
பொதுத்துறை வங்கிகளை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வங்கி ஊழியர் சங்கங்கள் இன்று போராட்டத்தில் இறங்கின. ' கல்விக் கடன் வசூலிக்கும் வேலையை ரிலையன்ஸ் நிறுத்தும் வரையில் போராட்டம் தொடரும். இதுதொடர்பாக வழக்கும் தொடருவோம்' என அதிரடியாக அறிவித்துள்ளன வங்கி ஊழியர் சங்கங்கள்.
ஸ்டேட் வங்கிகளை இணைக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிராக போராடி வருகின்றன வங்கி ஊழியர் சங்கங்கள். வள்ளுவர் கோட்டத்தில் இன்று நடந்த போராட்டத்தில், ஆயிரக்கணக்கான வங்கி ஊழியர்கள் பங்கேற்றனர்.
ஸ்டேட் வங்கிகளை இணைக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிராக போராடி வருகின்றன வங்கி ஊழியர் சங்கங்கள். வள்ளுவர் கோட்டத்தில் இன்று நடந்த போராட்டத்தில், ஆயிரக்கணக்கான வங்கி ஊழியர்கள் பங்கேற்றனர்.
முடிவில் நம்மிடம் பேசிய இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் சி.பி.கிருஷ்ணன், " எங்களுக்கு நல உதவிகள் வேண்டியோ, ஊதிய உயர்வுக்காகவோ நாங்கள் போராடவில்லை. பொதுமக்களின் நன்மைக்காகத்தான் போராட்டத்திற்கு அழைப்புவிடுத்தோம். தனியார் நிதி வங்கிகளை உருவாக்குவது, ஸ்டேட் வங்கிகளை ஒருங்கிணைப்பது என பொதுத்துறை வங்கிகளை தனியாருக்குத் தாரை வார்க்கும் வேலைகளில் மத்திய அரசு இறங்கிவிட்டது. தனியார் வங்கிகளைவிட 90 சதவீத வாடிக்கையாளர்களை நாங்கள் தக்க வைத்திருக்கிறோம். 76 சதவீத வணிகர்கள் பொதுத்துறை வங்கிகளை நோக்கித்தான் வருகிறார்கள்.
இதற்கு முடிவு கட்டும்விதமாக தனியார்மயப்படுத்தும் வேலைகளில் மத்திய அரசு இறங்கிவிட்டது. கடந்த 26-ம் தேதி நடந்த வங்கி உயர் அதிகாரிகள் கூட்டத்தில், ' வங்கிகளை இணைப்பது அரசின் கொள்கை முடிவு' என ஒரே வரியில் முடித்துவிட்டனர். ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடியாத அளவுக்கு தொழிலாளர் நலச் சட்டங்களை திருத்த முயல்கின்றனர். பென்சன், மகப்பேறு ஓய்வு என எந்த வசதியும் கிடைக்கவிடாமல் செய்வதற்கான பணிகள் வேகமெடுத்து வருகின்றன" என ஆதங்கப்பட்டவர், " நாட்டின் வாராக்கடன்களின் தொகை பெருகிக் கொண்டே போகிறது. இதற்கு முழுக் காரணம் கார்ப்பரேட் நிறுவனங்கள்தான். ரிலையன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் சொத்துக்கு இணையாக, வங்கிகள் கடன் அளிக்கின்றன. ரிலையன்ஸ் நிறுவனம் மட்டுமே 1 லட்சத்து 25 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளது.
இதுகுறித்து பிரதமருக்கு விரிவாக கடிதம் எழுதியிருக்கிறார் சி.பி.எம் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி. இவ்வளவு பெரிய தொகையை வங்கியில் இருந்து கடனாக வாங்கிவிட்டு, நமது ஏழை எளிய மாணவர்கள் வாங்கிய சில லட்ச ரூபாய் கடன்களை வசூலிக்க வன்முறையைப் பயன்படுத்துகிறது ரிலையன்ஸ். இதுகுறித்து மாநிலங்களவையில் சி.பி.எம் கட்சி எம்.பி டி.கே.ரங்கராஜன் கேள்வி எழுப்பினார்.
அவரது குரலுக்கு சக எம்.பிக்களும் ஆதரவு அளித்தனர். இதுகுறித்து பிரதமர் அலுவலகத்திற்கு மாநிலங்களவையின் துணை சபாநாயகர் குறிப்பு அனுப்பியிருக்கிறார். இதற்கு பிரதமர் மோடியிடம் இருந்து எந்தப் பதிலுமில்லை. இப்போது வரையில் வசூலிக்கும் பணியை ரிலையன்ஸ் கைவிடவில்லை. மத்திய அரசின் துணை இருப்பதால்தான் இவ்வாறு செய்கிறார்கள். 'ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு எந்த அடிப்படையில் கடன் வசூலிக்கும் பொறுப்பை வழங்கினீர்கள்' என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் விண்ணப்பித்திருக்கிறோம். எங்களுக்குக் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில், ரிலையன்ஸ் நிறுவனம் மீது வழக்குத் தொடருவோம்" என்றார் கொந்தளிப்போடு.

No comments:
Post a Comment