மெட்ராஸ் ஹைகோர்ட் , சென்னை ஹைகோர்ட் என பெயர் மாற்றப்படுவதற்கான ஒப்புதலை மத்திய அமைச்சரவை வழங்கி உள்ளது.
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இந்திய பெருநகரங்களில் 3 உயர்நீதிமன்றங்கள் கட்டமைக்கப்பட்டன. விக்டோரியா மகாராணியின் உத்தரவின்பேரில், 1861-ம் ஆண்டு இந்திய உயர் நீதிமன்றங்கள் சட்டத்தின் கீழ், மெட்ராஸ் உயர் நீதிமன்றம் , பம்பாய் உயர்நீதிமன்றம் , கல்கத்தா உயர் நீதிமன்றம் என இந்தியாவில் உள்ள 3 நகரங்களின் பெயரால்தான் நிறுவப்பட்டு, அதன்படி அழைக்கப்பட்டு வந்தது.
அந்த வகையில் மெட்ராஸ் உயர்நீதிமன்றம் , 1862-ம் ஆண்டு ஜூன் மாதம் 26-ம் தேதி முதல் செயல்பட தொடங்கியது. பம்பாய் உயர்நீதிமன்றம் அதே ஆண்டு ஆகஸ்டு 14-ம் தேதி முதல் இயங்க தொடங்கியது. கல்கத்தாஉயர் நீதிமன்றம் , 1862-ம் ஆண்டு ஜூலை மாதம் 1-ம் தேதி திறக்கப்பட்டது.
1996ம் ஆண்டு திமுக ஆட்சிக்காலத்தில் 'மெட்ராஸ்' சென்னை என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அதேபோல் பம்பாய் மும்பை எனவும், கல்கத்தா கொல்கத்தா என்றும் பெயர் மாற்றி அமைக்கப்பட்டது. அதனால், நகரங்களின் பெயர் மாற்றத்திற்குத் தகுந்தார்போல், நீதிமன்றங்களின் பெயர்களும் மாற்றியமைக்க வேண்டும் எனவும் கோரிக்கைகள் முன்மொழியப்பட்டன. இதுதொடர்பாக குடியரசு தலைவர், தலைமை நீதிபதிகள், அந்தந்த மாநில ஆளுநர்கள், முதலமைச்சர்கள் என அனைத்துத் தரப்பிலும் ஆலோசிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், மத்திய அமைச்சரவை 2வது முறையாக நேற்று மாற்றியமைக்கப்பட்ட நிலையில், நீதிமன்றங்களின் பெயர் மாற்றம் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
நீண்ட ஆலோசனைக்குப் பின், மெட்ராஸ் ஹைகோர்ட் சென்னை ஹைகோர்ட் எனவும், பம்பாய் ஹைகோர்ட் மும்பை ஹைகோர்ட் எனவும் கல்கத்தா ஹைகோர்ட் விரைவில் கொல்கத்தா ஹைகோர்ட் எனவும் பெயர் மாற்றம் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக, மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment