Monetize Your Website or Blog

Tuesday, 3 May 2016

தமிழக தேர்தல்... இறுதி வேட்பாளர் பட்டியலில் எத்தனை பேர் தெரியுமா?

தமிழக சட்டசபை தேர்தலில் 3,794 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில், முதலவர் ஜெயலலிதா போட்டியிடும் ஆர்.கே.நகர் தொகுதியில் அதிகபட்சமாக 45 பேர் களத்தில் உள்ளனர்.


தமிழக சட்டசபைக்கு வருகின்ற 16-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 22-ம் தேதி தொடங்கி 29-ம் தேதி வரை நடைபெற்றது. இதில், ஆண்கள் 6 ஆயிரத்து 352 பேர், பெண்கள் 795 பேர், மூன்றாம் பாலினத்தவர் 4 பேர் என மொத்தம் 7 ஆயிரத்து 151 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். வேட்பு மனு பரிசீலனை கடந்த 30-ம் தேதி நடைபெற்றது.


அப்போது தேர்தல் அதிகாரி மற்றும் மத்திய பார்வையாளர் முன்னிலையில் வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டன. பெரும்பாலான மனுக்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நபர்கள் முன்மொழியாதது, தேர்தல் கட்டணம் செலுத்தாதது என்பன உள்பட பல்வேறு காரணங்களினால் தள்ளுபடி செய்யப்பட்டன. மேலும் அங்கீகரிக் கப்பட்ட வேட்பாளர்களுக்காக தாக்கல் செய்யப்பட்ட மாற்று மனுக்கள் தானாகவே தள்ளுபடி ஆயின. அதன்படி 3 ஆயிரத்து 19 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 4 ஆயிரத்து 132 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

வேட்பு மனுக்கள் வாபஸ் நேற்று காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெற்றது. அதன் முடிவில் 336 பேர் வாபஸ் பெற்றனர். அதைத் தொடர்ந்து இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி, 234 தொகுதிகளிலும் மொத்தம் 3 ஆயிரத்து 794 பேர் போட்டியிடுகின்றனர். அவர்களில் ஆண்கள் 3 ஆயிரத்து 472 பேர். பெண்கள் 320 பேர். மூன்றாம் பாலினத்தவர் 2 பேர் ஆவார்கள்.


இதில் அதிகபட்சமாக முதலமைச்சர் ஜெயலலிதா போட்டியிடும் ஆர்.கே.நகர் தொகுதியில் 45 பேரும், குறைந்தபட்சமாக மயிலாடுதுறை, கூடலூர், ஆற்காடு ஆகிய தொகுதிகளில் தலா 8 பேரும் போட்டியிடுகின்றனர். மேலும், தி.மு.க. தலைவர் கருணாநிதி போட்டியிடும் திருவாரூர் தொகுதியில் 15 பேரும், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் போட்டியிடும் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதியில் 25 பேரும், பா.ம.க. முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் போட்டியிடும் தருமபுரி மாவட்டம் பென்னாகரம் தொகுதியில் 15 பேரும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் போட்டியிடும் காட்டுமன்னார்கோவில் (தனி) சட்டமன்ற தொகுதியில் 10 பேரும் போட்டியிடுகின்றனர்.


கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 2 ஆயிரத்து 748 பேர் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் 3 ஆயிரத்து 794 பேர் போட்டியிடுகின்றனர். சுயேச்சை வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கும் பணி அந்தந்த தொகுதி தேர்தல் அதிகாரி முன்னிலையில் நடைபெற்றது. இதற்காக தேர்தல் கமிஷன் ஏராளமான சின்னங்களை கைவசம் வைத்துள்ளது. அதிலிருந்து சுயேச்சைகள் விருப்பமான சின்னங்களை தேர்ந்தெடுத்தனர். ஒரே சின்னத்துக்கு இரண்டு பேர் போட்டியிட்டால் குலுக்கல் மூலம் சின்னம் ஒதுக்கப்பட்டது. அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவு பெற்ற கட்சிகளுக்கு ஏற்கனவே சின்னங்கள் ஒதுக்கப்பட்டு விட்டன.

மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் முதலில் அகர வரிசைப்படி அங்கீகரிக்கப்பட்ட கட்சி வேட்பாளர்களின் பெயர்களும், அதைத் தொடர்ந்து பதிவு பெற்ற கட்சி வேட்பாளர்களின் பெயர்களும் அதன்பின்னர் சுயேச்சை வேட்பாளர்களின் பெயர்களும் இடம் பெறும். 234 தொகுதிகளிலும், இறுதி வேட்பாளர் பட்டியல் நகல் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. இதைத்தொடர்ந்து ஒவ்வொரு தொகுதியிலும் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.



No comments:

Post a Comment