Monetize Your Website or Blog

Thursday, 18 February 2016

'ஏற்றம் இறைத்தும் விவசாயத்தில் லாபம் பார்க்கலாம்!' - நம்பிக்கை விவசாயி!

நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கும் அடிப்படையாகத் திகழ்வது வேளாண் தொழில். இதில் மின்சார  பற்றாக்குறை,  இடுபொருட்கள் விலை உயர்வு,  பருவநிலை மாற்றம், நிலத்தடி நீர் மட்டம் குறைவு, விளைபொருட்களுக்கான விலை குறைவு போன்றவற்றால் விளை நிலங்களெல்லாம் விலை நிலங்களாக மாற்றப்பட்டு வருகிறது. மேலும்,  தற்போது பூதாகரமாக வெடித்துள்ள காவிரி நீர், மீத்தேன், சேல் கேஸ்  குழாய் பதிப்பு போன்ற பிரச்னைகள்  வேளாண் தொழிலின் எதிர்காலத்தை கேள்விக் குறியாக்கியுள்ளது.

இத்தகைய பிரச்னைகளையும் எதிர்கொண்டு,  நீர்மட்டம் குறையக் குறையவிடாப்பிடியாக ஆயிரம் அடிக்கு அப்பாலும் ஆள்துளையிட்டு அதிலிருந்து தண்ணீரை வெளிக்கொணர்ந்து விவசாயம் செய்து,  தங்களுக்கும் தங்களை அழிக்க நினைக்கும் கார்ப்பரேட் கம்பெனி முதலாளிகளுக்கும்
உணவு கொடுத்து கொண்டுதான் இருக்கிறார்கள் விவசாயிகள்.

விவசாயத்தில் இயந்திரமயமாக்கலும், நவீன தொழில்நுட்பங்களும் அதிகரித்தவண்ணமாகவே  இருந்தாலும் எங்கு தண்ணீரின்றி ஆயிரம் அடி ஆழத்துக்குமேல் ஆழ்துளை கிணறு 
அமைக்கப்பட்டிருக்கிறதோ அப்பகுதியே  வறட்சி பூமி.
புதுக்கோட்டை மாவட்டத்தில் தண்ணீர் இறைக்க மிகவும் பழமையான முறையை பின்பற்றி  விவசாயம் செய்யும்  மழவராயன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கருப்பன் என்ற கருப்பையா(78) விடம் பேசினோம். 
"கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு  40அடி ஆழத்துக்கு கிணறு வெட்டினோம். மழை காலத்துல  கிணறு முழுக்க தண்ணீர் நிரம்பிடும்.  அதை ஏற்றம் (இரண்டு மாடுகளை பூட்டி  கிணற்றில் இருந்து  தண்ணீரை இறைக்கும் சாதனம்) மூலம்  தண்ணீர் இறைத்து விவசாயம் செய்கிறோம். வழக்கமாக பருவமழை  காலத்துல ஐப்பசி மாதத்திலேயே கிணறு நிரம்பிடும்.அதனால் ஒரு ஏக்கரையும் நெல்சாகுபடி செய்வோம். ஆனா, இந்த வருடம் தாமதமா நிரம்பியதால சோளம் விதைச்சு பயிர் 2 அடி உயரத்துக்கு வளர்ந்திருச்சு.

கருக்கல் பொழுதுல (அதிகாலை)  மாடுகளை பூட்டினோமுன்னா ஒரு மணி, இரண்டுமணி நேரத்துல தண்ணீர் இறைச்சிடுவோம். கடந்த 10 வருடங்களுக்கு முன்னாடி 14 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கின  ஒரு ஜோடி மாடு,   இன்றைக்கும்   எங்க குடும்பத்துக்காக உழைக்குது.

இந்த மாடுகளை வித்துப்புட்டு வேறமாடு வாங்கலாம். ஆனா, இப்பல்லாம் மாடுகளை உழவு, வண்டி இழுக்குறது மட்டும்தான் பழக்கிவச்சுருப்பாங்க.  ஏற்றத்துல தண்ணீர் இறைக்கத் தெரியாது. மற்ற வேலைமாதிரி ஏனோ தானோன்னெலாம் தண்ணீர் இறைச்சுடமுடியாது.  இரண்டு மாடும் கிணற்றுக்கரையிலிருந்து ஒரேமாதிரி  முன்னோக்கி போகணும். அதேபோல பின்னோக்கி ஒரே மாதிரி வரணும். பழகிட்டா அதுக்கே தெரியும்.   கொஞ்சம் பிசகுனாலும்  சிக்கல்தான். வருடத்துக்கு 6 மாதம்  2 போகம் விவசாயம் செய்வோம். அப்புறம் மானாவாரியா  உளுந்து, பயறை வீசிப்போட்டா விளையும்.

காலையில தண்ணீர் இறைச்சாலும், இறைவை இல்லாவிட்டாலும்  ஏர்கலப்பை எடுத்தும், மாடுகளை ஓட்டி கூலிக்கு உழவுக்குப்போனா ஒரு நாளைக்கு ரூ.500 வரை கிடைக்கும். வேலை இல்லாத நாட்களில் தரிசுல கட்டிவிட்டா  மாடு மேஞ்சுடும். சொந்தவேலையை பார்க்க வேண்டியதுதான்.  வயலுக்கு தேவையான அளவு குப்பை சேர்ந்திடும்.

நமக்கிட்டையே சொந்தமா மாடு, கலப்பை இருப்பதால உழவு கூலி கிடையாது, தண்ணீருக்கு செலவழிக்கத் தேவையில்லை. அதனால,  விவசாயத்துல பெருசா   நட்டம் வந்துடாது,  வந்ததும் இல்லை.  முழுசா போனாலுமே விதையும், உழைப்பும்தானே போகுமே தவிர குடும்பத்தை  மோசமாக்கிடாது.  

அதை வச்சுத்தான்  எங்க அப்பாகாலத்துல இருந்தே குடும்பத்தை ஓட்டுறோம். எங்க ஊருலயும் நிறையபேரு  மாடுகளை வச்சு பராமரிக்கமுடியாம  கிணத்துல டீசல் மோட்டார் வச்சுத் தண்ணீர் பாய்ச்சுறாங்க.  போர் போட்டு விவசாயம் செய்யுறாங்க. விலை கொடுத்தெல்லாம் டீசல் வாங்கி ஊத்தி  விவசாயம் செஞ்சா கட்டுபடியாகாது.    
விவசாயத்துல நிதானம், அனுபவம் இல்லாம ரொம்பவும் ஆடம்பரத்தைக் காட்டினா இருக்குற நிலத்தையும் இழந்துட்டுப் போகவேண்டியதுதான்" என்றார். 
பழமையான முறையை கொண்டு விவசாயம் செய்வதை படிப்படியாக புறந்தள்ளி வரும் நிலையில்,   இன்னமும்பழமையை வைத்து சாதிக்கும் விவசாயிகளும் இருக்கத்தான்செய்கிறார்கள்.


No comments:

Post a Comment