ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு அனுமதி அளிக்க வகை செய்யும் சட்டத்திருத்த மசோதாவுக்கு பீட்டா எனப்படும் விலங்குகள் நல அமைப்பு எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.
இதுதொடர்பாக பீட்டா அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ''ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் காளைகளை ஈடுபடுத்துவது, மாட்டு வண்டி பந்தயங்கள், விலங்குகளை மோத வைப்பது ஆகியவற்றை அனுமதிக்கும் சட்டத்திருத்த மசோதாவை நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் கொண்டு வரலாம்.
விலங்குகளை துன்புறுத்தக் கூடாது; விலங்குளை கண்ணியமாக நடத்த வேண்டும் ஆகியவை இந்தியர்களின் கலாசாரமாகும். விலங்குகளைப் பாதுகாப்பதற்கே பெரும்பாலான இந்தியர்கள் விரும்பும் வேளையில், விலங்குகள் வதைக்கு எதிராக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை புறக்கணிக்கும் வகையிலும், விலங்குகளைப் பாதுகாக்கும் சட்டங்களை பலவீனப்படுத்தும் வகையிலும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தொடர்ந்து முயன்று வருகிறது.
சர்க்கஸ் விளையாட்டுகளில் விலங்குகளைப் பயன்படுத்தவும், ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கும் பல்வேறு உலக நாடுகள் தடை விதித்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில், அவற்றுக்கு அனுமதி அளிப்பது, இந்தியாவை பிற்போக்கான, பழைமையான நாடாக உலகுக்கு காட்டும்.
ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் ஈடுபடுத்தப்படும் காளைகளைப் பாதுகாப்பதற்கு முறையான கட்டுப்பாடுகள் ஏதுமில்லாததால், அந்தப் போட்டிகளுக்குத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் கடந்த 2014 ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. அந்தத் தீர்ப்பை, சட்டத் திருத்தம் மூலமாக புறக்கணிப்பதற்கு மத்திய அரசு தீவிரமாக முயன்று வருகிறது" என்று கூறப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment