வி.ஏ.ஓ. ஆக ஆசைப்பட்ட என் அண்ணன் வாழ்க்கையை சீரழித்து விட்டனர் என்று ராம்குமார் தங்கை மதுபாலா தெரிவித்து உள்ளார்.
சென்னை பொறியாளர் சுவாதி கடந்த மாதம் 24-ம் தேதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மர்ம நபரால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள தேன்பொத்தை மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராம்குமார் (22) என்பவரை போலீசார் கடந்த 1-ம் தேதி இரவு கைது செய்தனர்.
போலீசார் கைது செய்ய முயன்றபோது ராம்குமார் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். போலீசார் அவரை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அவரது பெற்றோர் மற்றும் சகோதரிகளையும் நெல்லைக்கு தனிப்படை போலீசார் அழைத்து வந்தனர். மேலும் ராம்குமாரின் பெற்றோரான பரமசிவன், புஷ்பம், தங்கை மதுபாலா ஆகியோரிடம் தனிப்படை போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராம்குமாரை கடந்த 3-ம் தேதி நீதிமன்ற அனுமதியுடன் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆம்புலன்சில் சென்னைக்கு அழைத்து வந்தனர். அப்போது அவரது பெற்றோர், சகோதரியையும் போலீசார் விசாரணைக்காக சென்னைக்கு அழைத்து வந்தனர்.
ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட ராம்குமார் குணமடைந்து தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நேற்று மாலை ராம்குமாரின் தாயார் புஷ்பம், தங்கை மதுபாலா ஆகியோர் மீனாட்சிபுரத்தில் உள்ள அவர்களது வீட்டிற்கு திரும்பி சென்றனர். ஆனால், ராம்குமாரின் தந்தை பரமசிவன், மற்றொரு தங்கை காளீஸ்வரி ஆகியோர் சென்னையில் தங்கியிருந்து ராம்குமாரை ஜாமீனில் எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்நிலையில், இந்த படுகொலை சம்பவம் குறித்து ராம்குமார் சகோதரி மதுபாலா கூறும்போது, ''ராம்குமாருக்கும், சுவாதி கொலைக்கும் சம்பந்தமே இல்லை. போலீசார் எப்படியோ எனது அண்ணனை இதில் சிக்க வைத்துவிட்டனர். அவர் குற்றவாளி இல்லை என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்போம். சந்தேகத்தின் பேரில் ராம்குமாரை பிடித்து விசாரித்தபோதே இவர்தான் உண்மை குற்றவாளி என்று போலீசார் புகைப்படத்தை வெளியிட்டு விட்டனர். பெண் என்றும் பாராமல், எங்கள் படத்தை வெளியிட்டு குடும்பத்தை அவமானப்படுத்தி விட்டனர்.
எங்கள் அண்ணன் வி.ஏ.ஓ. தேர்வில் பாஸ் செய்வதற்காக எப்போதும் புத்தகம் படித்து கொண்டுதான் இருப்பார். இப்போது அவரது வாழ்க்கையை சீரழித்து விட்டனர். அவன் உண்மை குற்றவாளி இல்லை என்று விரைவில் தெரியவரும்" என்றார்.
No comments:
Post a Comment