சசிகலா புஷ்பாவின் தாயார் முன்ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டுள்ள சசிகலா புஷ்பா எம்.பி.யின் வீட்டில் இளம்பெண் பானுமதி, அவருடைய சகோதரி ஜான்சிராணி ஆகிய 2 பேரும் வேலை செய்தனர். அந்த சமயத்தில் சசிகலா புஷ்பா குடும்பத்தினர் தங்களுக்கு பாலியல் உள்ளிட்ட பல்வேறு தொந்தரவுகள் கொடுத்ததாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறும் தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை மகளிர் காவல் நிலையத்தில் பானுமதி, ஜான்சிராணி ஆகியோர் ஒரு புகார் மனு அளித்தனர்.
அந்த புகாரின்பேரில் போலீசார் சசிகலா புஷ்பா, அவருடைய கணவர் லிங்கேஸ்வரன், மகன் பிரதீப்ராஜா, சசிகலா புஷ்பாவின் தாயார் கவுரி ஆகிய 4 பேர் மீதும் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், கொலை மிரட்டல், பாலியல் தொந்தரவு உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் 4-வது எதிரியாக சேர்க்கப்பட்டு உள்ள கவுரி, முன்ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், ''சென்னை அண்ணாநகரில் உள்ள சசிகலா புஷ்பாவின் வீட்டில் வேலை செய்தபோது பானுமதி, ஜான்சிராணி ஆகியோர் தப்ப முயன்றதாகவும், அப்போது அவர்களை தாக்கி, மொட்டையடித்து வெற்றுத்தாள்களில் கையெழுத்து வாங்கியதாகவும் என் மீது புகார் செய்து உள்ளனர். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே இந்த புகார் கொடுக்கப்பட்டு உள்ளது. நான் சாத்தான்குளத்தை அடுத்த முதலூரில் அமைதியாக வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். என் மீது கூறப்பட்டு உள்ள குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை. அதனால், இந்த வழக்கில் இருந்து எனக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்" என்று கூறி உள்ளார்.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

No comments:
Post a Comment