மகாபலிபுரம் அருகே இருந்த ஆந்திர கோயிலுக்கு சொந்தமான நிலத்தை விற்றதில் ஊழல் நடந்திருப்பதாகக்கூறி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுக்கு எதிராக, ஜெகன்மோகன் ரெட்டி சென்னையில் போராட்டம் நடத்த உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சென்னையை அடுத்த, பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள சத்தியபாமா கல்லூரிக்கு பின்னால், 89 ஏக்கர் நிலம் இருந்தது. காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு தாலுக்கா, தாழம்பூர் கிராம முகவரியில் இந்த நிலம் வருகிறது. குண்டூர் மாவட்டத்தில் உள்ள புதிய தலைநகரமான அமராவதியின் நுழைவாயிலில் உள்ள அமிர்தலிங்கேஸ்வர சாமி கோயிலுடன் தொடர்புடைய சடாவர்த்தி சத்திரத்துக்கு சொந்தமான நிலம் அது.
ஆரம்ப காலத்தில் 690 ஏக்கர் நிலம் இருந்ததாம். படிப்படியாக சென்னை வி.ஐ.பி.கள் பலரும் இந்த நிலத்தை ஆக்கிரமித்து ஸ்வாகா பண்ணிவிட்டார்களாம். ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்டுத்தரும்படி தமிழக அரசிடம், கடந்த 15 வருடங்களாக ஆந்திர மாநில அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்தவண்ணம் இருக்கிறார்கள். அடிக்கடி சென்னைக்கு விசிட் செய்து, மனுகொடுத்துவிட்டுப் போவார்களாம்.
இந்த நிலையில், சந்திரபாபு நாயுடு தலைமையில் ஆந்திராவில் புது அமைச்சரவை பதவி ஏற்றது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு, ஆக்கிரமிப்பு போக எஞ்சியிருந்த 89 ஏக்கர் நிலத்தை ஆந்திர அரசின் சார்பில் ஏலம் விட்டிருக்கிறார்கள். பல கோடி ரூபாய் மதிப்புள்ள அந்த நிலத்தை, சில லட்சங்களுக்கு விலை போனதாக சொல்லியிருக்கிறார்கள். இதைக்கேட்டு கொந்தளித்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி , ஆந்திராவில் இதுதொடர்பாக பிரஸ்மீட் நடத்தி, இந்த நிலம் ஏலம் விடப்பட்டதில் ஊழல் நடந்துள்ளதாக சந்தேகப்படுவதாக சொன்னார்.
அடுத்தகட்டமாக, அந்த நிலத்தின் இன்றைய சந்தை மதிப்பு என்ன...? எவ்வளவு குறைவாக அந்த நிலம் விற்கப்பட்டிருக்கிறது? அரசுக்கு எவ்வளவு நஷ்டம்? பணம் பலன் அடைந்த வி.ஐ.பி.கள் யார் என்பதையெல்லாம் விசாரித்து அறிய சென்னைக்கு வர உள்ளார்.
நில விவகாரத்தின் முழு தகவல்களை சேகரித்துக்கொண்டு, அன்றைய தினமே சென்னையில் பத்திரிகையாளர்களை சந்திக்கவும் திட்டமிட்டிருக்கிறாராம் ஜெகன்மோகன் ரெட்டி . ஒருவேளை அவரால் வரமுடியவில்லை என்றால், கட்சியின் சீனியரான தரமனா பிரசாத ராவ் வர இருக்கிறாராம்.

No comments:
Post a Comment