Monetize Your Website or Blog

Saturday, 9 July 2016

காஸ் மானியம் இனி இவர்களுக்கு கிடையாது..! அரசு வைத்த செக்


வங்கி மற்றும் காஸ் ஏஜென்சிகளிடம் செப்டம்பர் மாத இறுதிக்குள் ஆதார் எண் கொடுக்காவிட்டால் சமையல் காஸ் மானியம் ரத்து செய்யப்படும் என்று மத்திய அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள சமையல் காஸ் வாடிக்கையாளர்களுக்கு மத்திய அரசு மானிய விலையில் சமையல் எரிவாயு வழங்கி வருகிறது. ஆனால், சமையல் எரிவாயு வினியோகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடப்பது கண்டறியப்பட்டதை தொடர்ந்து, அதை முறைப்படுத்த மத்திய அரசு முடிவு செய்தது. 







அதன் அடிப்படையில், சமையல் எரிவாயு நேரடி மானியத் திட்டம் கடந்த ஆண்டு (2015) ஜனவரி மாதம் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின்படி, முதலில் வாடிக்கையாளர்கள் சமையல் எரிவாயுவை சந்தை விலையில் வாங்க வேண்டும். அதன் பின்னர், அதற்கான மானியத் தொகை வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். இதற்காக, தங்களது காஸ் ஏஜென்சியிடம் வாடிக்கையாளர்கள் வங்கி கணக்கு எண்ணை ஏற்கனவே அளித்துள்ளனர். இதற்கிடையே, வங்கி கணக்குடன் ஆதார் எண்ணையும் இணைப்பது கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு வலுத்ததை தொடர்ந்து, ஆதார் எண் கட்டாயம் இல்லை என்று அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், கடந்த வாரம் எண்ணை நிறுவனங்களுக்கு மத்திய அரசு புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதாவது, செப்டம்பர் மாதம் 30ம் தேதிக்குள் வங்கி மற்றும் காஸ் ஏஜென்சிகளிடம் ஆதார் எண் கொடுப்பவர்களுக்கு மட்டுமே சமையல் எரிவாயு மானியம் வழங்க வேண்டும் என்றும், ஆதார் எண் தராதவர்களுக்கு மானியத்தை நிறுத்த வேண்டும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.



அதனைத் தொடர்ந்து, ஆதார் எண் தராத வாடிக்கையாளர்களிடம் காஸ் ஏஜென்சி நிறுவனத்தினர் ஆதார் எண்ணை கேட்டு வருகின்றனர். இந்த மாதம் (ஜூலை) முதல் ஆதார் எண் தராதவர்களுக்கு மானியம் நிறுத்தப்பட்டுள்ளது. செப்டம்பர் 30ம் தேதிக்குள் அவர்கள் ஆதார் எண்ணை கொடுத்துவிட்டால், நிறுத்திவைக்கப்பட்டுள்ள மானியத் தொகையும் சேர்த்து வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். செப்டம்பர் மாதத்திற்கு பிறகு ஆதார் எண் சமர்ப்பிக்கப்பட்டால், இடைப்பட்ட காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மானியத்தொகை கிடைக்காது. எந்த மாதத்தில் அவர்கள் ஆதார் எண் கொடுக்கிறார்களோ, அதன் அடிப்படையிலேயே மானிய தொகை வரவு வைக்கப்படும்.


தமிழ்நாட்டை பொறுத்தவரையில் ஒரு கோடியே 62 லட்சம் சமையல் எரிவாயு வாடிக்கையாளர்கள் உள்ளனர். இதில், ஒரு கோடியே 55 லட்சம் பேர் சமையல் எரிவாயு மானியம் பெறுகிறார்கள். இவர்களில், 60 லட்சத்து 25 ஆயிரத்து 930 பேர் ஆதார் எண்ணை கொடுத்துள்ளனர். மீதமுள்ளவர்கள் இன்னும் ஆதார் எண்ணை வழங்கவில்லை. இந்த 3 மாதத்திற்குள் இவர்கள் ஆதார் எண்ணை வழங்காவிட்டால் சமையல் எரிவாயு மானியம் ரத்தாகிவிடும்.





No comments:

Post a Comment