Monetize Your Website or Blog

Monday, 25 July 2016

ஒரே வேலையில் அழுத்தமாக உணர்கிறீர்களா?


வாரத்தின்  ஆறு நாட்களும் ஒரே வேலையில் மூழ்கி சோர்ந்து போகும் நபரா நீங்கள், அப்படியென்றால் இந்த கட்டுரை உங்களுக்கானது தான். ஏதாவது ஒரு வேலையில் சிக்கி, முழுவதுமாக அதே வேலையில் ஈடுபட்டு வரும்போது ஒருகட்டத்தில் அந்த வேலை அப்படியே தடைபட்டு நின்று போக வாய்ப்புள்ளது. இது உங்கள் செயல்திறனைக் குறைப்பது மட்டுமின்றி உங்களை அடுத்தகட்டத்துக்கு நகராமல் நீண்ட நாட்கள் அதே இடத்தில் முடக்கிவிடும்.

இதுபோன்ற தருணங்களில் ஒருவர்  இத்தகைய சிக்கலிலிருந்து முழுவதுமாக மீண்டு, புதுமையான விஷயங்களில் ஈடுபட,  சில விஷயங்களைத் தொடர்ந்து ஒரு மாதம் செய்ய வேண்டும். அப்படி செய்தாலே, ஒருவர் புதுமையான மனிதராக மீண்டும் தன்னை இந்த உலகத்திற்கு அறிமுகப்படுத்திக் கொள்ள முடியும்.



 
"ஒரே வேலையில் சிக்கிக் கொள்ளும் ஒருவருக்கு அவரது வயதும், பணிபுரியும் துறையும் தடையில்லை.  முதலில் இரண்டு விஷயங்கள் உள்ளன. சில விஷயங்களை செய்ய வேண்டும், சில விஷயங்களை கட்டாயம் செய்யக்கூடாது. இந்த 30 நாட்களிலும் ஒருவர் என்ன செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம்...

1.சைக்கிள் பயணம் மேற்கொள்ளுங்கள்
 
தினமும் காலையில் உங்களுக்கு பிடித்த இடத்தில் தினசரி சைக்கிள் பயணம் மேற்கொள்ளுங்கள். அது உங்கள் உடல் மற்றும் மனநிலையை மாற்றுவதாக அமையும். உங்கள் சைக்கிள் பயணங்களில் உங்களை கவனம் சிதற வைக்கும் விஷயங்களுக்கு இடம் கொடுக்காமல் பயணத்தையும், நீங்கள் செல்லும் இடத்தின் சூழலையும் ரசிக்க பழகுங்கள். இதனை ஒரு வேலையாக பார்க்காதீர்கள். எந்த தொந்தரவும் குறிப்பாக அலைபேசி தொந்தரவுகள் இன்றி இதனை செய்ய பழகுங்கள்.

 
 
2.ஒரு நாளைக்கு 10000 ஸ்டெப்ஸ் நடைபயணம்!
 
ஒரு நாளைக்கு நீங்கள் நடந்து செல்லும் தூரம் 10000 ஸ்டெப்ஸ் என்ற அளவில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் காலை எழுந்தது முதல் இரவு உறங்கும் வரை ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 10000 ஸ்டெப்ஸ் என்பது 7.5 கிலோமீட்டர். அதற்காகஒருவர் தினமும் 7.5 கிமீ தூரம் நடந்து செல்ல வேண்டும் என்பது இல்லை.உங்கள் வீட்டு மாடிக்கு ஏறுவது துவங்கி, உங்கள் அலுவலகத்தில் காபி அருந்த கேண்டீனுக்கு செல்வது வரை அனைத்தையும் சேர்த்து இந்த அளவு நடந்தால் போதுமானதாக இருக்கும்.
 
3.தினசரி ஒரு புகைப்படம் எடுங்கள்!

 
தினசரி உங்களுக்கு பிடித்த ஒரு விஷயத்தை அல்லது உங்களுக்கு பார்க்க அழகாக தோன்றும் ஒரு விஷயத்தை புகைப்படமாக பதிவு செய்யுங்கள். இதே போல் 30 நாட்களும் புகைப்படம் எடுங்கள். உங்கள் மனநிலை முதல் நாளிலிருந்து தற்போது எந்த அளவுக்கு மாறியுள்ளது என்பதை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். உங்களை புதுமையாக சிந்திக்க வைக்க இந்த பழக்கம் மிகவும் உதவியாக இருக்கும். அது மிகப்பெரிய போட்டொகிராபியாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. செல்போன் புகைப்படமே போதுமானது.



 
4.ஒரு நாவல் எழுதுங்கள்!
 
ஒரு நாவல் எழுதுங்கள் என்று கூறியவுடன் உங்களுக்குள் ஒரு கேள்வி எழலாம். 'நான் ஒரு கணினி பொறியாளர்... நான் எப்படி நாவல் எழுதுவது?' என்று.  ஒரு நாளைக்கு உங்கள் வாழ்வில் நடக்கும் சுவாரஸ்யமான விஷயங்களை 1667 வார்த்தைகளில் எழுத துவங்குங்கள் 30வது நாள் 50000 வார்த்தைகள் கொண்ட ஒரு நாவல் உங்கள் பெயரில் இடம் பெற்றிருக்கும். அத்துடன் புதுமையான விஷயங்களுக்கு நீங்கள் மாறிய விதம் புரியும்.

5. காதலிக்க பழகுங்கள்:

காதல் என்றவுடன் எதிர்பாலின ஈர்ப்பு என்ற அர்த்தம் இல்லை. உங்களை சுற்றியுள்ள சிறு சிறு விஷயங்களை கவனியுங்கள். நீங்கள் செய்யும் சில கெத்தான விஷயங்களுக்கு உங்களை நீங்களே பாராட்டிக்கொள்ளுங்கள். வேலை செய்யும் நேரம் தவிர மற்ற‌ நேரங்களில் வேலையை பற்றிய‌ நினைவு இல்லாத உற்சாகமான வேலைகளில் நாட்டம் செலுத்துங்கள்.நண்பர்களுடன் சமூக வலைத் தளங்களில் உரையாடாமல் நேரில் உரையாட பழகுங்கள். மனதிற்கு நெருக்கமான நபருடன் அதிகமான நேரத்தை செலவிடுங்கள்.
 
எதை செய்யக் கூடாது?
 
1. 30 நாட்களும் சமூக வலைதளங்களில் இயங்காதீர்கள், 

2. காஃபைன் நிறைந்த பானங்களை அருந்தாதீர்கள். 

3. தொலைக்காட்சி பார்ப்பதை ஓரளவுக்குத் தவிர்த்துவிடுங்கள்.

4. வேலையை வீட்டுக்குள் அனுமதிக்காதீர்கள்.

5. அலுவலக நேரம் தவிர அதிக நேரம் அலுவலகத்தில் இருக்காதீர்கள்.
இவையெல்லாம் உங்களை பழைய நிலைக்கு எடுத்துச்  செல்பவையாக இருந்துவிடும். உங்களை புதுமையாகச்  சிந்திக்க வைக்க இவற்றைக் கொஞ்சம் தவிர்க்க பழகுங்கள். இதனை நீங்கள் தொடர்ந்து செய்யும்போது, நீங்கள் நினைத்த புதுமையான உங்களை, 30 நாட்களில் நீங்களே தயார்படுத்தி இருப்பீர்கள்.
 
இதனைச்  சரியாக பின்பற்றினால், 30 நாட்களுக்குள் நீங்கள் சரியான பாதையில் பயணிக்க, புதுமையாக உணர, அடுத்த கட்டத்துக்கு உங்களை நகர்த்த உதவியாக இருக்கும்.




No comments:

Post a Comment