சட்டப்பேரவைக்கு வந்து அமரும் வகையில் திமுக தலைவர் கருணாநிதிக்குப் போதுமான இருக்கை வசதி செய்து கொடுக்காமல், முதல்வர் ஜெயலலிதா சவால் விடுவதில் அர்த்தமில்லை என்று கனிமொழி எம்.பி. தெரிவித்து உள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. மகளிரணிக் கூட்டம் நடைபெற்றது. தி.மு.க மகளிர் அணி செயலாளரும், மாநிலங்களவை தி.மு.க. குழுத் தலைவருமான கனிமொழி எம்.பி. தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், தமிழகத்தில் மகளிருக்கு எதிராக நடைபெற்று வரும் குற்றங்கள் குறித்தும், உள்ளாட்சி தேர்தல் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்திற்கு பின் கனிமொழி செய்தியாளர்களிடம் பேசும்போது, ''தமிழகம் பாதுகாப்பு இல்லாத மாநிலமாக திகழ்வதாக ஆய்வு ஒன்று கூறுகிறது. பல வழக்குகளுக்கு இன்று வரை எந்த பதிலும் சொல்ல முடியவில்லை. ராமஜெயம் கொலை வழக்கில் 6 ஆண்டுகள் ஆகியும் இது வரை குற்றவாளிகளை காவல்துறை கண்டுபிடிக்கவில்லை.
காவல்துறை மானிய கோரிக்கையின்போது தி.மு.க. உறுப்பினர்கள் பேரவைக்குள்ளே இருக்கக் கூடாது என்பதற்காகதான், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ‘சஸ்பெண்டு’ செய்யப்பட்டுள்ளனர். தி.மு.க. உறுப்பினர்களை சட்டப்பேரவைக்குள் வைத்துக் கொண்டு விமர்சனம் செய்திருக்க வேண்டும். அப்படி செய்யாமல், எல்லோரையும் வெளியேற்றிவிட்டு விமர்சனம் செய்வதால் என்ன பயன்? மு.க.ஸ்டாலினை பேரவையில் வைத்து கொண்டு மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடத்துவதற்கு அ.தி.மு.க. அரசுக்குத் தைரியம் இல்லை.
மேலும், தி.மு.க. தலைவர் கருணாநிதி சட்டசபைக்கு வரவேண்டும், பேரவைக்கு வந்து பேச கருணாநிதிக்கு துணிச்சல் உண்டா என்று கூறும் முதல்வர் ஜெயலலிதா, அதற்கான வழிவகைகளைச் செய்தவதற்குத் தயாராக இல்லை. கருணாநிதிக்கு போதுமான இருக்கை வசதி செய்து தரப்படவில்லை. கருணாநிதியின் வாகனம் வருவதற்கான வழி முறைகளை செய்ய இந்த அரசு தயாராக இல்லை. அதனால், சவால் விடுவதில் அர்த்தம் இல்லை" என்றார்.

No comments:
Post a Comment