Monetize Your Website or Blog

Showing posts with label விவசாயம். Show all posts
Showing posts with label விவசாயம். Show all posts

Friday, 26 August 2016

காவிரி பிரச்னை அப்போதும்... இப்போதும் தீர்வை நோக்கி நகராதது ஏன்?

த்திய அரசின் பாராமுகம், கர்நாடகா அரசின் தந்திரம், தமிழக அரசின் செயலற்ற தன்மை ஆகியவற்றால் காவிரி நதிநீரில் தமிழகத்தின் உரிமை பறிபோய்க் கொண்டிருக்கிறது.
210 ஆண்டுகளைக் கடந்தும் கொதிநிலையில் இருக்கிறது காவிரி நதிநீர் பங்கீட்டுப் பிரச்னை. கர்நாடகா மாநிலத்தின் குடகு மாவட்டத்தில் தலைக்காவேரி எனும் இடத்தில் உற்பத்தியாகும் காவிரி ஆறு, அந்த மாநிலத்துக்குள்ளேயே 800 கி.மீ பயணித்து, தமிழ்நாட்டில் தர்மபுரி மாவட்டம் பிலிகுண்டுலு வழியே பயணத்தைத் தொடங்குகிறது. ஒகேனக்கல் அருவி வழியே மேட்டூர், பவானி, ஈரோடு, கொடுமுடி, கரூர், திருச்சி கல்லணை வழியாக தஞ்சை உள்ளிட்ட காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் பாய்ந்து, பூம்புகார் அருகே வங்கக்கடலில் கலக்கிறது.


இயற்கை தந்த கொடையான காவிரி நதிநீரைப் பங்கிட்டுக்கொள்வதில் தமிழகத்துக்கும், கர்நாடகத்துக்கும் இடையேயான தகராறு நீண்ட நெடிய காலமாக முடிவுக்கு வராமல் நீடித்துவருகிறது. தீர்வுக்கு வழி ஏற்படும் என்று நம்பப்பட்ட காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு, வெளிவந்து 10வது ஆண்டை நெருங்கி இருக்கும் நிலையில் கர்நாடகா அரசு, பிரச்னையைத் தீர்ப்பதில் இருந்து நாளுக்குநாள் விலகிச் செல்கிறது. காவிரி டெல்டா மாவட்டங்களின் வாழ்வாதாரத்தில் தொடர்புடைய காவிரி நதிநீர் பங்கீட்டுக்கான சிக்கலை, நடுவர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு முன்பு, தீர்ப்புக்குப் பின்பு என்றே அணுகலாம்.
காவிரி நடுவர் நீதிமன்றத்துக்கு முன்பு...

காவிரி நடுவர் மன்றம் அமைக்கும் முன்பிருந்தே மைசூர் அரசாக இருந்தபோதிலிருந்தே தமிழகத்துக்கான உரிமையைத் தருவதில் கர்நாடகா மாநிலத்தின் பிடிவாதங்களும், மறுப்புகளும் தொடர்ந்து வருகின்றன. 1807-ம் ஆண்டு அப்போது இருந்த மைசூர் அரசுக்கும், சென்னை மாகாணத்துக்கும் இடையேதான் காவிரி நீரைப் பங்கீடு செய்துகொள்வதில் பிரச்னை ஏற்பட்டது. பலகட்டப் பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் 87 ஆண்டுகள் கழித்து அப்போதைய ஆங்கில அரசின் கீழ் 1892-ல் முதன்முதலாக இருதரப்புக்கும் இடையே ஒப்பந்தம் போடப்பட்டது.
அந்த ஒப்பந்தத்தின்படி, ‘காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டினால், அந்தத் திட்டத்தைச் சென்னை மாகாண அரசுக்கு அனுப்பி ஒப்புதல் பெறவேண்டும்’ என்று மைசூர் அரசுக்கு உத்தரவிடப்பட்டது. 1910-ல் மைசூர் அரசு, கன்னம்பாடி என்ற இடத்தில் அணை கட்ட அனுமதி கேட்டது. (இந்த இடத்தில்தான் பின்னர் கிருஷ்ணராஜ சாகர் அணை அமைக்கப்பட்டது.) இதற்கு, சென்னை மாகாண அரசு எதிர்ப்புத் தெரிவித்தது. ஆங்கிலேய அரசு தலையிட்டு, ‘கன்னம்பாடியில் 11 டி.எம்.சி நீரைத் தேக்கும் வகையில் அணை கட்ட வேண்டும்’ என்று மைசூர் அரசுக்கு உத்தரவிடப்பட்டது.
ஆனால், இந்த உத்தரவைப் புறந்தள்ளிய மைசூர் அரசு திட்டமிட்டபடி 41.5 டி.எம்.சி தண்ணீரைத் தேக்கும் அளவுக்கு அணையைக் கட்ட ஆரம்பித்தது. இரு அரசுகளுக்குமிடையே முரண்பாடு உருவானதால் கிரிஃபின் என்பவரை நடுவராக ஆங்கிலேய அரசு நியமித்தது. ஆனால், அவராலும் இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண முடியவில்லை. மீண்டும் இரண்டு அரசுகளுக்கும் பிரச்னை வெடித்தது. 1924-ல் ஓர் ஒப்பந்தம் கையெழுத்தானது. 50 ஆண்டுகளுக்கு இது நடைமுறையில் இருக்கும் என்று சொல்லப்பட்டது. 1929-ல் ஒரு துணை ஒப்பந்தமும் போடப்பட்டது.

அதன்படி, ‘மைசூர் அரசு தனது எல்லைக்குள் திட்டமிட்டபடி கிருஷ்ணராஜ சாகர் அணையை அமைப்பது என்றும், சென்னை மாகாண அரசு மேட்டூர் அணை கட்டிக்கொள்ளலாம்’ என்றும் கூறப்பட்டது. சுதந்திரத்துக்குப் பின்னர் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டதைத் தொடர்ந்து காவிரியின் சிக்கல்கள் மேலும் தீவிரத்துடன் தொடர்ந்தன.
1924-ம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தம் முடிவதற்கு முன்பே, காவிரி உண்மை கண்டறியும் குழு ஒன்றை மத்திய அரசு அமைத்தது. இந்தக் குழு 1972-ம் ஆண்டு அறிக்கை சமர்ப்பித்தது. இந்த அறிக்கையின் பரிந்துரைகள்படி 1976-ம் ஆண்டு ஆகஸ்ட்டில் ஓர் ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதன்படி தமிழகம், புதுச்சேரி இரு மாநிலங்களும் சேர்த்து 393 டி.எம்.சி முதல் 414 டி.எம்.சி நீரை பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று கூறப்பட்டது. கர்நாடகா 239 முதல் 261 டி.எம்.சி தண்ணீரையும், கேரளா 39 - 41 டி.எம்.சி தண்ணீரையும் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று கூறப்பட்டது. ஆனால், வழக்கம்போல இதை அமல்படுத்த கர்நாடகா அரசு முன்வரவில்லை.

நீதிபதி சிட்டதோஷ் முகர்ஜி தலைமையில், 1990-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வி.பி.சிங் அரசால் காவிரி நடுவர் நீதிமன்றம் அமைக்கப்பட்டது. நடுவர் மன்றத்தின் நீதிபதி தலைமையிலான குழு மே மாதம் காவிரிப் பாசனப் பகுதிகளை ஆய்வு செய்தது. ஆய்வின் அடிப்படையில் தனது இடைக்காலத் தீர்ப்பை வழங்கியது.
காவிரி நடுவர் நீதிமன்றம் சொன்னது என்ன?

இடைக்காலத் தீர்ப்பில், தமிழகத்துக்கு ஜூன் முதல் பிப்ரவரி வரை 205 டி.எம்.சி தண்ணீர் தர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. பின்னர் 2007-ம் ஆண்டு பிப்ரவரி 5-ம் தேதி வெளியிடப்பட்ட இறுதித்தீர்ப்பின்படி 192 டி.எம்.சி தண்ணீர் தர வேண்டும் என்று கூறினார்கள். தமிழகத்தின் பங்கில் இருந்து பாண்டிச்சேரிக்கு 6 டி.எம்.சி தண்ணீரைத் தர வேண்டும். அதேபோல கபினி அணையில் இருந்து கேரளாவுக்கு 30 டி.எம்.சி தண்ணீரை கர்நாடகா அரசு தர வேண்டும்.


மேலும் காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித்தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம், அதற்கு உதவியாக காவிரி ஒழுங்குமுறை குழு அமைக்க வேண்டும். இந்த இரண்டும் அமைக்கப்படாவிட்டால், தங்கள் தீர்ப்பைச் செயல்படுத்துவது கடினம் என்று காவிரி நடுவர் மன்றத்தின் நீதிபதிகள் அப்போதே கூறினர். அதுதான் இப்போது நடக்கிறது.
நடுவர் மன்றத் தீர்ப்புக்குப் பின்பு...

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு வெளியான உடன் அதற்கு கர்நாடகா அரசு கடும் அதிருப்தி தெரிவித்தது. தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இங்கிருந்துதான் கர்நாடகா அரசின் இழுத்தடிக்கும் அரசியல் தொடங்கியது என்கிறார்கள். காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பில் குறைபாடுகள் இருந்தால், நடுவர் மன்றத்தில்தான் அப்பீல் செய்து தீர்வுகாண வேண்டும். நடுவர் மன்றத்திலேயே கர்நாடகா அரசு அப்பீல் செய்திருந்தால் 6 மாதங்களுக்குள் பிரச்னை முடிவடைந்திருக்கும். பிரச்னையைத் உடனடியாகத் தீர்க்க விரும்பவில்லை என்பதால்தான் கர்நாடகா அரசு நடுவர் மன்றத் தீர்பை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்றது. காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு வெளிவந்து 9 ஆண்டுகளுக்குப் பின்னரும் அது அமல்படுத்தப்படாததற்கு கர்நாடகா அரசின் தந்திரம்தான் காரணம்.
காவிரிப் பிரச்னை இப்போது...

தமிழகத்துக்கான உரிமையை கர்நாடகா அரசு தராததால், காவிரி டெல்டா பாசன சாகுபடிக்காகக் கடந்த சில ஆண்டுகளாக மேட்டூர் அணையில் இருந்து சரியான நேரத்தில் தண்ணீர் திறந்துவிடப்படுவதில்லை. இதனால் கடந்த 5 ஆண்டுகளாகக் காவிரி டெல்டாவில் குறுவைச் சாகுபடி நடக்கவில்லை. இப்போது 6-வது ஆண்டாகவும் குறுவைச் சாகுபடி பாதிக்கும் அபாயம் உள்ளது. கர்நாடகா அரசைக் கண்டித்து காவிரி டெல்டா மாவட்டங்களில் கடையடைப்பு உள்ளிட்ட போராட்டங்கள் இந்த ஆண்டும் தீவிரம் அடைந்துள்ளன. சுதந்திர தினத்தன்று பேசிய கர்நாடகா முதல்வர் சித்தராமையா, “மேகதாட்டூ அணை கட்ட நிதி ஒதுக்கப்படும்” என்று கூறி இருக்கிறார். மேலும் செய்தியாளர்களிடம் பேசுகையில், “எங்கள் மாநிலத்தில் மழை இல்லை. தண்ணீர் இல்லை. குடிப்பதற்குக்கூடத் தண்ணீர் இல்லை. நாங்கள் எப்படித் தமிழகத்துக்குத் தண்ணீர்விட முடியும்” என்று கைவிரித்திருக்கிறார்.

நடுவர் மன்றத் தீர்ப்பின்படி தண்ணீர் தர கர்நாடகா அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று வழக்கம்போல உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு ஒரு வழக்கைத் தாக்கல் செய்திருக்கிறது. மறுப்புகளும், பிடிவாதங்களும், வழக்குகளும் எங்களின் வாழ்வாதாரத்துக்கு வழி சொல்லுமா, என்கின்றனர் விவசாயிகள்.
நடுவர் மன்றத்துக்குப் போகாதது ஏன்?
காவிரிப் பிரச்னையில் என்ன நடக்கிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ பாலகிருஷ்ணனிடம் பேசினோம். ‘‘காவிரிப் பிரச்னையில் முக்கியமான திருப்பமாக 2007-ம் ஆண்டு காவிரி நடுவர் நீதிமன்றம் தீர்ப்புச் சொன்னது. தீர்ப்பு வந்த உடன் அப்போது இருந்த தி.மு.க அரசு அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தியது. கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள், ‘தீர்ப்பில் குறைபாடு இருக்கிறது. நடுவர் மன்றத்திலேயே மேல்முறையீடு செய்யலாம்’ என்று கூறினர். ஆனால், கூட்டத்தில் பங்கேற்ற அ.தி.மு.க பிரதிநிதி, ‘உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்ய வேண்டும்’ என்று சொல்லிவிட்டார். மேலும், கர்நாடகா தரப்பிலும் உச்ச நீதிமன்றத்துக்குச் சென்றார்கள். எனவே, தமிழகம் மட்டும் காவிரி நடுவர் மன்றத்துக்குப் போனால் நன்றாக இருக்காது என்று கூறி தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்திலேயே முறையீடு செய்யப்பட்டது.

அதில், இன்னும் முடிவு ஏற்படவில்லை. முதலில் கர்நாடகா அரசு உச்ச நீதிமன்றம் போனது தவறானது. இதனால்தான் தமிழக அரசும் போனது. அப்போதே உச்ச நீதிமன்றம், இரண்டு அரசுகளிடமும், நீங்கள் நடுவர் மன்றத்தை நாடுங்கள் என்று அறிவுறுத்தி இருக்கலாம். ஆனால் அவர்களும் அதைச் சொல்லவில்லை.
அரசிதழில் வெளியிட்டு என்ன பயன்?

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை அரசிதழில் வெளியிட நான்தான் காரணம் என்று ஜெயலலிதா கூறுகிறார். இதனால் என்ன பயன் விளைந்தது என்பதுதான் எங்கள் கேள்வியாக இருக்கிறது. காவிரிப் பிரச்னையில் கடந்த 40 வருடங்களில் 12 வழக்குகளைப் போட்டிருக்கிறார்கள். இதனால் தமிழக அரசுக்கு 1,000 கோடி ரூபாய் வரை செலவாகி இருக்கிறது. இந்தப் பணத்தில் காவிரியின் குறுக்கே அணை கட்டியிருக்கலாம். கர்நாடகா அரசு இப்போது புதிய அணை கட்டத் திட்டமிட்டுள்ளது. அதேபோல, அங்கு உள்ள காவிரிப் பாசனப் பகுதிகளையும், பாசன மேம்பாட்டையும் அதிகரித்துவிட்டது.
அரசியல் ஆதாயம் கருதும் மத்திய அரசு!

ஆனால், தமிழகத்தில் மேட்டூர் அணையைக்கூடத் தூர்வாரவில்லை. அதன் உயரத்தையாவது அதிகரித்திருக்கலாம். அதைக்கூடச் செய்யவில்லை. காவிரிப் பாசனப்பகுதி வாய்க்கால்களையும் தூர் வாரவில்லை. இவ்வளவு நாட்களுக்குப் பின்னரும் ஜெயலலிதா அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டவில்லை. ‘நான்தான் செய்கிறேன்’ என்று தன்னை முன்னிலைப்படுத்தவே அவர் முயற்சிக்கிறார். மக்களின் வாழ்வாதாரப் பிரச்னைகளை அரசியலுக்கு அப்பாற்பட்டு விவாதிக்க வேண்டும். இந்த விஷயத்தில் மத்திய அரசு, இரு மாநில அரசுகளையும் அழைத்துப் பேசித் தீர்வுகாண வேண்டும். ஆனால், எங்கு அரசியல் வாய்ப்பு அதிகம் இருக்கிறதோ அந்தப் பக்கத்துக்கு ஆதரவாகத்தான் மத்திய அரசு இருக்கிறது” என்றார்.
தமிழகம் என்ன வடிகாலா?
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பெ.சண்முகம், “எங்கள் மாநில அணைகளில் தண்ணீர் இல்லை என்று கர்நாடகா அரசு சொல்கிறது. ஆனால், அது உண்மை இல்லை. அந்த மாநிலத்தில் கபினி அணை உள்ளிட்ட 3 அணைகள் நிரம்பி வழிகின்றன. நமக்கான உரிமையை அவர்கள் தர வேண்டும். ஆனால், அணைகளில் நிரம்பி வழியும் தண்ணீரைத்தான் அவர்கள் திறந்துவிடுகிறார்கள். நமது மாநிலத்தை அவர்கள் வடிகாலாகத்தான் பார்க்கிறார்கள். நடுவர் மன்றத் தீர்ப்பை அவர்கள் கடுகளவுகூட மதிப்பதில்லை. நடுவர் மன்றத் தீர்ப்பை கர்நாடகா அரசும் ஏற்க வேண்டும். அப்போதுதான் பிரச்னைக்குத் தீர்வு ஏற்படும். மத்திய அரசு இந்த விஷயத்தில் தலையிட்டுத் தீர்வு ஏற்பட உதவி செய்ய வேண்டும். ஆனால், மத்திய அரசு வெறும் பார்வையாளராகத்தான் இருக்கிறது.
ராஜதந்திரம் இல்லை!

‘நடுவர் மன்றத் தீர்ப்பை, அரசிதழில் வெளியிடாமல் ஒன்றும் செய்யமுடியாது’ என்று முன்பு மத்திய அரசு கூறி வந்தது. 2013-ல் அரசிதழில் வெளியிட்டார்கள். இப்போது 3 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இன்னும் பிரச்னை தீர்ந்தபாடில்லை. காவிரி நதிநீர் மேலாண்மை வாரியம் அமைக்கக் கூடாது என்று கர்நாடகா வழக்குத் தொடுத்துள்ளது. இதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதிக்கவில்லை. காவிரி நதிநீர் மேலாண்மை வாரியத்தை அமைத்துவிட்டால், நீர் திறப்பு அவர்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும். பிரச்னை இருக்காது. எம்.ஜி.ஆர்., கருணாநிதி ஆகியோர் முதல்வராக இருந்தபோது கர்நாடகா அரசுடன் ராஜதந்திரத்துடன் பேச்சுவார்த்தை நடத்தித் தீர்வு காணப்பட்டது. ஆனால், ஜெயலலிதா அவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுவதில்லை. ஒரே ஒரு முறை மட்டும்தான் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி கர்நாடகா அரசுடன் பேசி இருக்கிறார்” என்றார்.
செயலற்ற தமிழக அரசு!
காவிரி உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன், “இந்தப் பிரச்னைக்கு அரசியல் ரீதியாகத் தீர்வு காணவேண்டும்” என்கிறார். மேலும் அவர், “காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் பலர் நிலத்தைத் தரிசாகப் போட்டுவிட்டு வேறு தொழில் செய்கிறார்கள். விவசாயத் தொழிலாளர்கள் பலர் திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்குப் பிழைப்புத்தேடி இடம் பெயர்ந்துவிட்டனர். இந்தச் சூழலில் நமது தமிழக அரசு காவிரிப் பிரச்னையை ஒரு கிளரிக்கல் வேலையைப் போலத்தான் அணுகுகிறது. காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அமல்படுத்த வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

மார்ச் 28-ல் வழக்கு விசாரணை நடந்தபோது, அடுத்த விசாரணை ஜூலை 18-க்குத் தள்ளிவைக்கப்படுகிறது. தமிழக அரசு சார்பில் வாதாடிய வக்கீல், ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட வேண்டும் என்றோ, அதற்குள் கர்நாடகா அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றோ நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கவில்லை. ஜூலை 18-ம் தேதி வழக்கு வந்தபோது, மீண்டும் அக்டோபர் 10-ம் தேதிக்குத் தள்ளிவைக்கப்படுகிறது. அப்போதும் தமிழக அரசு வக்கீல் ஒன்றும் பேசவில்லை. தமிழக அரசின் செயலற்ற தன்மையைத்தான் இது காட்டுகிறது. மூத்த அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் பொறியாளர் குழுவை கர்நாடகா மாநிலத்துக்கு அனுப்பி, அங்குள்ள அணைகளின் நிலவரத்தை ஆய்வு செய்து நமக்கான உரிமையை கேட்டுப் பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.


ஆக, காவரி நதிநீர் விவகாரம் அப்போதும், இப்போதும் தீர்வை நோக்கி நகராததற்குக் கர்நாடகா அரசின் பிடிவாதம் மட்டும்தான் காரணம். அந்தப் பிடிவாதத்தை அரசியல் ஆதாயம் கருதி மத்திய அரசு வேடிக்கை பார்க்கிறது. தமிழக அரசோ, இதனை ஒட்டுமொத்த மாநில விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்னையாகக் கருதாமல் தனிப்பட்ட ஆதாயத்தைத் தேடுவதற்கான வழிகளை மட்டுமே தேடுகிறது.
- கே.பாலசுப்பிரமணி
காவிரி டெல்டா பகுதிகள்!

தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, அரியலூர், கடலூர், புதுக்கோட்டை ஆகிய 7 மாவட்டங்களில் உள்ள 14.47 லட்சம் ஏக்கர் நிலங்கள் காவிரி டெல்டா மண்டலம் என்ற வரையறைக்குள் வருகின்றன. காவிரி டெல்டாவில், குறுவை பருவத்தில் (மே - ஜூலை) 1.68 லட்சம் ஹெக்டேரிலும், தாளடிப் பருவத்தில் (பிப்ரவரி - ஏப்ரல்) 1.44 லட்சம் ஹெக்டேரிலும், சம்பா பருவத்தில் (ஆகஸ்ட் - ஜனவரி) 2.99 லட்சம் ஹெக்டேரிலும் நெல் பயிரிடப்படுகிறது. நெல் தவிர, பச்சைப்பயறு, உளுந்து, எள், பருத்தி ஆகிய பயிர்களும் சாகுபடி செய்யப்படுகின்றன. இந்தப் புள்ளிவிவரத்தைக் கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
காவிரியின் கிளை நதிகளில் கர்நாடகா அமைத்த அணைகள்!

காவிரி ஆற்றின் கிளை நதிகளில் ஒன்றான ஹேமாவதி ஆற்றில், ஹேமாவதி அணையை கட்டி இருக்கின்றனர். அதேபோல Harangi என்ற கிளை ஆற்றின் குறுக்கே, Harangi அணையை அமைத்துள்ளனர். கேரளாவில் உற்பத்தி ஆகி கர்நாடகா வழியே பாயும் கபினி ஆறு, காவிரி ஆற்றில் சேருகிறது. இந்த இடத்தில்தான் கபினி அணையை கர்நாடகா அரசு அமைத்துள்ளது. இப்போது மேகதாட்டூ என்ற இடத்தில், மேலும் ஓர் அணைகட்ட கர்நாடகா அரசு திட்டமிட்டுள்ளது.
மேட்டூர் அணை எப்போது திறக்கப்படும்?

குறுவை, சம்பா, தாளடி ஆகிய முப்போக நெல் சாகுபடிக்கு மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்படும். அணையின் தண்ணீர் மட்டம் 90 அடியாகவும், நீர் இருப்பு 52.65 டி.எம்.சி-யாகவும் இருக்கும்போது பருவமழை பெய்யும் என்ற எதிர்பார்ப்புடன் ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்படும். ஜூன் 12-ல் திறக்கப்படும் தண்ணீர், ஜனவரி 28-ம் தேதி நிறுத்தப்படும். 236 நாட்களில் டெல்டா பாசனத்துக்காக 330 டி.எம்.சி தண்ணீர் திறக்கப்படுகிறது.




Thursday, 18 August 2016

ஒரு மாடு... ஓர் ஆண்டு... 75 ஆயிரம்... நம்பிக்கை தரும் நாட்டுமாடுகள்...!

பால்... அதிக பால்... என ஆசைப்பட்டு, வெளிநாட்டு இனப் பசுக்களையும்... கலப்பினப் பசுக்களையும் தேடி ஒட ஆரம்பித்ததில், நம் நாட்டு இனப் பசுக்களை பலரும் மறந்தே விட்டார்கள். தற்போது, இயற்கை விவசாயம் மீது உள்ள ஆர்வத்தால், பெரும்பாலானோர் நாட்டுப் பசுக்களைத் தேடி வாங்கி வளர்க்க ஆரம்பித்துள்ளனர். அவர்களில் ஒருவராக... கரூர் நகரைச் சேர்ந்த தொழிலதிபர் கணேசன்... தமிழகத்தைச் சேர்ந்தப் பாரம்பரிய பசுக்களோடு, வடமாநில இனங்களான சாஹிவால், தார்பார்க்கர், கிர், காங்கிரேஜ்... போன்ற பசுக்களையும், முர்ரா ரக எருமைகளையும் வளர்த்து வருகிறார்.


கரூர்-தாராபுரம் சாலையில் 15-வது கிலோ மீட்டரில் இருக்கிறது, செல்லாண்டிப்பாளையம். பிரதான சாலையில் இருந்து இடதுபுறம் பிரியும் மண்சாலையில், இரண்டு கிலோ மீட்டர் தூரம் பயணித்தால்... கணேசனின் பண்ணை. மண்சாலையில் இரண்டு பக்கமும் உயிர்வேலியாக நீண்டு கிடக்கின்றன, கிளுவைச் செடிகள். அதில், பிரண்டையும், கோவைக் கொடியும் படர்ந்து கிடக்கின்றன. பண்ணையில் இருந்த கணேசனிடம் அறிமுகப்படுத்திக் கொண்டதும் உற்சாகமாகப் பேசத் தொடங்கினார்.
''இது எங்க பூர்வீக இடம். மொத்தம் 32 ஏக்கர். இதுல 17 ஏக்கர் மானாவாரி மேய்ச்சல் நிலம். 10 ஏக்கர்ல மாடுகளுக்குத் தேவையான பசுந்தீவனம் இருக்கு. 5 ஏக்கர்ல தென்னை இருக்கு. முழுக்க முழுக்க கிணத்துப் பாசனம்தான். பக்கத்துல அமராவதி ஆறு இருக்கு. அரசு அனுமதியோட ஆத்துத் தண்ணியையும் கொண்டு வந்து பாசனம் செய்றதால... தண்ணி பிரச்னை கிடையாது.
தொழிலிருந்து தோட்டத்துக்கு!
சின்ன வயசுலேயே கரூர் போயிட்டேன். இருந்தாலும், அடிக்கடி ஊருக்கு வந்து பூர்வீக மண்ணைப் பார்க்கும்போது... பாட்டன், பூட்டன் செஞ்ச விவசாயத்தை நாமளும் செய்யணும்கிற ஆசை... மனசுக்குள்ள வந்து உக்கார்ந்துக்கும். இன்னிக்கு பரபரப்பான தொழிலதிபரா இருந்தாலும், விவசாய ஆர்வம் என்னை விடல. ஒரு கட்டத்துல கம்பெனிய பசங்ககிட்ட ஒப்படைச்சுட்டு, முழுநேர விவசாயியா மாறிட்டேன். பரம்பரையா எங்க தோட்டத்துல காங்கேயம் மாடுகளதான் வளர்ப்போம். நான் விவசாயத்துல இறங்கினதும், வேலாயுதம்பாளையத்துல நடந்த நம்மாழ்வார் கூட்டத்துல எதேச்சையா கலந்துகிட்டேன்.
அந்தப் பயிற்சியில, 'இயற்கை விவசாயம்தான் மண்ணுக்கும் மனுஷனுக்கும் ஏத்து’னு தெரிஞ்சுட்டேன். பிறகு, திண்டுக்கல்ல நடந்த சுபாஷ் பாலேக்கரோட 'ஜீரோ பட்ஜெட்’ பயிற்சியிலயும் கலந்துக்கிட்டேன். அங்கதான், நாட்டுமாடுகளோட மகிமையையும், இயற்கை இடுபொருட்கள் தயாரிக்கற முறைகளையும் தெரிஞ்சுக்கிட்டேன்.
தீவனம் இல்லாமல் மாடு வாங்கக் கூடாது!
ஆரம்பத்துல, பயிர்களுக்குத் தேவையான இடுபொருள் தயாரிக்கறதுக்காகத்தான் நாட்டு மாடுகளை வளர்க்கலாம்னு முடிவெடுத்தேன். அதுக்காக, 10 ஏக்கர்ல பசுந்தீவன சாகுபடியை ஆரம்பிச்சேன். ஒரே ரகமா இல்லாம.... கோ-4, வேலிமசால், கோ.எஃப்.எஸ்-29, கிளரிசீடியா, சவண்டல் (சுபாபுல்), மல்பெரி, முயல் மசால்னு பல ரகமா இருக்குற மாதிரி பாத்துக்கிட்டேன். அதுக்கப்பறம்தான், மாடுகளை வாங்க ஆரம்பிச்சேன்.
'வெறுமனே இடுபொருளுக்காக மட்டும் இல்லாம, பால் விற்பனையும் செஞ்சா லாபகரமா இருக்குமே’னு தோணுச்சு. காங்கேயம்  பசுக்களை மட்டும் வெச்சு பால் உற்பத்தியை அதிகப்படுத்த முடியாது. அதே நேரத்துல, கலப்பினப் பசுக்களை வாங்கி பால் வியாபாரியா மாறவும் எனக்கு மனசில்லை. 'என்ன பண்ணலாம்?’னு ரொம்பத் தீவிரமா யோசிச்சுக்கிட்டிருந்தேன். அந்த சமயத்துலதான், 'வாழப்பாடி’ மணிசேகர் எனக்கு அறிமுகம் ஆனார். அவர்தான், 'கலப்பினப் பசுக்களைப் போலவே அதிகம் பால் கறக்குற நாட்டுப் பசுக்களும் இருக்கு’னு சொன்னாரு. உடனடியா அலைஞ்சு திரிஞ்சு அந்த இன மாடுகளை வாங்குனேன்'' என்ற கணேசன், மாட்டுத் தொழுவத்துக்கு நம்மை அழைத்துச் சென்றார்.
எருமை எதையும் கழிக்காது!
நல்ல காற்றோட்டத்துடன் சிமெண்ட் தரைதளத்துடன் இருந்த தொழுவத்தில் ஒரு வரிசையில் பசுமாடுகளும் எதிர் வரிசையில் எருமை மாடுகளும் கட்டப்பட்டிருந்தன. தொழுவத்தில் நடந்து கொண்டே பேச ஆரம்பித்தவர், 'தொழுவத்தை 60 அடி நீளம், 30 அடி அகலம், 20 அடி உயரத்துல அமைச்சுருக்கேன்.


ஆரம்பத்துல பசு மாடுகளை மட்டும்தான் வாங்கலாம்னு இருந்தேன். சிலர், 'எருமைப்பால்ல கொழுப்புச் சத்து அதிகம் இருக்கும். அதனால பாலுக்கு நல்ல விலை கிடைக்கும்’னு சொன்னாங்க. அதனால எருமைகளையும் வாங்க ஆரம்பிச்சேன். எருமை மாடு, பசுந்தீவனம், அடர்தீவனம் எல்லாத்தையும் கழிக்காமத் திங்கும். அதுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமா இருக்கறதால, மருத்துவச் செலவும் குறையுது. இப்போ... என்கிட்ட 7 காங்கேயம், 6 கிர், 4 தார்பார்க்கர், 4 காங்கிரேஜ், 4 சாஹிவால், 25 முர்ரா எருமைகள்னு மொத்தம் 50 உருப்படிக இருக்கு'' என்றவர், வருமானத்தைப் பற்றிச் சொல்லத் தொடங்கினார்.
ஒரே ஈத்துல எடுத்துடலாம்!
'வடமாநில மாடுகளோட விலை அதிகமா இருந்தாலும், போட்ட பணத்தை ஒரே ஈத்துல எடுத்துடலாம். உதாரணமா... சாஹிவால் பசுவை 75 ஆயிரம் கொடுத்து வாங்கினேன். இது, வருஷத்துக்கு 305 நாள் பால் கறக்குது. சராசரியா ஒரு மாட்டுல இருந்து 4 ஆயிரம் லிட்டர் பால் ஒரு வருஷத்துல கிடைக்குது.
நேரடியா நுகர்வோருக்கு ஒரு லிட்டர் 30 ரூபாய்னு விக்கிறேன். 4 ஆயிரம் லிட்டர் பால் மூலமா, ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் வருமானமா கிடைக்குது. இதுல தீவனம், பராமரிப்புச் செலவு போக,
75 ஆயிரம் ரூபாய் லாபம். ஆக, ஒரு ஈத்து முடிஞ்சதுமே... மாடும், கன்னும் லாபக் கணக்குல சேர்ந்துடுது. இதேமாதிரி அம்பது மாட்டுக்கு கணக்குப் போட்டுக்கோங்க...'' என்ற கணேசன் நிறைவாக,
'ஜீவாமிர்தம் மாதிரியான இடுபொருட்கள் பயன்பாட்டுக்காக காங்கேயம் பசுக்களையும் வளக்குறேன். இதுல பால் மூலமா வருமானம் இல்லைன்னாலும், கன்று விற்பனை மூலமா வருஷத்துக்கு ஒரு தொகை கிடைச்சுடுது. ஆக மொத்தத்துல நாட்டு மாட்டு இனங்களைக் கலந்து வளத்தா... நிச்சயம் நல்ல லாபம் பார்க்கலாம். ஆரம்பத்துல எல்லா இனத்திலும் ஒவ்வொரு மாட்டை மட்டும்தான் விலை கொடுத்து வாங்கினேன். இடையில் சில கன்றுகளை வித்தது போக இப்ப, கிட்டத்தட்ட 20 லட்சம் ரூபாய் மதிப்புக்கு 50 மாடுக இருக்கு.
இப்போ, நாட்டுப் பசுக்களோட பாலுக்கு அதிக தேவை இருக்கறதால... நாட்டு மாடுகளை வளத்து பாலை நேரடி விற்பனை செஞ்சா கண்டிப்பா நல்ல லாபம் பாக்க முடியும்'' என்று நம்பிக்கையூட்டி விடை கொடுத்தார்.

செலவில்லாமல் உணவு!
பண்ணையில் கிடைக்கும் சாணத்தை வைத்து, சாண எரிவாயு தயாரிக்கிறார் கணேசன். ''சாண எரிவாயுத் தயாரிப்புக்காக 25 கன மீட்டர் அளவு கொண்ட தொட்டியை அமைச்சுருக்கேன். இதிலிருந்து வெளியேறுற எரிவாயுவைப் பயன்படுத்தித்தான், பண்ணையில் தங்கி வேலை செய்யுற அஞ்சு குடும்பங்களுக்கு உணவு தயாரிக்கிறோம். இதிலிருந்து வெளிவர்ற சாணக் கழிவுகளை (ஸ்லர்ரி) சிமென்ட் தொட்டிகள்ல நிரப்பி, ஜீவாமிர்தமா மாத்தி, பாசனத் தண்ணியில கலந்து 10 ஏக்கர் பசுந்தீவனப் பயிர்களுக்கும், 7 ஏக்கர் தென்னைக்கும் தொடர்ந்து கொடுத்துட்டு வர்றேன். சாண எரிவாயுவைப் பயன்படுத்தி ஆயில் இன்ஜினை இயக்குற முயற்சியிலயும் இருக்கேன்'' என்று சொன்னார் கணேசன்.


தொடர்புக்கு, சி. கணேசன்,
செல்போன்: 98652-09217.



நெல்லிலிருந்து பூவுக்கு... அரை ஏக்கர் நிலத்தில் 60 ஆயிரம் ரூபாய்... செழிப்பான லாபம் கொடுக்கும் செண்டுமல்லி..!

பணியில் இருக்கும், ஐம்பது வயதை நெருங்கிய பெரும்பாலானோரின் கவலை... பணி ஓய்வுக்குப் பிறகான வாழ்க்கையைப் பற்றித்தான் இருக்கும். ஆனால், முறையாகத் திட்டமிட்டால், ஓய்வுக்குப் பிறகும் நிறைவான வாழ்க்கை வாழ முடியும் என்பதை பலர் நிரூபித்துள்ளனர். அந்த வகையில், தனது செயல்பாடுகளால் மனநிறைவான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார், புதுக்கோட்டை மாவட்டம், பூங்குடி கிராமத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன். தமிழக காவல்துறையில் துணை ஆணையராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற இவர், தற்போது முழு நேர விவசாயி.


பசுமை வயல்களுக்கு இடையில் மண்புழு உரத்தை சலித்துக் கொண்டிருந்த பாலகிருஷ்ணனைச் சந்தித்தோம். புன்னகையைப் பூச்செண்டாக்கி வரவேற்றவர், ''ஓய்வுக்குப் பிறகு என்னை ஆரோக்கியமா வாழ வெச்சுட்டு இருக்குறது விவசாயம்தான்.
'பசுமை விகடன்' படிச்ச பிறகுதான் விவசாயத்து மேல, குறிப்பா இயற்கை விவசாயத்து மேல ஆர்வம் வந்துச்சு.
இந்த எட்டு ஏக்கர் நிலத்துல நாலு வருஷமா விவசாயம் பாக்குறேன். நாலு ஏக்கர்ல தென்னை இருக்கு. ஒரு ஏக்கர் தென்னையில மட்டும் ஊடுபயிரா மா இருக்கு. தனியா மூணு ஏக்கர்ல கரும்பு இருக்கு. கரும்பைத் தவிர, மத்த பயிருக்கெல்லாம் இயற்கை உரங்களைத்தான் கொடுக்குறோம். ஒரு ஏக்கர் நிலத்துல வழக்கமா நெல் போடுவேன்.  
நெல் சாகுபடியில பெருசா லாபம் இல்ல. கரன்ட் இல்லாத காலத்துலயும் கஷ்டப்பட்டு, பராமரிச்சாலும்... அறுவடை செஞ்ச பிறகு, ஏக்கருக்கு 5 ஆயிரம் ரூபாய் லாபம் கிடைச்சாலே பெரிய விஷயம். அதனால இந்த வருஷம் வேற பயிரைப் போட்டு பாக்கலாம்னு முடிவு செஞ்சு... நெல்லுக்கு பதிலா செண்டுமல்லி சாகுபடி செஞ்சுருக்கேன். குறைவான தண்ணி, பராமரிப்புலயே இதுல நல்ல லாபம் கிடைக்குது.


தோட்டக்கலைதுறை உதவி இயக்குநர் குருமணியும், வேளாண் அலுவலர் அண்ணாமலையும்தான் இந்த செண்டிப்பூவைப் பத்தி சொன்னாங்க. ஆனா, எங்க பகுதியில யாருமே இதை சாகுபடி செஞ்சது இல்ல.
'இது சரியா விளையாது நஷ்டம்தான் வரும்’னு மத்த விவசாயிக பயமுறுத்தினாங்க. ஆனாலும் துணிச்சலா அரை ஏக்கர் நிலத்துல மட்டும் சாகுபடி பண்ணினேன்'' என மாற்றுப்பயிருக்கு மாறிய கதை சொன்ன பாலகிருஷ்ணன், அரை ஏக்கர் நிலத்தில் செண்டுமல்லி சாகுபடி  செய்யும் முறையைச் சொன்னார்.
அது இங்கே பாடமாக...
ஒரு விதை... ஒரு நாற்று!
செண்டு மல்லியின் வயது 120 நாட்கள். அரை ஏக்கர் நிலத்தில் சாகுபடி செய்ய 2 ஆயிரத்து 500 விதைகள் தேவைப்படும்.
ஒரு விதையில் இருந்து ஒரு நாற்றுதான் உற்பத்தி செய்ய முடியும். நாற்று தயாரிப்புக்காக உள்ள பிரத்யேகமான பிளாஸ்டிக் குழித்தட்டில் ஒவ்வொரு குழியிலும் முக்கால் பகுதிக்கு, தென்னைநார்க் கழிவை நிரப்பி ஒவ்வொரு விதையை வைத்து... ஈரமான நார்க்கழிவைப் போட்டு குழியை நிரப்ப வேண்டும் (குழித்தட்டு கிடைக்காதவர்கள், சிறிய பிளாஸ்டிக் டீ கப்பை பயன்படுத்தலாம்).
எப்போதும் ஈரம் இருக்குமளவுக்கு தண்ணீர் தெளித்து வந்தால், 23-ம் நாள், நாற்று நடவுக்கு தயாராகி விடும். சாகுபடி நிலத்தில், ஒன்றரை டன் அளவுக்கு மண்புழு உரம் அல்லது குப்பை எருவை இட்டு, இரண்டு சால் புழுதி உழவு ஓட்டி, ஒன்றே கால் அடி அகலம், முக்கால் அடி உயரத்துக்கு இரண்டு அடி இடைவெளியில் பார் அமைக்க வேண்டும். நிலத்தின் அமைப்புக்கு ஏற்ப, பாரின் நீளத்தை அமைத்துக் கொள்ளலாம்.
2 அடி இடைவெளி !
நிலத்தில் தண்ணீர் விட்டு, எல்லா பார்களிலுமே ஒரே சீராக இடது அல்லது வலது ஓரத்தில் மட்டும், 2 அடி இடைவெளியில் நாற்றுகளை நடவு செய்து 3-ம் நாள் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். பிறகு, நான்கு நாட்களுக்கு ஒரு முறை பாசனம் செய்ய வேண்டும். 7-ம் நாள் அரை அடி உயரத்துக்கு செடி வளர்ந்திருக்கும். 8 மற்றும் 30-ம் நாட்களில் களையெடுத்து, ஒவ்வொரு செடிக்கும் தலா ஒரு கையளவு மண்புழு உரத்தை வேர்பகுதியில் வைத்து, மண் அணைக்க வேண்டும்.
பதினெட்டாம் நாளில் இருந்து அறுவடை !
18-ம் நாளில் இருந்து தினமும் பூவை அறுவடை செய்யலாம். 25-ம் நாள் பூண்டு-பச்சைமிளகாய் கரைசலை, 1:40 என்ற விகிதத்தில் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும் (தலா ஒரு கிலோ பூண்டு, பச்சைமிளகாய், வேப்பம்பிண்ணாக்கு ஆகியவற்றை ஒன்றாக உரலில் இட்டு இடித்து... பானையில் இட்டு ஒன்றரை லிட்டர் தண்ணீர் ஊற்றி இறுக்கமாக வேடு கட்டி விட வேண்டும். 3 நாட்கள் கழித்து, இக்கலவையை எடுத்துப் பயன்படுத்தலாம்). இதனால் பூச்சிகள் தாக்காது.
50-ம் நாள், 100 கிலோ மண்புழு உரம், மண்புழு உரம் சலித்து எடுக்கப்பட்ட 100 கிலோ குப்பை எரு ஆகியவற்றைக் கலந்து, ஒவ்வொரு செடியின் வேர்ப்பகுதியிலும் பகிர்ந்து போட வேண்டும். நிலத்தை இரண்டாகப் பிரித்து சுழற்சி முறையில் அறுவடை செய்ய வேண்டும்.
சாகுபடிப் பாடம் முடித்த பாலகிருஷ்ணன், ''இது வீரிய ரக செண்டி. பாக்குறதுக்கு அழகா, மஞ்சள் நிறத்துல பளிச்சுனு கண்ணைப் பறிக்கும். இயற்கை இடுபொருள்களை மட்டும் கொடுக்கறதுனால, இங்க விளையுற செண்டி பூ, பறிச்ச பிறகும் மூணு நாளைக்கு வாடாம இருக்கு. சுழற்சி முறையில பறிக்கிறதால தினமும் சராசரியா 20 கிலோ அளவுக்கு பூ கிடைக்குது. பறிக்கறதுக்கு ரெண்டு ஆளுங்களே போதும். பூ நல்லா பெருசா இருக்கறதுனால, பறிக்கவும் சுலபமா இருக்கு. வேலைக்கு ஆளுங்க கிடைக்கலைனாலும் நாமளே பறிச்சுடலாம்.
என்கிட்ட ஒரு மாடுதான் இருக்கு. வெளியில ஒரு டன் சாணத்தை 700 ரூபாய்னு வாங்குவேன். அதோட மெஷின்ல போட்டு தூளாக்குன மா, தேக்கு சருகுகள், கரும்புத் தோகைகள் எல்லாத்தையும் கலந்து மண்புழு உரம் தயாரிப்பேன். இப்படிக் கிடைக்கிற மண்புழு உரத்தை ஒரு கிலோ 10 ரூபாய்னு வித்துடுவேன். மாசத்துக்கு 600 கிலோ அளவுக்கு விற்பனை ஆகுது. மண்புழு உரத்தை சலிச்சதுக்குப் பிறகு கிடைக்குற குப்பை எருவை, பயிர்களுக்குப் போட்டுடுவேன்'' என்று போகிற போக்கில் அசத்தலான தொழில்நுட்பம் ஒன்றை அள்ளிவிட்டதோடு...
40 ஆயிரம் லாபம் !
''நடவுல இருந்து இப்ப 48 நாளைக்கு மேல ஆகுது. இதுவரைக்கும் 600 கிலோ அளவுக்கு மகசூல் கிடைச்சிருக்கு. புதுக்கோட்டை பூ மார்க்கெட்டுல ஒரு கிலோவுக்கு சராசரியா 50 ரூபாய் அளவுக்கு விலை கிடைக்குது. இன்னும் 50 நாளைக்கு பூ பறிக்கலாம். எப்படிப் பார்த்தாலும், இன்னும் 600 கிலோ அளவுக்குக் கிடைக்கும்.
நடவு செஞ்ச ரெண்டாவது வாரத்துல கடுமையான புயல், மழையடிச்சதுல பெரும்பாலான செடிக கீழ சாஞ்சிடுச்சு. தேங்கியிருந்த தண்ணியை வடிகட்டி, மறுபடியும் செடிகளை நிமித்தி வெச்சோம். இனிமே பொழைச்சி வருமானு பயந்துக்கிட்டுதான் இருந்தேன். ஆனாலும் தாக்குப்புடிச்சி வந்துடுச்சு.


வளர்ச்சி வேகம் குறைஞ்சதால எதிர்பார்த்த அளவுக்கு மகசூல் கிடைக்கல. அப்படியிருந்தும் இந்த அரை ஏக்கர்ல இது வரை 30 ஆயிரம் ரூபாய் கிடைச்சுருக்கு. இன்னும் 30 ஆயிரம் ரூபாய்க்கு பூ கிடைக்கும். மொத்தம் 60 ஆயிரம் ரூபாய். செலவு போக, 40 ஆயிரம் ரூபாய் லாபமா மிஞ்சும்.
புயல் அடிக்காம இருந்துருந்தா, இன்னும் கூடுதலா லாபம் கிடைச்சுருக்கும். எப்படிப் பார்த்தாலும்... நெல்லோட ஒப்பிடும்போது, இதுல பல மடங்கு கூடுதல் லாபம். அதனால, இன்னும் அதிகமான நிலத்துல இதை சாகுபடி பண்ணப் போறேன்'' என்று தெம்பாகச் சொன்ன பாலகிருஷ்ணன்,
''வருமானம் ஒரு பக்கம் இருந்தாலும், பரபரப்பா வேலை செஞ்சுட்டு ரிட்டயர்டு ஆன பிறகும், என்னை உற்சாகமா வெச்சுருக்குறது விவசாயம்தான்'' என்று சொல்லி மகிழ்ச்சியாக விடைகொடுத்தார்.
 தொடர்புக்கு,பாலகிருஷ்ணன், அலைபேசி: 98659-38452.



25 சென்ட்... 5 மாதம்...1 லட்சம் ! மாற்றுப் பயிராக வந்த மல்பெரி நாற்று உற்பத்தி...

'மாற்றம் ஒன்றே மாறாதது’ இந்தத் தத்துவத்துக்கு ஏற்ப... வழக்கமாகச் செய்யும் ஒரே பயிரைத் தொடர்ந்து செய்யாமல், மாற்றுப் பயிர்களைத் துணிந்து சாகுபடி செய்தால்தான் லாபம் எடுக்க முடியும் என்பதைப் புரிந்துகொண்டு கொஞ்சம் கொஞ்சமாகத் தங்களை மாற்றிக் கொண்டு வருகிறார்கள், தமிழக விவசாயிகள். அந்த வகையில், ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையம் வட்டம், கெட்டிச்செவியூர் அடுத்துள்ள காளியப்பம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த மூர்த்தி-மகேஸ்வரி தம்பதி, மாற்றுப் பயிராக மல்பெரி நாற்றுக்களை உற்பத்தி செய்து சிறப்பான வருமானம் பார்க்கிறார்கள்.  


'தளதள’வென பச்சை இலைகள் தலையாட்டும் மல்பெரி தோட்டத்தில், தெளிப்புநீர்க் கருவிகள் மழை போல் தண்ணீரைத் தெளித்துக் கொண்டிருக்க, உழைத்த களைப்பு நீங்க, மரத்தடியில் அமர்ந்திருந்த நேரத்தில் தம்பதியைச் சந்தித்தோம்!  
''எனக்கு நாலு ஏக்கர் தோட்டம் இருக்கு. மணல் கலந்த செம்மண் பூமி. மஞ்சள், மக்காச்சோளம், கடலை, கரும்பு, புகையிலைனு எதைப் போட்டாலும் நல்லா வரும். ஆனா, தண்ணிதான் கொஞ்சம் பத்தாக்குறை. கிணறு, போர் ரெண்டும் இருந்தாலும், கொஞ்சம் தட்டுப்பாடுதான். கிடைக்கிற தண்ணியை வெச்சு நாலு ஏக்கர்லயும் ஒரே சமயத்துல சாகுபடி பண்ண முடியாது. 'குறைவான தண்ணியை வெச்சு என்ன பயிர் பண்ணலாம்?’னு யோசிச்சுக்கிட்டு இருந்தப்ப மல்பெரி விவசாயத்தைப் பத்தி என் மனைவி மகேஸ்வரி சொன்னாங்க'' என முன்னுரை கொடுத்த மூர்த்தி தொடர்ந்தார்.
''பட்டுப்புழு வளர்ப்புக்கு முக்கியமானது, மல்பெரி. மனைவி கொடுத்த தைரியத்துல இதை வளக்க ஆரம்பிச்சு பட்டுப்புழு வளர்ப்புலயும் இறங்கி, வெண்பட்டுக் கூடுகளை உற்பத்தி செஞ்சுக்கிட்டு இருக்கேன். மல்பெரி செடிகள்ல பல ரகங்கள் இருக்கு.
ஆரம்பத்துல 'எம்.ஆர்-2’ங்கிற ரகத்தைத்தான் வளத்தோம். அப்பறம், 'வி-1’ங்கிற ரகத்தை பட்டுவளர்ச்சித் துறை விஞ்ஞானிங்க வெளியிட்டாங்க. இதுல புரதம் அதிகமா இருக்கறதோட, மகசூலும் அதிகம் கிடைக்குது. இதை ரெண்டு ஏக்கர்ல சாகுபடி செஞ்சிருக்கேன். ஏழு வருஷம் வரைக்கும் அறுவடை செய்யலாம்'' என்றவரை இடைமறித்து, தான் பேச ஆரம்பித்தார், மகேஸ்வரி.
''இன்னிய தேதியில் வெண்பட்டு உற்பத்தியில கொடிகட்டி பறக்கிறது, கோபிச்செட்டிப்பாளையம் ஏரியாதான். ஆயிரக்கணக்கான விவசாயக் குடும்பங்கள் வெண்பட்டு உற்பத்தியில ஈடுபட்டு இருக்காங்க. அதனால மல்பெரி செடி சாகுபடியும், தேவையும் அதிகரிச்சுட்டே வருதுங்க. குறிப்பா, வி-1 ரகத்துக்கு அதிக தேவை இருக்கு.
பொதுவா, மல்பெரிக்கு விதைக் கரணைகளைத்தான் நடுவாங்க. ஆனா, விதைக்கரணைகளை நடும்போது நிறைய பேருக்கு சரியா வளர்றதில்லை. அதுக்கு தீர்வு கேட்டப்போ 'நாற்று முறையில நடவு செஞ்சா நல்லா வரும்’னு அதிகாரிகள் சொன்னாங்க. நாமளே ஏன் நாத்து உற்பத்தி பண்ணக்கூடாதுனு தோணுச்சு. அதை வீட்டுக்காரர்கிட்ட சொன்னப்போ ரெண்டு பேருக்குமே அது சரினு பட்டது. அதனால, வீட்டுக்குப் பக்கமா இருக்குற 25 சென்ட் நிலத்துல வி-1 ரகத்தை நட்டு நாத்து உற்பத்தியை ஆரம்பிச்சுட்டோம்' என்ற மகேஸ்வரி நிறைவாக,
'இந்த ரகத்துல அதிகமான புரதச்சத்து இருக்கறதால கறவை மாடுகளுக்கும் ஆடுகளுக்கும் இதை தீனியா கொடுக்குறாங்க. இதைச் சாப்பிடுற மாடுகள் அதிகமா பால் கறக்கும். ஆடுகள் வேகமா வளரும். அதனால, நிறைய பேருக்கு தேவை இருக்கறதால, நாத்து விற்பனைக்கு பிரச்னையே இல்லை. ஒரு நாத்து 2 ரூபாய்னு வித்துகிட்டிருக்கோம்.
25 சென்ட் மூலமா அஞ்சு மாசத்துல ஒரு லட்ச ரூபாய் அளவுக்கு வருமானம் கிடைக்குது. அதுல செலவு போக 80 ஆயிரம் ரூபாய் லாபம்'' என்று மகிழ்ச்சியுடன் சொல்லி விடை கொடுத்தார்.


 'இப்படித்தான் நாத்து உற்பத்தி செய்யணும்...’
நாற்று உற்பத்தி செய்யும் முறையைப் பற்றி மூர்த்தி சொன்ன விஷயங்கள் இங்கே பாடமாக...
நாற்று உற்பத்திக்காக விதைக் கரணைகளை நடவு செய்ய ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்கள் ஏற்றவை. தென்னை நிழல் இருக்கும் பகுதியில்கூட நாற்றங்கால் அமைக்கலாம். 25 சென்ட் நாற்றங்காலில் 4 டன் தொழுவுரம், 5 கிலோ நுண்ணுயிரி உரம் ஆகியவற்றைக் கலந்து இட்டு நிலத்தை சமப்படுத்தி, அரையடி இடைவெளியில் பார் எடுத்துக் கொள்ள வேண்டும்.
பாரில், 4 அங்குல இடைவெளியில், விதைக்கரணைகளை நடவு செய்ய வேண்டும். பாசனத்துக்கு தெளிப்புநீர் முறையை அமைத்துக்கொண்டு, தினமும் மூன்று வேளை பாசனம் செய்து வர வேண்டும். நடவு செய்த ஒரு மாதம் கழித்து, களை எடுக்க வேண்டும்.
கண்டிப்பாக, எந்த ரசாயன உரங்களையும் செடிகளுக்கு இடக் கூடாது. அப்படிக் கொடுத்தால் வேர் அழுகல் நோய் தாக்கிவிடும். தெளிப்புநீர்ப் பாசன முறையில் பூச்சிகள் தாக்குவதில்லை. அதனால், பூச்சிக்கொல்லிகள் தேவையே இல்லை. அப்படியே பூச்சிகள் தாக்கினாலும், ஒட்டுண்ணி அட்டைகளைக் கட்டி கட்டுப்படுத்தி விடலாம்.
130 நாட்களுக்குப் பிறகு நாற்றுகளைப் பறித்து விற்பனை செய்யலாம். அனைத்து நாற்றுக்களையும் ஒரே சமயத்தில் பறிக்கக் கூடாது. உதாரணமாக, 50 ஆயிரம் நாற்றுகள் இருந்தால்... முதலில் 20 ஆயிரம், அடுத்து 10 ஆயிரம், கடைசியாக 20 ஆயிரம் என்ற கணக்கில் பறிக்க வேண்டும்.


தொடர்புக்கு, மூர்த்தி, அலைபேசி: 98427-23677

Saturday, 6 August 2016

ஆர்கானிக் உணவுகளை கண்டுபிடிப்பது எப்படி?

தெருவுக்கு தெரு ஆர்கானிக் கடைகள், ஆனால் அது உண்மையில் ஆர்கானிக் கடைதானா என்பதில் பலருக்கும் சந்தேகம். விலையும் அதிகமாக இருக்கிறது. அதற்கு  மார்கெட்டிலேயே வாங்கி விடலாம், என்றே பலரது முடிவும் இருக்கிறது. அதிக விலை கொடுத்து வாங்குபவர்களுக்கும் ஆர்கானிக் உணவுகளை வாங்குவதில், பல  சந்தேகங்கள் இருக்கின்றன.


ஆர்கானிக் பொருட்களை எப்படி வாங்கலாம்?  இதோ, அதற்கான டிப்ஸ்...
*இயற்கையான முறையில் வளர்ந்தது என்றால், அனைத்து காயோ, கனியோ ஒரே மாதிரி, ஒரே அளவில் இருக்காது. நிறம், வடிவம், அமைப்பு போன்றவை மாறி இருக்கத்தான் செய்யும். இதை வைத்து ஆர்கானிக் என்று கண்டுபிடிக்கலாம். பருப்புகள் கூட ஒரே நிறத்தில் இல்லாமல், ஒரு பருப்பு அடர் நிறத்திலோ, இன்னொரு பருப்பு சற்று மங்கியோதான் இருக்க வேண்டும். மிகவும் தளதளவென, பளபளப்பாக இருப்பதைத் தவிர்த்திடுங்கள்.
*பெரிய அளவு பழமோ, காயோ, கிழங்கு வகைகளோ அவற்றை தவிர்த்து, சிறிய அல்லது மீடியம் அளவு உணவுகளையே வாங்குங்கள்.
*ஆப்பிள், மாம்பழம், திராட்சையில் அதிகப்படியான பூச்சிக் கொல்லிகள் தெளிக்கப்படுகின்றன என்பதால், இவற்றை வாங்குவதில் அதிக கவனம் செலுத்துங்கள். நேர்த்தியான, அழகான கனிகளாக கண்களைக் கவர்ந்தால், அவற்றை சந்தேகப்பட்டுப் பரிசோதிப்பது நல்லது.
*சீசன் பழங்கள், காய்கறிகளைத் தேர்ந்தெடுங்கள். மார்ச் முதல் ஜூன் வரைதான் மாம்பழ சீசன். செப்டம்பர், அக்டோபரில் கிடைக்கும் மாம்பழங்களை வாங்கக் கூடாது.
*ஆர்கானிக் காய்கறிகளாக இருந்தால் அவை சீக்கிரம் வெந்து விடும். நேரம் அதிகமாக தேவைப்படாது.
* புதினா, கொத்தமல்லி, வெந்தயக்கீரை போன்றவற்றில் அவற்றுக்கே உரிய தனித்துவமான வாசம் வருகிறதா என முகர்ந்து பார்க்கலாம். மற்ற கீரைகளில் ‘பச்சையம்’ வாசம் வர வேண்டுமே தவிர, மருந்து வாசனை வரக் கூடாது. அதிக ஃபிரெஷ் எனில் சற்று சந்தேகப்படலாம்.
*தக்காளி ஒரு வாரம் வரை அழுகாமல் தோல் மட்டும் சுருங்கினால், அது ஆர்கானிக். அதுபோல வெண்டைக்காய், பாகற்காய் போன்றவற்றையும் சரிபார்த்து வாங்கவும்.
*ஒன்றிரண்டு பூச்சிகள், வண்டுகள் இருந்தால் அந்த கீரையையோ, காய் கனிகளையோ தேர்ந்தெடுப்பது நல்லது. பூச்சிக்கொல்லி அடிக்காத உணவுப்பொருட்கள் என கண்டுபிடித்து விடலாம். பூச்சி முழுவதும் பரவி, அழுகி இருப்பதை தவிர்க்க வேண்டும்.
*ஒரு ஆர்கானிக் கடையில், இரண்டு பொருட்கள் மட்டும் வாங்கி சமைத்து பாருங்கள். சுவையை அறிந்து கொள்ளுங்கள். அது போல, மற்ற கடையில் உள்ள பொருட்களை வாங்கி சுவைத்துப் பாருங்கள். இரண்டுக்கும் வித்தியாசம் தெரியும். அதன் பிறகு உங்களின் ஷாப்பிங், இனிமேல் எங்கே என்பதை முடிவு செய்யலாம்.


*சின்ன காய்கள் கூட அதிக எடையுடன் இருப்பது ஆர்கானிக். அளவில் பெரிதாக அதிகமான எடையில் நிற்பது ஆர்கானிக் அல்ல.
*கொஞ்சம் பருப்பு போட்டாலும் நிறைய இருப்பது போல் வெந்திருந்தால், அது ஆர்கானிக் முறையில் விளைந்தது. சாம்பாரிலோ, கூட்டிலோ பருப்பு கரைந்து மாவாகிவிடக் கூடாது. ஆர்கானிக் பருப்புகள் நன்கு வெந்து வெடித்திருப்பது போல காணப்படும். ஆனால், கரைந்து போகாது.
*அருகில் இருக்கும் மார்க்கெட்டோ, ஆர்கானிக் கடையோ, எங்கிருந்து காய்கறிகள் வருகின்றன என்று கேள்விகளை கேட்கும் பழக்கத்தை தொடங்குங்கள். எங்கிருந்து வருகிறது  எனக் கேட்டால், தெரியாது என சொல்பவரிடம் வாங்குவதைத் தவிர்க்கலாம்.
*பெரிய சூப்பர் மார்க்கெட்டுகளைவிட, சிறிய வியாபாரிகளிடம் காய், கனிகளைப் பரிசோதித்து வாங்குவதே சரி.
*அந்தந்த சீசனில் விளையக்கூடிய காய், பழங்களை வாங்குங்கள். சீசன் அல்லாத காலங்களில் விளையக்கூடிய காய், கனிகள் அனைத்து சீசன்களிலும் விற்கப்பட்டால், அவற்றைப் பரிசோதித்து வாங்குவதே சரி. வாழை மட்டுமே அனைத்து சீசன்களிலும் கிடைக்கும்.



Saturday, 30 July 2016

நெல்லு விதைக்கலாமா... கரும்பு போடலாமா?' விவசாயத்துக்கு ஜோசியம் பார்க்கும் விசித்திர கிராமம்


ன்றைய, ‘போக்கிமான் கோ’ உலகத்தில், நம்ம ஊரில் ஜோசியமும், ஜாதகமும் இன்னமும் பலரது வாழ்க்கையில் விளையாடிக்கொண்டிருக்கிறது, என்பதை ஜீரணித்துக்கொள்வது கஷ்டமாகத்தான் உள்ளது.  பிள்ளைக்கு பேர் வைப்பது, பள்ளியில் சேர்ப்பது, திருமணம் செய்வது, தொழில் தொடங்குவது, உள்ளிட்டவைகளுக்கு ஜாதகம் பார்த்திருக்கிறோம் அல்லது பார்ப்பதாக  கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், "கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளிக்கு அடுத்துள்ள பெரமனூர் என்கிற கிராம மக்கள்,  விவசாயத்துக்கு ஜோசியம் பார்க்கிறார்கள். பொருத்தம் சரி இல்லையென்றால், அந்தப் பயிரையே பயிர் செய்ய மாட்டார்கள்... அப்படி மீறி செய்தால், அவர்கள் குடும்பத்தில் உயிர்பலி வரைக்கும் நடக்கும் என்பது அவர்களது நம்பிக்கை" என்று நண்பர் ஒருவர் சொல்ல, பெரமனூருக்கு புறப்பட்டோம்...


பச்சைப்பசேல் வயல்வெளிகளில், செழித்து நின்ற பயிர்கள் நம்மை வரவேற்றன. ஊருக்குள் நுழைந்ததும் எதிர்பட்டார், ராமலிங்கம். அவரிடம் விவசாய ஜோசியத்தை பற்றி விசாரித்தோம்.
படபடவென பேச ஆரம்பித்தவர், ''ஆமாங்க நீங்க கேள்விபட்டது உண்மைதான். எங்க ஊர்ல என்ன பயிர் பண்ணாலும் 'குறி' ( ஜோசியம்) பார்த்துதான் செய்வோம். குறிப்பா மஞ்சள், கரும்பு, எள் இந்த மூன்றையும் சாமிகிட்ட 'குறி' கேக்காம பயிர் பண்ணவே மாட்டோம். இந்த ஊர்ல விவசாயம் பண்ற எல்லாருமே அப்படித்தான். எங்க ஊர்ல சம்பத்னு ஒரு சாமியார் இருக்கார். அவர்கிட்ட 'குறி' கேட்டுதான் இந்த முறை என் தோட்டத்துல நான்  வாழை போட்ருக்கேன். நல்லா வந்துருக்கு.
'நீ இந்த வருஷம் மஞ்சள் போட்டா சரி வராது' னு சாமி சொல்லிட்டாருன்னா, அதை பயிர் பண்ணக்கூடாது. ஒண்ணு விளைச்சல் இல்லாமப் போயிடும்... இல்ல நம்ம வீட்ல, ஆடோ மாடோ ஏதாவது உயிர்ப் பலிகள் ஏற்பட்டுடும். அதற்கு பிறகு நாம மீள்றது கஷ்டம். ஏன்... சமயத்துல மனுஷங்களே செத்துப் போயிடுவாங்க. எங்க குல தெய்வத்துக்கு கருப்பு ஆகாது. அதையும் மீறி ஒரு வருஷம் எள் பயிர் பண்ணோம்.  அறுவடை சமயத்துல எங்க அப்பா செத்துப் போயிட்டாரு. அதுல இருந்து சாமிக்கிட்ட குறி கேக்காம எதையும் செய்யுறது இல்லை.
எந்த பயிர் பண்றமோ அந்த பயிர் நம்ம பேருக்கு ஒத்துவருமானு பாக்கணும். நம்ம பேருக்கு ஒத்து வராட்டியும் நம்ம வீட்ல யாருக்காவது ஒத்து வந்தாக்கூட பயிர் பண்ணலாம். ஒருமுறை எங்க வயல்ல நெல் போடலாமானு சாமிகிட்ட கேட்டேன். என் பேருக்கு ஒத்துவரல... என் பொண்டாட்டி பேருக்கும், ஒத்துவரல... பொறந்து ஒரு வருஷமான என் மகனுக்கு ஒத்து வந்துச்சி. அதனால கைக்குழந்தையை தூக்கிக்கிட்டு போய், அவன் கையால முதல் விதையை போட்டோம். நல்ல விளைச்சல் அந்த வருஷம். வைக்கோல் மட்டும் 15 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆச்சி. நான் முற்போக்குவாதிதான். ஆனா, இந்த விஷயத்துல இப்படி பண்ணினாதான் சரியா வருது''. (நமக்கு தலை சுற்ற ஆரம்பித்தது. ஆனாலும், ராமலிங்கம் சளைக்காமல் தொடர்ந்தார்...)
''அவ்வளவு ஏன்... அந்த சம்பத் சாமியவே எடுத்துக்கோங்க. அவர் வயலும் அவங்க அண்ணன் வயலும் பக்கத்து பக்கத்துலதான் இருக்கு. ஒரே தண்ணி ஒரே மண்ணுதான். சம்பத் சாமிக்கு மஞ்சள் ஒத்துவரும். ஆனா, அவங்க அண்ணனுக்கு ஒத்து வராது. அவங்க அண்ணன் காய்கறி மட்டும்தான் பயிர் பண்ணுவார். இந்த ஊர்ல எல்லாருக்குமே அவங்க அவங்களுக்கு  நம்பிக்கையான சாமியாருங்க இருக்காங்க. அவுங்ககிட்ட ரகசியமா குறி கேட்டுத்தான் பயிர் பண்ணுவாங்க. வெளில யாருக்கிட்டயும் சொல்ல மாட்டாங்க.'' என்று நிறுத்தினார்.


" நாங்க சம்பத் சாமியை பார்க்கலாமா...?" என்றதும் மறுப்பேதும் சொல்லாமல் நம்மை அழைத்துச் சென்றார்.
சம்பத் சாமியிடம் பேசினோம். ''நான் 8 வருஷமா குறி பாக்குறேன். இந்த ஊர்ல இருந்து நிறைய பேர் என்கிட்ட பார்ப்பாங்க. அவங்கவங்க பேருக்கு இன்ன பயிர் ஒத்து வருமானு பொருத்தம் பார்த்து சொல்லுவேன். அதுபடிதான் கேப்பாங்க. நானே பொருத்தம் பார்த்துதான் இந்த முறை மஞ்சள் போட்ருக்கேன்'' என்றார்.
திரும்பும் வழியில் ரவி என்பவரிடம் பேசினோம். ''நான் இந்தமுறை மஞ்சள் போடலாம்னு இருந்தேங்க. எங்க வீட்ல யாரு பேருக்குமே ஒத்து வரல. அதான் என்ன பண்றதுனு யோசிச்சிக்கிட்டு இருக்கேன்... பார்ப்போம்'' என்று நடையைக் கட்டினார்.
என்னத்த சொல்ல..?




Tuesday, 26 July 2016

பாலங்களை அடைத்த அதிகாரிகளுக்கு பொன்னாடை... அழைப்பிதழால் அதிர்ந்த கலெக்டர்!

சிவகங்கையில் இருந்து மானாமதுரை செல்லும் வழியில் உள்ள கிராமம் கண்டனி. இந்த கிராமத்திற்கு அருகில் மேலவெள்ளச்சி கண்மாய் உள்ளது. இந்த கண்மாயில் இருந்து வெளியேற்றப்படும்  நீர் மானாமதுரை நெடுஞ்சாலையைக் கடந்து, எதிர்ப்புறம் உள்ள  விவசாய பாசனத்திற்கு செல்லும். கண்மாய் செல்வதற்காக  நெடுஞ்சாலையில் சிறிய பாலங்கள் கட்டி, அதில் தூம்புகளை வைத்திருந்தனர். அந்த தூம்பின் வழியாக தண்ணீர் வந்து கொண்டிருந்தது.


தற்போது தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இந்த சாலையை அகலப்படுத்தும் பணியில்  ஈடுபட்டபோது, இந்தச்  சாலையில் இருந்த அனைத்து சிறிய பாலங்களையும் மூடிவிட்டனர். மேலும் கண்மாய் நீர் விவசாயப் பகுதிகளுக்கு செல்ல எந்த வழியையும் ஏற்படுத்தாமல், சாலை அமைத்துவிட்டனர். இதனால் வரும் பருவகாலத்தில் கண்மாயில் நீர் தேங்கினால் அந்த நீரை விவசாய நிலங்களுக்கு திருப்பிவிட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கண்டனி கிராம மக்கள் இன்று சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மலர்விழியை பத்திரிகை மற்றும் தாம்பூலத்தட்டோடு சந்தித்தனர். அவர்கள் " எங்கள் கண்மாய் நீரை விவசாயத்திற்கு பயன்படுத்த முடியாமல் பாலங்களை அடைத்து சாலை அமைத்த அதிகாரிகளை கௌரவம் செய்ய விரும்புகின்றோம். ஆகஸ்ட் 2 ம் தேதி அந்த அதிகாரிகள் அனைவருக்கும் பொன்னாடை போர்த்தும் விழா நடைபெற உள்ளது. அதற்கு, தாங்கள் வரவேண்டும்" என்று அழைப்பிதழ் மற்றும் பழம், பூ வைத்து மாவட்ட ஆட்சியரிடம் வித்தியாசமாக தங்களது கோரிக்கையை கொடுத்தனர்.
அதை பார்த்து அதிர்ந்த மாவட்ட ஆட்சியர்,   " நீங்கள் மனு கொடுங்கள். நான் நடவடிக்கை எடுக்கின்றேன்"  என்று மட்டும் சொல்லி, அவர்களை அங்கிருந்து அனுப்பிவிட்டார்.




Monday, 25 July 2016

'இனி இயற்கை விவசாயம்தான் ஒரேவழி...!' -புதிய பாதையில் சீமான்


யற்கை வேளாண் பொருள் விற்பனையில் கால்பதிக்க இருக்கிறார் சீமான். 'காய்கறிகளோடு நமது பாரம்பர்ய பொருட்களை விற்கும் முயற்சியை தீவிரப்படுத்த வேண்டும்’ என கட்சியினருக்கு உத்தரவிட்டிருக்கிறார். இதற்காக, சிறப்பு மாநாடு, உணவுக் கண்காட்சி என பரபரப்பாக இயங்குகிறார்கள் நாம் தமிழர் தொண்டர்கள். 

சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, நாம் தமிழர் கட்சியின் அடிப்படைக் கட்டமைப்பை பலப்படுத்தும் வேலைகளில் இறங்கியிருக்கிறார் சீமான்.

உள்ளாட்சித் தேர்தலில் தனித்துக் களம் இறங்குவது ஒருபுறம் இருந்தாலும், '
நம்மாழ்வார் அய்யாவின் விருப்பப்படி, இயற்கை வேளாண் விற்பனையிலும் நாம் கால்பதிக்க வேண்டும் ' எனப் பேசி வருகிறார் சீமான்.  அதற்கான வேலைகள் நடந்து வருகின்றன என்கிறார் அக்கட்சியின் நிர்வாகி ஒருவர்.

அவர் நம்மிடம், “ தேர்தல் தோல்விகள் ஏராளமான பாடங்களைக் கற்றுக் கொடுத்திருக்கின்றன. ‘அப்படியே முடங்கிப் போய்க் கிடந்தால், மக்கள் நம்மை மறந்துவிடுவார்கள்’ என்று சீமானிடம் சொன்னோம். அதற்காகத்தான், இயற்கை வேளாண்மையை  மக்களுடைய வாழ்வின் ஒருபகுதியாக மாற்றுவது என்ற முடிவுக்கு வந்திருக்கிறார். மண் சார்ந்த இயற்கைப் பொருட்களை மக்களிடம்  கொண்டு செல்லும்போது, நம்மீதான பார்வை பலமடங்கு அதிகரிக்கும் என நினைக்கிறார் சீமான். ஏற்கெனவே, 'நம்மாழ்வார் இயற்கை இயக்கம்' என்ற பெயரில் நாங்கள் செயல்பட்டு வருகிறோம். இந்த அமைப்பின் மூலம் பனை பொருட்கள், தென்னை நார் கைவினைப் பொருட்கள், மண்ணால் செய்யப்பட்ட சமையல் உபகரணங்கள் என பண்டைய கால வாழ்வியல் முறைகளை மீட்டெடுக்க இருக்கிறோம். இதற்காக, எங்கள் கட்சியின் இளைஞர்களிடையே குழுக்கள் அமைத்து, இயற்கை வேளாண் விற்பனையை விரிவுபடுத்த இருக்கிறோம். 



இதற்காக, வருகிற செப்டம்பர் 17-ம் தேதி ஈரோட்டில். இயற்கை வேளாண் மாநாடு ஒன்றை சீமான் தலைமையில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த மாநாட்டில் மிகப் பிரமாண்டமான இயற்கை உணவுக் கண்காட்சியும் நடத்தப்பட உள்ளது. தொண்டர்களிடையே வேளாண் விற்பனையை ஊக்கப்படுத்தும்போது, கீழிருந்து மேலாக கட்சியை பலப்படுத்துவதற்கு உதவியாக இருக்கும் என நம்புகிறோம். ‘ சாதி மதமாக பின்னப்பட்டிருந்தாலும் இயற்கை வேளாண் உணவுகள் என்று வரும்போது மனிதர்கள் ஒன்றுபடுகிறார்கள். பாரம்பர்யப் பெருமைகளை மீட்கும் ஒரு பகுதியாகவும் இருக்கும்’ எனத் திட்டமிட்டுள்ளோம். தற்போது மாநிலம் முழுவதும் இயற்கை வேளாண் பொருட்களை எப்படி சந்தைப்படுத்துவது? பாரம்பர்ய உணவுத் திருவிழாக்களை எப்படி நடத்துவது? கலப்படமில்லாத, இயற்கை வேளாண் முறையில் தயாரான சுத்தமான பொருட்கள் எங்கு கிடைக்கின்றன என்பதைப் பற்றியெல்லாம் தீவிரமாக ஆய்வு நடத்தி வருகிறார் சீமான். சென்னை உள்ளிட்ட மாவட்டங்களின் தலைநகர்களில் உணவுக் கண்காட்சியை நடத்துவது, தென்னை, பனையால் செய்யப்பட்ட கைவினைப் பொருட்களை திரட்டுவது என கட்சியின் தொண்டர்களும் பரபரப்பாக இயங்குகிறார்கள்” என்றார் விரிவாக. 


விரைவில், ‘ இயற்கை விவசாயத்தை முன்னெடுக்கும் வகையில் மண்வெட்டி, கடப்பாரையோடு வயல் வெளியில் நாங்கள் இறங்கினாலும் ஆச்சர்யமில்லை’ என்கின்றனர் நாம் தமிழர் கட்சித் தொண்டர்கள். 




இனி யானைகளுக்கு நாங்கள்தான் பாதுகாவலர்கள்!' -மாற்றத்தை விதைத்த மாங்கரை மக்கள்

வனத்துறையினரின் அலட்சியத்தால் யானை வழித்தடங்களை சுத்தம் செய்யும் பணியில் நேரடியாகக் களம் இறங்கியுள்ளனர் கோவை இளைஞர்கள். ' நேற்று ஒரேநாளில் மட்டும் 600 கிலோ உடைந்த மதுபாட்டில்களை அப்புறப்படுத்தியுள்ளோம். வனப்பகுதிகளில் செயல்படும் டாஸ்மாக் கடைகளை அகற்றும் போராட்டத்தை முன்னெடுக்க உள்ளோம்' என்கின்றனர் கொதிப்போடு.  

கோவையில் இருந்து ஆனைக்கட்டி செல்லும் வழியில் உள்ளது மாங்கரை. இயற்கை எழில்சூழ்ந்த இந்தப் பகுதி முழுக்க முழுக்க யானைகளின் வலசைப் பகுதியாக உள்ளது. தமிழக வனப்பகுதியை ஒட்டியுள்ள இந்தக் கிராமத்தில் அரசின் டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. ஆனைக்கட்டியில் உள்ள அரசு மதுபானக் கடை மூடப்பட்டதால், மாங்கரை டாஸ்மாக் கடைக்கு தினம்தோறும் 500-க்கும் மேற்பட்டவர்கள் மது அருந்த வருகின்றனர். வார இறுதி நாட்களில் ஆயிரக்கணக்கானோர் கூடுகின்றனர். ஆள் அரவமற்ற வனப்பகுதி என்பதால், சாலையின் ஓரத்தில் அமர்ந்தே மது அருந்துகின்றனர். பாட்டில்களையும் காட்டுப் பகுதியில் உடைத்துவிட்டுப் போவதால், அவ்வழியே நடந்து வரும் யானைகள் பெரும் துன்பத்திற்கு ஆளாகின்றன. இதை புகைப்படங்களாக எடுத்துக் கொண்டு வன அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு போனார் புகைப்படக் கலைஞர் சூரஜ். இதற்கு வனத்துறை எந்த அக்கறையும் காட்டாததால், கோவையில் செயல்படும் சங்கமம் அமைப்போடு சேர்ந்து, ' யானை வழித்தடத்தை சுத்தம் செய்வோம்' என்ற முழக்கத்தை முன்னெடுத்தார் சூரஜ். நேற்று மட்டும் மாங்கரை வனத்தை சுத்தம் செய்யும் பணியில் 150-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் களமிறங்கினர். பொதுமக்களே நேரடியாகக் களம் இறங்கியதை வனத்துறையினர் எதிர்பார்க்கவில்லை.

 

சங்கமம் அமைப்பின் சூரஜ், இதுபற்றி நம்மிடம் விளக்கினார். " தினம்தோறும் அந்த வழியாகத்தான் சென்று வருகிறேன். மாங்கரையைக் கடக்கும் யானைகளின் கால்களில் பாட்டில் துண்டுகள் சிக்கி காயத்தை ஏற்படுத்துகின்றன. இதனால் செப்டிக்  ஏற்பட்டு யானைகளின் இறப்பிற்கும் ஒரு காரணமாக அமைந்துவிடுகின்றன. காடுகளுக்குச் சென்று மது அருந்துபவர்கள் வனவிலங்குகளின் வாழ்விடத்தைப் பற்றி அக்கறை கொள்வதில்லை. இதுபற்றி வனத்துறையினர் கவனத்திற்குப் புகார் கொண்டு சென்றாலும், அவர்கள் கண்டுகொள்வதில்லை. இந்த பூமியில் மனிதர்கள் வாழ்வதற்கு எவ்வளவு உரிமை இருக்கிறதோ, அதே போலத்தான் வனவிலங்குகளுக்கும். அவற்றின் வலசைப் பாதையில் பாட்டில்களை வீசிச் செல்வதைவிட கொடூரமான ஒரு செயல் இருக்க முடியாது.


ஒவ்வொரு நாள் காலையிலும் மாங்கரை வனப் பகுதியில் சிதறிக் கிடக்கும் மதுபாட்டில்களைக் கண்டால் மனம் மிகுந்த வேதனைப்படுகிறது. இவற்றை அப்புறப்படுத்த நாங்கள் சில பேர்தான் களத்தில் இறங்கினோம். எங்களுடைய முயற்சியைப் பார்த்துவிட்டு நூற்றுக்கணக்கான மக்கள் எங்களுக்குத் தோள் கொடுத்தனர். இதற்குக் காரணம், கோவையில் தொடர்ச்சியாக யானை மரணங்கள் ஏற்படுத்திய பாதிப்புகள்தான். நேற்று மட்டும் 600 கிலோ உடைந்த மதுபாட்டில்களை அப்புறப்படுத்தினோம். இன்று கோவை மாவட்ட கலெக்டர் ஹரிஹரனை சந்தித்து, ' மாங்கரை மதுபானக் கடையை அப்புறப்படுத்துங்கள்' எனப் புகார் மனு அளிக்க இருக்கிறோம். மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்காவிட்டால், பொதுமக்களே திரண்டு அந்தக் கடையை இழுத்து மூடுவார்கள்" என்றார் கொதிப்போடு. 

மாங்கரையில் மாற்றத்தைத் தொடங்கி வைத்திருக்கிறார்கள் மேற்குத் தொடர்ச்சி மலையின் மண்ணின் மைந்தர்கள். இதர வனப்பகுதிகளுக்கும் இந்த எழுச்சி பரவட்டும். 





Tuesday, 19 July 2016

திருமணத்தின் போதே வளர்ப்பு தந்தையான மணமகன்!

த்தியபிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்தவர் ஆதித்யா திவாரி. சாஃப்ட்வேர் என்ஜினியரான ஆதித்யாவுக்கு, 'திருமணத்திற்கு முன்னரே ஆட்டிசம் பாதித்த ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்க வேண்டும். அதன் மூலம் அந்த நோய் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும்' என்ற ஆசை இருந்தது.


ஆனால் மத்தியபிரதேசத்தில், 30 வயது இருந்தால்தான் குழந்தையை தத்தெடுக்க முடியும். திவாரிக்கோ வயது 28 தான் ஆகியிருந்தது. இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதத்தில், 25  வயது பூர்த்தி யடைந்திருந்தாலே, குழந்தையை தத்தெடுக்கலாம்  என சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டது. இதனைத் தொடர்ந்து  பின்னி என்ற ஒன்றரை வயது ஆட்டிசம் பாதித்த குழந்தையை  ஆதித்யா திவாரி தத்து எடுத்துள்ளார். தற்போதுதான் அதற்கான சட்டப்பூர்வ நடைமுறைகள் முடிவடைந்தன.  பின்னியின் பெயரை அவினேஷ் என மாற்றினார் திவாரி. தற்போது இவர்தான் நாட்டிலேயே இளவயது பேச்சிலர் தந்தை. 

முதலில் ஆதித்ய திவாரியின் முன்மாதிரியான முயற்சிக்கு, குடும்பத்தில் அனைவருமே முட்டுக்கட்டையாக இருந்துள்ளனர். 'உனக்கு யார் பொண்ணு தருவா... எந்த பெண் உன்னை கட்டிக் கொள்ள முன்வருவாள்' என்பது  போன்ற கேள்விகளை  திவாரி எதிர்கொள்ள வேண்டி இருந்தது. ஆனால் ஆதித்ய திவாரி முடிவில் உறுதியாக இருக்க, அவரது பெற்றோரும் மனம் மாறி விட்டனர். தன்னைத் திருமணம் செய்து கொள்பவர்  தன்னைப் போலவே அவினேஷ் மீது நேசம் காட்டுவாரா என்ற கவலை மட்டுமே அவருக்கு  இருந்தது. அவரது விருப்பத்தையும் மனதையும் புரிந்து கொண்ட பெண் ஒருவர், இப்போது அவினேஷை திருமணம் செய்து கொள்ள சம்மதித்துள்ளார். இவர்களது திருமணம் இன்று இந்தூரில் நடைபெற்றது.
இந்த திருமணத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆதரவற்றோர், ஆதரவற்ற குழந்தைகள் பங்கேற்றனர். ஆயிரத்துக்கு மேற்பட்ட தெருநாய்களும், சில விலங்குகளும்  கூட பங்கேற்றன. அனைவருக்கும் திருமண விருந்து வழங்கப்பட்டது.  திருமணத்தை முன்னிட்டு 100 மரக்கன்றுகள் நடப்பட்டன. திருமணத்துக்கு வந்த உறவினர்களிடம் இருந்து புத்தகங்களும் மருந்துகளும் மட்டுமே  பரிசாக பெறப்பட்டன. 

திருமணம் குறித்து ஆதித்யா திவாரி,'' திருமணம் என்ற பெயரில் ஆடம்பரமாக செயல்பட்டு பணத்தை வீணடிக்கின்றனர்.  உணவுகளுக்கு ஆடம்பரமாக செலவழிக்கின்றனர். எல்லோரையும் போல நான் இருக்க விரும்பவில்லை. எனது திருமணத்தின் அடையாளம்தான் இந்த பின்னி. டவுன் சின்ட்ரோம் என்ற பிறவி குறைபாடு கொண்டவன். எனது விருப்பத்தை என்னவளிடம் தெரிவித்த போது அவர் மகிழ்ச்சியோடு சம்மதித்தார். அதற்கு மேல் வேறு என்ன வேண்டும். இப்போது எங்களுக்கு பின்னிதான் முதல் மகன். எனது மனைவி என்னை விட அதிகமாக பின்னியை கேர் எடுத்துக் கொள்கிறார். ஒரு தந்தையாக எனக்கு வேறு என்ன வேண்டும்'' என மகிழ்ச்சியுடன் கூறினார்.


திருமணத்தன்று விவசாயிகளுக்கு தலா 20 ஆயிரம் நிதி  வழங்கிய தம்பதி
ஆந்திர மாநிலம் அமராவதியை சேர்ந்த  அபே  தீவாருக்கும் பிரீத்தி என்பவருக்கும் அண்மையில் திருமணம் நடைபெற்றது. வழக்கமாக திருமணத்தன்று மணமக்களுக்கு உறவினர்கள், நண்பர்கள்  பரிசு வழங்குவார்கள். ஆனால் அபே பிரீத்தி திருமணம் சற்று வித்தியாசமானது. தெலுங்கானாவில் வறட்சியால் ஏரானமான விவசாயிகள் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் தங்கள்  திருமணத்தை அர்த்தமுள்ளதாக மாற்றிக் காட்ட அபேவும் பிரீத்தியும் முடிவு செய்திருந்தனர்.
அதன்படி திருமணத்தன்று  10 விவசாயிகளுக்கு தலா 20 ஆயிரம் ரூபாயை தம்பதிகள் வழங்கினர். அடுத்து அமரவாதி பகுதியில் உள்ள 5 லைப்ரேரிகளுக்கு ரூ. 52 ஆயிரம் மதிப்புள்ள புத்தகங்கள் வழங்கப்பட்டன.  எளிமையான உணவு வகைகள் திருமண விருந்தில் இடம் பெற்றிருந்தன. கடன் வாங்கி ஆடம்பரமாக திருமணம் செய்ய வேண்டாமென்றும் எளிமையான திருமணமே நல்லது என்பதை அறிவுறுத்தும் வகையில் சிறப்பு பேச்சாளர்கள் திருமணத்தில் கலந்து கொண்டு பேசினர். 



Saturday, 16 July 2016

ஒரு பெருங்கனவின் மீதான தாக்குதல்...!

பியூஷின் கைதும், அதைத் தொடந்து அவர் மீது தொடுக்கப்பட்ட கடுமையான தாக்குதல் தொடர்பாகவும், அவரின் அக்கா ஊர்வசி லூனியா, இப்படி ஒரு பதிவை முகநூலில் பதிந்துள்ளார்- “எனக்கு தெரிந்து எங்கள் சமூகத்திலிருந்து  வந்த மிக தீவிரமான சமூக செயற்பாட்டாளர் அவர். நான் எப்போதும் அவரை ஆதரித்து இருக்கிறேன். ஆனால், இப்போது அது தவறோ என்று தோன்றுகிறது. ஆம், எந்த சுயநலமும் இல்லாமல் மக்களுக்காக குரல் கொடுத்த, நியாயத்தின் பக்கம் நின்ற ஒரு மனிதன், காவல் துறையால் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறார்.” என்பதாக அந்தப் பதிவு இருக்கிறது. 


இந்தப் பதிவை என்னால் சுலபமாக கடந்துச் செல்ல முடியவில்லை. ஆம். இது குறித்த ஒரு தீவிரமான உரையாடல் எனக்கும் பியூஷுக்கும் சில மாதங்களுக்கு முன் நடந்து இருக்கிறது.

அது ஒரு பனிப்பொழிவு காலம். தருமபுரியில் இருக்கும் அவரது கூட்டுறவு வனத்தில், வேளாண்மை சம்பந்தமான ஒரு நிகழ்வில் கலந்து கொள்ள நேர்ந்தது. பறவைகள் எல்லாம் தம் கூட்டிற்கு திரும்பிய பின்னர், அடர்த்தியான ஒரு இருட்டில், சுள்ளிகளால் மூட்டப்பட்ட ஒரு நெருப்பொளியில், அவருக்கும் எனக்குமான உரையாடல் ஓடைகளின் சலசலப்புகளுக்கு இடையே நிகழ்ந்தது.  

இயற்கையில் மூழ்குதல், நீதியை கடைப்பிடித்தல்:
நிச்சயமாக அவரிடமிருந்து இவ்வளவு தத்துவார்த்தமான பதில்கள் வருமென்று எதிர்பார்க்காமல்தான், நான் மிக சாதாரணமாக  அவரது அக்கா தற்போது குறிப்பிட்டுள்ள இந்த கேள்வியை அப்போதே கேட்டேன், 

ஏன் பியூஷ்... பொதுவாக மார்வாரிகள் யாரும் இவ்வளவு தீவிரமாக சூழலியல், இயற்கை வேளாண்மை, நீர் மேலாண்மை ஆகிய துறைகளில் இயங்குவதாக நான் அறிந்ததில்லை. உங்களுக்கு எப்படி இவ்வளவு ஆர்வம் வந்தது...?

 சிரித்தவாரே, “நான் ஆன்மா கரம் பிடித்து மட்டும்தான் நடக்கிறேன்... அதுதான் காரணமாக இருக்கும் என்று நினைக்கிறேன்” என்றார். 

புரியவில்லையே பியூஷ்...?

“பொதுவாக நம் உள்ளுணர்வு நமக்கு நல் வழியைதான் காட்டும். நியாயத்தின் பக்கம்தான் நடக்கச் சொல்லும். ஆனால், நாம் எப்போதும் அந்த உள்ளுணர்வின் குரலுக்கு செவிமடுக்க மறுக்கிறோம்.  நான் பிறந்த சமண மதம் உட்பட, அனைத்து மதங்களும் உள்ளுணர்விற்கு செவிக் கொடுங்கள் என்றுதான் சொல்கிறது. அந்தக் குரலை நாம் தொடந்து உதாசீனப்படுத்துகிறோம். நான் அந்த உள்ளுணர்வின் குரலை கேட்டேன்.”

அவரே தொடர்ந்தார், “நியாயத்தின் பக்கம் நிற்பது என்பது, நிச்சயம் நாம் மட்டும் சரியாக வாழவேண்டும் என்று அர்த்தம் அல்ல. அநீதிக்கு எதிராக குரல் கொடுப்பதுதான் அதற்கான சரியான பொருள். நான் அதை தான் செய்கிறேன். நீதியின் பக்கமே நிற்கிறேன்.”


சூழலியல் மீது பெருங்காதல் கொள்ள காரணம்...?

“உள்ளுணர்வு நம்முடன் எப்போதும் உரையாட வேண்டுமென்று விரும்பினால், நாம் இயற்கைக்கு முழுவதுமாக நம்மை அர்ப்பணிக்க வேண்டும். இயற்கையை சிதைக்காமல் இருக்க வேண்டும். அதுமட்டுமல்ல,  இயற்கையின் அழிவென்பது உண்மையாக நீதியின் அழிவு, நியாயத்தின் அழிவு.  இயற்கையை அழித்து முன்னேறலாம் என்று நம்பும் சமூகம், அனைத்தும் பேரழிவுகளையும் சந்தித்து இருக்கின்றன.

நாம் அமைதியாக, கலகங்களற்ற ஒரு சமூகத்தில் வாழ வேண்டுமென்றால், நீதியை காக்க வேண்டும். உண்மையில் நீதியை காப்பதும், இயற்கையை காப்பதும் வெவ்வேறானதல்ல.” என்றார் தத்துவம் கலந்த நடைமுறை அரசியலோடு. 

அவருக்கு ஒரு பெருங்கனவு இருந்தது:


வெறும் வறட்சியான போராட்டவாதியாக மற்றும் இல்லாமல், பியூஷ் எப்போதும் மாற்றத்தை முன்மொழிவராகவும் இருந்தார். காந்தி மீது அவருக்கு பெரும் பற்று இருந்ததா என்று தெரியாது. ஆனால், ஜே.சி. குமரப்பா, காந்தி போல் இயற்கையுடன் இயைந்த பொருளாதார தத்துவத்தை முன் வைத்தார். தத்துவ அளவில் மட்டுமல்லாமல், அவரே அதை சாத்தியம் ஆக்கியும் காட்டினார். 

நண்பர்கள் துணையுடன்,  வறட்சி மாவட்டமாக அறியப்பட்ட தருமபுரியில் ஏறத்தாழ 150 ஏக்கர் நிலங்களை வாங்கினார். வறண்ட அந்த நிலத்தில், ஏறத்தாழ ஒரு லட்சம் மரங்களையும், 20 நீர் நிலைகளையும் உண்டாக்கி, அதை வனமாக மாற்றினார்.  அந்த வனம் எப்போதும் சில பேரின் தனியார் சொத்தாக இருக்க அவர் விரும்பவில்லை.  அந்த வனத்தை எப்போதும், அனைவருக்காகவும் திறந்தே வைத்திருந்தார்.
இயற்கையின் மீதும், மாற்று பொருளாதாரத்தின் மீதும் காதல் கொண்டவர்கள் யார் வேண்டுமானலும் அங்கு சென்று வரலாம். இயற்கை சார்ந்த தொழில்கள் செய்ய விரும்பினால் செய்யலாம். 

இதைத்தாண்டி அவருக்கு ஒரு பெருங்கனவு இருந்தது. அது, அந்த வனத்தில் ஒரு சமூகத்தை உண்டாக்க வேண்டும் என்பது. இயற்கை சார்ந்த தொழில்கள் செய்யும், இயற்கைக்காக தன்னை அர்ப்பணித்துக் கொள்ளும்,  நீதிக்காக எப்போதும் குரல் கொடுக்கும் சமூகமாக அது இருக்க வேண்டும் என்று விரும்பினார். அதற்கான முயற்சிகளில் அவர் மிகத் தீவிரமாக இயங்கினார்.
உண்மையில் இது  தென் ஆப்பிரிக்கா ட்ரான்ஸ்வாலில் காந்தி உண்டாக்கிய டால்ஸ்டாய் பண்ணை போன்றதுதான்.

ஒரு பெருங்கனவு சிதைக்கப்படுகிறதா...?:
சமூகத்தில்  ஒரு செயற்பாட்டாளர்  கைது செய்யப்படுவது என்பது புதிதல்ல. ஆனால், அந்த செயற்பாட்டாளரை  முன்வஞ்சத்துடன் சிறையில் தாக்குவது என்பது, நிச்சயமாக ஜனநாயகத்தின் கழுத்தை நெரிக்கும் செயல் அன்றி வேறல்ல. ஒரு சமூகம் அமைதியாக, வளத்துடன் இயங்க வேண்டுமென்றால் அறிவார்ந்த பல கருத்துகளை கேட்பது அவசியம். ஆனால், எந்த கருத்தும் இருக்கக் கூடாது என்று நினைப்பது எந்த சமூகத்திற்கும் நல்லதல்ல. 

பியூஷ்  ஒரு மாதிரி சமூகத்தை உண்டாக்க விரும்பினார், சேலத்தில் இருந்த அனைத்து நீர் நிலைகளையும் மீட்டு, புனரமைக்க  வேண்டும்  என்று கனவு கண்டார். அதற்கான திட்டங்களை வகுத்து, அவர் முன்னோக்கி சென்று கொண்டிருந்தார். இந்த நிலையில் அவர் சிறையில் தாக்கப்பட்டார் என்ற செய்தி வருகிறது. 

உண்மையில் இது அவர் மீதான தாக்குதல் அல்ல.... ஒரு பெருங்கனவின் மீதான தாக்குதல்..!