Monetize Your Website or Blog

Saturday, 14 May 2016

ஜெயலலிதா 10... அறிந்ததும் அறியாததும்!

றுக்கமான முதலமைச்சர், கட்சி நிர்வாகிகளுக்கு தூரத்து இடிமுழக்கம், நிருபர்கள் நெருங்க முடியாத அரசியல்வாதி என்பது ஜெயலலிதாவைப் பற்றிய பொது பிம்பம்.
அவரின் இன்னொரு உலகம், அவருக்கானது. நாம் அறிந்த, அறியாத 'அம்முவின்' சில பக்கங்கள் இங்கே...
 
1. ஜெயலலிதாவின் அம்மா சந்தியா, பெங்களூருவில் ஸ்டெனோவாக பணிபுரிந்தவர். எப்போதும் அம்மாவின்  புடவையைப் பிடித்துக்கொண்டு தூங்கும் குட்டிப்பெண் அம்முவான ஜெயலலிதாவை ஏமாற்ற, அந்தப் புடவையை அவர் வேறொரு பெண்ணுக்குக் கட்டிவிட்டுக் கிளம்பிவிடுவார். 

2. ஜெயலலிதாவின் பள்ளி நாட்களில் அவருக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட் வீரர்,  நாரி கான்ட்ராக்டர். 'நான் அவரைப் பார்ப்பதற்காகவே டெஸ்ட் மேட்ச்களுக்குப் போயிருக்கிறேன்' என ஜெயாவே சொல்லியிருக்கிறார். அவருக்கு மிகவும் பிடித்த நடிகர், ஷமி கபூர்.
3. ஜெயலலிதா நல்ல பாடகி. 'அடிமைப் பெண்' படத்தில், 'அம்மா என்றால் அன்பு' என்று எம்.ஜி.ஆருக்குத் தாலாட்டுப் பாடிய குரல், இவருடையதே. இந்தியில் 'சோரி சோரி' படத்தின் 'ஆஜா சனம் மதுர்' பாடல் ஜெயாவுக்கு பிடித்த அல்டிமேட் சாங். ஓய்வு நேரங்களில் இருக்கும் போது முணுமுணுப்பார். 
4. படிப்பில் செம கெட்டி. சர்ச் பார்க் கான்வென்ட்டில் பள்ளிப் படிப்பை முடித்தவருக்கு கல்லூரி செல்ல அவ்வளவு ஆசை. ஆனால், அவர் அம்மா அவரைப் படத்தில் நடிக்கக் கட்டாயப்படுத்தினார். அழுது, அடம் பிடித்த ஜெ., பிறகு கண்ணீரைத் துடைத்துவிட்டு அரிதாரம் பூசிக்கொண்டார். சென்னை, ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் ஒரே ஒரு நாள், ஆசைக்காக வகுப்பில் அமர்ந்துவிட்டு, கல்லூரிக் கனவுக்கு பைபை சொல்லிவிட்டார். 
5.  நடிக்கத் தொடங்கியதும் ஜெயலலிதாவின் சினி கிராப் தடதடக்க ஆரம்பித்தது. சில வருடங்களிலேயே அப்போது முன்னணியில் இருந்த சரோஜா தேவியை பின்னுக்கு தள்ளிவிட்டு, தென்னிந்தியப் பெண் சூப்பர் ஸ்டார் ஆனார். 1960களில் அதிக சம்பளம் வாங்கிய நடிகை இவர்தான்.  
6. 'நான் யாரையும் பார்த்து நடிப்பதில்லை. பிறப்பிலேயே நான் ஒரு நடிகை' எனச் சொல்லியிருக்கிறார் ஜெயலலிதா. வசனத்தை ஒரே வாசிப்பில் மனப்பாடம் செய்துவிடும் நடிகைகளில் இவர்தான் முதலாமவர். 'நடிப்புக்கு இலக்கணம்' என கருணாநிதியால் பாராட்டப்பட்டவர்.

7. ஹீரோயின் ஜெயலலிதாவுக்கு சொந்த கார் வாங்க நிறைய ஆசை. கையில் காசு சேர்ந்ததும், அம்மாவின்  அம்பாஸடர் காருக்கு விடைகொடுத்துவிட்டு, செகண்ட் ஹேண்ட் ப்ளைமவுத் காரை வாங்கினார். அந்தக் காரின் பதிவு எண்  MSX 3333. அந்தக் காலகட்டத்தில் அவர் வாங்கிய காண்டஸா கார், இன்றும் அவரிடம் உள்ளது. 
8. எம்.ஜி.ஆர்  இறுதி ஊர்வலத்தில் ஒரு பெண்ணாக ஜெயலலிதா சந்தித்த அவமானங்களின் வீடியோப் பதிவு காட்சிகள், சென்னை தூர்தர்ஷன் அலுவலக  அறையில் இன்றும் தூங்கிக்கொண்டிருக்கிறது. எம்.ஜி.ஆரின் இறுதிச் சடங்கு முடிந்த உடன் கலங்கிப்போன ஜெ., போயஸ் தோட்ட 'வேதா நிலையம்' வீட்டுக்குள் வேகமாக நுழைந்து, தன் அறையைப் பூட்டிக்கொண்டார். நான்கு மணி நேரம் கழித்து வெளியே வந்த ஜெயலலிதா, அதன் பின் எடுத்தது அரசியல் விஸ்வரூபம்.
9. தமிழக சட்டசபை 'மாண்புமிகுக்களால்' பெரிதும் அவமானப்பட்டவர் ஜெயலலிதா.  அப்போதைய திமுக ஆட்சியின்போது  சட்டசபைக்குள்  தனி மனுஷியாகப் பிரவேசித்து, முதல்வர் கருணாநிதி மற்றும் மூத்த அமைச்சர்களை கேள்விக்கணைகளால் திணறடித்தார்.
10. பெரும்பாலும் பத்திரிகையாளர்கள் சந்திப்புக்கு தடா சொல்பவர் ஜெயலலிதா.

2004-ல் பிபிசி-யின் மூத்த பத்திரிகையாளர் கரண் தாப்பருடன் நடந்த நேர்காணலில் அவர் கேட்ட கேள்விகளில் கோபமானவர், 'உங்கள் பேட்டி முடிந்துவிட்டதா? வேறு ஏதாவது கேட்க வேண்டுமா? இந்தப் பேட்டி எனக்கு மோசமான அனுபவத்தையே தந்துள்ளது' என முகத்துக்கு நேராகச் சொல்லிவிட்டு, காலர் மைக்கை தூக்கிவீசிவிட்டுச் சென்றுவிட்டார். 

No comments:

Post a Comment