறையில் வலி உள்ள இடத்தில் வர்ம சிகிச்சை மூலம் கைகளால் பிடித்துவிட்டாலே போதும், சில நிமிடங்களில் வலி குணமாகும்.


அலோபதி மருத்துவம், நோயாளியாக மனிதனைப் பார்க்கும். சித்த மருத்துவம் மனிதனை மனிதனாக பார்த்து நோயைக் குணப்படுத்த தீர்வை சொல்லும். இதனால்தான் சித்த மருத்துவம் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஆனாலும் மண்ணில் உயிர்ப்போடு இருக்கிறது. தமிழகத்தில் பாளையங்கோட்டையில்தான் சித்த மருத்துவக்கல்லூரி முதன்முதலாக தொடங்கப்பட்டது.  சித்த மருத்துவத்தில் தாதுக்கள், சிறிய உயிரினங்கள் கடலில் கிடைக்க கூடிய முத்து, சிப்பி, பவளம், கடல் நுரை உள்ளிட்டவை கூட  மருந்தாகப் பயன்படுத்தப்படுகின்றன. அனுபவம் வாய்ந்த சித்த மருத்துவர்கள் தமிழ்நாட்டில் இன்னும் ஏராளமானவர்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் உள்ள சித்த மருத்துவ ஞானத்தை ஆவணப்படுத்தும் நோக்கில், எங்கள் அமைப்பும் செயல்பட்டு வருகிறது. அண்டை நாடான இலங்கையில், சித்த மருத்துவம் இன்னும் உயிர்ப்போடு இருக்கிறது. பக்கத்து மாநிலமான கர்நாடகாவில் சித்த மருத்துவம் குறித்த விழிப்புணர்வு பெருகிவருகிறது. உலகம் முழுக்கவே சித்த மருத்துவத்தின் அருமை, பெருமையை உணரத் தொடங்கியுள்ளார்கள்"  என்றார்.
இந்நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்களும், உயிர் மற்றும் தொழில்நுட்ப மாணவர்களும் பங்கேற்றனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த சித்த மருத்துவர்களுக்கு நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டன. கலந்து கொண்ட அனைவருக்கும் உயிரி பூச்சியியல் துறை சார்பில் இயற்கை உணவு பரிமாறப்பட்டது.




Monday, 25 July 2016

'இனி இயற்கை விவசாயம்தான் ஒரேவழி...!' -புதிய பாதையில் சீமான்


யற்கை வேளாண் பொருள் விற்பனையில் கால்பதிக்க இருக்கிறார் சீமான். 'காய்கறிகளோடு நமது பாரம்பர்ய பொருட்களை விற்கும் முயற்சியை தீவிரப்படுத்த வேண்டும்’ என கட்சியினருக்கு உத்தரவிட்டிருக்கிறார். இதற்காக, சிறப்பு மாநாடு, உணவுக் கண்காட்சி என பரபரப்பாக இயங்குகிறார்கள் நாம் தமிழர் தொண்டர்கள். 

சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, நாம் தமிழர் கட்சியின் அடிப்படைக் கட்டமைப்பை பலப்படுத்தும் வேலைகளில் இறங்கியிருக்கிறார் சீமான்.

உள்ளாட்சித் தேர்தலில் தனித்துக் களம் இறங்குவது ஒருபுறம் இருந்தாலும், '
நம்மாழ்வார் அய்யாவின் விருப்பப்படி, இயற்கை வேளாண் விற்பனையிலும் நாம் கால்பதிக்க வேண்டும் ' எனப் பேசி வருகிறார் சீமான்.  அதற்கான வேலைகள் நடந்து வருகின்றன என்கிறார் அக்கட்சியின் நிர்வாகி ஒருவர்.

அவர் நம்மிடம், “ தேர்தல் தோல்விகள் ஏராளமான பாடங்களைக் கற்றுக் கொடுத்திருக்கின்றன. ‘அப்படியே முடங்கிப் போய்க் கிடந்தால், மக்கள் நம்மை மறந்துவிடுவார்கள்’ என்று சீமானிடம் சொன்னோம். அதற்காகத்தான், இயற்கை வேளாண்மையை  மக்களுடைய வாழ்வின் ஒருபகுதியாக மாற்றுவது என்ற முடிவுக்கு வந்திருக்கிறார். மண் சார்ந்த இயற்கைப் பொருட்களை மக்களிடம்  கொண்டு செல்லும்போது, நம்மீதான பார்வை பலமடங்கு அதிகரிக்கும் என நினைக்கிறார் சீமான். ஏற்கெனவே, 'நம்மாழ்வார் இயற்கை இயக்கம்' என்ற பெயரில் நாங்கள் செயல்பட்டு வருகிறோம். இந்த அமைப்பின் மூலம் பனை பொருட்கள், தென்னை நார் கைவினைப் பொருட்கள், மண்ணால் செய்யப்பட்ட சமையல் உபகரணங்கள் என பண்டைய கால வாழ்வியல் முறைகளை மீட்டெடுக்க இருக்கிறோம். இதற்காக, எங்கள் கட்சியின் இளைஞர்களிடையே குழுக்கள் அமைத்து, இயற்கை வேளாண் விற்பனையை விரிவுபடுத்த இருக்கிறோம். 



இதற்காக, வருகிற செப்டம்பர் 17-ம் தேதி ஈரோட்டில். இயற்கை வேளாண் மாநாடு ஒன்றை சீமான் தலைமையில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த மாநாட்டில் மிகப் பிரமாண்டமான இயற்கை உணவுக் கண்காட்சியும் நடத்தப்பட உள்ளது. தொண்டர்களிடையே வேளாண் விற்பனையை ஊக்கப்படுத்தும்போது, கீழிருந்து மேலாக கட்சியை பலப்படுத்துவதற்கு உதவியாக இருக்கும் என நம்புகிறோம். ‘ சாதி மதமாக பின்னப்பட்டிருந்தாலும் இயற்கை வேளாண் உணவுகள் என்று வரும்போது மனிதர்கள் ஒன்றுபடுகிறார்கள். பாரம்பர்யப் பெருமைகளை மீட்கும் ஒரு பகுதியாகவும் இருக்கும்’ எனத் திட்டமிட்டுள்ளோம். தற்போது மாநிலம் முழுவதும் இயற்கை வேளாண் பொருட்களை எப்படி சந்தைப்படுத்துவது? பாரம்பர்ய உணவுத் திருவிழாக்களை எப்படி நடத்துவது? கலப்படமில்லாத, இயற்கை வேளாண் முறையில் தயாரான சுத்தமான பொருட்கள் எங்கு கிடைக்கின்றன என்பதைப் பற்றியெல்லாம் தீவிரமாக ஆய்வு நடத்தி வருகிறார் சீமான். சென்னை உள்ளிட்ட மாவட்டங்களின் தலைநகர்களில் உணவுக் கண்காட்சியை நடத்துவது, தென்னை, பனையால் செய்யப்பட்ட கைவினைப் பொருட்களை திரட்டுவது என கட்சியின் தொண்டர்களும் பரபரப்பாக இயங்குகிறார்கள்” என்றார் விரிவாக. 


விரைவில், ‘ இயற்கை விவசாயத்தை முன்னெடுக்கும் வகையில் மண்வெட்டி, கடப்பாரையோடு வயல் வெளியில் நாங்கள் இறங்கினாலும் ஆச்சர்யமில்லை’ என்கின்றனர் நாம் தமிழர் கட்சித் தொண்டர்கள். 




Thursday, 30 June 2016

உடல் ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஓர் டாக்டரின் உணவு மெனு!

ம் உடல்நிலை ஆரோக்கியத்திற்காக மருத்துவரை அணுகும்போது, நீங்கள் அந்த வகையான உணவுகளை தவிர்த்தல் நல்லது, இந்த உணவுகளை சாப்பிடுவது சிறந்தது, இதுபோன்ற வழிமுறைகளை கடைப்பிடிப்பது ஆரோக்கியத்தைத் தரும் என டாக்டர்கள் ஆலோசனைகளைக் கூறுவார்கள். ஆனால், டாக்டர்கள் எத்தகைய உணவு முறைகளையும், பழக்க வழக்கங்களையும் கடைபிடிக்கிறார்கள் என பிரபல இதயநோய் நிபுணரான டாக்டர் சிவகடாட்சத்தை சந்தித்தோம்.

''ஒரு மருத்துவராக இருப்பதால, மத்தவங்க உடல்நிலை குறித்த எண்ணம்தான் எனக்கு அதிகமா இருக்கும். இருந்தாலும் குடும்பத்துக்கான நேரத்தை சரியா ஒதுக்குவதிலும் நான் சரியாகவே செயல்படுறேன். தினமும் காலையில வாக்கிங், ஆரோக்கியமான உணவுகள், போதுமான தூக்கம்னு என்னோட உடல்நிலை மேல என் மனைவி சாந்தகுமாரிதான் அதிகமான கவனம் செலுத்துறாங்க'' என புன்னகைக்கிறார், டாக்டர் சிவகடாட்சம். ‘‘நோயாளிகளோட உடல்நிலை அவருக்கு எவ்வளவு முக்கியமோ, அதேபோல அவரோட உடல்நிலையும், மன அமைதியும் எனக்கு முக்கியம் என கணவரின் உடல்நிலையின் முக்கியத்தை விளக்குகிறார், சாந்தகுமாரி சிவகடாட்சம்.



''ஹாஸ்பிட்டல்ல இருக்குற வேலைகளைப் பொறுத்து ஒவ்வொரு நாள் இரவும், அவர் வீட்டுக்கு வரும் நேரம் மாறுபடும். சராசரியாக 6 - 7 மணி நேரம் தூங்குவார். விடுமுறை நாளான சன்டே மட்டும் 8 மணிநேரம் தூங்குவார். தினமும் காலை எழுந்து பல் துலக்கியதும் டிக்காஸன் காபி குடிச்சுட்டு, அரை மணி நேரம் பேப்பர் படிப்பாரு. தொடர்ந்து 30 - 40 நிமிடம் வெளியில வாக்கிங் போயிட்டு வருவாரு. 

வாக்கிங் முடிச்சுட்டு வீட்டுக்கு வந்த உடனே குளிச்சுட்டு, காலை உணவு சாப்பிட்டுட்டு உடனே ஆஸ்பிட்டல் கிளம்பிடுவாரு. ஆஸ்பிட்டல்ல பசி எடுத்தால் மட்டும் ஒரு டீ, ரெண்டு பிஸ்கட் சாப்பிடுவாரு. சில நாட்கள்ல சூப் கொடுத்து அனுப்புவேன். மதியம் 2.30 - 3 மணிக்குள்ள வீட்டுக்கு வந்து சாப்பிடுவாரு. 

மதிய உணவு முடிச்சுட்டு, அரை மணியிலிருந்து ஒரு மணிநேரம் வரை தூங்குவாரு. பின்னர் காபி அல்லது டீக்கூட இரண்டு பிஸ்கட் அல்லது கொஞ்சம் மிக்சர் கலவையை சாப்பிட்டுட்டு ஆஸ்பிட்டல் கிளம்பிவிடுவார். ஆஸ்பிட்டலில் பசி வந்தா மட்டும் ஒரு டீ அல்லது காபி குடிப்பார். இரவு 9 - 10 மணிக்கு வீட்டிற்கு வருவார்.
இரவு நேரத்துல குடும்பத்தோடு சாப்பிட்டு முடித்து, எல்லாரும் பேசிட்டு இருப்போம். பேத்திக்கூட கொஞ்ச நேரம் சிரிச்சுப்பேசி விளையாடிட்டு, தூங்கப் போயிடுவாரு.

நாங்க டாக்டர் ஃபேமிலிங்கிறதால ரொம்ப டயட்டை கடைபிடிக்கிறது, உணவுகள்ல ஆயில் சேர்க்காம, இனிப்பு, ஸ்நேக்ஸ் சாப்பிடாம இருக்குறதுங்கிற மாதிரியெல்லாம் செய்ய மாட்டோம். நாங்களும் எல்லா உணவு வகைகளையும் சாப்பிடுவோம். ஆனா, அந்த உணவுகளால உடலுக்கு எந்த பிரச்னையும் வராத அளவுக்கு, போதிய சத்துகள் இருக்கிறதான்னும் பார்த்துதான் சாப்பிடுவோம்'' எனக்கூறும் சாந்தகுமாரி, டாக்டர் சிவகடாட்சத்தின் ஒருநாள் மெனுவை பட்டியலிடுகிறார்.

''காலை:
வேகவைத்த முளைக்கட்டிய தானியக் கலவை - ஒரு கப் 
2 டோஸ்டட் பிரட்டுக்கு நடுவில் வெள்ளைக் கரு முட்டை ஆம்லெட் வைத்தது
ஃப்ரூட்ஸ் கலவை - ஒரு கப் 

மதியம்:
வெள்ளை சாதம் 
பருப்பு சாம்பார்
இண்டு வகை பொறியல் 
எலுமிச்சை ரசம் 
தயிர் 
எதாவது ஒரு சேலட் பச்சடி

இரவு:
வெள்ளை முள்ளங்கி சப்பாத்தி - 3
வெஜிடபுள் குருமா
ஆப்பிள் - அரை

வாரத்தில் ஒரு நாள் மதியம் மட்டும் மீன் ரெண்டு துண்டு, மற்றொரு நாள் சிக்கன் ரெண்டு துண்டு அல்லது ஒரு லெக் பீஸ் சாப்பிடுவார். மாதத்தில் இரண்டு நாள் மதியத்தில் மட்டும் மட்டன் தலா ரெண்டு துண்டுகள் சாப்பிடுவார். வாரத்தில் ஒருநாள் ஈவுனிங் டீ நேரத்தில் மட்டும் எதாவது ஒரு காய்கறி சூப் அல்லது ஒரு வடை அல்லது ஒரு முறுக்கு போன்ற ஆயில் ஸ்நேக்ஸ் சாப்பிடுவார். எப்போதாவது பாதி இனிப்பு ஸ்வீட் சாப்பிடுவார். மாதத்தில் ஒருநாள் ஒருவேளை மட்டும்  3 பூரியும், மாதத்தில் ஒருவேளை மட்டும் ஜங்க் புட் சாப்பிடுவார். பொட்டேட்டோ ஃபிரை, பிட்டல், முறுக்கு, குடைமிளகாய் கூட்டு, வெந்தயக்குழம்பு, பிரான்ஸ் தொக்கு, வேர்க்கடலை பருப்பி ஆகிய உணவு வகைகளும் அவருக்கு ரொம்ப பிடிக்கும்.



அவரோட பிசி ஷெட்யூலுக்கு நடுவில் கிச்சன் பக்கமே வரமாட்டார். இந்த உலகத்துல மாரடைப்பால உயிரிழக்குறவங்க எண்ணிக்கை அதிகமாயிட்டே போகுது. என் கணவர் இருதய நோய் நிபுணர் என்பதால அவர்கிட்ட வர்ற நோயாளிங்கக்கிட்ட உங்களுடைய பிள்ளை, பேரக் குழந்தைங்களுக்கு நேரம் ஒதுக்கி சந்தோஷமா சிரிச்சுப் பேசி, விளையாடி மகிழுங்க. உங்களுக்கு எல்லா டென்ஷனும், பிரச்னையும் குறைஞ்சிடும்னு சொல்லுவாரு. அதேமாதிரி, அவருக்கு கிடைக்கிற ஓய்வு நேரங்கள்ல எங்களுடைய பேத்திக்கூட விளையாடி பொழுதைக் கழிப்பாரு. 

வாரத்தில் ஒரு நாள் சினிமாவுக்குப் போயிட்டு, அப்படியே ஹோட்டல்ல சாப்பிட்டு வருவோம். வருஷத்துல சிலநாட்கள் சுற்றுலா போயிட்டுவருவதால், தொடர்ந்து அவரால் ஆக்டிவாக மருத்துவ சேவையை செய்ய முடிகிறது'' என புன்னகையுடன் தெரிவிக்கிறார், சாந்தகுமாரி.




ஆடு, மாடு, கோழி, பட்டுப்புழு... நம்மாழ்வார் வழியில் அசத்தும் பெண் விவசாயி!

''விவசாயம் தொழிலும் அல்ல... கலாசாரமும் அல்ல... அது ஒரு வாழ்வியல்'' என்று சொல்வார் நம்மாழ்வார். இதையே வேதவாக்காக எடுத்துக்கொண்டு, இயற்கை வழி வேளாண்மையை அசத்தலாக மேற் கொண்டிருக்கிறார், திருப்பூர் மாவட்டம், முத்தூர் பகுதியைச் சேர்ந்த எம்.பி.பரிமளா தேவி.
''பழமை மாறாத, புதிய விவசாய யுக்திகளைக் கையாண்டு பார்த்து, அதில் திருப்தி ஏற்பட்டால் நம்முடைய வயலில் தைரியமாக செயல்படுத்தலாம்'' என்பதும் நம்மாழ்வார் சொல்லிச் சென்றதுதான். இதையும் தன்னுடைய வயலில் செயல்படுத்தி வெற்றிகரமாக வலம் வரும் பரிமளாதேவியை, நம்மாழ்வார் சிறப்பிதழுக்காகச் சந்தித்தோம்.


முத்தூரில் இருந்து கூப்பிடுதொலைவில் இருக்கிறது, இவருடைய பண்ணை. ஆடு, மாடு, கோழி எனப் பல்லுயிர் சுழற்சிக்கான முக்கிய அம்சங்களுடன் திகழ்கிறது இப்பண்ணை! 'குட்டி நாதஸ்வரம்’ போன்ற மஞ்சள் பூக்கள் குலுங்க தோட்டத்தின் நடுநாயகமாக விளங்கும் பூவரச மர நிழலில் கட்டி இருந்த நாட்டு மாட்டுக்கு, பூவரச இலைகளை உண்ணக் கொடுத்து கொண்டிருந்தவரிடம் பேச்சுக்கொடுத்தோம். கணவர் பெரியசாமி மற்றும் மகன் ராம்குமார் இருவரும் இணைந்துகொள்ள, கடகடவென ஆரம்பித்தார் பரிமளாதேவி.
''எங்களுக்கு மொத்தம் 10 ஏக்கர் விவசாய நிலம் இருக்கு. இதுல மேய்ச்சல் நிலம் 4 ஏக்கர் போக, 6 ஏக்கர்ல விவசாயம் பண்றோம். வீடு, ஆட்டுப்பண்ணை, கோழிப்பண்ணை, பட்டுபுழு வளர்ப்புமனைனு சில கட்டடங்களையும் கட்டி இருக்கோம். கடந்த நாலு வருஷமா முழுக்க இயற்கை வழியிலதான் எங்க பண்ணை நடக்குது. அதுவும் ஐயா நம்மாழ்வார் சொல்லிக்கொடுத்த வழியிலதான் அடி பிசகாம போயிட்டு இருக்கு. இதுக்கு முன்ன நாங்க செஞ்சிட்டு இருந்த ரசாயன விவசாயத்துல பட்ட துன்பங்கள் ஏராளம். பெற்ற கடன்களும் எக்கச்சக்கம். இதனால ஏற்பட்ட பிரச்னைகள் எல்லாம் படிப்படியா குறைஞ்சு, மனநிறைவோட இருக்கோம்னா, இதுக்குக் காரணம் ஐயாதான். ரசாயனத்தை விட்டு இயற்கைக்கு மாறிய காலகட்டத்தில் சில சமயம் சோர்வு வந்துச்சு. அந்த சமயம் எல்லாம், 'முயற்சி விதைபோல... முளைத்தால் மரம்; இல்லையேல் மண்ணுக்கு உரம்’ என்கிற ஐயாவோட வாக்கு நினைவுக்கு வரும். வந்த சோர்வைத் தூக்கிவீசிட்டு, அடுத்த வேலைய பார்க்கப் போயிடுவேன்'' என்று குரலில் உறுதிதொனிக்க சொன்ன பரிமளாதேவி, தொடர்ந்தார்.
வீட்டுக்கு நாட்டுமாடு... விற்பனைக்குக் கறவை மாடு!
''நாட்டுமாடுகளை அழிவில இருந்து காப்பாத்தணும்னு அய்யா அடிக்கடி சொல்வார். அதனால, ரெண்டு காங்கேயம் பசுக்களை வாங்கினோம். இந்த மாடுகளோட சாணம், மூத்திரம் எல்லாம் அதிக வீரியமானது. இதை பயன்படுத்தித்தான் இடுபொருட்கள் தயாரிக் கிறோம். வீட்டுக்குத் தேவையான சத்து அதிகமான சுவையான பால், கைமணக்கும் நெய், தாகம் தீர்க்கும் மோர் எல்லாம் இதன் மூலமாவே கிடைக்குது. தவிர, பால் விற்பனைக்காக 4 கறவை மாடுகளை வெச்சிருக்கோம். சராசரியா, ஒரு நாளுக்கு 20 லிட்டர் பால் கிடைக்குது. அதை, லிட்டர் 36 ரூபாய்னு கொடுக்கிறோம். அதுக போடுற சாணியைத் தொழுவுரமா பயன்படுத்திக்கிறோம்.
ஆண்டு முழுவதும் வருமானம்!
பண்ணையில 20 வெள்ளாடு களை வளர்க்குறோம். பகல்ல மேய்ச்சலுக்கு விட்டுட்டு ராத்திரியில கிடை அடைச்சிடுவோம். இதுக மூலமா குறைஞ்சபட்சம் வருஷத்துக்கு 20 குட்டிகள் கிடைக்குது. அதை விற்பனை செய்றதுல 50 ஆயிரம் ரூபாய் கிடைக்குது. நிலத்துக்கு எருவும் கிடைச்சுடுது. சிறுசும் பெருசுமா 50 நாட்டுக்கோழிகள் இருக்கு. தோட்டத்துல இருக்குற புழு, பூச்சிகளை மேய்ஞ்சே இதுக வளந்துடும். தினசரி ஒருவேளை மட்டும் கொஞ்சமா தீவனம் இறைப்போம். இதுகளுக்கு பெரிசா செலவு இல்லை. குஞ்சுகள், முட்டைகள்னு விற்பனை செய்றது மூலமா மாசம் 5 ஆயிரம் ரூபாய் வரும்படி வருது. பயிருக்கு கோழி எரு போய் சேந்துடுது. 'ஒரு பண்ணை ஆண்டு முழுவதும் வேலை வாய்ப்பைக் கொடுக்கணும். வருமானத்தை ஈட்டணும்’னு ஐயா சொல்வார். அந்த வகையில்தான் எங்க பண்ணையை வடிவமைச்சு இருக்கிறேன்'' என்று பெருமையாகச் சொன்ன பரிமளாதேவி, பண்ணையைச் சுற்றிக் காட்டிக் கொண்டே பேசினார்.
தற்சார்பு விவசாயம்!


''எங்க வீட்டு சமைய லுக்குத் தேவையான அரிசி, பயறு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களையும், கால் நடைகளுக்குத் தேவையான வைக்கோல், சோளத்தட்டை, கடலைக்கொடி போன்ற உலர்தீவனங்களையும் சேமிச்சு வெச்சுக்கிறோம். கோ4 ரக மறுதழைவு பசுந்தீவனப்பயிரை ஒரு ஏக்கர்ல போட்டிருக்கோம். இது, கறவைமாடுகளுக்கு அதிக புரதச்சத்தையும் நார்ச்சத்தையும் கொடுக்கும். 15 நாளுக்கு ஒரு தடவை பஞ்சகவ்யாவையும் அமுதக்கரைசலையும் மாத்தி மாத்திக் கொடுப்போம். அடியுரமா ஆட்டு எரு போட்டிருக்கோம். அதனால வெட்ட வெட்ட தழைஞ்சு, வேண்டிய அளவுக்கு தீவனத்தை அள்ளி வழங்குது. இந்தக் கரணைகளையும் வெட்டி குறைந்த விலைக்கு விற்பனை செய்றோம். இதுவரை 100 விவசாயிங்களுக்கு இந்த பசுந்தீவனக் கரணைகளைக் கொடுத்திருக்கோம். அவுங்க மூலமா மத்த விவசாயிங்களுக்கும் பரவுது. 'எதையும் இலவசமா கொடுக்காதே, நீயும் வாங்காதே’, 'விவசாயிகளிடம் இருந்து விவசாயிகளுக்கு விதை, தொழில்நுட்பம் எல்லாம் பரவணும்’ங்கிற ஐயாவின் வார்த்தைகளை சரியா நாங்க நிறைவேத்துறோம்.
உரமும் நமது... உயர் விளைச்சலும் நமது!
வருஷம் முழுசும் எங்க நிலத்துல ஒரு இடம் பாக்கியில்லாமல் ஆட்டுக்கிடை போட்டுடுவோம். ஒரு இடத்துல பத்து நாள் வரை கிடைபோடுறதால, ஆட்டு எரு மண்ணு தெரியாத அளவுக்கு நெறைஞ்சிருக்கும். அதனால, எந்த வெள்ளாமை வெச்சாலும் மகசூல் பட்டைய கிளப்புது. அது போக பருவமழைக்கு முந்தி, சேமிச்சு வெச்சிருக்கிற கோழி எருவை பயிருக்குக் கொடுப்போம். அது இயற்கையான மேலுரமாக மாறி பயிருக்கு ஊக்கம் கொடுக்கும். ஆக, நம்மாழ்வார் சொன்ன 'ஒன்றின் கழிவு... மற்றொன்றின் உணவு’ என்கிற சுழற்சி முறை விவசாய விதி, ரசாயன உரத்துக்கு மாற்றா நின்னு. உற்பத்திச் செலவைக் குறைக்குது'' என்ற பரிமளாதேவி,
மாத வருமானத்துக்கு மல்பெரி!
''ஆண்டு வருமானம், மாத வருமானம், வார வருமானம் கிடைக்கும்படி பண்ணையை வடிவமைச்சிருக்கோம். ஆனா, போதிய மழை கிடைக்காம போனதால ஆண்டு வருமானம் கொடுக்கிற பயிர்களை இந்த போகம் நடல. ஆனா, 'பசுமை விகடன்’ மூலமாக நிரந்தர மாத வருமானம் பார்க்க ஒரு வழி கிடைச்சுது. தாராபுரம் பக்கத்துல இருக்கிற காசிலிங்கம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த செல்லமுத்து  பாப்பாத்தி தம்பதி, பட்டுப்புழு வளர்த்து மாநில விருது வாங்கினது பத்தி வந்த கட்டுரை, எங்களையும் மல்பெரி விவசாயியா மாத்திடுச்சு. அதுவும் முழுக்க முழுக்க இயற்கைதான். நாலு ஏக்கர்ல சொட்டு நீர் போட்டு மல்பெரி செடிய நட்டிருக்கோம். ஏற்கெனவே கிடைபோட்ட மண்ணு. அதோட அமுதக்கரைசலையும் கொடுக்கிறதால, மல்பெரி எல்லாம், சும்மா வெத்தலை மாதிரி 'தளதள’னு இருக்கு. ஐயா சொன்ன அத்தனை விஷயங்களையும் எங்க பண்ணையில தவறாம கடைபிடிக்கறதால எந்த பிக்கல் பிடுங்கலும் இல்லாம பொழைப்பு ஓடிகிட்டு இருக்கு. அதனாலதான் அவரை நாங்க தெய்வமா பாக்குறோம்'' என்றபடி விடைகொடுத்தார்.
தவறுகளும்... விளக்கங்களும்!
'34 சென்ட்... ஆண்டுக்கு ரூ 2. லட்சம்... ஒப்பற்ற ஒரு பண்ணை’ என்ற தலைப்பில், பசுமை விகடன், 25.12.14 தேதியிட்ட இதழில் ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தோம். திருநெல்வேலி மாவட்டம், கடையம் பகுதியைச் சேர்ந்த ஃபெலிக்ஸ் என்பவரின் பண்ணை பற்றிய அக்கட்டுரையில் சில தகவல்கள் தவறாக இடம்பெற்றிருப்பதாக, நம்மிடம் குறிப்பிட்ட ஃபெலிக்ஸ், '’கட்டுரை நிறைய எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கு. நிறைய பேர்கிட்ட போய் சேர்ந்திருக்கு. தொடர்ந்து எனக்கு அழைப்புகள் வந்தவண்ணம் இருக்கு. ஆனா, பஞ்சகவ்யா, ஜீவாமிர்தம் இதையெல்லாம் நான் பயன்படுத்துற மாதிரி கட்டுரையில வந்திருக்கு. இதையெல்லாம் நான் பயன்படுத்துறதில்ல. வடிகரைசலை மட்டும்தான் பயன்படுத்துறேன். இதேபோல வனராணி ரகக் கோழி 1,000 ருபாய் விலை போகும்னு வந்திருக்கிற தகவலும் தவறு. ஒரு கோழி 300 ரூபாய் வரைதான் விலை போகும்'' என்று தவறுகளைச் சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்து பேசிய ஃபெலிக்ஸ், '’இந்தப் பண்ணையை வருமான நோக்கத்துக்காக நான் உருவாக்கல. அப்படி ஒரு நோக்கம் இருந்திருந்தா, ஐ.டி.துறையிலேயே (தகவல் தொழில்நுட்பத்துறை) இருந்திருப்பேன். இயற்கை சார்ந்த வாழ்க்கை முறைக்கு மாத்திக்க நினைச்சுதான் இந்த பண்ணையை உருவாக்கினேன். இதை முழுமையா புரிஞ்சுக்காத சிலர், 'ரெண்டு லட்சம்தான் வருமானம் கிடைக்குதா?னு கேக்கறாங்க. இந்த இடத்துல கழிவுகள் அத்தனையும் மறுசுழற்சி ஆகுது; இயற்கைக் காயப்படாம இருக்கு; தற்சார்பு விவசாயம் நடக்குது; எல்லாத்துக்கும் மேல மனநிம்மதியான வாழ்க்கை கிடைக்குது. இதுக்கு ரெண்டு லட்சம் இல்ல... ரெண்டு கோடி... ரெண்டாயிரம் கோடினு எப்படி வேணும்னாலும் மதிப்பு போட்டுக்கலாம். இயற்கை விவசாயத்தின் மூலமா வருமானத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கிறதைவிட, வாழ்வியல் முறைக்கு முக்கியத்துவம் கொடுக்கணும்னு நினைக்கறவன் நான். அதனால, இந்த வருமானக் கணக்குலயெல்லாம் எனக்கு விருப்பமே இல்ல'' என்று சொன்னார்.


ஃபெலிக்ஸ் கூறியவற்றில் இரண்டு விஷயங்கள், தவறாக இடம்பெற்றுவிட்டன. இப்படித் தவறான தகவலைத் தந்தமைக்காக வருந்துகிறோம். எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகள் நிகழா வண்ணம் பணியாற்ற உறுதி ஏற்கிறோம்.




Friday, 3 June 2016

உயிருக்கு எமனாகும் பிளாஸ்டிக் பாட்டில் 'சிரப்'... ஒரு பகீர் ரிப்போர்ட்!

ருத்துவத்துறைதான் மானிட வர்க்கம் இன்று தழைக்க மறுக்கமுடியாத காரணம். விதவிதமான நோய்களும் வகைவகையான மருந்துகளும் இந்த நூற்றாண்டில் பெருகியிருக்கிற சூழலில், மனித வர்க்கத்தின் ஒரே நம்பிக்கை மருத்துவத்துறைதான். 

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாராக இருந்தாலும் உடல் நலம் கெட்டால் உடனடியாக மருத்துவரிடம் சென்று நிற்கிறோம். அவர் எழுதிக் கொடுக்கும் மருந்தை வாங்கி சாப்பிடுகிறோம். குழந்தைகளுக்கு பெரும்பாலும் எழுதித்தரப்படுபவை பாட்டிலில் விற்கப்படும் 'சிரப்'புகள். முன்பெல்லாம் கண்ணாடி பாட்டில்களில் வந்த இந்த சிரப்புகள், இப்போதெல்லாம் பாதுகாப்பு காரணங்களுக்காக பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைக்கப்பட்டுதான் கடைகளுக்கு விற்பனைக்கு வருகின்றன.

 

இப்போது இதுதான் சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது. அதாவது 'பிளாஸ்டிக்பாட்டிலில் உள்ள மருந்தில் உள்ள வேதிப்பொருள், பிளாஸ்டிக்குடன் வினைபுரிந்து நச்சுப் பொருளாக மாறுகிறது அல்லது விஷமாகிறது' என அதிர்ச்சி தருகிறது மத்திய சுகாதாரத் துறை. மத்திய அரசு கேட்டுக் கொண்டதன்பேரில் 'ஆல் இந்தியா இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹைஜின் அண்ட்  பப்ளிக் ஹெல்த்' நடத்திய ஆய்வில்தான் இந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.  

மருத்துவத்துறையில் பிரபலமாக விளங்கும் இருமல் மருந்து தயாரிக்கும் நிறுவனங்களான பெனட்ரில் மற்றும் அலெக்ஸ் இந்த சர்ச்சையில் சிக்கியுள்ளன. அதாவது இந்நிறுவனங்களின் இருமல் மருந்துகளில் தாது மற்றும் குரோமியம், கேட்மியம் போன்றவை அதிகமாக கலந்திருக்கிறது. இந்த மருந்துகளை அறை வெப்பநிலையில் வைக்கும் போது, மருந்தில் இருக்கும் தாது பொருட்கள் மற்றும் குரோமியம், கேட்மியத்துடன் பிளாஸ்டிக் வினை புரிந்து  மருந்தில் நச்சு தன்மையை உருவாக்குகிறது.
பிரபலமான ஐந்து நிறுவனங்களின் மருந்துகளில் இது போன்ற பிரச்னை இருப்பதாக 'ஆல் இந்தியா இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹைஜின் அண்ட்  பப்ளிக் ஹெல்த்' அமைப்பு தெரிவித்துள்ளது. அதாவது Pfizer's Mucaine Gel, Hemfer Syrup, Alex cough Syrup, Benadryl cough Syrup, PolybionMerck Multivitamin Syrup ஆகிய ஐந்து மருத்துகளில் பிரச்னை உள்ளது.  பெனட்ரில் 'ஜான்சன் அண்டு ஜான்சன்' நிறுவனத்தின் தயாரிப்பு ஆகும்.  அலெக்ஸ் இருமல் மருந்தை 'க்ளென் மார்க்' நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. மேற்கூறியுள்ள மல்டி வைட்டமின் சிரப்பை ஜெர்மன் நிறுவனம் தயாரிக்கிறது. 

இது குறித்து சம்பந்தப்பட்ட மருந்து தயாரிப்பு நிறுவனங்களிடம் கேட்டால், விதவிதமான பதிலை தெரிவிக்கின்றனர். 

“மருந்து பொருட்களை மட்டும்தான் நாங்கள் தயாரிக்கிறோம். மருந்துகளை அடைக்க பயன்படுத்தப்படும் பாட்டில்களை வெளியில் இருந்துதான் வாங்குகிறோம். எஃப் டி ஏ (Food and Drug Administration)  பரிசோதனை செய்து அனுமதித்த பொருட்கள் மூலம் மருந்து பாட்டில்களை தயாரிக்கும் நிறுவனத்திடம் இருந்துதான் பாட்டில்களை வாங்குகிறோம்” என்கிறது ஆல்கெம் லேப்ஸ் நிறுவனம்.  இப்படி ஒவ்வொரு நிறுவனமும் ஒவ்வொரு விதமான பதில்களை தெரிவித்துள்ளன.


இந்த ஐந்து மருந்துகளை தயாரிக்கும் நிறுவனங்கள், இந்தியாவில் அதிகமான சந்தை மதிப்பை வைத்துள்ளன. அதாவது பெனட்ரில் ரூ.50 கோடிக்கும், அலெக்ஸ் ரூ. 35 கோடிக்கும்  கடந்த வருடம் மருந்துகளை இந்தியாவில் விற்பனை செய்துள்ளது. மேலும் ஃபைசர் நிறுவனத்தின் ஜெல் மட்டும் 50 சதவிகித சந்தை மதிப்பை வைத்துள்ளது. இதன் ஒரு ஆண்டு விற்பனை ரூ.100 கோடியாக உள்ளது. 
மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம், மருந்துகளை அடைப்பதற்கு பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பாட்டில்களின் அளவை குறைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

அதாவது குழந்தைகளின் மருந்துகள், முதியோருக்கான மருந்துகள், கருவுற்றிருக்கும் பெண்கள் பயன்படுத்தும் மருந்துகள், மாதவிடாய் பிரச்னை காரணமாக சாப்பிடும்  மருந்துகள் உள்ளிட்ட  மருந்துகளை அடைப்பதற்கு பிளாஸ்டிக் பாட்டில்களை பயன்படுத்துவதை குறைக்குமாறு அறிவுறுத்தி உள்ளது. மேலும்  பிளாஸ்டிக் பாட்டில் பயன்பாட்டில் பாதுகாப்பான அளவைக் கேட்டு ஆய்வு மையத்திற்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.



மத்திய அரசு, ஆய்வு மையத்திடம் பாதுகாப்பான அளவை கேட்பதை விட,  பிளாஸ்டிக் பயன்பாட்டை அறவே தவிர்க்கவோ அல்லது குறைப்பதற்கான வழிமுறைகளையோ தேட வேண்டும். அதுதான் சரியான முடிவாக இருக்க முடியும். 

உயிர் கொடுக்கும் மருத்துவத்துறை உயிரெடுக்கும் துறையாக மாறிவிடக்கூடாது!



Thursday, 26 May 2016

நிறைவான வருமானம் தரும் நிலக்கடலை! 50 சென்ட் நிலத்தில், ஒரு ஏக்கர் விளைச்சல்!

*ஆடிப் பட்டம் சிறந்தது. 

*மணல் கலந்த செம்மண், வண்டல் மண்,

*மணல் கலந்த வண்டல் மண் ஆகிய நிலங்களுக்கு ஏற்றது. 

*வறட்சியைத் தாங்கி வளரும்.

*அதிக நோய் எதிர்ப்புத்திறன் கொண்டது.

ண்ணெய் எடுப்பதற்காகவும், உணவுப் பண்டமாகவும் நிலக்கடலை அதிகம் பயன்படுகிறது. இதற்கான சந்தை வாய்ப்பு பிரகாசமாக இருப்பதால்தான் இறவையிலும், மானாவாரியிலும் அதிகளவில் பயிரிடுகிறார்கள். தென்மாவட்டங்களில் இறவையை விட மானாவாரியில்தான் அதிக பரப்பில் நிலக்கடலை பயிரிடப்படுகிறது. இந்நிலையில் வறட்சியைத் தாங்கி வளரும் புதிய நிலக்கடலை ரகத்தை வெளியிட்டுள்ளது பாபா அணு ஆராய்ச்சி நிலையம். 

ஒரு ஏக்கர் பரப்பில் ஒட்டு ரகம் தரும் மகசூலை 50 சென்ட் நிலத்தில் இந்த ரகம் தருகிறது என்கிறார், விருதுநகர் மாவட்டம், வில்லிபுத்தூர் தாலூகா, வத்திராயிருப்பில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள, டபிள்யூ. புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி சுகேந்திரன். 


கடந்த ஆண்டு ஆடிப்பட்டத்தில் விதைத்து அறுவடை செய்திருந்த கடலை  வயலில், சில தப்புச் செடிகள் வளர்ந்திருந்தன. அவற்றிலிருந்து கடலைகளைப் பறித்தபடி நம்மிடம் பேசிய சுகேந்திரன்,
‘‘இதுதான் என்னோட பூர்வீக கிராமம். பாரம்பர்யமாவே விவசாயக் குடும்பம்தான். வழக்கமா நெல், பருத்தி, தென்னை விவசாயம் செய்வோம். காலேஜ்ல படிக்கும்போது, இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில கலந்துகிட்டேன். அதனால, காலேஜில டி.சியைக் கொடுத்து வீட்டுக்கு அனுப்பிட்டாங்க. அந்த நேரத்துல போலீஸ் வேலைக்கு ஆள் எடுத்தாங்க. நானும் அதுல கலந்துகிட்டு செலக்ட் ஆகிட்டேன். ஆனா, அந்த வேலை அப்பாவுக்குப் பிடிக்கலை. ‘போலீஸ் வேலையெல்லாம் வேண்டாம், ஒழுங்கா விவசாயத்தைப் பாரு...’னு சொல்லிட்டாரு. அப்பா பேச்சைத் தட்ட முடியாம, விவசாயத்துல இறங்கிட்டேன். 

அப்பா காலத்துல சாணம் போட்டு செய்யுற இயற்கை முறை விவசாயம்தான் நடந்துச்சு. பசுமைப் புரட்சிக்குப் பிறகுதான் எங்க நிலத்துலயும் ரசாயனத்தைக் கொட்டி மண்ணைப் பாழாக்கினோம். 

2003-ம் வருஷத்துக்குப் பிறகுதான் இயற்கை விவசாயம், நஞ்சில்லா விவசாயம்ங்கிற வார்த்தையையே கேள்விப்பட்டேன். நம்மாழ்வார் ஐயாவின் கருத்துக்களையும், அவர் வலியுறுத்திய இயற்கை விவசாயத்தைப் பற்றியும் தினசரிகளில் படிச்சேன். தொடர்ந்து, ‘பசுமை விகடன்’ இதழ் வெளிவரவும், இயற்கை விவசாயம் பற்றிய தெளிவான புரிதல் கிடைச்சது. 

‘ரசாயனம் உரம் போட்ட இடத்துல ஒரு மண்புழுவைக்கூடப் பார்க்க முடியாது’னு ஒரு கட்டுரையில் நம்மாழ்வார் அய்யா சொல்லியிருப்பார். என் தோட்டத்துலயும் மண்புழுவை நான் பார்த்ததே இல்லை. அப்போதான் அவர் சொன்னதை உணர்ந்தேன். அதுல இருந்து இயற்கை விவசாயத்துக்கு மாறிட்டேன். இயற்கை விவசாயத்துக்கு மாறி பத்து வருசம் ஆகுது’’ என்று முன்கதை சொன்னவர், தனது இயற்கை விவசாய அனுபவங்களைப் பற்றி சொல்லத் தொடங்கினார்.
வழக்கத்தை விட கூடுதல் மகசூல்!

‘‘அப்பாவோட மறைவுக்குப் பிறகு அண்ணன் தம்பிகளுக்கு பாகம் பிரிச்சது போக எனக்கு ஆறு ஏக்கர் நிலம் கிடைச்சுது. அதுல, ரெண்டு ஏக்கர் நிலத்துல லக்னோ-49 ரக கொய்யாவை நட்டு இருக்கேன். அதுக்கு ரெண்டு வயசாகுது. மீதமுள்ள நாலு ஏக்கர் மானாவாரி நிலம். இதுல மொச்சை, உளுந்து, தட்டாம்பயறு (தட்டைப்பயறு)னு சீசனுக்கு ஏத்தமாதிரி போடுவேன். ஆனா, எதிர்பார்த்த மகசூல் கிடைக்காது. அதனால இப்போ நாலு வருசமா நிலக்கடலையை சாகுபடி செய்றேன். 

இது, மணல் கலந்த செம்மண் நிலம். ரெண்டு வருசத்துக்கு முன்னால ஒரு ஆங்கில செய்தித்தாள்ல, மும்பை பாபா அணு ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள ‘டி.ஜி-37-ஏ’ ரக நிலக்கடலை வறட்சியைத் தாங்கி வளர்றதோட, அதிகமான மகசூலையும் தரும். மானாவாரி நிலத்துக்கு மிகவும் ஏற்ற ரகம். திண்டுக்கல் காந்திகிராம பல்கலைக்கழகத்தில் சோதனைக்காக நடவு செய்யப்பட்டுள்ளதுனு ஒரு செய்தியைப் படிச்சேன். உடனே காந்திகிராம பல்கலைக்கழகத்துக்குப் போயி பத்து கிலோ விதைக்கடலை வாங்கிட்டு வந்து, பத்து சென்ட் நிலத்துல மானாவாரியாக விதைச்சேன். 110 கிலோ வரை மகசூல் கிடைச்சுது. அந்தக் கடலையை விதைக்காக சேமிச்சுவச்சு ஆடிப்பட்டத்துல விதைச்சேன். வழக்கமான ஒட்டு ரகத்தை விட கூடுதல் மகசூல் கிடைச்சது. மூணு ஏக்கர் இடத்துல ஒட்டு ரக கடலையும், 50 சென்ட் நிலத்துல அணு ஆராய்ச்சி மையத்தின் கடலையும் போட்டு அறுவடை செய்திருக்கேன்’’ என்று சிரித்துக்கொண்டே சொன்ன சுகேந்திரன், வருமானம் பற்றி சொல்லத் தொடங்கினார்.
ஒரு ஏக்கர் மகசூல் அரை ஏக்கரில் கிடைக்கும்!

‘‘ஒரு ஏக்கர் பரப்புல ஒட்டு ரக நிலக்கடலை சாகுபடி செஞ்சதுல 1,150 கிலோ கிடைச்சுது, ஆனா, அணு ஆராய்ச்சி மைய கடலை 50 சென்ட் பரப்புலயே 1,100 கிலோ மகசூல் கிடைச்சுது. ரெண்டு ரக கடலைக்குமே ஒரே விலைதான். கிலோ 30 ரூபாய்னு வியாபாரிகிட்டயே விற்பனை செய்திட்டேன். பருப்பா உடைச்சு வித்தா கூடுதலா லாபம் கிடைச்சிருக்கும். கிடைச்சது போதும்னு கடலையாவே வித்துட்டேன். கடலைச்செடிகளை நிலத்தில் அப்படியே காய விட்டு அடுத்த முறை விதைக்கும் போது அடியுரமாக மடக்கி உழுறதுக்காக போட்டிருக்கேன்.
ஒரு ஏக்கர், ஒட்டு ரக கடலை மூலமா 34,500 ரூபாய் வருமானம் கிடைச்சுது. இதுல செலவு போக, 14,900 ரூபாய் லாபமா கிடைச்சுது. அணு ஆராய்ச்சி மைய ரகத்துல, 50 சென்ட்ல 33,000 ரூபாய் வருமானமா கிடைச்சுது. இதுல செலவு போக 24,450 ரூபாய் லாபமா கிடைச்சுது. தண்ணீர் செலவே இல்லாம மானாவாரியா வெறும் 50 சென்ட் இடத்துல இது, நல்ல லாபம்தான்’’என்றவர் சந்தோஷத்தில் கை நிறைய கடலைகளை அள்ளிக் காட்டினார்.     


தொடர்புக்கு,
சுகேந்திரன்,
செல்போன்: 99940-65759.
இப்படித்தான் செய்யணும் சாகுபடி!

50 சென்ட் நிலத்தில் அணு ஆராய்ச்சி மைய ரகமான ‘டி.ஜி.37-ஏ‘ ரக நிலக்கடலையை மானாவாரியில் சாகுபடி செய்யும்விதம் குறித்து சுகேந்திரன் பகிர்ந்துகொண்ட விஷயங்கள் பாடமாக இங்கே...

ஆடிப்பட்டம் ஏற்றது..! 

சித்திரை மாதம் கோடை உழவு செய்ய வேண்டும். அக்னி நட்சத்திர வெயிலில் உழவு செய்தால், மண்ணில் உள்ள பூச்சிகள், புழுக்கள், கூடுகள் வெயிலில் பட்டு சுருண்டு சாகும். உழவு செய்த பிறகு, ஆறு நாள் இடைவெளி விட்டு மீண்டும் உழவு செய்ய வேண்டும். இதேபோல, 6 நாள் இடைவெளியில் மொத்தம் நான்கு முறை உழவு செய்ய வேண்டும். பிறகு, ஆனி மாதம் ஒரு ஏக்கர் நிலத்துக்கு நான்கு டிராக்டர் மட்கிய குப்பையை சிதறி விட்டு ஓர் உழவு ஓட்டவேண்டும். அப்போதுதான் மண் பொலபொலப்பாக இருக்கும். அப்படி இருந்தால்தான் முளைப்புத் திறன் அதிகரிக்கும். ஆடி மாத தொடக்கத்தில் ஒரு மழை பெய்ததும் புல், களைகள் முளைத்து நிற்கும். களையை அழிப்பதற்காக, ஆடி மாதக் கடைசியில் ஓர் உழவு உழுதுவிட்டு, மீண்டும் ஒரு மழை பெய்ததும் ஒரு சால் ஓட்டி சாலில் விதைக் கடலையைப் போட வேண்டும். 50 சென்ட் நிலத்துக்கு 25 கிலோ (அணு ஆராய்ச்சி மைய ரகம்) விதைக் கடலை தேவைப்படும். ஆடி மாதக் கடைசியில் வெயில் தாக்கம் குறைவாக இருக்கும் என்பதால், முளைப்புத்திறன் நன்றாக இருக்கும். 

இரண்டு முறை களையெடுப்பு..! 

விதைத்த 8 முதல் 10 ம் நாளில் முளைப்பு தெரியும். 25 மற்றும் 35 ம் நாட்களில் களையெடுக்க வேண்டும். முதல் களை எடுக்கும் போது லேசாக மணலைச் சுரண்டி களை எடுக்க வேண்டும். இரண்டாவது களை எடுக்கும் போது நிலத்தை சற்று ஆழமாகக் கொத்தி மண்ணை பொலபொலப்பாக்கி வைக்க வேண்டும். 35 முதல் 40 நாளில் பூ பூத்து விடும். 40-ம் நாள், ஏற்கெனவே களை எடுக்கும் போது பொலபொலப்பாக்கி வைத்திருக்கும் மண்ணை செடியோடு அணைத்து விட வேண்டும். மண் அணைத்த பகுதியில்தான் கடலைச்செடி வேர்பிடித்து மண்ணில் இறங்கி வளரும்.
இரண்டு முறை இ.எம்..! 
மண் அணைத்தவுடன் 10 லிட்டர் தண்ணீருக்கு 30 மில்லி இ.எம் கலந்து கைத்தெளிப்பானால் தெளிக்க வேண்டும். அதேபோல, 55-ம் நாளும் இ.எம் தெளிக்க வேண்டும். இயற்கை முறை விவசாயத்தில் நோய்த்தாக்குதல் ஏற்பட வாய்ப்பு குறைவு. இதைத் தவிர வேறெந்த பராமரிப்பும் செய்யத் தேவையில்லை. 100 முதல் 105 நாட்களுக்கு மேல்மட்ட இலைகளில் கரும்புள்ளி மற்றும் மஞ்சள் நிறம் தென்படும். அந்த நேரத்தில் சில செடிகளைப் பறித்து கடலைக் காய்களை உரித்தால், ஓட்டின் உட்புறம் பழுப்பு கலந்த கறுப்பு நிறத்தில் இருந்தால், அறுவடைக்கு தயார் ஆகிவிட்டது எனத் தெரிந்துகொள்ளலாம். 110 முதல் 120 நாட்களுக்குள் அறுவடை செய்யலாம்.’’

திரட்சியான காய்கள்!

‘டி.ஜி.-37-ஏ‘ ரக கடலைச்செடியின் வேர் மற்றும் தண்டு மிக தடிமனாகவும், நீளமாகவும் உள்ளது. தடிமனான தண்டுகளில் நீரைத் தேக்கி வைத்து வறட்சியைத் தாங்கி வளர்கிறது. இதன் அடிப்பரப்பில் கடலைகளும் திரட்சியாக கொத்தாக முளைத்துள்ளன. குறைவான மழைநீரில் நல்ல மகசூலை இந்த ரகம் தந்துள்ளதோடு அதிக நோய் எதிர்ப்புச் சக்தியையும் கொண்டதாக இருக்கிறது என்பது சுகேந்திரனின் அனுபவம்.
‘‘விதை நிலக்கடலை விற்பனைக்கு’’

பாபா அணு ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள டி.ஜி.,37  நிலக்கடலை ரகத்தை  தமிழ்நாட்டில் அறிமுகம் செய்த திண்டுக்கல் காந்திகிராம வேளாண் அறிவியல் மையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் கூறியதாவது, 

‘‘நீர் பற்றாக்குறையால் பணப்பயிராக இருந்த நிலக்கடலை நஷ்டபயிராக மாறியுள்ளது. புதிய ரகத்துக்கு நீர் தேவை குறைவு. மற்ற ரகங்களை போல், புதிய ரகத்தையும் 105 நாட்களில் அறுவடை செய்யலாம். நிலக்கடலை திரட்சியாக இருக்கும். எண்ணெய் தன்மை அதிகமாக இருக்கும். தமிழ்நாட்டில் ஆடி மற்றும் கார்த்திகைப் பட்டங்களில் சாகுபடி செய்யலாம். இதன் விதைகளை விவசாயிகளுக்கு இலவசமாக கொடுத்தோம். இப்போது விலைக்கு விற்பனை செய்கிறோம்’’ என்றார்.

தொடர்புக்கு, செல்போன்:  94425-42915.
“பாதிப்பு இல்லை!”

‘கதிரியக்க முறையில் உருவாக்கப்படும் விதைகளில் ஏதேனும் ஆபத்து உண்டா?’ என்று திண்டிவனம் எண்ணெய் வித்துக்கள் ஆராய்ச்சி மையத்தின் பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர். வைத்தியநாதனிடம் கேட்டோம், அதற்கு “கதிரியக்க முறையில் உருவாக்கப்பட்ட ரகத்தால் பாதிப்பு ஏதும் இல்லை. விவசாயிகளுக்கு கூடுதல் மகசூல் கிடைக்க வேண்டுமென்பதற்காக  பாபா அணு ஆராய்ச்சி மையம் கதிரியக்க முறையில் சில வீரிய ஒட்டு ரகங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. 

எண்ணெய் வித்துக்களான நிலக்கடலையிலும் வறட்சியைத் தாங்கி வளரும் தன்மையுடையது என தமிழ்நாட்டில் பரவலாக விவசாயிகள் இதைப் பயிரிடுகின்றனர். தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட கோ-6 மானாவாரி நிலத்துக்கும், கோ-7 மானாவாரி இறவையிலும் வரும். அதேபோல திண்டிவனம் TMV-6 மற்றும் 7 ஆகியவை மானாவாரிக்கும் இறவைக்கும் வரும். விருத்தாச்சலம் VRI-7 மானாவாரிக்கும், விருத்தாச்சலம்-6  மற்றும்  விருத்தாச்சலம்-8 மானாவாரி, இறவைக்கும் வரும். விருத்தாச்சலம்-8 வீரிய ஒட்டு ரக நிலக்கடலை. இந்த ரகம்தான் புதிதாக தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விருத்தாச்சலம்-8 ரகமும் வறட்சியைத் தாங்கி வளர்ந்து நல்ல மகசூலைத் தரக்கூடியது. 

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தால் அறிமுகப்படுத்தபட்ட ரகங்கள் அனைத்தும் ஆடி, கார்த்திகை ஆகிய இரண்டு பட்டத்துக்கும் வரும். வேளாண் பல்கலைக்கழகத்தால் அறிமுகத் செய்த தேர்வு செய்யப்பட்ட ரகங்கள், கலப்பு செய்து உருவாக்கப்பட்ட ரகங்கள். இவற்றின் விளைச்சலோடு கதிரியக்க முறையில் உருவாக்கப்பட்ட ரகங்களின் விளைச்சலையும் ஒப்பிடக்கூடாது’ என்றார். 

தொடர்புக்கு, வைத்தியநாதன், செல்போன்: 94424-72103.
மருத்துவ பயன்கள்!

நிலக்கடலை, வேர்க்கடலை, கடலை, மணிலாகொட்டை (மல்லாட்டை ), மல்லாங்கொட்டை, கடலைக்காய் என இதற்கு பல பெயர்கள் உண்டு. பெண்கள் நிலக்கடலையைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், எலும்புத்துளை நோய் வராது. தினமும் 30 கிராம் அளவுக்கு நிலக்கடலை சாப்பிட்டு வந்தால், பித்தப்பைக் கல் உருவாவதைத் தடுக்கலாம். 

நிலக்கடலையில் ரெஸ்வரெட்ரால் என்ற சத்து இருப்பதால், இதய வால்வுகளைப் பாதுகாத்து இதய நோய்கள் வராமல் பாதுகாக்கிறது. பெண்களின் இயல்பான ‘ஹார்மோன்‘ வளர்ச்சியை நிலக்கடலை சீராக்குகிறது. இதனால் பெண்களுக்கு விரைவில் குழந்தைப்பேறு ஏற்படுவதுடன், மார்பகக்கட்டி உண்டாவதையும் தடுக்கிறது. பாதாம், பிஸ்தா, முந்திரியை விடவும் நிலக்கடலையில்தான் சத்துக்கள் அதிகம் உள்ளது. நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் ஆற்றலும் இதற்கு உண்டு.    ஆனால், நிலக்கடலையை ஒரே நேரத்தில் அதிகமாக சாப்பிடக்கூடாது.


கடலை சாகுபடியில் கவனிக்க வேண்டியவை!

உலக அளவில் இந்தியா எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியில் மூன்றாவது இடத்திலும், நிலக்கடலை உற்பத்தியில் முதல் இடத்திலும் உள்ளது.    நிலக்கடலைக்கு ஊடுபயிராக தட்டைப்பயறு, கம்பு, உளுந்து, துவரை, சூரியகாந்தி ஏற்றது. இதனால் நோய்த்தாக்குதல் குறைவதுடன் உபரி வருமானமும் பெறலாம். அறுவடை நேரத்தில் தண்ணீர் தெளித்தால், கடலைச் செடியைப் பறிக்க சுலபமாக இருக்கும். மண்ணில் ஈரப்பதம் இருந்தால், தண்ணீர் தேவையில்லை. 

பறித்த செடிகளைக் குவியலாகப் போட்டு வைக்கக் கூடாது. ஈரமாக இருக்கும்போது செடி வளரத் தொடங்கும். அறுவடை செய்த கடலைக் காய்களை 4 முதல் 5 நாட்கள் வெயிலில் காய வைத்துத் தான் சேமித்து வைக்க வேண்டும். கடலை மீது ஈரப்பதம் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். 

இறவை சாகுபடியை விட மானாவாரி சாகுபடியில் அடியுரம் கூடுதலாகப் போட்டால்தான் வறட்சியைத் தாங்கி வளரும். செம்மண் நிலத்தைப் பொறுத்தவரையில் மண் இறுக்கம்தான் கடலையின் மகசூலைப் பாதிக்கிறது. எனவே, மண் இறுக்கம் போக்க, ஆழமான உழவு மற்றும் குறுக்கு உழவு அவசியம். மானாவாரியைப் பொறுத்தவரை மழை தாமதமாக பெய்தால்கூட கவலையில்லை. முளைத்து, பூத்த பிறகு மழை கிடைத்தால் போதும். காய்ச்சலுக்குப் பிறகான தண்ணீர் பாய்ச்சலும் நல்ல மகசூலைத் தரும்.