Monetize Your Website or Blog

Monday, 8 February 2016

அமைச்சர்களே உங்கள் மகன், மகள் நெற்றியில் இது போன்று ஸ்டிக்கர் ஒட்டுவீர்களா?

முதல்வர் ஜெயலலிதாவில் 68வது பிறந்த நாள் வருவதை முன்னிட்டு,உடுமலையில் 68 ஜோடிகளுக்கு அதிமுக சார்பில் இலவச திருமணம் நடைபெற்றது.  இந்த திருமண நிகழ்வுக்கு   துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமை வகித்தார். வனத்துறை அமைச்சர் ஆனந்தன் முன்னிலை வகித்தார். இந்த திருமணத்தில் 68 ஜோடிகள் திருமண அலங்காரத்துடன், தலையில் முதல்வர் படம் பதிக்கப்பட்ட கங்கணம் கட்டப்பட்டு மகிழ்ச்சியாக காட்சியளித்தனர்.  வசதியில்லாத ஏழை ஜோடிகளுக்கு இலவசமாக திருமணம் செய்து வைப்பது  நிச்சயமாக நல்ல விஷயம் என்பதை யாரும் மறுப்பதற்கில்லை.
ஆனால் தலைமை மீது உள்ள விசுவாசத்தை காட்ட, மணமக்களின் நெற்றியில் அம்மா ஸ்டிக்கர்  ஒட்டியதுதான் இப்போது சமூக வலைதளங்களுக்கு தீனியாகி விட்டது. நேற்றும் இன்றும் சமூக வலைதளங்களில் அந்த படங்கள்தான் சுற்றி சுற்றி வந்தன.  பலர்  ஏன் இது போன்று இவர்களிடம் போய் திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்று மணமக்களை விமர்சித்தாலும், மணமக்கள் மீது பரிதாபம் ஏற்படாமல் இல்லை.

ஏழ்மை நிறைந்த குடும்பத்தில் இருந்துதான் இந்த மணமக்கள் வந்திருப்பார்கள்.அந்த கட்சியினர் கொடுக்கும் சீர்வரிசை கூட குடும்ப வாழ்க்கையை தொடங்குவதற்கு உதவியாக இருக்கும் என்ற எண்ணமும். அதற்கு காரணமாக இருக்கலாம். அதனால்தான் இது போன்று கட்சியினர் நடத்தி வைக்கும் கூட்டு திருமணத்தில் வைத்து திருமணம் செய்து கொள்கின்றனர்.

ஆனால் அந்த கட்சியினரோ, மணமக்கள் சுயத்துடன் இருக்க வேண்டும். அவர்களுக்குரிய மண அலங்காரங்களுடன் இருந்தால் மட்டும் போதுமானது என்று கருதுவதில்லை என்பதற்கு  பொள்ளாச்சியார் தலைமையில் நடந்த இந்த ஒரு திருமண நிகழ்வே  உதாரணம். என்னதான் தாங்களே  பணம்  செலவு செய்து திருமணம் செய்து வைத்தாலும், ஒவ்வொரு மனிதனுக்கும் மனுஷிக்கும் ஒரு சுயமரியாதை உண்டு என்பதை உணராததன் விளைவுதான் இது.
மணமக்களின் நிலை அப்படி, அதனால்தான்திருமண ஜோடிகள் என்ற குறைந்த பட்ச மரியாதை கூட தருவதற்கு கட்சியினர் முன் வருவதில்லை. நாம் திருமணம் நடத்தி வைக்கிறோம் என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம் என்ற எண்ணத்தில்தான் இது போன்ற அநாகரீகமான செயல்களை செய்கின்றனர் என்றே தோன்றுகிறது. இதே திருமணம் தங்கள் மகனுக்கோ மகளுக்கோ நடந்தால் இது போன்று நெற்றியில்  ஸ்டிக்கர்களை ஒட்ட மனம் இருக்குமா?  அதனை பார்க்கத்தான் மனசு வருமா? அல்லது அப்படி ஸ்டிக்கர் ஒட்டப்பட்டால்,  உங்கள் கட்சி  தலைமைதான் விரும்புமா? 

ஆனால் ஏழைகளின் திருமணத்தை இப்படி நடத்தி வைத்த அதிமுகவினரை இப்போது யார் கண்டிக்கிறார்களோ இல்லையோ சமூக வலைதளங்கள் கடுமையாகவே  கண்டிக்கின்றன. இந்த திருமணத்தை வைத்து அதிமுகவினரை அப்படி நையாண்டி அடிக்கின்றன.

'' மாலையிலும் சட்டையிலும் சேலையிலும் எந்த ஸ்டிக்கரும் இல்லை பொறுப்பற்றவர்கள் எனவே திருமணத்தை நடத்தி வைத்தவர் மீது அதிமுக தலைமை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்கிறது ஒரு பதிவு.  'அங்க சுத்தி இங்க சுத்தி கடைசியில நெத்தியிலயே ஒட்டிட்டாங்க' என்கிறது இன்னொரு பதிவு. 'ஒட்டியதிலேயே இதுதான் டாப்பு' என்கிறது மற்றொரு பதிவு. 

சுயமரியாதையை விதைத்த பெரியார் பிறந்த மண் இதுவென்று இரு கழகங்களுமே மேடைக்கு மேடை முழங்கும். சுயமரியாதை திருமணங்கள் நடத்திக் காட்டிய மண் இதுவென்று  வாய் கிழிய மேடைக்கு மேடையும் கத்துவார்கள். அதே மண்ணில்தான் திருமண தினத்தன்று மணமக்களை சுய மரியாதையுடன் நடத்த வேண்டுமென்ற குறைந்த பட்ச நாகரீகம் தெரியாதவர்களும் இருக்கிறார்கள் !
 


No comments:

Post a Comment