Monetize Your Website or Blog

Thursday, 11 February 2016

'இந்தியா பிரிட்டன் ஆட்சிக்குக் கீழ் இருந்திருக்க வேண்டும்!'- பொறுமி தீர்க்கும் ஃபேஸ்புக் இயக்குநர்!

ஃபேஸ்புக்கின் ஃப்ரீ பேசிக்ஸ் சேவைக்கு இந்தியத் தொலைத் தொடர்பு கட்டுப்பாட்டு ஆணையமான ட்ராய் அனுமதி அளிக்காதது குறித்து ஃபேஸ்புக்கின் இயக்குநர்களில் ஒருவரான மார்க் ஆண்ட்ரீசன் ட்விட்டரில் வெளியிட்ட கருத்து பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
இணையச் சேவைகள் வழங்குவதில் பயன்பாட்டுக்கு ஏற்ப கட்டணம் வசூல் செய்யும் முயற்சிக்கு ட்ராய் தடை உத்தரவு பிறப்பித்தது. இந்த நடவடிக்கை காலனியாதிக்கத்துக்கு எதிரான முடிவு என்றும், இந்தியா, பிரிட்டனின் ஆட்சிக்கு கீழே இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்றும் ஃபேஸ்புக் போர்டு உறுப்பினர் மார்க் ஆண்ட்ரீசன், அவரது கூட்டாளி பெனடிக்ட் ஆகியோர் தங்கள் ட்விட்டர் பதிவில் கூறியுள்ளனர். 

பிரிட்டன் ஆட்சிக்குக் கீழ் இருந்திருந்தால்...?

இந்தியாவில் தங்களுடைய திட்டம் ஒன்றை செயல்படுத்த முடியாமல் போனதற்காக இப்படி ஒரு கருத்தை வெளியிட்டது சரியா? உண்மையில் இந்தியா,  பிரிட்டனின் ஆட்சிக்குக் கீழ் பட்ட கொடுமைகளைக் கொஞ்சமும் கணக்கில் கொள்ளாமல் அவர் பேசியது கண்டித்தக்கது என்று நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கொதித்துக்கொண்டிருக்கின்றனர்.

எதற்காக இப்படி ஒரு கருத்து?

டிராய்,  ஃபேஸ்புக்கின் ஃப்ரீ பேசிக்ஸ் சேவையைத் தடை செய்ததன் மூலம், இந்திய மக்கள் அனைத்து இணையதளங்களையும் சமமாக பயன்படுத்தப்படக்கூடிய வாய்ப்பை தக்கவைக்கும் நெட் நியூட்ராலிட்டி கொள்கையை ஆதரிப்பதாக அமைந்ததுதான் இத்தகைய கொந்தளிப்புக்கு காரணம். 

இப்போது ஃபேஸ்புக்கின் இந்தத் திட்டத்திற்கு ட்ராய் அனுமதித்திருந்தால் அதற்குப் பின் ஒவ்வொரு வலைதளமும் இது போன்ற கட்டுப்பாடுகளை நடைமுறைத்தப்படுத்த முயற்சி செய்ய வாய்ப்புள்ளது. தற்போது இலவசமாக உள்ள சேவைகளையே, எதற்காக இலவச சேவை என்று வகைப்படுத்த வேண்டும் என்பது இந்த ஃப்ரீ பேசிக்ஸ் சேவையின் மிகப்பெரிய கேள்வி. அதற்கு எந்தத் தெளிவான பதிலையும் ஃபேஸ்புக் தரப்பு தெரிவிக்காத பட்சத்தில்,  ட்ராய் எடுத்துள்ள முடிவு மிகச் சரியானதே.

இந்தியா மீது ஏன் இந்த வெறுப்பு?

ஃபேஸ்புக்கின் மிகப்பெரிய சந்தையென்றால் அது இந்தியாதான். ஆனால் இங்கு தங்களுடைய திட்டம் தோல்வியடைந்துவிட்டதை அவர்களால் சகித்துக்கொள்ள முடியவில்லை. கோடி கோடியாகப் பணத்தைக் கொட்டி இதற்காக ஆதரவு தேடியது செய்தித்தாள்களைப் பார்த்தவர்களுக்குத் தெரியும். இதற்கு அனுமதி தரப்படவில்லை என்பதற்காக இத்தகைய வெறுப்பை இந்தியா மீது காட்ட வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது?

அதற்கு அவர்கள் அளித்துள்ள விளக்கத்தில், "இத்தகைய சேவைகளை ஆதரிக்காமல் இருப்பது காலனியாதிக்க எதிர்ப்பு நடவடிக்கை. இதனால் இந்தியாவின் பொருளாதாரம் சில பத்தாண்டு காலங்களாகச் சீரழிவை சந்தித்திருக்கிறது. இதுவும் சீரழிவை ஏற்படுத்தும் நடவடிக்கைதான். இந்திய அரசின் பொருளாதார தற்கொலை தீர்மானங்களின் நீண்ட வரிசையில் ஃப்ரீ பேசிக்ஸ் சேவைக்கு விதித்துள்ள தடையும் ஒன்றாகியுள்ளது. ஏழை மக்களுக்கு பகுதியளவேனும் இலவசமாக கிடைக்கக் கூடிய இணையதள தொடர்பை சில காரணங்களுக்காக மறுப்பது தவறான ஒன்று” என்று பதிவிட்டுள்ளார்கள்.


இண்டெர்நெட் வடிவில் மீண்டும் காலனியாதிக்கம்

இந்தக் கருத்துகளால் கொந்தளிப்படைந்துள்ள நெட்டிசன்கள் இதனை 'இண்டெர்நெட் வடிவில் மீண்டும் இந்தியாவில் காலனியாதிக்கம்' என்று சாடியுள்ளனர். பலரது கண்டனங்களுக்கும் சர்ச்சைகளுக்குப் பின்னரே ஆண்ட்ரீசன் தனது ட்விட்டர் பதிவை நீக்கினார், பிறகு அவர் விவாதத்திலிருந்து வெளியேறும் விதமாக, “இந்திய அரசியல், பொருளாதாரம் குறித்த எந்த வித எதிர்கால விவாதத்திலிருந்தும் நான் விலகுகிறேன், நீங்கள் தொடருங்கள்” என்று சொல்லிவிட்டு சென்றுள்ளார். 

இத்தோடு நிறுத்தப் போவதில்லையாம்

ட்ராய் தடை செய்தால் என்ன, யார் என்ன கண்டனம் தெரிவித்தால் என்ன, நாங்கள் இதனை சும்மா விட மாட்டோம். ஃப்ரீ பேசிக்ஸ் சேவையை இந்தியாவில் கொண்டு வர தொடர் முயற்சிகளில் ஈடுபடுவோம், அதுவரை ஓயமாட்டோம் என்றும் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க்கும் கூறியுள்ளார்.


No comments:

Post a Comment