
டெல்லி விமான நிலையத்தில், தி.மு.க எம்.பி.யான திருச்சி சிவாவை, அ.தி.மு.க எம்.பி. சசிகலா புஷ்பா கன்னத்தில் அறைந்ததாக வெளியான தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியிலிருந்து சென்னைக்கு செல்ல தி.மு.க எம்.பி திருச்சி சிவாவும், அ.தி.மு.க எம்.பி சசிகலா புஷ்பாவும் இன்று பிற்பகல் விமான நிலையத்துக்கு வந்தனர். அப்போது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஒருவொருக்கொருவர் ஒருமையில் பேசிக் கொண்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து விமான நிலைய காவலர்கள் இருவரையும் சமரசப்படுத்தினர். இதனால் இருவரும் பயணத்தை ரத்து செய்து விட்டு, மீண்டும் டெல்லியில் உள்ள தங்களது வீட்டிற்கு சென்று விட்டனர்.
இந்த சம்பவம் குறித்து சசிகலா புஷ்பாவிடம் கேட்டோம். "விமான நிலையத்தில் நான் வந்த போது, அங்குள்ள காவலர்களிடம் அம்மாவையும் (ஜெயலலிதா) தமிழக அரசையும் சிவா கிண்டலடித்துக் கொண்டு இருந்தார். இதனால் எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது. அவரது கன்னத்தில் ஓங்கி நான்கு முறை அறைந்தேன். இதற்குள் அங்குள்ளவர்கள் இருவரையும் விலக்கி விட்டனர். இந்த சம்பவத்துக்குப்பிறகு டெல்லியில் உள்ள என்னுடைய வீட்டை அடித்து நொறுக்கியுள்ளதாக எனக்கு தகவல் வந்தது. இதனால் பயணத்தை ரத்து செய்து விட்டு அவர்களுக்கு பதிலடி கொடுக்க உள்ளேன்" என்றார்.
திருச்சி சிவாவிடம் பேசிய போது, "செக்கிங் பாயிண்ட்டில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்த விஷயத்தை பெரிதுப்படுத்த வேண்டாம்" என்றார்.
இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:
Post a Comment