Monetize Your Website or Blog

Wednesday, 16 March 2016

ஆணவக்கொலை: 'யாரைக்கேட்டு வீடியோவை வெளியிட்டீர்கள்...?'

டுமலையில் நடந்த சாதி வெறியாட்ட படுகொலை விவகாரத்தை, மீண்டும் விஸ்வரூபமெடுக்க விடாமல் அடக்கி வைக்கப்பதற்காக படாதபாடுபடுகின்றனர் போலீசார்.

சாதி மாறி காதலித்து, திருமணம் செய்தார் என்ற காரணத்துக்காக நூற்றுக்கணக்கானோரின்  முன்னிலையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார் உடுமலை கொமரலிங்கத்தைச் சேர்ந்த தலித் இளைஞர் சங்கர். அவரோடு அவரது காதல் மனைவி கவுசல்யாவும் தாக்குதலுக்குள்ளானார். படுகாயமடைந்த கவுசல்யா,  கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தலையில் வெட்டுக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட இவர், நினைவோடுதான் இருந்து வருகிறார்.


"கவுசல்யாவுக்கு அறுவை சிகிச்சை எதுவும் இப்போதைக்கு தேவையில்லை. அவர் தீவிர கண்காணிப்பில் இருக்கிறார்.  தேவைப்பட்டால் அறுவை சிகிச்சை செய்யப்படும். மற்றபடி அவர் நலமோடும், நல்ல நினைவோடும் இருக்கிறார்" என மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆனால், இவரை சந்திக்க கடந்த இரு தினங்களாக யாரையும் காவல்துறை அனுமதிப்பதில்லை. 2 இன்ஸ்பெக்டர் தலைமையில் 10 போலீசார் கவுசல்யா அனுமதிக்கப்பட்டுள்ள அறைக்கு பாதுகாப்பு பணிக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.

கணவரின் இறுதிச் சடங்கில் பங்கேற்க கவுசல்யா மன்றாடிய போதும் அதற்கும் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. தேவையில்லாத பதற்றத்தை தவிர்க்க என சொல்லப்பட்டாலும்,  இந்த பிரச்னையை இன்னும் பெரிதுபடுத்தாமல் இருக்க கவுசல்யாவை மற்றவர்கள் சந்திக்காதது நல்லது என போலீஸ் நினைக்கிறது. அதுதான் இருதினங்களாக யாரையும் சந்திக்க அனுமதிக்கவில்லை.

இன்று காலை பல்வேறு அமைப்பினர் கவுசல்யாவை சந்திக்க முற்பட,  அதற்கு போலீசார் மறுத்தனர். இதனால் அவர்கள் போலீஸாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து ஒருவர் மட்டும் அனுமதிக்கப்பட்டார். செல்போன் எதுவும் கொண்டு செல்லக்கூடாது என்ற நிபந்தனையுடன், போலீஸ் முன்னிலையில் பேச அவர்கள் அனுமதிக்கப்பட்டனர். அப்போது கவுசல்யா இந்த சம்பவத்துக்கு எனது அப்பா, அம்மாதான் காரணம் எனக் கூறியுள்ளார்.

இந்த கொலை சம்பவம் தேசிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்த சிசிடிவி வீடியோ காட்சிதான் காரணம். அது வெளியான உடனே போலீசார் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகினர். யாரைக்கேட்டு வீடியோவை வெளியிட்டீர்கள் என சிசிடிவி கேமராவை பொருத்திய வர்த்தக நிறுவனத்தினரை எச்சரித்தார்கள். அதன்பின்னர் உஷாரான போலீசார், எந்த வகையிலும் இந்த செய்தி மீண்டும் விஸ்வரூபமெடுக்க கூடாது என்பதால்தான், கவுசல்யாவை சந்திக்க அனுமதி மறுக்கப்படுகிறது. குறிப்பாக மீடியாக்களுக்கு.


அடுத்து,  இறந்த சங்கரின் உடலை தகனம் செய்து விட வேண்டும் என போலீசார் துடித்தனர். அதற்காக கோவை அரசு மருத்துவமனையில் இருந்து சங்கரின் உடலை வீட்டுக்கு கொண்டு செல்லாமல் எரியூட்டும் மயானத்துக்கு கொண்டு சென்றனர். ஆனால் உடலை எரியூட்ட விடாமல் போராடி,  உடலை மீண்டும் ஊருக்குள் கொண்டு சென்றனர் அப்பகுதி மக்கள். 'யாரைக்கேட்டு உடலை எரிக்க முயல்கிறீர்கள்? அடக்கம் தான் செய்ய வேண்டும்' என்றார்கள் மக்கள். சரி என போலீசார் ஒப்புக்கொள்ள, 'முதலில் குற்றவாளிகளை கைது செய்யுங்கள்;  அதன் பின்னர் அடக்கம் செய்யலாம்' எனச் சொல்ல அதிர்ந்து போனது போலீஸ்.

இரவு கடந்தும் நீண்டது போராட்டம். எப்படியாவது இரவுக்குள் அடக்கம் செய்து விட வேண்டும் என நினைத்தனர் போலீசார். ஐ.ஜி. உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சு நடத்தியும் எந்த பலனும் இல்லை. இனியும் தாமதித்தால் மீண்டும் போராட்டம் திசைமாறலாம் என நினைத்தார்களோ என்னவோ, இரவு 11 மணிக்கு தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்து, போலீசாரே உடலை அடக்கம் செய்ய இடுகாடுக்கு கொண்டு சென்றனர்.
உறவினர்களையும் அழைத்து சென்று, இறுதி சடங்கை நடத்தி முடித்த பின்னரே போலீசார் நிம்மதியடைந்தனர். தற்போதைய சூழலில் கவுசல்யா மீண்டும் பேசினால் அது பதற்றத்தை உருவாக்குமென்பதால் அவரை யாரும் சந்திக்க போலீசார் மறுத்து வருகின்றனர். 



No comments:

Post a Comment