Monetize Your Website or Blog

Monday, 8 August 2016

சிறையின் அடையாளத்தை மாற்றும் ஒரு சலூன்!


கேரளா சிறையில், சிறைக்கைதிகள் நடத்தும் சலூன் வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.


கண்ணூர் மாவட்டச் சிறையில், கைதிகள் நடத்தும் சலூன் தொடங்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த சலூன் சிறைக்கைதிகள் நடத்தும் சலூன் போலவேத் தெரியாது. ' ஃப்ரீடம் எக்ஸ்பிரஸ்சன்ஸ்' என்ற பெயருடன் முற்றிலும் குளிர்சாதன வசதியுடன் ஒரு ஹைகிளாஸ் சலூனாகத்தான் காட்சியளிக்கும்.

கண்ணூர் சிறையில், உள்ள கைதிகளுக்கு 'ருட்சி' என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம் கைத் தொழில் பழகுவதற்கு பயிற்சி அளித்தது.  சிறையில் நன்னடத்தை கொண்ட கைதிகள் 30 பேர் தேர்வு செய்யப்பட்டு  அவர்களுக்கு முடி திருத்தும் பயிற்சி வழங்கப்பட்டது.
கடந்த பிப்ரவரி மாதத்தில் முதல் கட்ட பயிற்சி முடிந்தது.  வெளியேபோய் வேலை செய்து கொள்ளட்டும் என சிறை நிர்வாகம் சும்மா இருந்துவிடவில்லை. உடனடியாக அவர்களது திறமையை வெளிக் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டது. 

இதையடுத்து கண்ணூர் சிறையின் வெளி சுவரையொட்டி நவீன வசதிகளுடன் சலூன் ஏற்படுத்தப்பட்டது. தற்போது இந்த சலூனில், ஷிப்ட் அடிப்படையில் கைதிகள் முடி திருத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்த சலூன் திறக்கப்பட்டது. காலை 9 மணிக்கு திறக்கப்படும் இந்த சலூன்,  மாலை 5.30 மணிக்கு மூடப்பட்டு விடும். மற்ற  சலூன்களில் ரூ.80 முடி திருத்தும் கட்டணம் என்றால், இங்கு 50  ரூபாய்தான் கட்டணம்.அதுமட்டுமல்ல, திருமணம் போன்ற விழாக்களுக்கும் சிகையலங்காரப் பணியும் இங்கு மேற்கொள்ளப்படுகிறது. 
சிறைக்கைதிகள் நடத்தும் சலூனுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.சிறைக்கைதிகளின் கதையை கேட்டுக் கொண்டே, முடிவெட்டவும் வாடிக்கையாளர்கள் ஆர்வம் செலுத்துகின்றனராம்.  தினமும் இந்த சலூனுக்கு 75 வாடிக்கையாளர்கள் வரை வருகின்றனர்.


இதில் கிடைக்கும் வருமானத்தில், 50 சதவீதத்தை கைதிகள் வீட்டுக்கு அனுப்புகின்றனர். 25 சதவீதம் சிறைக் கேண்டீன் செலவுக்காகவும் 25 சதவீதம்  சலூனில் பணியாற்றும் கைதிகள் விடுதலையாகும்போது கையில் கொடுக்கத் திட்டமிடப்பட்டு உள்ளது. 

இந்த சலுனின் ரெகுலர் வாடிக்கைளாயராகிவிட்ட விமானப்படை ஊழியர் பிரவீன் என்பவர் கூறுகையில், ''இங்கு பணியாற்றுபவர்கள்  அர்ப்பணிப்பும், கடைமையுணர்வுடனும்  பணியாற்றுவதை பார்த்து நான் தொடந்து இங்கே வரத் தொடங்கினேன்.
அவர்களிடத்தில் நீங்க என்ன தப்பு செஞ்சுட்டு வந்தீங்கனு கேட்க வாய் வரும். ஆனால், ஏற்கனவே சிறையில் வாடும் அவர்களிடம் இதுபோன்று கேட்டு மனதை நோகடிக்க நான் விரும்பவில்லை, அதனால், அப்படி ஒரு கேள்வியை மறந்தும் நான் கேட்க விரும்பவில்லை" என்றார்.

கேரளத்தில் சிறைக்கைதிகள் நடத்தும் சலூன் பற்றி பத்திரிகைகளில் செய்தி வெளியாக, ஏராளமான வாடிக்கைளர்களை இந்த சலூன் கவர்ந்துள்ளது. வெகுதொலைவில் இருந்துகூட வாடிக்கையாளர்கள் இங்கே வந்து முடிவெட்டிச் செல்கிறார்கள்.

இங்கு பணியாற்றும் ஷாகுல் ஹமீத் என்ற ஆயுள் தண்டனைக் கைதி, ''சிறையில் உள்ள மற்றக் கைதிகள் இப்போது எங்களைப் பார்த்துப் பொறாமைப்படும் அளவுக்கு நாங்கள் வேலையில் அக்கறைக் காட்டுகிறோம்.


வெளி உலகைப் பார்க்கிறோம். வெளி மனிதர்களுடன் பழகும் சந்தர்ப்பமும் எங்களுக்கு கிடைத்துள்ளது. உண்மையில் மாலையில் சலூனை அடைக்கும்போது, நான் அப்படியே துவண்டுப் போகிறேன். சிறை வாழ்க்கை அத்தனை கொடுமையானது" என்கிறார்.

No comments:

Post a Comment