Monetize Your Website or Blog

Friday, 17 June 2016

கருணாநிதி, ஸ்டாலின் இடையே கருத்து வேறுபாடா..? கற்பனைக் கதை என்கிறார் கனிமொழி!

தி.மு.க தலைவர் கருணாநிதி, மு.க.ஸ்டாலின் இடையே கருத்து வேறுபாடு எழுந்துள்ளதாக கூறப்படுவது கற்பனைக் கதை என்று கனிமொழி தெரிவித்து உள்ளார்.

தஞ்சாவூரில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி,கலந்து கொண்டார். பின்னர்  செய்தியாளர்களை சந்தித்த அவர்,''சட்டப்பேரவையில் மக்கள் பிரச்னைகளுக்காக தி.மு.க.வின் குரல் ஓங்கி ஒலிக்கும்.தி.மு.க. தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின் இடையே கருத்து வேறுபாடு என்பது கற்பனைக் கதை.





தமிழகத்தில் மதுவிலக்குக் கொள்கை என்பது வெறும் கண்துடைப்பாக இருக்கிறது. மதுக்கடைகளை மூடுவதற்கான எந்த ஆக்கப்பூர்வ நடவடிக்கையும் தமிழக அரசால் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. எந்த மதுக்கடையை மூடப் போகிறோம் என்பதில்கூட அவர்களிடம் தெளிவு இல்லை.

மேலும், மதுக்கடைகளில் இரவு 10 மணிக்கு பிறகும் மது விற்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இதன்மூலம், இந்த ஆட்சி மதுவிலக்கு கொள்கையில் எந்த அளவுக்கு 'உறுதியாக' உள்ளது என்பது தெரிகிறது. 

ஆட்சியில் இல்லாதபோதுதான் ஜெயலலிதா தமிழ்நாட்டு மக்களின் பிரச்னைகளைப் பற்றி பேசுவார். ஆட்சியில் இருக்கும்போது அதை தீர்க்க நடவடிக்கை எதுவும் எடுப்பதில்லை. அதுபோலத் தான் பிரதமரை முதல்வர் சந்தித்தபோதும் முக்கியமான பல பிரச்னைகளை எழுப்பத் தவறிவிட்டார்.

இந்த ஆட்சி, விவசாயிகளுக்கு எதிரானது. குறைந்தபட்சம் மற்ற மாநிலங்களுடன் பேசி விவசாயிகளுக்கு தேவையான நீரையாவது பெற்றுத் தரவேண்டும். சாகுபடியின்போது தண்ணீர் இல்லாமல் விவசாயிகள் ஒவ்வொரு முறையும் பல பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர். இனிமேலாவது தமிழக அரசு இதை கவனத்தில் கொண்டு விவசாயிகள் பிரச்னைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.



No comments:

Post a Comment