Monetize Your Website or Blog

Wednesday, 9 March 2016

சூரிய கிரகணம் அன்று கர்ப்பிணி பெண்கள் வெளியே வரலாமா?

கிரகணம் என்றாலே, இயல்பாகவே அனைவருக்கும் ஏதோ ஒரு வகையில் அச்சம் கூடிக்கொள்கிறது. அதுவும் சூரிய கிரகணம் என்றால் அழிவு, ஆபத்து, தீய சக்தியின் உக்கிர தாண்டவம் என்றெல்லாம் சிலர் பேசி வருகிறார்கள். உண்மையில்  சூரிய கிரகணம், மனிதனுக்கு பேராபத்தைதான் தருகிறதா? என்பது குறித்து விளக்கம் அளிக்கிறார் சாஸ்த்திர சம்பிரதாயங்களை அறிந்த சென்னை காளிகாம்பாள் கோயில் சண்முக சிவாச்சார்யார். 

அறிவியல் சொல்லும் விளக்கம்:

" சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலவு செல்லும் போது, சந்திரனின் பகுதி சூரியனை விட பெரிதாக காட்சியளிக்க கூடிய அளவு பூமிக்கு அருகில் வர வேண்டும். அப்படி இருந்தால், அதுவே சூரிய கிரகணம். இது ஒரு அமாவாசை நாளன்று தான் ஏற்படுகிறது. இதனால், சூரியன் முழுவதுமோ அல்லது ஒரு பகுதியோ மறைக்கப்படும். புவியைப் பொருத்தவரை ஓர் ஆண்டில் இரண்டிலிருந்து ஐந்து வரையிலான சூரிய கிரகணங்கள் ஏற்படக்கூடும். ஒருமுறை முழு சூரிய கிரகணம்  உண்டான அதே இடத்திலேயே, மீண்டும் தோன்ற ஏறத்தாழ 375 ஆண்டுகள் ஆகும். முழு சூரிய கிரகணகங்கள், இரண்டு அல்லது மூன்றாண்டுகளுக்கு ஒருமுறையே நிகழ்கின்றன. இது அறிவியல் பூர்வமானது. 


அதேபோல், சூரிய கிரகணம் நிகழ்ந்து சரியாக இரு வாரங்களில் சந்திர கிரகணம் நிகழும். அடுத்த சந்திர கிரகணம் மார்ச் 23 ல் நிகழ இருக்கிறது. 

மார்ச் 9ம் தேதி இந்திய நேரப்படி தமிழகத்தில் அதிகாலை 6.23 முதல் 6.49 வரை 27 நிமிடங்கள் மட்டுமே சூரிய கிரகணம் நிகழ இருக்கின்றன. இந்தியாவின் பிற மாநிலங்களில் குறிப்பிட்ட சில மாநிலங்களில் மட்டுமே காணமுடியும். முழு கிரகணத்தை இந்தோனேஷிய தீவுகளான சுமத்ரா, போர்னியோ, சுலவேசி மற்றும் சில பசுபிக் கடல் பகுதிகளில் 100 சதவீதமும், இந்தோனேஷியா, மலேசியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் 50 சதவீதமும் காண முடியும். 

சாஸ்த்திரங்கள் சொல்லும் ரகசியம்: 


சூரிய கிரகணம் ஏற்படும் அமாவாசை நாளில், சூரியன்-சந்திரன், பூமி ஒரே நேர்கோட்டில் இருக்கும்போது, சூரிய கிரகணம்  ஏற்படுகிறது.  இதில் கிரகண நேரத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு கிரகண தோஷம் ஏற்படுகிறது என்பது, பொதுவான ஜோதிட கணிப்பாக இருக்கிறது. அதாவது, சூரியன்-சந்திரன் இரண்டிலிருந்தும் வெளிச்சம் வராமல், ராகு அல்லது கேது மறைப்பதையே கிரகணம் என்று சாஸ்த்திரங்கள்  கூறுகின்றன.
ராகு மறைக்கும்போது ராகு க்ரஷ்தம் என்றும், கேது  மறைக்கும்போது கேது க்ரஷ்தம்  என்றும் சாஸ்த்திரங்கள் கூறுகின்றன பொதுவாக கிரகண தோஷம் கெடு பலன்களைத் தான் தரும் என்பார்கள். சூரிய கிரகண தோஷம்தான் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும் சொல்வதுண்டு. 

கிரகண தோஷத்தால் ஏற்படும் பாதிப்புகள்:

சூரியனின் ஒளி வீச்சு பூமி மீது பதியாமல் தடைபடுகிற பொழுது, இயற்கையில் சில மாற்றங்கள் தானாகவே நிகழ்ந்துவிடுகின்றன. இதில், நல்லதை விட கெடுதலே அதிகம் நடக்கிறது. 

கர்ப்பிணிப் பெண்களுக்கு பேராபத்து:

கிரகணம் நிகழும்பொழுது பொது ஜனங்களை விட, கர்ப்பிணி பெண்களே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். கர்ப்பிணிப் பெண்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வராமல் இருப்பதே அவர்களுக்கு சிறப்பு. அப்படியே வெளியே வந்து வெளி வெளிச்சம் பட்டால், கர்ப்பத்தில் இருக்கும் குழந்தையைப் பாதிக்கக்கூடிய  சில கதிர் வீச்சுகள் தாக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறன. அதன் காரணமாக பிறக்ககூடிய குழந்தைகளுக்கு சில மாறுதல்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. 

கிரகணத்தில் என்ன செய்யலாம்:

கிரகணத்தில் இருந்து தப்பிக்க சாஸ்த்திரங்கள் சில தற்காலிக ஆலோசனைகளை வழங்குகிறது. அதன்படி, புண்ணிய நதிகளில் ஸ்தானம் செய்யலாம். தானங்கள் வழங்கலாம். முன்னோர்கள் குறித்து தர்பனம் செய்யலாம். அல்லது வீட்டில் உள்ள பூஜை அறையில் தெய்வ சிந்தனையுடன் சாமி கும்பிடலாம். அல்லது பூஜை செய்யலாம். சுப்ரபாதம், விநாயகர் துதி ஆகியவை பாடலாம்.  கிரணகத்துக்கு முன்பு முன்பும், பின்பும் வீட்டை கழுவிவிட்டு நாமும் குளிக்க வேண்டும். 

கோயில்களின் நிலை:

சூரிய கிரகணத்தை முன்னிட்டு, திருப்பதி ஏழுமலையான் கோயில் 9 மணி நேரம் நடை சாத்தப்படுகிறது.  தமிழகத்தில் பழனி, திருச்செந்தூர் உள்ளிட்ட எல்லா கோயில்களும் குறிப்பிட்ட நேரங்களுக்கு நடை சாத்தப்படுகின்றன. அதனால், அன்று வழக்கம்போல் நடைபெறும் பூஜைகள் தனியாக நடைபெறும். பொது ஜனங்கள், வீட்டில் இருந்தபடியே தெய்வத்தை வணங்குவது அனைவருக்கும் சிறப்பு. கிரகணம் நிகழ்ந்ததற்கு பின்பு, கோயில்கள் முழுவதுமாக கழுவி விடப்பட்ட பிறகு, புண்ணிஹவாசனம் நடத்திய பின்தான், கோயில் நடை திறக்கப்படும்.  

கிரகணத்தில் என்ன செய்யக்கூடாது:


சூரிய கிரகணத்தை நேரடியாக காணக்கூடாது. சமயல் செய்ய கூடாது. முக்கியமாக சாப்பிடக்கூடாது. தண்ணீர் அருந்தக்கூடாது. நகம் கிள்ளக் கூடாது. எந்த வேலையும் செய்யக்கூடாது.

இது ஒரு புண்ணிய காலம்:

நாம் அஜாக்கிரதையாக இருந்தால், ஏதேனும் தீய பலன்கள் ஏற்படுமே அன்றி, நாம் விழிப்புணர்வுடன் இருப்போமேயானால், நமக்கு பல அறிய பலன்களை அளித்து, நமது வாழக்கைக்கு மிகப்பெரிய வெற்றிகளை தரும் காலமாக கனிந்து நிற்கும்."

இங்கு நடைபெறும் எல்லாமே இயற்கையின் படியே நடக்கிறது. நாமும் அதன்வழியே நடப்போம். இழப்புகளில் இருந்து நம்மை, நாமே மீட்போம். 


No comments:

Post a Comment