Monetize Your Website or Blog

Wednesday, 20 July 2016

லஞ்சம் கொடுக்க பிச்சை எடுத்த மாற்றுத் திறனாளி – செஞ்சி வட்டாட்சியர் அலுவலக அவலம்


அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசலில் ஊனமுற்ற வாலிபர் பிச்சை எடுத்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்துள்ள மொடையூர் கிராமத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி. மாற்றுத் திறனாளியான இவர், நேற்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் வாயிலில் அமர்ந்து கொண்டு, 'அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டும்' எனச் சொல்லி,  தட்டுடன் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது. 

இதுகுறித்து பொன்னுசாமியிடம் பேசினோம்.


“நான் 90% கால்கள் ஊனமுற்றிருக்கும் மாற்றுத் திறனாளி. இதற்கான சான்றிதழ்களும் என்னிடம் உள்ளன. பதிவுமூப்பு அடிப்படையில்,  எனக்கு அரசு வேலை வாய்ப்பகத்திலிருந்து கிராம நிர்வாக உதவியாளர் பணிக்கு நேர்முக தேர்விற்கான அழைப்பு வந்தது. நானும் நேரில் சென்று, சான்றிதழ்கள் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பித்துவிட்டு வந்தேன். ஆனால் அதற்குப் பின் அது தொடர்பாக எந்த பணி ஆணைக் கடிதமும் எனக்கு வரவில்லை. இந்நிலையில் இரண்டாவது முறையாகவும்,  அதே பணிக்கு வேலை வாய்ப்பகத்திலிருந்து எனக்கு நேர்முகத் தேர்விற்கான அழைப்பு வந்தது. அப்போதும் நேரில் சென்று அந்தப் பணிக்குத் தகுதியான அனைத்துச் சான்றிதழ்களையும் சமர்ப்பித்துவிட்டு வந்தேன்.


ஆனால் இந்தமுறை இரண்டு நாட்கள் கழித்து,  அந்த அதிகாரிகளே எனது வீட்டைத் தேடி வந்தனர். அப்போது, 'மூன்று லட்சம் பணம் கொடுத்தால் இந்த வேலை உனக்கு கிடைக்க ஏற்பாடு செய்கிறோம். இல்லையென்றால் வேறு யாருக்காவது வழங்கிவிடுவோம்' என்றனர். 'எங்களால் இவ்வளவு பெரிய தொகையைக் கொடுக்க முடியாது' எனச் சொல்லி, நானும் எனது அப்பாவும் அவர்களது காலில் விழுந்து அழுதோம். ஆனால் அவர்கள்,  'கடனாவது வாங்கிக் கொடுங்கள், ஒரே வருடத்தில் நீங்கள் சம்பாதித்து விடலாம்' என்று கூறினர். 'சாப்பாட்டிற்கே வழியில்லாத எங்களுக்கு யார் இவ்வளவு பெரிய தொகையை கடனாக கொடுப்பார்கள்' என்று அழுதேன். அதற்கு, 'அதெல்லாம் எங்களுக்குத் தெரியாது. பிச்சை எடுத்தாவது எங்களுக்குப் பணம் கொடு. இல்லை என்றால் இந்த வேலை உனக்கு இல்லை' என்று கறாராக சொல்லிவிட்டார்கள். 

அதனால் நானும் வேறு வழியில்லாமல், பிச்சை எடுத்து கொஞ்சம் கொஞ்சமாக பணத்தைக் கொடுத்துவிடலாம் என்றுதான் பிச்சை எடுக்க அமர்ந்தேன். ஆனால் காவல்துறையினர் என்னை கலெக்டரை சந்தித்து முறையிடக் கூட விடாமல் மிரட்டுகிறார்கள்” என்றார் வேதனையுடன்.


மாற்றுத் திறனாளிகளிடம்கூட பணம் பறிக்கும் அளவிற்கா அதிகாரிகளின் மனம் மரத்துப் போய்விட்டது?


No comments:

Post a Comment