Monetize Your Website or Blog

Tuesday, 29 March 2016

யூகங்களுக்கு என்னிடம் பதில் இல்லை! கழுவும் மீனில் நழுவும் ஜி.கே.வாசன்

ரசியல் களம் அதகளமாகியுள்ள நிலையில், த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் மட்டும் கூட்டணி முடிவை அறிவிக்காமல் மௌனம் காத்து வருகிறார். கடந்த 26-ம் தேதியன்று வாசனின் அலுவலகத்தில் அவரைச் சந்தித்தோம். நாம் கேட்ட பல கேள்விகளுக்கும் பிடிகொடுக்காமல் மிகச் சாதுர்யமாக நழுவினார்.  

“சட்டப்பேரவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை எப்போது அறிவிக்க உள்ளீர்கள்?” 

“எந்தக் கட்சியுடன் கூட்டணி என்பதை இந்த மாத இறுதியில் அறிவிக்க உள்ளேன். நாங்கள் எந்தக் கட்சியுடன் கூட்டணி அமைக்கிறோமோ, அந்தக் கூட்டணி உறுதியாக வெற்றி பெறும்.”

“தேர்தலில் த.மா.கா முன்வைக்கும் முழக்கங்கள் என்ன?”  


“மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் வகையில் செயல்படுவோம். கல்வி, சுகாதாரம் போன்றவற்றை மேம்படுத்தும் வகையில் எங்களுடைய முழக்கங்கள் அமையும்.”

“நீங்கள் அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைக்கப்போவதாகக் கூறப்படுகிறதே?”

“கூட்டணி குறித்து அதிகாரபூர்வமாக முடிவு செய்யும்போது, உறுதியான அறிவிப்பு வெளியாகும். யூகங்களுக்கு நான் இடம் கொடுக்க விரும்பவில்லை. தேர்தல் வரும்போது பல கட்சிகள் தங்களது கொள்கைக்கு இணக்கமான கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவது இயல்புதான். பேச்சுவார்த்தையின் இறுதியில்தான் எந்தக் கட்சியுடன் கூட்டணி என்பது தெரியவரும். யூகங்களின் அடிப்படையில் வரும் தகவலை நான் விரும்பவில்லை. கூட்டணி அமைப்பதில் என்ன முறைகளை மற்ற கட்சிகள் பின்பற்றினவோ, அதே வழிமுறைகளைத்தான் நாங்களும் பின்பற்றுகிறோம்.”

“இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிடும்படி அ.தி.மு.க கூறியதாகவும், நீங்கள் தயங்குவதாகவும் கூறப்படுகிறதே?”

“கூட்டணியை முடிவு செய்யும்முன்பு, இது போன்ற எந்த யூகங்களுக்கும் என்னிடம் பதில் இல்லை.”

“த.மா.கா-வின் சைக்கிள் சின்னம் உங்களுக்கு மீண்டும் கிடைப்பதில் என்ன சிக்கல் இருக்கிறது?”

“தேர்தல் ஆணையத்தில் இருந்து கடிதம் பெற்றபிறகு அது குறித்து அறிவிப்போம். எங்களுக்குச் சின்னம் ஒதுக்குவது தொடர்பாக தேர்தல் ஆணையம் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.”
“1996-சட்டமன்றத் தேர்தலில்  த.மா.கா-வுக்கு  ஆதரவு தெரிவித்தவர் நடிகர் ரஜினிகாந்த். இந்த தேர்தலில் அவருடைய ஆதரவைக் கோருவீர்களா?”

“எங்கள் கட்சியின் கூட்டணியே இன்னும் முடிவாகாத நிலையில், ரஜினிகாந்த்தின் ஆதரவைக் கோருவதுபற்றி நான் கருத்துக்கூற விரும்பவில்லை.”

“தி.மு.க-காங்கிரஸ் கூட்டணிபற்றி உங்கள் கருத்து?”

“ஒவ்வொரு கட்சியும், அவர்கள் அமைக்கும் கூட்டணி வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில்தான்  கூட்டணி அமைத்து வருகின்றனர். அது  வெற்றிக்கூட்டணியா என்பதை மக்கள்தான் முடிவு செய்வார்கள்.” 

“அ.தி.மு.க கூட்டணி வெற்றி பெறும் என்று கருதுகிறீர்களா?” 

“இது தேர்தல் காலகட்டம். மக்கள் எந்தக்  கூட்டணியை விரும்புகிறார்களோ, அந்தக் கூட்டணியே வெல்லும். கூட்டணியை நாங்கள் முடிவு செய்யாதபோது இன்னொரு கூட்டணியைப் பற்றிக் கருத்துச் சொல்ல முடியாது.” 

“மக்கள் நலக் கூட்டணி பற்றி என்ன நினைக்கிறீர்கள், அவர்கள் உங்களை அழைத்தார்களா?”


“மக்கள் நலக் கூட்டணித் தலைவர்கள் மக்களைச் சந்தித்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மக்களின் நம்பிக்கையைப் பெறுவார்களா  என்பது தேர்தல் நடந்து முடிந்து வாக்கு எண்ணிக்கையின் போதுதான் தெரியவரும். அவர்கள், கடந்த ஒன்றாம் தேதியன்று  என்னிடம் பேசிவிட்டுப் போனார்கள். கூட்டணிக்கு வரும்படி அழைப்பு விடுத்தனர். ‘என்னுடைய சுற்றுப்பயணம் முடிந்து, இறுதியில் என்முடிவுபற்றித் தெரிவிப்பேன்’ என்று கூறியிருக்கிறேன்.” 
 
“எப்போதும் இல்லாத வகையில் தேர்தலில் பலமுனைப் போட்டி நிலவுவது பற்றி உங்கள் கருத்து என்ன?” 

“கூட்டணி முடிவாகவில்லை. தொகுதிகள் உடன்பாடு ஏற்படவில்லை. எண்ணிக்கை உறுதி செய்யப்படவில்லை. இப்படி சில கட்சிகள் தங்கள் நிலைப்பாட்டை உறுதி செய்யாத நிலையில், தேர்தல் கணிப்பு பற்றிக் கருத்துக்கூறுவது கடினம்.”

கழுவுகின்ற மீனில் நழுவும் மீன்!


No comments:

Post a Comment