Monetize Your Website or Blog

Thursday, 16 June 2016

சட்டசபையில் கருணாநிதிக்கு சிறப்பு இருக்கை ஒதுக்க இதுதான் காரணம்!

ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு தமிழக சட்டசபையில் திமுக தலைவர் கருணாநிதி பங்கேற்கும் வசதியாக 2ஆம் வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது.

2011 சட்டப்பேரவை தேர்தல் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைந்தது. திருவாரூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கருணாநிதிக்கு சட்டப்பேரவை இருக்கை வசதி செய்யப்படவில்லை. சபாநாயகரிடம் திமுக கோரிக்கை வைத்தும் ஐந்து ஆண்டுகளாக அது கிணற்றில் போட்ட கல்லாகவே கிடந்தது. இதனால், சட்டப்பேரவை கூடும் நேரத்தில் ஒரு நாள் வருகை தரும் கருணாநிதி, வருகை பதிவேட்டில் கையெழுத்து போட்டு செல்வது கடந்த ஆண்டில் வாடிக்கையாக இருந்தது. 







இந்த நிலையில், 2016 சட்டப்பேரவை தேர்தலிலும் அதிமுக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைந்தது. கடந்த மே 23ம் தேதி முதல்வர் ஜெயலலிதா பதவியேற்கும் விழா சென்னை நூற்றாண்டு மண்டபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் திமுக சட்டப்பேரவை தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். ஆனால் அவருக்கு முன்வரிசை ஒதுக்கப்படவில்லை. பின்வரிசையில் ஸ்டாலினுக்கு இருக்கை ஒதுக்கப்பட்டது. இதற்கு, கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, முதல்வர் ஜெயலலிதா ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில், "ஸ்டாலினை அவமதிக்கும் எண்ணமில்லை. இது என் கவனத்துக்கு வரவில்லை. ஸ்டாலின் வருவது முன்கூட்டியே தெரிந்திருந்தால் அவருக்கு முன்வரிசையில் இருக்கை ஒதுக்க ஏற்பாடு செய்திருப்பேன்" என்று கூறியிருந்தார்.



இதையடுத்து, கடந்த மே 25ம் தேதி சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்றுக்கொண்ட நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, தி.மு.க. தலைவர் கருணாநிதி சக்கர நாற்காலியில் வந்து, முன் வரிசையில், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் இருக்கைக்கு அருகே அமர்ந்திருந்தார். இந்த நிலையில், சட்டப்பேரவையில் கருணாநிதிக்கு சிறப்பு இடம் ஒதுக்கித் தர வேண்டும் என்று தி.மு.க. தரப்பில் சபாநாயகர் தனபாலிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. பதவி ஏற்பு நிகழ்ச்சியின்போது அவர் அமர்ந்திருந்த இடத்தை ஒதுக்க வேண்டும் என்று கோரப்பட்டது.

இந்த கோரிக்கை ஏற்கப்பட்டு இரண்டாம் வரிசையில் கருணாநிதிக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவரின் இருக்கைக்கு பின்புறம் இரண்டாம் வரிசையில் முதல் இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது. 

இதுபற்றி அதிகாரி ஒருவர் கூறுகையில், "எதிர்க்கட்சித் தலைவர் இருக்கைக்குப் பின்பு உள்ள இரண்டாம் வரிசையின் முதல் சீட் அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. சக்கர நாற்காலியில் அமர்ந்து, அவை நடவடிக்கையில் கலந்துகொள்ளும் அளவுக்கு வசதி செய்து தரப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்தார்.






No comments:

Post a Comment