Monetize Your Website or Blog

Wednesday, 6 April 2016

இவர்கள் என்ன தெருக் குழாயை சரி செய்யவா தாலிக் கொடியை அடகு வைத்தார்கள்..?




தெளிவாக சொல்லப்போனால் தேமுதிக உடைந்தே விட்டது. விஜயகாந்திற்கு அரணாக  விஜயகாந்தின் குரலாக இருந்த வி.சி. சந்திரகுமார், எஸ். ஆர் பார்த்திபன் உட்பட ஐந்து சட்டமன்ற உறுப்பினர்கள்,  மக்கள் நலக் கூட்டணியுடன் கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். அதற்கு அவர்கள் கூறும் காரணம்தான் பல கேள்விகளை எழுப்புகிறது. அந்த கேள்விக்கான பதில் நாம் அனைவரும் அறிந்ததுதான் என்றாலும். அந்த கேள்வி, இன்றைய அரசியலை அப்பட்டமாக படம் பிடித்து காட்டுவதாக உள்ளது. 

பணம் குவிக்கத்தானா பதவி...?:
"விஜயகாந்த் எங்களிடம் எந்த கருத்தையும் கேட்காமல், தன்னிச்சையாக முடிவு எடுத்துள்ளார். நாங்கள் கட்சிக்காக எல்லாவற்றையும் இழந்துவிட்டோம், பல கட்சிகாரர்களின் மனைவிமார்கள் தாலிக் கொடி கூட அடமானத்தில்தான் இருக்கிறது.  இந்நிலையில், தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி அதிமுகவிற்கு சாதகாமாகவே முடியும்" என்பது இந்த ஐந்து சட்டமன்ற உறுப்பினர்களின் வாதம். 
 
இவர்கள் இந்த வாதத்தை முன் வைப்பதன் மூலம் மறைமுகமாக சொல்லவருவது என்னவென்றால், “தேமுதிகவிற்காக, தம் செல்வத்தை இழந்த கட்சியினர் எப்போது சம்பாரிப்பது...? எப்போது இழந்த பணத்தை வட்டியுடன் திரும்ப பெறுவது...?” - இதைதான் இவர்கள் சொல்ல வருகிறார்கள். 

அதாவது, பணம் சம்பாதிக்கதான் கட்சி, பதவிகள் எல்லாம்... எங்களுக்கு மக்கள் நலனை விட பணமும், பதவியும்தான் முக்கியம் என்கின்றனர். 'இந்த கூட்டணி மூலம், எங்களால் பணம் சம்பாதிக்க முடியாது' என்கின்றனர்.  நான் மக்கள் நலக் கூட்டணியை உண்மையில் மக்கள் நலன் மீது அக்கறை கொண்ட கூட்டணி என்று சொல்லவரவில்லை. அது தங்கள் நலனுக்காக விஜயகாந்திடம் அனைத்தையும் அடமானம் வைத்த கூட்டணி. ஆனால், இவர்கள் அங்கிருந்து வெளியே வர அது மட்டும்தான் காரணமா...?


இவர்கள் என்ன தெருக் குழாயை சரி செய்யவா தாலிக் கொடியை அடகு வைத்தார்கள்..?

"கட்சிகாக தாலிக் கொடி கூட அடமானத்தில் இருக்கிறது" என்கிறார் சந்திரகுமார். இவர்கள் என்ன தெரு குழாயை சரி செய்தா, கட்சிக்கு பேர் வாங்கி தந்தார்கள். தன் தலைவனுக்காக தட்டிகள் வைக்கவும், பேனர்கள் வைக்கவும் தானே பணத்தை செலவு செய்தார்கள். அவர்களை பொறுத்தவரை, அது தங்கள் வளர்ச்சிக்கான முதலீடு. முதலீடு திரும்ப வராது என்கிற அச்சம் வந்தவுடன், தலைமையின் மீது சேற்றை வாரி இறைக்கிறார்கள், 

இவர்கள் எந்த தைரியத்தில் இப்படி செலவு செய்கிறார்கள். நாளை, நாம் விரும்பிய ஆட்சி அமையும். அவர்களுடன் இணக்கமாக இருப்பதன் மூலம், சாலை ஒப்பந்தம், கட்டட ஏலம் என எல்லாவற்றிலும் பங்கு கொள்ளலாம். சம்பாதிக்கலாம். இது மட்டும் தான் அவர்கள் நோக்கம். இதில் மக்கள் நலனோ, மக்கள் மீதான அக்கறையோ துளியும் இல்லை. 

சாமானியன் கவனித்து கொண்டிருக்கிறான்:

இதையும் உள்ளுக்குள் புழுங்கி கொண்டு, சாமானியன் மற்றொரு செய்தியாக கடந்து செல்வான். ஆனால், அவனுக்கு நிச்சயம் இன்றைய அரசியல் மீது ஒரு அவநம்பிக்கையும், விரக்தியும் வரும். இந்த அவநம்பிக்கைகள் பெரிதாகிக் கொண்டே போவது, நிச்சயம் என்றாவது ஒரு நாள் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். 


No comments:

Post a Comment